Sunday, September 16, 2018

செப்டம்பர் 16







காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.சுப்புலெட்சுமி

செப்டம்பர் 16....இன்று!

”இசை என்பது ஒரு கடல். அதில் நான் ஒரு மாணவி”
                                                                                             - எம்.எஸ்.சுப்புலெட்சுமி.

”இசையரசிக்கு முன்னால், நான் ஒரு சாதாரண பிரதமர் தானே” (Who am I, a mere Prime Minister before a Queen, a Queen of Music)
                   -எம்.எஸ்.சுப்புலெட்சுமி பற்றி நேரு சொன்ன வார்த்தைகள். 

          தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி,சமஸ்கிருதம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடி, இசையால் இன்பத்தை நிறைத்தவர்;  சமூக சேவைக்காக ராமன் மகசேசே விருது(1974) பெற்ற முதல்  இசைக்கலைஞர்; இசைத்துறையிலிருந்து பாரத ரத்னா விருது(1998) பெற்ற முதல் ஆளுமை; வானளாவிய புகழ் பெற்ற போதும், அடக்கத்தைத் தவறவிடாத வாழ்வு முறை கொண்டவர்; பரணியில் பிறந்த இவர், தரணியை ஆண்ட இசையரசி; கர்நாடக இசையை உலகெங்கும் கொண்டு சென்ற இசைத்தோணி - எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1916-2004) பிறந்த நாள் இன்று! 
            1916, செப்டம்பர் 16ஆம் தேதி, கூடல் நகராம்  மதுரையில்  சுப்புலெட்சுமி பிறந்தார். ’குஞ்சம்மாள்’ என்பது இவரது செல்லப் பெயர். இவரது தாய் சண்முக வடிவு அம்மாள்  சிறந்த வீணை இசைக்கலைஞர். சுப்புலெட்சுமி  தேவதாசி குல மரபில் பிறந்தவர். தனது தந்தை சுப்ரமணிய அய்யர் என பின்னாளில் ஒரு பேட்டியில் , எம்.எஸ் தெரிவித்திருந்தார். ஆனால், சண்முகவடிவு அம்மாள் இது தொடர்பாக கருத்தேதும் தெரிவிக்கவில்லை.  எம்.எஸ். சுப்புலெட்சுமி என்ற பெயரில் உள்ள எம்.எஸ் என்பது மதுரை சண்முகவடிவு என்பதைக் குறிப்பதாகும். சுப்புலெட்சுமியின் சகோதரர் சக்திவேல் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதில் வல்லுநர். தங்கை வடிவாம்பாள் தாயைப் போலவே வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கினார்.  
          தாயின் வழியே - இசை ஆர்வம், இவருக்கும் இயல்பாகவே தொற்றிக் கொண்டது.    செம்மங்குடி சீனிவாச அய்யர், மாயவரம் கிருஷ்ண அய்யர், மதுரை சீனிவாசன் போன்ற ஆளுமைகளிடம் வாய்ப்பாட்டு பாடுவதன் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும்  இவருக்குக் கிடைத்தது. ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்களை பண்டிட் நாராயணராவிடம் கற்றுக் கொண்டார். மதுரை சேதுபதி பள்ளியில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்த போது, நிகழ்ச்சியின் இடையில் தாயின் அழைப்பை ஏற்று,  'ஆனந்த ஜா'  என்ற மராத்தியப் பாடலை ஹிந்துஸ்தானி மெட்டில் பாடி , பார்வையாளர்களை அசத்தினார்  எம்.எஸ்.  இதுதான் அவரது முதல் மேடைப்பாட்டு.   
   'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்ற பாடலை எம்.எஸ் பாட, சண்முக வடிவு அதற்கு வீணை மீட்டினார். 1926ல் வெளிவந்த அந்த இசைத்தட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 10 வயது குழந்தையின் இசையில் ரசிகர்கள் மெய்மறந்தனர். 
    பிறகு, தாய் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் இவரும்  கூடவே உடன் சென்றார். தனது 17வது வயதில், சென்னை மியூசிக் அகாடமியில் முதல்  முறையாக  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இவரது இசைக்கு,  தமிழகமெங்கும் பரவலான கவனம் கிடைத்தது. 
           1936ஆம் ஆண்டு, யாருக்கும் தெரியாமல்,  தனது நகை,உடைமைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு, மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலேறினார் எம்.எஸ். அவர் சென்னை வந்ததன் காரணம்,  சுதந்திரப் போராட்ட வீரர் சதாசிவம் கரங்களைப் பிடித்து, தனது வாழ்வை ஒப்படைக்கத்தான். தேவதாசி மரபுப்படி, ரகசிய மனைவியாகவோ அல்லது வயது முதிர்ந்த செல்வந்தருக்கோ தனது வாழ்வைப் பறிகொடுக்க சுப்புலெட்சுமி விரும்பவில்லை.     சதாசிவம் மதுரை வந்திருந்தபோது, தனது மனதைப் பறிகொடுத்திருந்த எம்.எஸ். , தாயின் திருமண ஏற்பாடுகளில் இருந்து தப்பிக்க, தனது காதலனைத் தேடி, தன்னந்தனியாக திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தார். சதாசிவத்தின் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த நேரம் அது.  இவர்கள் இருவரும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சேர்ந்து வாழத் தொடங்கினர்.   தனது மகளை மீட்க காவல் துறையின் உதவியை நாடினார் சண்முக வடிவு அம்மாள். ஆனால், தாயுடன் செல்ல எம்.எஸ். மறுத்து விட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் சண்முக வடிவு அம்மாள்  மரணப் படுக்கையில் இருந்த போது கூட, அவரைக் காண எம்.எஸ். செல்லவில்லை. 
            1940ஆம் ஆண்டு, சதாசிவத்தின் மனைவி மன உளைச்சலில் இறந்து போக, எம்.எஸ் சுப்புலெட்சுமியை இரண்டாம் தாரமாக மணம் செய்துகொள்கிறார் சதாசிவம். அதுதான் எம்.எஸ்.வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான திருப்புமுனை.  எம்.எஸ். என்ற ஆளுமையின் பிம்பத்தை திட்டமிட்டுக் கட்டமைத்தார் சதாசிவம். அவரது சாதி, குல பிம்பங்கள் உடைக்கப்பட்டன. சுப்புலெட்சுமியை, தன் வீட்டில் பிறந்த மகாலெட்சுமி என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கினர். கச்சேரிகள், பாடல் பதிவுகள், திரைத்துறை நிகழ்வுகள், அறக்கட்டளைக்காக இசை நிகழ்ச்சிகள் என எல்லாப் பொறுப்புகளையும் சதாசிவமே முன்னின்று செய்தார். தனக்கென குழந்தைகள் இல்லாத போதும்,   சதாசிவத்தின் இரண்டு பிள்ளைகளையும் தன் பிள்ளை போலவே எண்ணி அன்பு செலுத்தினார் எம்.எஸ்.
       சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ( இந்தியில் பக்த மீரா) என நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இந்தியாவெங்கும் எம். எஸ் என்ற இசையரசியின்  புகழ், வானைத் தாண்டியும் உயரப் பறந்தது. 1941ஆம் ஆண்டு,  கிருஷ்ணமூர்த்தியும், சதாசிவமும் இணைந்து தொடங்கவிருந்த கல்கி பத்திரிக்கைக்கு 40,000 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. கணவருக்காக, ’சாவித்திரி’ என்ற படத்தில் நாரதராக ஆண் வேடமிட்டு நடித்தார். அதில் கிடைத்த சம்பளத் தொகையைக் கொண்டுதான் ’கல்கி’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
    சென்னை  தமிழிசைச் சங்கத்தில் பாரதியார், பாபநாசம் சிவன், வள்ளலார் போன்றோரது பாடல்களைப் பாடினார். தெலுங்கு கீர்த்தனைகளைப் போலவே தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.   1944ஆம்  ஆண்டு, இந்தியா முழுக்க  நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி, அதில் கிடைத்த தொகை முழுவதையும், “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” வழங்கினார். பாராட்டு மழையில் நனையும் போதெல்லாம், ’எனது பொது சேவை எண்ணங்களுக்கு ஊற்றுக்கண் - எனது கணவர் தான்’ என அமைதியாக பதிலளிப்பதுதான் இவரது வழக்கம். பெரும்பாலான நேரங்களில், சதாசிவமே பத்திரிக்கைக் கேள்விகளுக்கு பதில் சொல்வார். காரணம் கேட்ட போது,      “ரோஜா அழகாக மலரும்; அது எப்படி என்று கேட்டால் அதற்கு சொல்லத் தெரியாதே! அதனால் தான் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
      23.10.1966 ஆம் ஆண்டு, ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ராஜாஜி எழுதிய “ May the Lord Forgive" என்ற உலக அமைதிப் பாடலைப் பாடினார். 1975 ஆம் ஆண்டு முதல், இவர் பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதம், திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காந்திக்கு மிகவும் பிடித்த  ’ரகுபதி ராகவ ராஜாராம்.’ , ’வைஷ்ணவ ஜனதோ ’ பாடல்களிலும்,  ராஜாஜி எழுதிய, ’குறையொன்றும் இல்லை ’ பாடலிலும் வருகின்ற  குழைவும், உருக்கமும் ,தன்னையே இசைக்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு மட்டுமே உரியது. .
          ’சகுந்தலை’ படத்தின் கதாநாயகன் ஜி.என்.பாலசுப்ரமணியன் மிகச் சிறந்த பாடகர். வசீகரத் தோற்றம் கொண்டவர். அப்படத்தில்  கதாநாயகியாக நடித்த போது,  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் உள்ளம் தடுமாறத் தொடங்கியது. ஜி.என்.பி அவர்களுக்கு எம்.எஸ் எழுதிய காதல் கடிதங்கள் தற்போது கிடைக்கின்றன,  டி.ஜே.ஜார்ஜ் எழுதிய M.S. -A Life in Music புத்தகத்தில் அக்கடிதங்கள் பின்னிணைப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. ஜி.என்.பி மீது அவர் கொண்டிருந்த காதல் நிஜமானது. “பேசவோ, அழவோ எனக்கென்று யாருமில்லை. நடிப்பின் நடுவில் உங்கள் விரல் என்னைத் தீண்டும் போது, நான் இறைவனை உணர்கிறேன். என் அன்பை புரிந்து கொள்ளுங்கள்” என ஒவ்வொரு கடிதமும், ஜி.என்.பி.அவர்களின் பாதங்களில்  விழுந்து மன்றாடின. ஆனால், ஜி.என்.பி அதனைப் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ். அவர்களை வெறும் காமப் பொருளாகவே அவர் கண்கள் கண்டன.
              ஜி.என்.பி மற்றும் எம்.எஸ்.காதல் விவகாரம் சதாசிவத்துக்குத் தெரிந்திருக்கலாம்.    படம் வெளியாகும் போது, ஜி.என்.பி. யின் படங்கள் விளம்பரத்தில் காட்டப்படவில்லை. இசைப்பேழையில் கூட அவரது பெயர் தவிர்க்கப்பட்டது.  எம்.எஸ். கண்களின் பார்வையில் இருந்து, ஜி.என்.பி. ஓரம் கட்டப்பட்டார். ’மீரா’ படத்திற்குப்பின் திரைப்படங்களில்  நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார் எம்.எஸ்.. பொதுச் சேவையிலும் , பக்திப் பாடல்கள் பாடுவதிலுமே  காலத்தைக் கழித்தார். எல்லாவற்றையும் மறந்து, தனது கணவர் சதாசிவத்தின் நிழலிலேயே கடைசி வரை வாழ விரும்பினார். அதன் படியே, வாழ்ந்தும் காட்டினார்.  1997 ஆம் ஆண்டு, தனது வழிகட்டியும், கணவருமான சதாசிவம் மறைந்த பிறகு, எந்த பொது நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை.  அப்துல் கலாம் குறிப்பிட்டது போல, இசையில் பிறந்து, இசைக்காக வாழ்ந்து, இசையோடு கலந்த எம்.எஸ்.  12.12.2004 அன்று இறந்து போனார்.
      அபாரமான திறமை; எண்ணிலங்கா விருதுகள்; கோடிக்கணக்கான ரசிகர்கள்; இசையின் கடவுள் என்ற தோற்றம்; உலகம் முழுதும் பயணம் என அவரது புற வாழ்வு சந்தோஷங்களால்  மட்டுமே நிரம்பி இருந்தது.
       தேவதாசி குலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல், கணவரோடு இணைந்து பிராமணப் பெண்ணாகவே மாறுதல், இடையில் தோன்றிய  காதல் உணர்வுகள், குழப்பங்கள், பாதுகாப்பின்மை, மரணப் படுக்கையில் இருந்த தாயைக் காண முடியாத சூழல்  என அவரது அக வாழ்வு சந்தித்த, போராட்டங்களுக்கு மத்தியில் தான் இத்தனையையும் சாதித்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். உண்மையில் அவர் அரசி தான்;  காற்று உள்ளவரை , அவரது கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
        கலை தான்,  கஷ்டங்களை மறப்பதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஆம்,    கலைஞனாகவோ, கலை  ரசிகனாகவோ இருப்பதால் அகம் எப்போதும் எழுச்சி கொள்கிறது.

