Friday, August 31, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 31

ஆசியாவின் நோபல் - ராமன் மகசேசே.

ஆகஸ்ட் 31... இன்று!


”நாட்டின் சட்டத்தை,   எனது தந்தை மீறுவாரென்றால் அவரை சிறைச்சாலைக்கு அனுப்பவும்  தயங்க மாட்டேன் ”.
                 -ராமன் மகசேசே (டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்.)

          ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி , பிலிப்பைன்ஸ் நாடு கோலாகலமாகிறது.  ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த சாதனை மனிதர்களைப் பெருமை செய்யும் நாள் இது.  ஆம், இதே நாளில்தான்,  ’ஆசியாவின் நோபல் பரிசு’ என உயர்வாகக் குறிப்பிடப்படும் “ராமன் மகசேசே விருது”, 1958 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து   வழங்கப்பட்டு வருகிறது.  
          அப்பழுக்கற்ற அரசுப்பணி, தலைமைப் பண்பு, இலக்கியம் , அமைதி மற்றும் பொது சேவை என ஐந்து பிரிவுகளில், தனி மனிதர்கள் அல்லது குழுவினருக்கு, இந்த விருது  வழங்கப்படுகிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்தும், 40 வயதிற்கும் குறைவான தனி நபர்களுக்கு, 2000 ஆவது ஆண்டு முதல் ‘வளரும் தலைமை’ என்னும் சிறப்பு விருதும் வழங்கப்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு - முதல் முறையாக, ‘ராமன் மகசேசே’ விருது,  இந்தியாவின் 'பூமிதான இயக்கத் தந்தை' வினோபா பாவேவுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது.
         வினோபா பாவே போலவே ,  ஏழை மக்கள் உழைத்துப் பொருளீட்ட, அவர்களுக்கு தேசத்தின் நிலங்களைப் பங்கிட்டுக் கொடுத்தவர்  பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மகசேசே. அவரது  பெயரில் வழங்கப்படும் இந்த விருது, சர்வதேச அளவில் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்றாகும்.      இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய , பிலிப்பைன்ஸ் வரலாற்றில்,  மூன்றாவது அதிபராக இருந்த   ராமன் மகசேசே     (1907 - 1957)  பிறந்த நாள் இன்று. 
       எக்ஸ்க்யூல் மகசேசே - பெர்ஃபெக்டா ஃபியரி  இணைக்கு மகனாக, 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ராமன் மகசேசே பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, வணிகவியலில் பட்டம் படித்தார். பிறகு, பஸ் கம்பெனி ஒன்றில், கடை மேலாளராகச் சில காலம் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, பிலிப்பைன்ஸ்  ராணுவத்தில் சேர்ந்தார். 1942ல், இவரது படைப் பிரிவு போரில் சரணடைந்தபோது, இவர் மட்டும் தப்பிச் சென்றார். மூன்று ஆண்டுகள் மற்ற படைப்பிரிவினருடன் சேர்ந்து, ஜப்பான் படைக்கு எதிராக கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டார். போர் நிறைவுக்கு வந்த போது, லிபரல் கட்சி சார்பில் , மேலவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டர்.             
             1950ஆம் ஆண்டு, உள்நாட்டில் அரசுக்கெதிரான கலவரங்கள் அதிகரித்திருந்தன. கம்யூனிஸ்டுகள் என்று தன்னை அறிவித்துக் கொண்ட போராளிகள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை ஒடுக்கி, நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு மகசேசேவிடம் வழங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். கொரில்லாப் போர் முறையில் ஏற்கெனவே அனுபவம் கொண்டிருந்த மகசேசே,  ஹக்ஸ் என்ற அந்தக் குழுவினரை ஒடுக்கி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
          பாதுகாப்புத் துறை செயலாளர் பதவி இனிமேல் மகசேசேவுக்குத் தேவையில்லை என அந்நாளைய அதிபர் க்யூரினோ எண்ணிக்கொண்டிருந்த வேளையில், 1953 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார் மகசேசே. நாட்டில் நிலவும் அத்தனை குழப்பங்களுக்கும் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம், அதனைச் சரிசெய்ய ஒரு எளிய குடிமகனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அறிவித்தார்.
             1951ஆம் ஆண்டு, அவரது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மோயிசஸ் பாடில்லா எனபவர் கொடூரமாத் தாக்கப்படுகிறார். அவரை காக்கும் பொருட்டு, பிளாசா நகரின் காவல் நிலையம் செல்வதற்குள், அவர் கொல்லப்படுகிறார். 14 தோட்டாக்களால் சல்லடையாக்கப்பட்ட அவரது  உடலை, கைகளில் ஏந்தியபடியே, பிணவறைக்குத் தூக்கிச் சென்றார் மகசேசே. 'பாடில்லா நிகழ்வு' என இது வரலாற்றில் பதிவானது.  ஆளும் கட்சியை எதிர்க்கத் தொடங்கினார். நியாயம் கேட்டார். மக்கள் இவர் பக்கம் நின்றனர்.
             
