Friday, August 31, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 31

ஆசியாவின் நோபல் - ராமன் மகசேசே.

ஆகஸ்ட் 31... இன்று!


”நாட்டின் சட்டத்தை,   எனது தந்தை மீறுவாரென்றால் அவரை சிறைச்சாலைக்கு அனுப்பவும்  தயங்க மாட்டேன் ”.
                 -ராமன் மகசேசே (டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்.)

          ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி , பிலிப்பைன்ஸ் நாடு கோலாகலமாகிறது.  ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த சாதனை மனிதர்களைப் பெருமை செய்யும் நாள் இது.  ஆம், இதே நாளில்தான்,  ’ஆசியாவின் நோபல் பரிசு’ என உயர்வாகக் குறிப்பிடப்படும் “ராமன் மகசேசே விருது”, 1958 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து   வழங்கப்பட்டு வருகிறது.  
          அப்பழுக்கற்ற அரசுப்பணி, தலைமைப் பண்பு, இலக்கியம் , அமைதி மற்றும் பொது சேவை என ஐந்து பிரிவுகளில், தனி மனிதர்கள் அல்லது குழுவினருக்கு, இந்த விருது  வழங்கப்படுகிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்தும், 40 வயதிற்கும் குறைவான தனி நபர்களுக்கு, 2000 ஆவது ஆண்டு முதல் ‘வளரும் தலைமை’ என்னும் சிறப்பு விருதும் வழங்கப்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு - முதல் முறையாக, ‘ராமன் மகசேசே’ விருது,  இந்தியாவின் 'பூமிதான இயக்கத் தந்தை' வினோபா பாவேவுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது.
         வினோபா பாவே போலவே ,  ஏழை மக்கள் உழைத்துப் பொருளீட்ட, அவர்களுக்கு தேசத்தின் நிலங்களைப் பங்கிட்டுக் கொடுத்தவர்  பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மகசேசே. அவரது  பெயரில் வழங்கப்படும் இந்த விருது, சர்வதேச அளவில் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்றாகும்.      இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய , பிலிப்பைன்ஸ் வரலாற்றில்,  மூன்றாவது அதிபராக இருந்த   ராமன் மகசேசே     (1907 - 1957)  பிறந்த நாள் இன்று. 
       எக்ஸ்க்யூல் மகசேசே - பெர்ஃபெக்டா ஃபியரி  இணைக்கு மகனாக, 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ராமன் மகசேசே பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, வணிகவியலில் பட்டம் படித்தார். பிறகு, பஸ் கம்பெனி ஒன்றில், கடை மேலாளராகச் சில காலம் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, பிலிப்பைன்ஸ்  ராணுவத்தில் சேர்ந்தார். 1942ல், இவரது படைப் பிரிவு போரில் சரணடைந்தபோது, இவர் மட்டும் தப்பிச் சென்றார். மூன்று ஆண்டுகள் மற்ற படைப்பிரிவினருடன் சேர்ந்து, ஜப்பான் படைக்கு எதிராக கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டார். போர் நிறைவுக்கு வந்த போது, லிபரல் கட்சி சார்பில் , மேலவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டர்.             
             1950ஆம் ஆண்டு, உள்நாட்டில் அரசுக்கெதிரான கலவரங்கள் அதிகரித்திருந்தன. கம்யூனிஸ்டுகள் என்று தன்னை அறிவித்துக் கொண்ட போராளிகள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை ஒடுக்கி, நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு மகசேசேவிடம் வழங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். கொரில்லாப் போர் முறையில் ஏற்கெனவே அனுபவம் கொண்டிருந்த மகசேசே,  ஹக்ஸ் என்ற அந்தக் குழுவினரை ஒடுக்கி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
          பாதுகாப்புத் துறை செயலாளர் பதவி இனிமேல் மகசேசேவுக்குத் தேவையில்லை என அந்நாளைய அதிபர் க்யூரினோ எண்ணிக்கொண்டிருந்த வேளையில், 1953 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார் மகசேசே. நாட்டில் நிலவும் அத்தனை குழப்பங்களுக்கும் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம், அதனைச் சரிசெய்ய ஒரு எளிய குடிமகனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அறிவித்தார்.
             1951ஆம் ஆண்டு, அவரது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மோயிசஸ் பாடில்லா எனபவர் கொடூரமாத் தாக்கப்படுகிறார். அவரை காக்கும் பொருட்டு, பிளாசா நகரின் காவல் நிலையம் செல்வதற்குள், அவர் கொல்லப்படுகிறார். 14 தோட்டாக்களால் சல்லடையாக்கப்பட்ட அவரது  உடலை, கைகளில் ஏந்தியபடியே, பிணவறைக்குத் தூக்கிச் சென்றார் மகசேசே. 'பாடில்லா நிகழ்வு' என இது வரலாற்றில் பதிவானது.  ஆளும் கட்சியை எதிர்க்கத் தொடங்கினார். நியாயம் கேட்டார். மக்கள் இவர் பக்கம் நின்றனர்.
             