Saturday, September 15, 2018

செப்டம்பர் 15

ஜெய்ஹிந்த் முழக்கமிட்ட எம்டன் - செண்பகராமன் பிள்ளை.

செப்டம்பர் 15....இன்று!


  மஹாராஷ்டிராவில் - வாழ வழியின்றி அலைந்து கொண்டிருந்த மணிப்பூர் பெண்மணிதான்  லெட்சுமி பாய். வறுமையில் இருந்த  அவருக்கு கிறித்தவ மிஷினரி ஒன்று உதவிக்கரம் நீட்டியது. அவர்களுடன் இணைந்து, முதலில் ரஷ்யா சென்றார். 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு,  ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு இடம் மாறியது அவரது குடும்பம். பெர்லினில்,  1931ஆம் ஆண்டு, தன்னைப் போலவே இந்திய தேசத்தில் பிறந்து, ஜெர்மனியில் வாழ்ந்து வந்த, ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டார். அதே 1931ஆம் ஆண்டு, தனது   காதல் நாயகனைக் கரம் பிடித்தார் லெட்சுமி பாய். மகிழ்ச்சி நீண்ட நாள்கள் நிலைக்கவில்லை. மூன்றே ஆண்டுகளில், மர்மமான முறையில் கணவர் இறந்துபோனார். சுதந்திர இந்தியாவையே  தனது சுவாசமாகக் கொண்டிருந்த, தனது காதல் கணவரின் இறுதி ஆசையை நிறவேற்ற 32 ஆண்டுகள்  காத்திருந்தார். இறுதியில்  கணவரின் விருப்பத்தை நிறைவேற்றிக் காட்டினார். பிறகு, மும்பை நகரில்  அநாதையாக இறந்து போனார்.   அவரது கணவர் யார்? அவருக்கு என்ன நேர்ந்தது? அவரது இறுதி ஆசை என்னவாக இருந்தது?

        இந்திய விடுதலை வரலாற்றில், மறக்கப்பட்ட தியாகிகளில் ஒருவர் தான் செண்பகராமன் பிள்ளை.

                 ’ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை பள்ளிப்பருவத்திலேயே தொடங்கியவர்; வெளிநாட்டில், ‘புரோ இந்தியா’, ‘ஐ.என்.வி’ போன்ற அமைப்புகளைத் தொடங்கியவர்; பல விதங்களில் நேதாஜியின் முன்னோடி;  ஹிட்லரிடம் வாதிட்டு,  அவரை மன்னிப்பு கேட்க வைத்த சாகசக்காரர்; 'எம்டன்'  கப்பலை ஓட்டி வந்து, பிரிட்டிஷ் படைகளுக்கு கண்ணாமூச்சி காட்டியவர்; பயமறியாத தமிழ் இனத்தில் பிறந்த,   சுதந்திரப் போராட்ட வீரர்-  செண்பகராமன் பிள்ளை (1891-1934) பிறந்த நாள் இன்று. 

   திருவனந்தபுரம் அருகில், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த புத்தன் சந்தை என்னும் ஊரில், 1891ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் நாள் செண்பகராமன் பிள்ளை பிறந்தார்.  சின்னச்சாமிப் பிள்ளை-நாகம்மாள் தம்பதியினருக்கு இவர்தான் மூத்த மகன். இவருக்கு ஒரு தங்கை உண்டு. பள்ளிப்படிப்பை திருவனந்தபுரம் இந்து உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பள்ளி நாள்களிலேயே, இவரிடத்தில்  விடுதலை உணர்வு வீறு கொண்டு எழுந்தது.

         படிக்கும் காலத்தில், சர் வால்டர் ஸ்டிரிக்ட்லேண்ட் என்ற தாவரவியல் அறிஞரோடு தொடர்பு ஏற்பட்டது. அவர் ஜெர்மனிக்காக,  ஆங்கில அரசை உளவு பார்க்க வந்த    உளவாளி என பின்னாளில் சொல்லப்பட்டது. சர் வால்டரோடு இணைந்து கொழும்பு வழியாக ஆஸ்திரியா சென்று சேர்ந்தார் செண்பகராமன்.  பத்மநாபப் பிள்ளை என்ற உறவினரும் இவரோடு சேர்ந்து பயணித்தார். ஆனால், பத்மநாபப் பிள்ளையின் விதி, வேறு மாதிரியாக இருந்தது. அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட பத்மநாபப் பிள்ளையின் கண்ணீர் வரலாறு ஒரு தனி சரித்திரம்.

  செண்பகராமனை ஆஸ்திரியாவிலேயே தங்கிப் படிக்க வைத்தார் சர் வால்டர். செண்பக ராமன்  பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பில் படு ஆர்வமாயிருந்த  செண்பகராமனுக்கு 12 மொழிகளில் நல்ல புலமை இருந்தது. சிலம்பும், வாள் சண்டையும் இவருக்குக் கை வந்த கலை.  ஆனால், எல்லா  அறிவை விடவும் தேசத்தின் மீதான காதல்  உணர்வுதான் இவரிடத்தில்  அதிகமிருந்தது.

      முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் தங்கியிருந்தார். 1914 , ஜூலை 31 ஆம் தேதி, தனது நண்பர்களை இணைத்து, “இந்திய தேசிய தன்னார்வப் படை” ஒன்றை அமைத்தார். இந்திய சுதந்திரத்தை இலட்சியமாகக் கொண்ட இந்த அமைப்பிற்கு, ஜெர்மனி அதிபர் கெய்சரின் முழு ஆதரவு கிடைத்தது. செண்பகராமன் பிள்ளையின் கூர்ந்த மதிநுட்பமும், ஆற்றலும் கெய்சரைப் பெரிதும் கவர்ந்திழுத்தது.

           முதல் உலகப் போரில், ‘எம்டன்’ என்ற ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்,  ஆங்கிலேய அரசு அச்சப்படும் வகையில், சென்னை மற்றும் கேரள கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது. அதில் தலைமைப் பொறியாளராக வந்து, தாக்குதலை நடத்தி, ஆங்கிலேயர்களை கதிகலங்க வைத்தார் செண்பகராமன் பிள்ளை. இன்றும் கூட,  பல நிகழ்வுகளில் திறமையாகச் செயல்படுபவர்களை, நம் மக்கள் ‘எம்டன்’ என்ற பெயர் சொல்லியே அழைக்கிறார்கள்.

    1915ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் தலைநகரில், ஆங்கிலேயருக்கெதிராக, 'போட்டி இந்திய  அரசாங்கம்' ஒன்று அமைக்கப்பட்டது. காபூல் மகேந்திர பிரதாப் அதிபராக நியமிக்கப்பட்ட அந்த அரசில், செண்பகராமன் பிள்ளை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். ஆங்கிலேய அரசு கோபத்தின் உச்சத்திற்குச் சென்றது. இவரை கொல்ல பல சதித் திட்டங்களைத் தீட்டியது. சுவிஸ் நாட்டில் இவரைத் தீர்த்துக் கட்ட, ஒரு சிறப்பு உளவுப் படை அமைக்கப்பட்டது. இக்குழுவில் பிரபல ஆங்கில எழுத்தாளர் சோமர்செட் மாம், மிஸ்டர் ஆர் என்ற பெயரில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவரைக் கொல்லும்  திட்டங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்திய தேசத்தின்  விடுதலைக்கான தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தார் செண்பகராமன் பிள்ளை.