         அப்போதைய எதிர்கட்சி, இவரையே அதிபர்   தேதலில் நிறுத்த எண்ணியது. முதலில் தயங்கிய மகசேசே, பின்னர் தேர்தலில் நிற்கச் சம்மதித்தார். பிரச்சார மேடைகளில் நடனமாடி ஆதரவு கேட்ட மகசேசே, ’தரமான நிர்வாகம்’ வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார்.  நாசியோனலிஸ்டா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவருக்கு, மக்கள் மகத்தான வெற்றியை அளித்தனர். இத்தேர்தலில் அமெரிக்காவின் ரகசியத் தலையீடு இருந்ததாக, பின்னாளில்  வரலாற்று அறிஞர்கள் கட்டுரைகள் எழுதினர்.
        1953 ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற மகசேசேவின் ஆட்சி, ஊழலற்ற, சுத்தமான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. அனைத்து துறைகளிலும் முன்னணியில் நின்றது பிலிப்பைன்ஸ் நாடு.  மக்களும் தலைவனின் மனதைப் புரிந்து கொண்டு பின் தொடர்ந்தனர்.
             ஆனால், புரிந்து கொள்ள முடியாத மர்மமான முறையில், விமான விபத்தொன்றில் இறந்து போனார்  மகசேசே. 1957 ஆம் ஆண்டு, மார்ச் 17 ஆம் தேதி அதிகாலை, 24 பேருடன் இவர் பயணித்த அந்த விமானம் முதலில் மாயமானது. பிறகு, விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.   பிலிப்பைன்ஸ் மக்களின் பிரியத்திற்குரிய தலைவராக இருந்த மகசேசேவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.
              இவரது மனைவி பெயர் லூஸ் மகசேசே. இவருக்கு          இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். பதவிக் காலத்தில், தனது பெயரைப் பயன்படுத்தி உறவினர்கள்,  அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. தனக்கான சம்பளப் பணத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்தினார். குடும்ப வேலைகளுக்கான பயணத்தில், தனது காரை தானே தான் ஓட்டிச் செல்வார். ஓட்டுநரை நியமித்துக் கொள்ளவில்லை.
   ராணுவச் செயலாளராக இருந்தபோது, இவரது கார் ஓட்டுநர் ,  சாலை விதியை தவறுதலாக மீறிவிட, போக்குவரத்துக் காவலர் வண்டியை நிறுத்தி விட்டார். காரின் உள்ளே இருந்த  மகசேசேவைப் பார்த்தவுடன் மன்னிப்புக் கோரினார் காவலர். ஆனால் இவரோ, தவறுக்குரிய அபராதம் செலுத்திவிட்டு, காவலரைப் பாராட்டிச் சென்றார்.
           
          அடைமொழியிட்டு என்னை அழைக்க வேண்டாம், மிஸ்டர் எனப் பெயர் சொன்னால் போதும்.  அரசு சார்ந்த நலத்திட்டங்களான பாலங்கள், கட்டிடங்கள், நீர்த்தேக்கங்கள் என எதற்கும் எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் எனச் சொன்ன தலைவன் மகசேசே.
       தெளிவு,எளிமை, நேர்மை, தேசத்தின் மீது தன்னிகரற்ற காதல்- எல்லாவற்றுக்கும் மேலாக, உறவுகளை, நண்பர்களை  நிர்வாகத்தில் தலையிட விடாமல்  பார்த்துக் கொண்டது. இது போதாதா -   ஒரு மக்கள் தலைவன் , வரலாற்று நாயகனாக மாறுவதற்கு,  அப்படி வரலாற்றில் இடம்பிடித்தவர் தான் ராமன் மகசேசே!. இங்கே, தலைவனைப் பெயர் சொல்லி அழைப்பது கூட, பெரும் பிழை என்றல்லவா கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.

    பெயருக்கு முன்னால் அடைமொழி, பெயர்ப்பலகைகள், பதாகைகள் என்ற விசித்திர வலையைத் தாண்டி, நம்மூர்த் தலைவர்கள் எப்போது வெளியே வருவார்கள்?


Thursday, August 30, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 30


ஒப்பியல் அகராதி- நல்லூர் சா. ஞானப்பிரகாசம்

 ஆகஸ்ட் 30....இன்று!


          72 மொழிகளை அறிந்தவர்; அவற்றில் 18 மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்தவர்;  ஆயினும் எல்லா மொழிகளுக்கும் வேர் மொழி, தன் தாய்மொழியான தமிழ் மொழியே என, தீவில் இருந்து தரணிக்குச் சொன்னவர்.

       ஆம்,     தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கெல்லாம் சொற்கொடை வழங்கியது என்பதை தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளின்  மூலம் நிரூபணம் செய்து கொண்டே இருந்தவர்;  ’சொற்கலைப் புலவர்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்; சமயப் பணியையும், தமிழ்ப் பணியையும் தன் இறுதி மூச்சு வரை இடைவிடாது செய்த  தமிழறிஞர் நல்லூர் ஞானப்பிரகாசர் (1875- 1947) பிறந்த நாள் இன்று.

               இலங்கை -  யாழ்ப்பாணம் அருகில் மானிப்பாய் என்ற ஊரில், 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி, இராஜசிங்கம் சாமிநாதப்பிள்ளை- தங்கமுத்து இணைக்கு, செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்  ஞானப்பிரகாசம். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்ற கனக சுப்புரத்தினம். ஞானப்பிரகாசத்தின் ஐந்தாவது வயதில்,  தந்தை இறந்து போனார். தாய் இரண்டாம் திருமணமாக, தம்பி முத்துப்பிள்ளை என்ற கத்தோலிக்க கிறிஸ்தவரை மணந்து கொண்டார். தாயும், மகனும் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறினர். ஞானஸ்நானம் செய்யும்  போது, ‘ஞானப்பிரகாசம்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. நிரம்பிய அறிவு கொண்டிருந்த தம்பி முத்துப்பிள்ளை , இவருக்கு எல்லா நூல்களையும் கற்றுக் கொடுத்திருந்தார்.

         1893 ஆம் ஆண்டு, இலங்கை ரயில்வே துறையில், இவருக்கு வேலை கிடைத்தது. மோர்ஸ் கோட் வழியே வருகை தரும் செய்திகளை துல்லியமாகப்     புரிந்துகொள்ளவும், விரைவாகப் பதிலளிக்கவும், திறன் பெற்ற ஒரு நபராக, இலங்கை ரயில்வே துறையில் வலம் வந்தார். உயர் பதவிகள் உடனே வந்தன. ஆனால், ஞானப்பிரகாசரோ, இறைபணியில் நாட்டம் காட்டினார்.  1895ஆம் ஆண்டு, குரு மடத்தில் சேர்ந்து, 01.12.1901 அன்று கத்தோலிக்க குருவானார். 

      ஊர்காவற்றுறையில் பாதிரியாராகப் பணியாற்றிய போது, நிதி வசூல் செய்து நூலகம் ஒன்று ஏற்படுத்தினார். தன் வாழ்நாள் காலத்தில் மொத்தம் 37 ஆலயங்களைக் கட்டி எழுப்பிய, ஞானப்பிரகாசர், நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தை சிறப்பாகக் கட்டி முடித்தார். அதன் பிறகே, அவர் நல்லூர் ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். 