         அப்போதைய எதிர்கட்சி, இவரையே அதிபர்   தேதலில் நிறுத்த எண்ணியது. முதலில் தயங்கிய மகசேசே, பின்னர் தேர்தலில் நிற்கச் சம்மதித்தார். பிரச்சார மேடைகளில் நடனமாடி ஆதரவு கேட்ட மகசேசே, ’தரமான நிர்வாகம்’ வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார்.  நாசியோனலிஸ்டா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவருக்கு, மக்கள் மகத்தான வெற்றியை அளித்தனர். இத்தேர்தலில் அமெரிக்காவின் ரகசியத் தலையீடு இருந்ததாக, பின்னாளில்  வரலாற்று அறிஞர்கள் கட்டுரைகள் எழுதினர்.
        1953 ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற மகசேசேவின் ஆட்சி, ஊழலற்ற, சுத்தமான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. அனைத்து துறைகளிலும் முன்னணியில் நின்றது பிலிப்பைன்ஸ் நாடு.  மக்களும் தலைவனின் மனதைப் புரிந்து கொண்டு பின் தொடர்ந்தனர்.
             ஆனால், புரிந்து கொள்ள முடியாத மர்மமான முறையில், விமான விபத்தொன்றில் இறந்து போனார்  மகசேசே. 1957 ஆம் ஆண்டு, மார்ச் 17 ஆம் தேதி அதிகாலை, 24 பேருடன் இவர் பயணித்த அந்த விமானம் முதலில் மாயமானது. பிறகு, விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.   பிலிப்பைன்ஸ் மக்களின் பிரியத்திற்குரிய தலைவராக இருந்த மகசேசேவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.
              இவரது மனைவி பெயர் லூஸ் மகசேசே. இவருக்கு          இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். பதவிக் காலத்தில், தனது பெயரைப் பயன்படுத்தி உறவினர்கள்,  அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. தனக்கான சம்பளப் பணத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்தினார். குடும்ப வேலைகளுக்கான பயணத்தில், தனது காரை தானே தான் ஓட்டிச் செல்வார். ஓட்டுநரை நியமித்துக் கொள்ளவில்லை.
   ராணுவச் செயலாளராக இருந்தபோது, இவரது கார் ஓட்டுநர் ,  சாலை விதியை தவறுதலாக மீறிவிட, போக்குவரத்துக் காவலர் வண்டியை நிறுத்தி விட்டார். காரின் உள்ளே இருந்த  மகசேசேவைப் பார்த்தவுடன் மன்னிப்புக் கோரினார் காவலர். ஆனால் இவரோ, தவறுக்குரிய அபராதம் செலுத்திவிட்டு, காவலரைப் பாராட்டிச் சென்றார்.
           
          அடைமொழியிட்டு என்னை அழைக்க வேண்டாம், மிஸ்டர் எனப் பெயர் சொன்னால் போதும்.  அரசு சார்ந்த நலத்திட்டங்களான பாலங்கள், கட்டிடங்கள், நீர்த்தேக்கங்கள் என எதற்கும் எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் எனச் சொன்ன தலைவன் மகசேசே.
       தெளிவு,எளிமை, நேர்மை, தேசத்தின் மீது தன்னிகரற்ற காதல்- எல்லாவற்றுக்கும் மேலாக, உறவுகளை, நண்பர்களை  நிர்வாகத்தில் தலையிட விடாமல்  பார்த்துக் கொண்டது. இது போதாதா -   ஒரு மக்கள் தலைவன் , வரலாற்று நாயகனாக மாறுவதற்கு,  அப்படி வரலாற்றில் இடம்பிடித்தவர் தான் ராமன் மகசேசே!. இங்கே, தலைவனைப் பெயர் சொல்லி அழைப்பது கூட, பெரும் பிழை என்றல்லவா கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.

    பெயருக்கு முன்னால் அடைமொழி, பெயர்ப்பலகைகள், பதாகைகள் என்ற விசித்திர வலையைத் தாண்டி, நம்மூர்த் தலைவர்கள் எப்போது வெளியே வருவார்கள்?


No comments:

Post a Comment