               1931ஆம் ஆண்டு, அக்டோபர் 10ஆம் நாள்,    துரதிருஷ்டம் வேறு வகையில் வந்தது.  ஜெர்மனியின் சர்வ வல்லமை பொருந்திய தலைவராக ஹிட்லர் உருவாகியிருந்த நேரம் அது. “பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்பது,  இந்தியர்களின் தலைவிதி” என்று இந்தியர்களைப் பற்றி ஏளனமாக  ஹிட்லர் கருத்து வெளியிட்டார். கோபமடைந்த செண்பகராமன், கடுமையாக எதிர்வினையாற்றினார். ’கருத்த இதயமுடையவன்’ என  ஹிட்லரைப் பற்றிச் சொன்னார். வாதத்தின் முடிவில் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஆனால், எழுத்துப் பூர்வ மன்னிப்பு தான் வேண்டும் என உறுதியாக நின்ற செண்பகராமனிடம், ஹிட்லர் அடக்கியே வாசித்தார். எழுத்துப் பூர்வ மன்னிப்பும் கோரினார்.  இந்த நிகழ்வுக்குப் பிறகு, செண்பகராமன் மீதான  நாஜிக்களின் கோபம்  தீரவே இல்லை.

            நாஜி படை வீரர்களால் அடித்து உதைக்கப்பட்டதாலும், மெல்லக் கொல்லும் மருந்துகள் உணவில் கலக்கப்பட்டதாலும் 1934 ஆம் ஆண்டு, மே மாதம் 26 ஆம் தேதி இத்தாலி மருத்துவமனை ஒன்றில் இறந்து போனார் செண்பகராமன் பிள்ளை.  தனது உடலின் சாம்பல், கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல் வெளிகளிலும் தூவப்பட வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தை மனைவி லெட்சுமி பாயிடம் சொல்லிய படியே கண்மூடினார். இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் கப்பலில் பயணித்து, பாரத மண்ணை முத்தமிட்டு , பின் பாதம் பதிக்க வேண்டும் என்ற அவரது சுதந்திரக்  கனவு  நிறைவேறவில்லை.

             ஆயினும், 1966 ஆம் ஆண்டு, 'ஐ.என்.எஸ். டெல்லி' என்ற போர்க்கப்பல் செண்பகராமனின் அஸ்தியைச் சுமந்தபடியே மும்பையிலிருந்து கேரளா வந்தது. தனது கணவரின் கடைசி ஆசையையும், 32 ஆண்டு காலக் கனவையும் மனதில் தேக்கிய படியே, அக்கப்பலில் லெட்சுமி பாயும் வந்தார். செண்பகராமனின் இறுதி  ஆசை நிறைவேற்றப்பட்டது.  அஸ்தி கரைக்கப்பட்ட, 1966, செப்டம்பர் 19 ஆம் தேதி செண்பகராமன் பற்றிய தலையங்கம், மனோரமா இதழில் எழுதப்பட்டது.

             சில நாட்களில்,  லெட்சுமி பாயும் மறக்கப்பட்டார். 1972ஆம் ஆண்டு, மும்பை குடியிருப்பொன்றில், யாருமற்ற அனாதையாக, புடவையில் சாவிக் கொத்துக்களுடன்  இறந்து கிடந்தார். இவரது உடலை அடையாளம் காட்டிய மூத்த பத்திரிக்கையாளர் பி.கே.ரவீந்திரநாத்  எழுதிய குறிப்புகள், படிப்பவர்  கண்களில் குருதியை வரவழைப்பவை.  ஆம், செண்பகராமன் பிள்ளையின் ரகசியங்கள் அடங்கிய 17 பெட்டிகளைக் கடைசி வரை பாதுகாத்து வந்த லெட்சுமி பாய், வறுமைக்கு இரையானார். அவர் உடல் மெலிந்து, உள்ளம் நலிந்து கோரமாய்  இறந்தவுடன், அந்த ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. அவை யாவும்,  தற்போது மஹாராஷ்டிரா தேசிய ஆவணக் காப்பகத்தில், நிம்மதியற்று  உறங்கிக் கொண்டிருக்கின்றன.

             அருகிருக்கும் நட்சத்திரங்களின் ஒளி  வெள்ளம் காரணமாக, வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற விண்மீன்களை,  நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். ஆம்,  ஆகாய நட்சத்திரங்களின் நீள அகலங்களை - அவற்றின்   அருகில் சென்று பார்க்கும்போது தானே அறிய முடிகிறது.       நமது தேசத்தின் விடுதலை வீரர்களும் அப்படித்தான். சில தலைவர்களின் வெளிச்சத்தில் மறைந்து போனவர்களும் , மறைக்கப்பட்டவர்களும் இம்மண்ணில் ஏராளம்.

       தியாகத்தை நாம் மறந்தாலும், அதன் தழும்புகள் - அழியாத தடத்தை ஏற்படுத்தியே செல்கின்றன. என்றாவது ஒரு நாள், அந்தத்  தழும்புகள் நம் உள்ளத்தை நிச்சயம் உலுப்பும் - 'ஏன் மறந்தாய்' என்ற கேள்வியையும்  எழுப்பும்!.

  

Wednesday, September 12, 2018

செப்டம்பர் 11


குருவுக்கு குருவானவர் - வினோபா ஜி

செப்டம்பர் 11.. இன்று!

"உங்களை எப்படி பாராட்டிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்களின் மதிப்பை அளவிடும் அளவிற்கு , நான் தகுதியானவனும்  இல்லை. உங்களின் தந்தை என்ற நிலையை வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்வேன்” - வினோபா பாவேவிற்கு காந்தியடிகள் எழுதிய கடிதத்திலிருந்து. (10, பிப்ரவரி , 1918, வார்தா ஆசிரமம்) .

"இந்தியாவாலும்,காந்தியாலும் மட்டுமே வினோபாக்களை உருவாக்க முடியும்" - எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன்.
             