          ’செகராச சேகரன்’   என்ற நாவலையும், ‘சைவ சித்தாந்தம்’, ’தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களையும் இயற்றிய ஞானப்பிரகாசம்,  “சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை ” உருவக்கத் திட்டமிட்டு,  தொடர்ந்து பணியாற்றினார். திட்டமிடப்பட்ட 20 தொகுதிகளில், ஆறு நூல்களை மட்டும் தனது காலத்திலேயே வெளியிட்டார். ஏனையவை கைப்பிரதியாகவே தேங்கின. 

        தமிழகத்தில் உள்ள திருப்பனந்தாள் மடம், இந்த அறிஞரின் தமிழ்ப்பணிக்கு,  உரிய பாராட்டையும், பெரிய உதவியையும் தொடர்ந்து செய்தது.  ஜெர்மனி அரசு இவரது பணிகளை மெச்சும் விதமாக, 1939ல் உருவ முத்திரை வெளியிட்டு ,  கெளரவம் செய்தது. சிந்து,ஹராப்பா பகுதிகளை ஆய்வு செய்து வந்த ஹெராஸ் பாதிரியார் என்பவர் தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக, ஞானப்பிரகாசத்தைச் சந்திக்க இலங்கைக்கே  வந்தார் என்பது , இவரது ஞானத் தெளிவை  நமக்குக் காட்டும் முக்கிய நிகழ்வாகும்.  வரலாறு, மொழியறிவு மட்டுமல்ல - இந்த அறிஞருக்கு வயலின் , மத்தளமும்  கூட வாசிக்கத்  தெரியும்.

         1946ஆம் ஆண்டு, இவரது அரிய நேர்காணல் ஒன்று, ‘மறுமலர்ச்சி”  என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது. அதில், அவர் சொன்ன இரண்டு பதில்கள் சிந்திக்க வைத்தன.  

        இத்தனை மொழிகளை எப்படி உங்களால் கற்றுக் கொள்ள முடிந்தது என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்;  “முயற்சி, முயற்சி, அதுதான் வெற்றி மந்திரம்.” - இந்த பதில் உள்ளத்திற்கு உறுதி தந்தது. 

            ‘”சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை”  வெளியிட இலங்கை அரசு,  தொடர்ந்து உதவ முன்வருமா என்ற கேள்விக்கு மன வருத்தத்தோடு அவரளித்த பதில்; “ சிங்கள அகராதியை உருவாக்கிட,  ஆண்டுக்கு பதினாயிரம் ரூபாய் வழங்கும் சிங்கள அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வழங்கி வரும் ரூபாய் ஆயிரத்தையுமா   நிறுத்திவிடப் போகிறது?, அப்படி நிறுத்தினாலும் என் பணி தொடரும்” - இந்த பதில், உள்ளத்தை உருக வைத்தது.
              ஏனெனில், தமிழ் அரசாங்கமும் அத்தீவில்  இருந்திருந்தால், அந்த அறிஞருக்கு இப்படி ஒரு கவலை வந்திருக்குமா? 

            ஜனவரி 22, 1947 -  தனது சொந்த ஊரில் இறந்து போனார் ஞானப்பிரகாசம்.  வெள்ளை ஆடை , வெண்ணிற தாடியுடன் இருந்த அந்த மனிதனின் அறை முழுக்கப் புத்தகங்களே  நிரம்பியிருந்தன. அவர் மனம் முழுக்க தமிழ்  “ஒப்பியல் அகராதியே” நிறைந்திருந்தது. காய்ச்சலால் இறந்துபோன அந்த ஞான ஒளி, தமிழுலகில், என்றென்றும்  அழியாது - சுடர் வீசிக் கொண்டே இருக்கும்.  இந்த பல்துறை வல்லுநர்,  தாய்மொழியாம்  தமிழ் மீது கொண்டிருந்த பாசம்,  நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து மொழிகளையும் அறிந்து வெல்க!   ஆயினும் ,
அன்னை மொழியையே உயிரெனக் கொள்க!

          

Wednesday, August 29, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 29

மைதானத்தில் மாயாஜாலம் - தயான் சந்த்.

ஆகஸ்ட் 29....இன்று!


"This is not a game of Hockey, but magic. Dhyan Chand is in fact the magician of Hockey".

   'ஹாக்கி' என்ற சொல்லையும், அதுதான் 'இந்தியாவின் தேசிய விளையாட்டு' என்பதையும்  அறியாதவர்கள்,   தயான் சந்த் என்ற நடு வரிசை முன்கள வீரரை அறிந்திருக்க வாய்ப்பில்லை!
           ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை  தங்கப் பதக்கம்; சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட கோல்கள்; உள்ளூர் போட்டிகளையும் சேர்த்தால் இவரது கோல்களின் எண்ணிக்கை 1000ஐத் தாண்டும்; ஹாக்கி மைதானத்திற்குள்  நுழைந்த 'மந்திரவாதி' போல கோல்களைப் பொழிந்து, பார்வையாளர்களை மிரட்சியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய  வீரர் தயான் சந்த் (1905-1979) பிறந்த நாள் இன்று.  
          1905ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 ஆம் நாள், சமேஷ்வர் சிங் - சாரதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் தயான் சிங். அலகாபாத் நகரத்தில் பிறந்த தயான் சிங்கிற்கு, மூல் சிங், ரூப் சிங் (இவரும் ஹாக்கி வீரர்) என  இரண்டு சகோதரர்கள். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சமேஷ்வர் சிங், அடிக்கடி பணி மாறுதல் செய்யப்பட்டதால் , தயான் சிங்கால்  பள்ளிப் படிப்பை தொடர்ந்து நிறைவு செய்ய இயலவில்லை. 
          தானது 16ஆவது வயதில், தந்தையைப் போலவே , ராணுவத்தில் சேர்ந்தார். மல்யுத்தப் போட்டிகளில் விரும்பி கலந்து கொண்டார்.  ராணுவ அணியில் சேர்ந்து விளையாடும் போதுதான், முதல் முறையாக ஹாக்கி மட்டையைத் தொடுகிறார். ஆனால், லாவகமாக பந்தைக் கடத்திச் செல்லும் திறனும், ஆடுகளத்தில் இவர் காட்டிய  வேகமும் முதல் முறை மட்டையைத் தொட்டவர் போலத் தெரியவில்லை. 
      தயான் சிங்கிற்கு பகல் முழுக்க ராணுவத்தில் வேலை. ஆனால்,    இரவு தொடங்கும்போது, மைதானத்தில் இருப்பார். சந்திரன் தனது அமுத ஒளியைப் பாய்ச்சத் தொடங்கும் போது, தனது பயிற்சியைத் தொடங்குவார். ஆம், இரவு மின் விளக்குகள் இல்லாத அந்த மைதானத்தில், சந்திர  ஒளியில் இரவு முழுதும் பயிற்சி செய்யும் தயான் சிங்கை , அவரது நண்பர்கள்  ’சந்த்’ என்றே அழைக்க ஆரம்பித்தனர். சந்த் என்றால் நிலா என்று பொருள். தயான் சிங் அப்போதிலிருந்து தயான் சந்த் ஆனார். 
        ராணுவ அணியிலிருந்து, இந்திய தேசிய ஹாக்கி அணிக்காக விளையாட, தேர்வு செய்யப்பட்டார் தயான் சிங்.  1926ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி தான், இவரது  முதல் சர்வதேசப் போட்டி. 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி, தங்கப் பதக்கம் பெறக் காரணமாக இருந்தார்.  ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் தனி ஆளாக  101  கோல்கள் அடித்திருக்கிறார். 
           1934 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக, தயான் சந்த் நியமிக்கப்படுகிறார். ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கெதிரான தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெறுகிறது. தயான் சந்த்தின் ஆட்டத்தைப் பார்த்த 'கிரிக்கெட்டின் பிதாமகன்' டான் பிராட்மன் மிரண்டு போனார். கிரிக்கெட் ஆட்டத்தில் குவிக்கப்படும் ரன்களை விடவும் வேகமாக கோல் மழை பொழிகிறார் என தயான் சந்த்தைப் பாராட்டினார்.  
        1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டி.  அனல் பறக்கும் ஆட்டத்தால்   எல்லா அணிகளையும் வெற்றி கண்டு, இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா.  ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்திருந்த, அந்த  'நாஜி ஒலிம்பிக்' போட்டியின் இறுதிப் ஆட்டத்தில்  இந்தியாவும் , ஜெர்மனியும் மோதின. போட்டி நடைபெற்ற நாள் 1936, ஆகஸ்ட் 15.  காண வந்த எண்ணற்ற ரசிகர்களுள் ஜெர்மனி அதிபர் ஹிட்லரும் ஒருவர். 
             முதல் பாதி முடிவில்,  ஜெர்மனி ஒரு கோல் அடித்து, 1-0 என முன்னிலையில் இருந்தது. ஹிட்லரின் முகத்தில் சந்தோஷம் வழிந்து கொண்டிருந்தது. இந்தியாவின் தோல்வி உறுதி என, ஐம்பதினாயிரம் ரசிகர்களும் முடிவு செய்திருந்தனர். ஆனால், தயான் சந்த் அப்படி நினைக்கவில்லை.           
       இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. தயான் சந்த், தனது மாயாஜால மட்டையைக் கொண்டு , ஜெர்மனி அணியினரை திக்கு முக்காட வைத்தார். இரண்டாம் பாதியில் மட்டும் இந்திய அணி எட்டு கோல்கள் அடித்தது. அதில் தயான் சந்த் ஹாட்ரிக்  கோல்கள் அடித்திருந்தார். முடிவில் இந்தியா 8-1 என ஜெர்மனியை வென்று, தங்கப் பதக்கத்தை தன் வசமாக்கியது. ஹிட்லர் முகம் வற்றிப்  போனது. மயான அமைதியில் ஜெர்மனி ரசிகர்கள் திரும்பிச் சென்றனர்.  
        பதக்கம் பெற மேடைக்குச் சென்ற தயான் சந்த்திடம் , ’ஜெர்மன் நாட்டுரிமையும், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன், இங்கே வந்து விடுகிறாயா?’ எனக் கேட்கிறார்  ஹிட்லர்.  சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவிக்கிறார் தயான் சந்த். 
    தயான் சந்த் கையில் இருப்பது மட்டையா அல்லது காந்தமா என சந்தேகப்பட்டு , ஒரு முறை அவரது மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது. நான்கு கைகள், நான்கு  ஹாக்கி மட்டைகளை வைத்திருப்பது போன்ற தயான் சந்த்தின் சிலை , ஆஸ்திரியா தலைநகரம் வியன்னாவில் வைக்கப்பட்டிருக்கிறது. உலகம் வியக்கும் இந்த ஹாக்கி மேதையின் பிறந்த நாளையே , 'இந்தியாவின் தேசிய விளயாட்டு தினமாக' நாம் கொண்டாடி வருகிறோம் , ஒரு சடங்கு போல.
          1956 ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற தயான் சந்த்திற்கு ஏழு குழந்தைகள். இவரது மனைவி பெயர் ஜானகி தேவி.  ராணுவத்தில் மேஜர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, சில காலம், ஹாக்கி அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார் தயான் சந்த்.   1952ஆம் ஆண்டு, சென்னையில் வெளியிடப்பட்ட இவரது சுயசரிதைப் புத்தகம், 'Goal!',  வெகு சுவாரஸ்யமான நூல்களில் ஒன்றாக உள்ளது. ஹிட்லர், பிராட்மன் உட்பட உலகமே வியந்த இந்த ஹாக்கி மேதையை உள்ளூர் மக்கள் முழுமையாக அறியவில்லை என்ற சோகம் இன்று வரை தொடர்கிறது. 
      இறுதிக் காலத்தில்,  ஞாபக மறதி, கல்லீரலில் புற்று நோய் என  அவதிப்பட்ட தயான் சந்த் வறுமையில் தான் இருந்தார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொதுப் பிரிவில், 1979 ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இறந்து போனார். தயான் சிங் என்ற தயான் சந்த்தின் உடல், சில சர்ச்சைகளுக்குப் பிறகு,  ஜான்ஸி நகரில்  அடக்கம் செய்யப்பட்டது. அங்கே, அவருக்கு சிலை ஒன்றும்  நிறுவப்பட்டது.    
         ஆண்டு தோறும் அவரது  பெயரில், விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு பாரத் ரத்னா விருது மட்டும்  தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.  தயான் சந்த்தை, இன்னும் நாம் பெருமைப்படுத்தியிருக்க வேண்டும்.