        தனது 56ஆம் வயதிற்குப் பிறகு, 58,741 கி.மீ. தூரம் தேசமெங்கும் நடந்து அலைந்தவர்; 40,00,000 ஏக்கர் நிலங்களை ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்குப் பெற்று வழங்கியவர்; தன்னலத்தின் நிழல் கூடத் தீண்டாத   காந்தியவாதி;  ஆச்சாரியார்(ஆசிரியர்) என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்; இலக்கியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர்;   ’பூமி தான இயக்கத்தின் தந்தை’   வினோபா ஜி அவர்களின் பிறந்த நாள்   (1895-1982) இன்று.    
                வினோபா ஜி,  1895ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் நாள், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ககோடே என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.  நரஹரி ஷம்பு ராவ் - ருக்மிணி தேவி தம்பதியரின் மூத்த மகன் இவர். இவருக்கு நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரியும் உண்டு. இவரது இயற்பெயர் விநாயக் நரஹரி பாவே. இவரது தாய் மிகுந்த அறிவாற்றல் உடையவர். பகவத் கீதை மற்றும் வேதங்களின் சாராம்சத்தை,  தனது மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒழுக்கம், நேரந்தவறாமை, கடமையுணர்வு என, தாயிடமிருந்த  எல்லா நற்பண்புகளும்  இவரிடத்திலும் வந்து சேர்ந்தன.  
            வகுப்பில், எல்லா பாடங்களிலும் இவரே முதல் மதிப்பெண் பெற்றார். குறிப்பாக, கணிதப் பாடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1916ஆம் ஆண்டு, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காந்தியடிகள் ஆற்றிய உரையைப் படித்த வினோபா, தனது வாழ்க்கைப் பாதை எதுவெனத் தீர்மானித்தார். இண்டர்மீடியட் தேர்வுக்குச் செல்லும் வழியில் , தனது சான்றிதழ்களை எரித்தார். தனிப்பட்ட முறையில் காந்தியடிகள் எழுதியிருந்த  கடித அழைப்பின் பேரில், 1916ஆம் ஆண்டு, ஜூன் 7ஆம் நாள் அகமதாபாத்தில் உள்ள கோச்ரப்  ஆசிரமம் சென்றார். அங்கே தான், காந்தியடிகளும் வினோபா ஜி யும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.  குருவும், சீடனும்  குருதியும்,சதையுமாய் இணைந்தனர்.
    காந்தியடிகளுக்கு, வினோபாஜியின் மீது, அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகியிருந்தது.   1921ஆம் ஆண்டு, வார்தா ஆசிரமத்தின் செயலராக வினோபாஜி நியமிக்கப்பட்டார்.
           கை ராட்டையில் நூற்பது   முதல்  மலம் அள்ளும் வேலை வரை யாவற்றையும் மன ஒருமையுடன் செய்தார். காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையும் சென்றார். சிறையில் இருந்த காலங்களில், கைதிகளுக்கு கீதை உபதேசம் செய்தார். இவர் இருந்த சிறைச்சாலைகள் எல்லாம், பாடசாலைகள் ஆயின.   தற்போது, அந்த உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு,  சர்வோதயா நிறுவனத்தின் மூலம், புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன.
          1940 ஆம் ஆண்டு, தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு, முதல் நபராக வினோபாஜி அறிவிக்கப்பட்டார். 20.10.1940 அன்று, 'ஹரிஜன்' பத்திரிக்கையில், வினோபாஜி யார் என்பது குறித்து, காந்தியடிகள் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிடுகிறார். ஒட்டு மொத்த உலகின் கவனமும்  வினோபாஜியின் மீது குவிகிறது.  ”சீடனாக வந்து சேர்ந்த எனது குரு - வினோபாஜி” என்ற காந்தியடிகளின் குறிப்பு, உண்மையிலேயே பொருத்தமான ஒன்றாக அமைந்தது. மகாத்மாவின் சார்பில்,  வினோபாஜி தான்,   வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர், சில காலம் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
            1951 ஆம் ஆண்டு, ஏப்ரல் 18ஆம் தேதி, இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போச்சம்பள்ளியில், பூமிதான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ராமச்சந்திர ரெட்டி என்பவர் 100ஏக்கர் நிலத்தை தானமாகத் தர முன்வந்தார். அந்த நிலம் முழுவதும் அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரித்துத் தரப்பட்டது. இதனை நாடு முழுவதும் செய்து காட்ட விரும்பினார். நிலச்சுவான்தார்களும், நிலமற்றவர்களும் என பிளவுபட்டிருந்த வர்க்க வேறுபாட்டைக் களைந்திட உறுதி பூண்டார்.
       தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுவார்.  இறைவழிபாட்டிற்குப் பிறகு, 12 மைல்கள் தனது குழுவோடு நடப்பார். நடையின் முடிவில் இருக்கும் ஊரில், தனது உரையை நிகழ்த்துவார். நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பெற்றுத் தருவார். பூமிதான இயக்கம், கிராம தான இயக்கம் என இடைவிடாது 15 ஆண்டுகள் நடந்து கொண்டே இருந்தார். பயணத்தில் இருந்த வினோபாஜியின் ஒருநாள் செலவு 12 பைசாக்கள் மட்டுமே; இதில் உணவும் அடக்கம்.
       வினோபாஜி, எந்த ஒரு செயலையும் அர்ப்பணிப்போடு செய்யவே விரும்புவார். இந்து, முஸ்லீம் சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த தன்னால் முடியும் என்று நம்பினார். அவர்களிடம் உரையாடும் முன்பு, திருக்குர்ரானை முழுவதுமாகப் படிக்க எண்ணினார். மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காக, உருது மொழியினைக் கற்றுக் கொண்டார். சரியாக ஓர் ஆண்டில், இஸ்லாமிய மறையை முறையாகப் படித்து முடித்தார். இவருக்கு, சமஸ்கிருதம், பெர்சி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ,உருது உட்பட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் நிபுணத்துவம் இருந்தது. ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவரின் கிடுக்கிப்பிடி வினாவிற்கு, ‘மொழிகளில்,மெளன மொழியே சிறந்தது’ என்ற பதிலைச் சொல்லி, நகர்ந்து சென்றார்.
           1975 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்திய மக்கள் ஒழுக்கத்தையும் , சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்ள,  இதுவும் ஒரு சரியான வாய்ப்பு என்ற எண்ணம், அவரது இந்த  நிலைப்பாட்டிற்குக்  காரணமாக இருந்திருக்கலாம். அனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
           இது தவிர, நிலம் பெறும் பயனாளிகளில் ஏற்பட்ட குழப்பம், பயனற்ற நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட செயல்கள் என அவரது இயக்கங்கள் முழு வெற்றியை அடையவில்லை. ஆனாலும், அவரது நேர்மையும், அர்ப்பணிப்பும் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவராலும் போற்றப்பட்டது.
                1953ஆம் ஆண்டு, டைம் இதழின் அட்டைப்படம் இவரைச் சுமந்து வந்தது. ஆசியாவின் நோபல் என்றழைக்கப்படும் ராமன் மகசேசேயின் முதல் விருது, 1958ல் இவரது தோள்களைத்தான் தேடியது. 1983ஆம் ஆண்டு, இவரைச் சேர்ந்ததால் பாரத ரத்னா  விருது,  தனது மதிப்பை உயர்த்திக் கொண்டது. ஆம், அன்பின் மூலம் மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்த வினோபாஜி, ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் உறுப்பினர் ஆனார்.
              1982 ஆம் ஆண்டு உடல் நலிவுற்ற போது, மரணத்தை இன்முகத்தோடு வரவேற்றார். மருத்துவம் மறுத்தார். உண்ணும் உணவையும், அருந்தும் நீரையும் தவிர்த்தார். 1982ஆம் ஆண்டு, நவம்பர் 15ஆம் தேதி, மெளன மொழியோடு மரணத்தைத் தழுவினார் வினோபாஜி. ஒரு மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.  தன்னலமற்ற காந்தியவாதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு, பிரதமர் இந்திரா காந்தி, தனது  ரஷ்யப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பினார்.
    காந்தியை விடவும் ’காந்தியத்தை’ -உறுதியாகக் கடைபிடித்த மகான்   வினோபாஜி.   ஆம், பதவிகளை விரும்பாமல், பாரதத்தின் சுமையை தன் தோள்களில் ஏற்றிக் கொண்டார். சர்வோதயம் மலர தன்னையே ஒப்புக் கொடுத்தார்.
         உதட்டளவில் அல்ல; உள்ளத்தால் , செயலால் -  தனது வாழ்வை தேச நலனுக்கு  முழுதாக அர்ப்பணிக்கும் மெஸியாக்கள் நிச்சயம் வருவார்கள். நம்பிக்கையோடு காத்திருப்போம்!
              