        அரசியல் அற்ற தூய்மைவாதிகள், யார் கண்களுக்கும் தெரிவதே இல்லை. புறக்கணிப்பை அவர்களும் பெரிதுபடுத்துவதில்லை. பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் கர்ம யோகிகள் அவர்கள்! 
            

Tuesday, August 28, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 28

மறுமலர்ச்சி  - ஸ்ரீ நாராயண குரு.

ஆகஸ்ட் 28 ....இன்று!


”கேரளாவின் மறுமலர்ச்சி நாயகன் ஸ்ரீ நாராயண குரு”                                           - ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.
     
        நாயரைக் கண்டால் ஈழவர்கள் எட்டடி தூரம் இடைவெளி விட்டு, நடக்க வேண்டும்; ஈழவர் வந்தால் புலையர்கள் எட்டடி தூரம் நகர்ந்தே செல்ல வேண்டும்; நாயாடிகள் என்ற பிரிவினர் இவர்கள் யார் முன்னும் வரக் கூடாது. நாயாடிகள் கண்ணில் பட்டாலே தீட்டு தான். - 19 ஆம் நூற்றாண்டில் கேரளா இப்படித்தான் இருந்தது. இதற்கு தீண்டாப்பாடு என்று பெயர். தீண்டாமை விதையின்  விஷ விருட்சமான ‘திண்டாப்பாடு’, கேரளாவெங்கும்  செழித்துக் கிடந்தது. 
       
  அந்த நேரத்தில் தான், புலையர் சமூகத்தில் புரட்சிப் புயலென அய்யன் காளி(1863) பிறந்தார். ஈழவ சமூகத்திலிருந்து ஈடு இணையில்லாத நாராயண குரு(1855), ஆன்மீகப் புயலென எழுந்து  வந்தார்.  இவர்கள் இருவருமே, ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிறந்தவர்கள் தான் என்பது கூடுதல் சிறப்பு.  இன்று, ஆகஸ்ட் 28, கேரளாவில் அரசு  பொது விடுமுறை. 
       கேரளாவின் மறுமலர்ச்சி நாயகன் ஸ்ரீ நாராயண குரு(1855-1928)  பிறந்த நாள் இன்று. ஆவணி மாதம், சதய நட்சத்திரத்தில் பிறந்த நாராயணனின் பெற்றோர் பெயர், மாடன் ஆசான் - குட்டியம்மாள். செம்பழந்தி கிராமத்தில்,  ஈழவ சமுதாயத்தில் பிறந்த நாராயணனை, அப்பகுதி மக்கள் ‘நாணு’ எனச் செல்லமாக அழைப்பர். கிராம மக்களுக்கு , ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைச் சொல்லும் மாடன் ஆசான் கொஞ்சம் சமஸ்கிருத அறிவும் பெற்றவர்.
   
  தாய்மாமா வைத்தியர் கிருஷ்ணன் அவர்கள், நாராயணனுக்கு தமிழ், சமஸ்கிருதம் மொழிகளைக் கற்றுக் கொடுத்தார். அமர்கோசம், சித்த பேதம் என வைத்திய நூல்களையும் அறிமுகம் செய்தார். கும்பம்பள்ளி ராமன் பிள்ளையிடம் கல்வி கற்கும் வாய்ப்பு நாராயணனுக்குக் கிடைக்கிறது. வேதங்களையும், உபநிடதங்களையும், தர்ம  சாஸ்திரங்களையும் கற்றுக் கொள்கிறார். தனியே அமர்ந்து தியானிப்பதும், தன் போக்கிலேயே பயணிப்பதுமாக இருந்த நாராயணனுக்கு, களியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். சில காரணங்களால்  இவர்கள் திருமண வாழ்வு  நீடிக்க வில்லை.   
   
  திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த தைக்காடு அய்யாவு என்பவரிடம் தமிழும், ஹட யோகமும்  கற்றுக் கொண்டார். தமிழில் உள்ள  சித்தர் பாடல்கள், சமய இலக்கியங்களை ஆர்வத்துடன் அறிந்து கொண்டார். தனது 23 ஆம் வயதில் வீட்டை விட்டுக் கிளம்பிய இவர், 7 ஆண்டுகள் பயணத்திலேயே இருந்தார். பயண காலத்தில், சாதி மத வேறுபாடு பார்க்காத பல ஞானிகளிடம் உபதேசம் பெற்றார். மீண்டும் திரும்புகையில்,  நாராயணன், நாராயண குருவாக மாறி வருகிறார்.
       
    நெய்யாற்றங் கரையில் இருந்த அருவிக்கரை என்னும் ஊரில், 1888 ஆம் ஆண்டு, சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்கிறார்.  ஈழவன் ஒருவன் சிவலிங்கம் வைத்து, பூசை செய்யலாமா என கேரளாவெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதற்கு நாராயண குரு சொன்ன புகழ் பெற்ற பதில், “நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிலையை அல்ல”. மேலும்,  “ சாதி, மத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் ஒன்றாய் வாழும் உதாரண தலமிது”, என கோவிலின் முகப்புச் சுவரில் எழுதி வைத்தார்.
   
      1904 ஆம் ஆண்டு,சிவகிரியில் அம்பாள் ஆலயம் ஒன்று அமைத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 1913 ஆம் ஆண்டு, ஆலுவா என்னுமிடத்தில் ‘அத்வைத ஆசிரமம்’ நிறுவினார். ஆரம்பத்தில் புதிய புதிய ஆலயங்களை நிர்மாணித்து, அனைத்து சாதியினரையும் ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தார் நாராயண குரு. சில காலங்களுக்குப் பிறகு, ஆலயங்களில் சிலைகளுக்குப் பதிலாக கண்ணாடியை வைத்தார். மக்களை பக்தித் தளத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
         
  புலையர் இனத்தில் பிறந்ததால், கடவுள் பெயரான பத்மநாபன் என்ற பெயரைத்  துறந்து,  கர்நாடகாவில் வசித்து வந்த டாக்டர் பல்பு “ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபையைத்” தோற்றுவித்தார். வற்கலையில் ஸ்ரீ நாராயண குருகுலம் தொடங்கப்பட்டது. குருகுலம் சார்பில் மாநிலமெங்கும் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஈழவர்களுக்கும், புலையயர்களுக்கும் சமஸ்கிருதக் கல்வி அளிக்கப்பட்டது. அது, சாதி வேறுபாடுகளைக் களைய அவசியத் தேவை என நாராயண குரு எண்ணினார்.
  1916ல் ரமண மகரிஷியைச் சந்தித்து, ஞான உரையாடல் நிகழ்த்தினார். 1923ல் நாராயண குருவைச் சந்தித்த மகாகவி தாகூர் , ’இவர் பாரததேசத்தின் மகரிஷிகளில் ஒருவர்’ என நெகிழ்ந்தார். 1925 ஆம் ஆண்டு, நாராயண குருவைச் சந்தித்த காந்தியடிகள்,  ’தர்ம சாஸ்திரத்தில் எனக்கு இப்போதுதான் தெளிவு ஏற்பட்டுள்ளது’ என்று சொன்னார். நாராயண குரு ஓர் ’அவதார புருஷர்’ என எழுதினார் காந்தியடிகள்.
 
 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஸ்ரீ நாராயண குரு, திருக்குறள் மீது கொண்ட காதலால் , அதனை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நாராயண குருவின் ‘ஆத்மோபதேச சதகம்’ புகழ் பெற்ற கவிதைத் தொகுப்பாகும். கேரள மகாகவி குமாரன் ஆசானும், நடராஜ குருவும் இவரது இரு  முக்கிய சீடர்கள்.
       
   கல்வி, தொழில் வளர்ச்சி, ஆன்மீகத் தெளிவு இவற்றினைக் கொண்டு சாதி, மத வேறுபாடுகளைத் துரத்தி விடலாம் என்பதையே வாழ்நாள் முழுக்க வலியுறுத்தினார்.  “நாயர்களின் தீண்டாமையை ஒடுக்க, ஈழவர்கள் அனைவரும் புலையர்களை அரவணைக்க வேண்டும், நாயாடிகளிடம் நட்பு கொள்ள வேண்டும்” என்று சொன்ன ஸ்ரீ நாராயண குரு, 1928 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி , சமாதி நிலை அடைந்தார். 
                        இன்றும், வற்கலையிலும், ஊட்டி ஃபெர்ன்ஹில் குரு குலத்திலும் , ஸ்ரீ நாராயண குருவின் கனவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.     ‘ஒரு சாதி, ஒரு  மதம் , ஒரே தெய்வம்’ எனும் அவரது  முக்கிய உபதேசம் , நடைமுறை வாழ்வில் எப்போது சாத்தியமாகும் என்பதுதான் தெரியவில்லை.

        ’சாதி’ அரசியலும், ’சாதி ஒழிப்பு’ அரசியலும் - அழியும் போதுதான் - மனங்கள் இணைந்து -  மகிழும்  மானுடம் -  மண்ணில் நிலைபெறும்.!
   
   


          

Monday, August 27, 2018

வாழ்த்து

வாழ்த்து மட்டுமே நான்...!

பாலையில் பரிதவித்தேன்- பாற்கடல் நீ.!
உலைநீரில் உளமிட்டேன் - உடனுறை நீ!

முள்ளிலே பயணித்தேன் - பாதம் நீ!
தவறிலே தடமிழந்தேன்  - வேதம் நீ!

கருகினால் சாய்ந்திடும் தோளும் நீ!
மருகினால் மனந்தேடும் தாளும் நீ!

வாடினால் விசும்பாய் மாறுவாய் நீ!
தேடினால் தேடுபொருள் ஆகுவாய் நீ!

ஓரெழுத்தாய் இயங்குகின்ற  ஒற்றைப் பதமாய் நீ!
நானிணையும் வேளையிலே இரட்டை கிளவியாய் நீ!

சமரிட்டு சந்தியில் நின்றால், முந்திவருவாய் நீ!
சரித்திரம் எனக்கே என்றால், பிந்திவருவாய் நீ!

கறுப்பு வெள்ளை-  புறம் அகமாய்  நீ!
மறுப்பு இல்லை - எனக்கு சுகமாய் நீ!

நீ... நீ...நீயென எல்லாமும் நீயே ஆனாய்!
நான் நானாயிருக்கவும்  காரணம் ஆனாய்!

வாதையிலா வாழ்வு பெற
வாழ்த்து மட்டும் சொல்லுகிறேன்!
ஏனெனில்,
இந்நாள் என் நாள்!

பிறந்த நாள்  வாழ்த்துகள்!





நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 27

நாதஸ்வரச் சக்கரவர்த்தி - டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

ஆகஸ்ட் 27...இன்று!


”பூலோகத்தில், அபஸ்வரங்களை வதம் செய்து, சுபஸ்வரங்களை இசைக்க வந்த சங்கீத தேவதையின் செல்லக் குழந்தை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை”     -  கல்கி.