               
               

Sunday, September 9, 2018

இடராயினும் இதயம் நீயே!


இடராயினும் இதயம் நீயே!


வேலற்ற போர்வீரன் நான்-இரு
காலற்று தார்ச்சாலையில்-பருகப்
பாலற்ற சேயாகிறேன்

ஒளிராத பாதைகளில்-கடுங்
குளிரான பாறைகளில்-இளந்
தளிராக வழி பார்க்கிறேன்.

தடையற்ற துன்பங்களில்-ஓடும்
மடையற்ற வெள்ளங்களில் நானும்
படையற்ற கோ ஆகிறேன்.

தாளாத சோகங்களில்-பொன்
ஆகாய மேகங்களில் - நான்
போகாத இடம்போகிறேன்.

மறுக்கின்ற மனதுக்கெல்லாம்- நீர்
அறுக்கின்ற கரையாயினும்- பூ
சொறிகின்ற மரமாகுவேன்!

பிளக்கின்ற கரமாயினும் -அது
தளர்கின்ற வேளைகளில்-ஒரு
நிலம்போல நான் தாங்குவேன்.

வெறுத்தாலும் ஒதுக்காத கார்மேகமாய்- யார்
மறுத்தாலும் வருகின்ற ஓர்காலியாய்-எனை
ஒறுத்தாலும் உனைத் தேடுவேன்!.

Wednesday, September 5, 2018

களமறியாத கழுதை..



களமறியாத கழுதை...!


அழுக்குத் துணிகளை முதுகில் சுமந்தபடி ,
ஒய்யாரமாய் உலாப்போகும் கழுதைகள்
தினமும் ஏளனமாய்ச் சிரிக்கும்.

இன்றோ கவலையில்…
கால் தடுமாற.

'கோடை விடுமுறை தான் இல்லை,
நமக்கும் ஒரு
ஆண்டு விழா, விளையாட்டு விழா
என சில நாள்கள்  வாராதா,
பொதியற்றுப் பயணிக்க.'

சங்கத்தில் புலம்பிட
முடிவெடுத்திருக்கிறது
கழுதை.

வெகு சிறப்பு.
முக்காலமும் பொருந்தும்
முக்கிய முடிவு!

பாவம் கழுதைகள்...
கள நிலவரம் அறிவதில்லை.!

Tuesday, September 4, 2018

முடிவிலாப் பயணம்

விபத்தில் முகிழ்த்த விதையின் பயணம்!


எங்கோ ஒரு மகரந்தம்
ஏதோ ஒரு சூலுடன்
ஒட்டிக் கொண்டதன்
வெற்றிச் சுவடு மட்டுமே நான்.

சொந்த நிலம் தூர எறிந்தது; எனை
எந்த நிலமும்  ஏற்க மறுத்தது.

நுரையீரல் தொடாதிருக்க – எனை
அணுகாது அகன்றது காற்று.

கார் மேகம் ஒருநாளும்
நீர் காட்டவில்லை – என்
வேர் தொட்டதில்லை.

இருளை எரிக்கும் சூரியன் ஏனோ,
எரிச்சல் காட்டியே நகர்ந்தது.

நாளும் பொழுதும் சாகிறேன்!
அனலில் விழுந்த -
விதையாய் வேகிறேன்.!

இனி,
மண் தேடியே
மடி தேடியே
மடிவேனா?
மடிந்தால்
எனையேந்திடும்
நிலந்தேடியே
முடிவேனா?

விதியே....விதியே....
எனை என் செய்ய நினைத்தாயோ?

Sunday, September 2, 2018

நாளும் அறிவோம் - செப்டம்பர் 2

முக்கண்ணன் - உலக தேங்காய் தினம்.


செப்டம்பர் 2... இன்று!



"உடல் மேல் ஓடு உண்டு; ஆமை இல்லை.
‌முக்கண்ணும் உண்டு; சிவனும் இல்லை.
உள்ளமோ வெள்ளை; அது வெண்ணை இல்லை.
நல்லது , கெட்டது எது என்றாலும் நானே வருவேனென்று, 
முதலில் நிற்பவன் யாரெனத் தெரியுமா?”
     - அவன் பெயர் தான் தேங்காய்!
      
         உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது என்று அறிவியலும், தேங்காய் ஓட்டை உடைத்தால், வெண் பருப்பு கிடைப்பது போல,  ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால், இறைவன் என்னும் அகப்பொருள் காணலாம் என்று  ஆன்மீகமும் தேங்காய் பற்றி உயர்வாகவே சொல்லி வருகின்றன. நமது உணவிலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறியுள்ளது தேங்காய். அதன்  முக்கியத்துவம் அறியவும்,  உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை பரவலாக எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் உலக தேங்காய் தினம், ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் 2ஆம் தேதி  கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம்,  இன்று உலக தேங்காய் தினம்.! 
        தென்னை சாகுபடியின் மூலம்,    தனி மனிதனின் பொருளாதாரத் தேவையை வளப்படுத்தவும், நாட்டின் உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் ஏற்படுத்தவும் திட்டங்கள் தீட்டி, அதனை  உரிய வழியில் செயல்படுத்த உருவாக்கப்பட்டதுதான், ”ஆசிய பசிபிக் தேங்காய் குழுமம்” (APCC).. இந்த அமைப்பு 1969ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதன் நினைவாகவே, சர்வதேச தேங்காய் தினம், செப்டம்பர் 2 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையகம் ஜகார்த்தாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை நிறுவிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும். 
         இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இலங்கை  போன்ற நாடுகளே தென்னை மரங்கள் வளர்ப்பதிலும், வருமானம் ஈட்டுவதிலும் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்த வரையில், தென்னை வளர்ப்பில்,  கேரளா முதலிடத்தில்  உள்ளது. தமிழகம் மூன்றாவது இடம். (2016-2017ஆம் ஆண்டு கணக்கின் படி).  தமிழர்கள் வாழ்வோடு இணைந்துவிட்ட தென்னையை, நாம்  ’பிள்ளை’  என்றே பெயரிட்டு அழைக்கிறோம். 
           தென்னையின் தாவரவியல் பெயர் ’கோகஸ் நியூஸிஃபெரா’.  போர்ச்சுகீசிய மொழியில்,  கோகஸ் என்றால் ’பயத்தை உருவாக்கும் பேய்’ என்று பொருள். மண்டை ஓடு போலவே தேங்காய் ஓடும் இருப்பதாக எண்ணிய போர்ச்சுகீசியர்கள், தேங்காயை கோகஸ் என்று அழைத்தனர். நியூஸிஃபெரா என்றால் ’பருப்பினை கொண்டது’ என்று அர்த்தமாம். 
           தமிழில், தேங்காய்க்கு வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்கள் உண்டு. முதல் நிலை ’குரும்பட்டி’ - இது எதற்கும் உதவாது. அடுத்து, இளநீர் - சுவை நீரும் வழுக்கையும் கொண்டது. மூன்றாவது, முட்டுக்காய் - இதில் இளநீரும் அரைப்பருவத்  தேங்காயும் இருக்கும்.  இறுதியாக,   தேங்காய்  மட்டை - தானாகவே விழும் இதில், நீர் வற்றி, நன்றாக முற்றிய தேங்காய் இருக்கும். இதனைத்தான் தெங்கம்பழம் என்று அழைப்பர். 
                வெப்ப மண்டலத் தாவரமான தென்னை,  சராசரியாக 30 மீட்டர் உயரம் வரை வளரும். தென்னை ஓலை 5-6 மீ நீளம் வரை இருக்கும்.  உலகில் ஏறக்குறைய 100 நாடுகளில் தென்னை வளர்க்கப்படுகிறது. முதுமையைத் தள்ளிப் போடுவதில் கொப்பரையும், கெட்ட கொழுப்பை நீக்குவதில் தேங்காயும் உடலுக்குப் பெருமளவு நன்மை செய்கின்றன.  தாய்ப்பாலுக்கு இணையான புரதச் சத்து, இளநீரில் மட்டும் தான்  உள்ளது என்று மருத்துவத் துறை வலியுறுத்திச் சொல்கிறது.    
                        தொ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்,  இளநீர் என்ற சொல்லை விட இளந்தேங்காய் என்பதே பொருத்தம் என்கிறார். ஏனெனில், கிழக்கிந்திய மொழிகளில் ஒன்றான 'முண்டா' மொழியில், நீர் என்ற சொல்  தேங்காயைக் குறிக்கிறது. எனவே, நாம் இளநீர் என்று சொல்வதற்குப் பதிலாக இளந்தேங்காய் என்றே குறிப்பிட்டுப் பழக வேண்டும்  என வலியுறுத்துகிறார் தொ.ப.மீ. .
          தென்னை மரம்,    வேண்டிய நலனைத் தருமென்பதால், இந்தியாவின் பல பகுதிகளில், இதனை  ’கற்பக விருட்சம்’ என்றே அழைகிறார்கள். இம்மரம், தமிழ் இலக்கியத்தில் தெங்கு (அ) தாழை எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 
 “........ நாய் பெற்ற தெங்கம்பழம்”  - பழமொழி நானூறு.
 “ கோள் தெங்கின் குல வாழை”  -  பட்டினப்பாலை. 
    தெங்கு என்ற சொல்லில் இருந்தே, தெங்கங்காய், தெங்கம்பழம் எனும் சொற்கள் தோன்றின. 
           தென்னம்பாளையை உட்புறமாகச் சீவி, சுண்ணாம்பு தடவாமல், சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும் பானம் தென்னங் கள்;   சுண்ணாம்பு தடவி வைத்துக் காத்திருந்தால், பிறகு கிடைப்பது பதநீர்.  இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பானம் தான் ’நீரா’ (5'C வெப்பநிலையில்).
    கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில், முறைப்படுத்தப்பட்ட "நீரா பானம்" விற்பனை,  தற்போது கோக், பெப்சியை வணிகத்தில் முந்திச் செல்கிறது. ஒரு மரத்தில், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு, தினமும் 5 லிட்டர் என்ற அளவில் நீரா பானம் தயாரிக்கலாம் என்கிறது இந்தியாவின் சி.டி.பி. அமைப்பு.(Coconut Devolopment Board). இதன் தலைமையிடம் கொச்சியில் உள்ளது. கார்பனேற்றம் செய்யப்பட்ட செயற்கை பானங்களைத்  தவிர்த்து, இயற்கை பானங்களையே  பருகப் பழகுவோம்.
               காணி நிலமிருந்தால், பத்துப் பனிரெண்டு தென்னை மரம் பக்கத்தில் கொள்வோம். முத்துச் சுடரொளியை முன்பு வரச் சொல்வோம். சித்தம் தெளிந்திடவே, இளந் தென்றல் வந்து தீண்டச் செய்வோம்.!
                 காடு, கரை இல்லையென்றால், குடியிருக்கும் வீட்டருகே -  தென்னை ஒன்று வளர்ப்போம். அதற்காக இன்றே,  உறுதி ஒன்று எடுப்போம்.!

         தேங்காய் எனும் பெயர்ச்சொல், பல நேரங்களில்   வினைச் சொல்லாய் மாறி, நம்மை விளிக்கிறது.
   ஆம்,  ’தேங்காய்’  நம்மைப் பார்த்து, ’தேங்காய்  மானிடா,  தேங்காய்....!' என,  தேங்கிடாமல் நகர்ந்து கொண்டே இருக்கச் சொல்கிறது. தேங்கி விட்டால், அதன் ஓலை தான், நமைத் தாங்கிச் செல்லும் கடைசி மஞ்சமாகிறது!

தேங்கிடாமல் பயணிப்போம்!



Saturday, September 1, 2018

நாளும் அறிவோம் - செப்டம்பர் 1

இன்று மற்றொரு இன்றல்ல  - ஜி.நாகராஜன்.


செப்டம்பர் 1...இன்று!


”அடுத்து வருவது  ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவா என்றெல்லாம் கவலைப்படாது, அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்ளும்  அந்த சிறுமியிடத்தே யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது”   - பரத்தையர் பற்றி  ஜி. நாகராஜன்.

        இலக்கிய வெளிச்சம் ஊடுருவாத பகுதிகளுக்குள் இவரது பார்வை நுழைந்தது.  அதற்குள்ளாகவே தானும் நுழைந்து, தன் பேனா மையால் அவர்களின் வாழ்வினை அழியாத சித்திரமாக்கிய எழுத்தாளர் இவர். மதுரை நகர வீதிகளில் அலைந்து திரிந்து, வாழ்வினைத் தான் விரும்பியபடியே சுகித்தவர்.  அழகு, அழகின்மை, நன்மை, தீமை என யாவற்றையும் ருசித்த இவர், நவீனத்துவத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்தாளர் ஜி.நாகராஜன் (1929-1981) பிறந்த நாள் இன்று. 
            