         இசை ஞானத்தால் சங்கீத ரசிகர்களின் இதயத்தைக் கட்டிப் போட்டவர்; கச்சேரிகளில் கலைஞர்களுக்கென தனியே மேடை இட்டவர்;  வீண் ஆடம்பரமாக, ஒருவர் எப்படி வாழக் கூடாது என்பதற்கும் இவரே சான்றானவர் - நாதஸ்வரக் கலைஞர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை (1898 - 1956) பிறந்த நாள் இன்று.
          டி.என்.ஆர். உயிரோடிருக்கையில், இந்தக் கட்டுரை அவருக்கு படிக்க அனுப்பப் பட்டிருந்தால், மேற்கண்ட பத்தியைப் படித்ததுமே, கட்டுரைத் தாளைக் கிழித்திருப்பார். ஏனெனில், ‘அகில உலக நாதஸ்வர ஏகச் சக்கரவர்த்தி’, என்ற பட்டப் பெயர் இல்லாமல் வரும் கடிதங்களை, பிரித்துக் கூடப் பார்க்காமல் கிழித்துவிடும் பழக்கம் கொண்டவர் அவர். ஆதலால், முன் பத்தியில்,  அவரது பெயருக்கு முன்னால் அந்தப் பட்டப் பெயரை இணைத்துக் கொள்ளுங்கள்!.  ’நாகசுரம்’ என்பதே சரியான சொல் என்றாலும், அவரது கடித உறையில் உள்ள ’நாதஸ்வரம்’ என்ற சொல்லையே நாமும் இங்கு  பயன்படுத்துவோம்.  
    பெற்ற பட்டங்களையெல்லாம் சற்றும் தயங்காது, தனது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் டி.என்.ஆர் அவர்களின் சுய முகவரியிட்ட கடிதத் தாள் (Letter Pad)  15 அங்குல நீளமுடையது. கே.எஸ்.வெங்கட்ராமையர் அன்பளிப்பாக வழங்கிய பொடி டப்பா, ரயில் பயணங்களில் ஒரு இருக்கையை அடைத்துக் கொள்ளும் அளவு அகலம் உடையது. இவரிடம் நேர ஒழுங்கு கிடையாது, முன் கோபி, கோபம் வரும்போது கெட்ட வார்த்தைகள் கொட்டித் தீர்ப்பவர்,  அதிகப் பணம் வாங்குபவர், தலைக்கணம் நிறைந்த மனிதன் என்று எல்லோரும் சொல்லும்படி நடந்து கொண்டார்.  ஆனால், தன்னை மறக்கச் செய்யும் -  தனித்துவ இசைத் திறனால், குறை சொல்வோர் செவி நிறைத்து, அவர்கள் வாயை அடைத்து வைத்தார்.
         27.08.1898 அன்று, குப்புசாமிப் பிள்ளை- கோவிந்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த டி.என்.ஆரின் இயற்பெயர் பாலசுப்ரமணியன். 4 வயதிலேயே தந்தையை இழந்ததால், திருவாவடுதுறை ஆதீனத்தில் பணிபுரிந்த  தாய் மாமா திருமருகல் நடேசப் பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மருமகனைத்  தன் மகன் போல வளர்த்தார் நடேசப் பிள்ளை. பதிலுக்கு, மாமாவின் பெயரையே முதல் எழுத்தாகப் பயன்படுத்தினார் ராஜரத்தினம் பிள்ளை.         
          டி.என்.ஆர். அவர்கள், ஸ்ரீகிருஷ்ணய்யரிடம் வாய்ப்பாட்டையும், மார்க்கண்டேயப் பிள்ளையிடம் நாதஸ்வரக் கலையையும் கற்றுக் கொண்டார். மாமாவும் வழிகாட்ட, மிகச் சிறந்த இசைக் கலைஞராக உருவெடுத்தார். மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை மறைவுக்குப் பின் மங்கிக் கிடந்த நாதஸ்வரக் கலைக்கு மறு உயிர் கொடுத்தார்
                 இவர் வாசிக்கும் ’தோடி’ ராக இசையைக் கேட்பதற்காகவே , முன்னணி இசை ஆளுமைகள் கூட , கச்சேரிகளில் முன் வரிசை இருக்கையைத் தேடினர். வழக்கமாக நாதஸ்வரக் கச்சேரிகளில் சுருதிக்குப் பயன்படும் ஒத்துக்குப் பதிலாக, தம்புராவைப் பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  இவருக்கு, வீணை, ஷெனாய், பிடில் இசைகருவிகளின் நுட்பங்களும் தெரியும். வாய்ப்பாட்டிலும் விற்பன்னர். முதன்முதலாக, 34.5 அங்குலம் (2 கட்டை), 31.2 அங்குலம் (3 கட்டை) நீளமுள்ள நாதஸ்வரங்களைப் பயன்படுத்தியவரும் இவர் தான். 
        1929 ஆம் ஆண்டு, பாளையங்கோட்டை வெங்கட்ராமன் வீட்டில், மேடையில் அமர்ந்து கச்சேரி செய்தார். அதன் பிறகு,     வீடுகளிலும், திருவிழாக்களிலும் நின்று கொண்டே வாசிக்கும் பழக்கத்தை  மாற்றி, தனியே மேடையிட்டுத் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்க ஆரம்பித்தார். இறுதி வரை,  திருவாவடுதுறை மடம், திருவிடைமருதூர் தைப்பூசம், மாயூரம் சுவாமி புறப்பாடு ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நின்று கொண்டு வாசித்தார். 
          1947 ஆம் ஆண்டு, இந்திய சுதந்திர தினத்தன்று,  மாலை நிகழ்வில், தேசத்தின்  முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் இசைக் கச்சேரி நடத்தி, அனைவரையும் இசை இன்பத்தில் மூழ்கடித்தார். குடுமியும், வறுமை காட்டிடும்   வேட்டியும் அணிந்திருந்த கலைஞர்கள் மத்தியில் கிராப் தலை, ஷெர்வாணி உடை, வைரக் கடுக்கண், காலிலே ஷூ என தோற்றத்திலும் மாற்றம் கொண்டு வந்தார். ‘கவி காளமேகம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக பாடல்கள் பாடி நடித்து, திரைத் துறையிலும் வெற்றிக்கொடி பதித்தார். 
            1950களில் ஒரு கச்சேரிக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமாகக் கேட்டு வாங்கினார். ரயில் நிற்காத தனது ஊர் வரும்போது, ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து, வண்டியை நிறுத்துவார். வண்டி சரியாக வீட்டின் அருகிலே வந்து நிற்கும். அபராதத் தொகை ரூ 50. செலுத்திவிட்டு, ஆயாசமாக வீட்டுக்கு நடந்து செல்வார். இவரை இறக்கி விட்டபின், ரயில் சத்தமிட்டுக் கொண்டே  தனது பயணத்தை மீண்டும் தொடங்கும்.     
         சீவாளி சரியாக நனைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக, மேடையில் அமர்ந்து ஊதி ஊதிப் பார்க்க மாட்டார். மேடையேறி விட்டால் இசையருவி தானே வழியத் தொடங்கிவிடும். இசைக்கு மரியாதை தராத யாருக்கும், இவர்  பதில் மரியாதை தருவதே இல்லை. ஒருமுறை,   கணக்குப் பிள்ளையிடம் சொல்லி, பணம் தரச் சொன்னார் மைசூர் மகாராஜா. தான் அமர்ந்து கொண்டு, மேளக்காரரை பணம் வாங்கச் சொன்னார் நாதஸ்வர மகாராஜா!  யாருக்கும்  அடிபணியாத சுயமரியாதைக்காரர் இவர்.
         ஆனால், அதீத செல்வமும், புகழும் இவரை போதைக்கு அடிமையாக்கின. போதையிலும் ஆடம்பரத்திலும் தனது பொருள்களை இழக்கத் தொடங்கினார். சாரதா, சுப்பு, ஜனகத்தம்மாள், பாப்பம்மாள் என இவருக்கு 4 மனைவிகள்(சிலர் ஐந்தென்றும் சொல்வர்). இவர்,  ஒர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார். ஆயினும் தனக்கு குழந்தை ஏதுமில்லை என்ற கவலை டி.என்.ஆரிடத்தில் எப்போதும் இருந்தது. 
       12.12.1956 ல் சங்கீத தேவதை, தனது மகன் டி.என்.ஆரை மீண்டும் வானுலகுக்கு அழைத்துக் கொண்டாள். அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார். ‘அகில உலக நாதஸ்வர ஏகச் சக்கரவர்த்தி’ கடைசி ஆசையெனச்  சொன்னதன்பேரில், அவரது மரண ஊர்வலத்தில் நாதஸ்வர இசை இசைக்கப்பட்டது.  இசையால் இசைக்காகவே வாழ்ந்தவர், நாதஸ்வர  இசையோடு எரிமேடை ஏறினார்.