            35 சிறுகதைகள், 4 'நிமிஷக்கதைகள்' என்னும் குட்டிக்கதைகள் , ஆங்கிலக் கதைகள், மற்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.  ’குறத்தி முடுக்கு’, ’நாளை மற்றுமொரு நாளே’ என இரண்டே நாவல்கள் . இவைதான் ஜி.நாகராஜனின் மொத்தப் படைப்புகள். ஆனால், இவை அடர்த்தி மிகுந்தவை; ஆழம் நிறைந்தவை; அறியாத உலகினை வாசகனுக்குக் காட்டி, ஆச்சரியமும்,  அதிசயமும்  தருபவை. மேலோட்டமாகப் பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால், அறம் சொல்லும் படைப்புகள் இவை என்பதை அறிந்து கொள்ளலாம். 
                மதுரையில் கணேச அய்யருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார் நாகராஜன். தனது நான்காவது வயதிலேயே,  தாயை இழந்தார். திருமங்கலத்தில் தாய் மாமா வீட்டில் வளர்ந்தார். பழநியில் இருந்த தந்தை வீடு,  மதுரையில் மாமா வீடு என மாறி மாறித் தங்கியதில்,   இவரது பள்ளிக்கூடங்களும் மாறிக் கொண்டே இருந்தன.    பதினொன்றாம் வகுப்பிற்குப் பிறகு, மதுரைக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார்.  கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, அறிவியல் மேதை  சர் சி.வி.ராமன் கையால் விருது  வாங்கினார். தொடர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படித்து, முதல் வகுப்பில் தேறினார். காரைக்குடி கல்லூரியில் சில காலம் பணியாற்றிய பிறகு, சென்னையில் சில காலம் கணக்கர் பணி.  பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
               திடமான தேகம், தடிமனான மீசை, மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, விரல்களுக்கிடையே சார்மினார் சிகரெட் என ஜி.நாகராஜனின் தோற்றமே, மாணவர்களுக்கு வசீகரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கணிதப் பாடம் நடத்துவதிலும், ஆங்கிலப் பாடத்திலும்  தனிதன்மையும் , அபார ஆற்றலும் கொண்டிருந்த இவரது கற்பித்தல் முறை அனைவரையும் காந்தம் போல இவர் பக்கம் ஈர்த்தது.
          அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் போதுதான், கம்யூனிச சித்தாந்தங்களுக்குள் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். மாலை வேளைகளில், கம்யூனிசக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில்,  அமெரிக்கா சென்று ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பை, கல்லூரி நிர்வாகம் இவருக்கு வழங்கியது. வாய்ப்பை மறுத்த நாகராஜன்,  தனது வேலையை ராஜினாமா செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை முழுநேர ஊழியராக இணைத்துக் கொண்டார். 
           ந.வானமாமலை , திருநெல்வேலியில் நடத்திய தனிப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக சிலகாலம் கழித்தார்.   கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை நகரக் கமிட்டிச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒருமுறை,  மேலப்பாளையத்தில் ஜப்தி நடவடிக்கைகளுக்கெதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார்.  சிறவாசமும் அனுபவித்திருக்கிறார். 
         திருநெல்வேலியில் இருந்தபோது தான், தன்னை தீவிர இலக்கியத்திற்குள் ஆட்படுத்திக் கொண்டார். கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி போன்றோருடன் எப்போதும் தொடர்பில் இருந்தார். 1957ஆம் ஆண்டு, இவரது முதல் சிறுகதை, 'அணுயுகம்' , ஜனசக்தி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். பித்தன் பட்டறை வெளியீடான, 'குறத்தி முடுக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாவலில், வேசியர் உலகினை வாசகன் கண்முன்னே நிறுத்தினார் ஜி.நாகராஜன். அவரது படைப்புகளில், "நாளை மற்றுமொரு நாளே" சிறப்பான ஒன்றாகும். கந்தன் என்பவனின் ஒருநாள் வாழ்க்கை அது. துணிந்திருந்தால், அவ்வாழ்வு நம்மையும் தொற்றியிருக்கக் கூடும்.! அது ஒரு ரணம் நிறைந்த வாழ்வு.
    திடீரென்று, 1956 ஆம் ஆண்டு , கம்யூனிஸ்ட் அமைப்பிலிருந்து , தன்னை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார். அந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்தர் மேல், அவருக்கு அதீத ஈர்ப்பு எற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு, மீண்டும் மதுரை திரும்பினார். விருப்பமும், வாழ்வும் அழைத்துச் செல்லும் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார். தனிப்பயிற்சிப் பள்ளியில் இவர் நடத்துகிறார் என்ற விளம்பரம் திரையரங்குகளில் வெளிவந்த காலம் அது. ஆனால், இவரோ மீளாத போதையில் மாட்டி கொண்டார். விதியின் கரங்களில் இவரது வாழ்வு ஒப்படைக்கப்பட்டது.  
             1959ல் ஆனந்தா என்ற பெண்ணுடன் திருமணம். நான்கே மாதங்களில், வீட்டில் நடந்த விபத்தொன்றில் முதல் மனைவியைப் பறிகொடுக்கிறார் ஜி.நாகராஜன். 1962ல் நாகலெட்சுமி என்ற பள்ளி ஆசிரியரை மறுமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஆனந்தி, கண்ணன் என இரண்டு பிள்ளைகள். ஆனால் வாழ்வின் பிற்பகுதியில் , தனியாகவே சுற்றித் திரிந்தார். மனைவியும் , மகளும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். மகன் கண்ணன் மாமா வீட்டில் தங்கியிருந்தான்.
            மெலிந்த தேகம், அழுக்கு வேட்டி, கிழிந்த ஜிப்பா, விரல்களுக்கிடையே கஞ்சா சுருட்டப்பட்ட சிகரெட் - இப்படிப்பட்ட நிலையில் தான், 1981 ஆம் ஆண்டு, எழுத்தாளர் சி.மோகன் உதவியுடன்,  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார் ஜி.நாகராஜன். தான் சொல்லியிருந்தபடியே,  சாவை எதிர்கொள்ள தன்னை தயார் படுத்திக் கொண்டாரோ என்னவோ, “ ரொம்ப குளிருது, சிதையில் போய்ப் படுத்தால் தான் , இந்தக் குளிர் போகும்” என முதல் நாள் இரவு சொன்னவர், மறுநாள் காலையில் எழவில்லை.  1981- பிப்ரவரி 19 ஆம் நாள் அதிகாலை , தானே ஆட்படுத்திக் கொண்ட துன்பச் சிலுவையிலிருந்து நிரந்தர விடுதலை பெற்றார் ஜி.நாகராஜன். 
               மனைவிக்கும் , பிள்ளைகளுக்கும் தகவல் தரப்பட்டது. நெருங்கிய நண்பர்கள் வந்திருந்தனர். மொத்தத்தில்,  15க்கும் குறைவான மனிதர்கள் மட்டுமே வந்துசேர,   மதுரை தத்தனேரி மயானத்தில் இவரது உடல் எரியூட்டப்பட்டது. சாகாவரம் கொண்ட படைப்புகளை மட்டும், அவர் இங்கே விட்டுச் சென்றிருக்கிறார். ஆம், அவையெல்லாம்   தன்னை இழந்து, அவர் எழுதிய படைப்புகள் அல்லவா ?. 
                  விளிம்பு நிலை மனிதர்களின் ஒரு பிரிவான பரத்தையர் உலகம், அவர்களின் வாழ்வு, தேடி வரும் மனிதர்களின் மனநிலை இவற்றோடு, அவர்கள் அடைந்த அவமானம், பெற்ற நோய்கள், செய்த சின்னத்தனங்கள் என எல்லாவற்றையும் ஒளிவின்றி வெளிப்படுத்தினார் ஜி.நாகராஜன்.  ”ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள், ஏன் இதையெல்லாம் எழுதுகிறீர்கள் என்று மட்டும் கேட்டு, தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள்” என்று கேட்ட ஜி. நாகராஜனின் குரல், தமிழ்ப் படைப்புலகில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.        

   சில இடங்களை ஆழ்ந்து பார்க்கலாம்;       சில தடங்களைக்  கூர்ந்து நோக்கலாம்; 
   மூழ்குதல் சரியாகுமா?

அறியா உலகினை அறிய நினைத்து, அரிய வாழ்வினை இழத்தல் என்பது  முறையாகுமா?.