      ஏதோ ஒன்றுக்காக, அடிவருடியாய் வாழும் அற்பக் கலைஞர்கள் அசிங்கமானவர்கள்.  தலைக்கணம் தீண்டாத தன்னம்பிக்கையும், ஞானச் செருக்கும்  கொண்டிருப்பவனே உண்மையான கலைஞன்!

Sunday, August 26, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 26


நவசக்தி நாயகன் - திரு.வி.க.

ஆகஸ்ட் 26...இன்று!

      ”இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்”
        - திரு.வி.க.(சென்னை மகாசன சங்கத்தில் ஆற்றிய உரையில்)       

   விடுதலைப் போராட்ட வீரர்; இந்தியாவில் முதல்முறையாக தொழிற்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்; மகாத்மா காந்திக்கு,  ’அடிகள்’ எனும் பின்னொட்டைச் சேர்த்து காந்தியடிகள் ஆக்கியவர்;   அரசியல் அரங்குகளில்  புயலாகவும், தனித் தமிழ் மேடைகளில் தென்றலாகவும் பேசியவர்; பெண்ணுரிமை பேணிய பெருந்தகையாளர்; இப்படி, பன்முகம் கொண்ட பைந்தமிழ் அறிஞர்  திரு.வி.க. ( 1883-1953) பிறந்த நாள் இன்று. 
              அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில், துள்ளல் எனும் சிற்றூரில் விருத்தாசல முதலியார்-சின்னம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் கலியாண சுந்தரம். தந்தை விருத்தாசல முதலியாருக்கு இரு மனைவிகள்; மொத்தம் 12 பிள்ளைகள். இவர்,  திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆதலால், திரு.வி.கலியாணசுந்தரம் என அழைக்கப்பட்டார்.  வீட்டின் அருகில்  கடை நடத்தி வந்த தந்தையிடமே இவரது கல்வி ஆரம்பமானது.  பின்பு வெஸ்லீ பள்ளியில் ஆரம்பப்படிப்பு படித்தார். உடல் நலமின்மையால் படிப்பு இடையிலேயே நின்று போனது. 
                கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் கற்ற திரு.வி.க, 1908 ஆம் ஆண்டு தனது முதல் நூலை வெளியிட்டார். நூலின் பெயர் “கதிரைவேற் பிள்ளை சரித்திரம்”.  அறிவுப் பசிக்கு,  அகரத்தை அன்னமெனப் பந்தியிட்ட ஆசிரியர் பெயரிலேயே, முதல் நூல் வந்தது. கதிரைவேற் பிள்ளை கொடுத்து வைத்த அறிஞர் தான்.
       பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும், தணிகாசல முதலியாரிடம் சைவ சமய நூல்களையும், நீதியரசர் சதாசிவ ராவிடம் ஆங்கிலத்தையும் கற்றுத்தேர்ந்த திரு.வி.க., அப்துல் கரீமிடம் திருக்குரானும் படித்தறிந்தார். அறிவின் ஆழ அகலங்களைத்  தொட்டுவிடவே,  எந்நாளும் ஆர்வத்துடன்  முயன்று கொண்டிருந்தார்.
          '' பெண்ணின் பெருமை", "முருகன் அல்லது அழகு", "திருக்குறள் விரிவுரை", பயண நூல்கள், சுய சரிதம் என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள திரு.வி.க.வின் இலக்கிய உரைகள் , கேட்போர் உள்ளங்களில் தென்றலாய்த்  தவழ்ந்தது.
                வெஸ்லியன் பள்ளியில் தமிழாசிரியராக 6 ஆண்டுகள் பணியாற்றிய திரு.வி.க., விடுதலைப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்தார். வேலையை ராஜினாமா செய்தார். 1917 ஆம் ஆண்டு, ‘தேச பக்தன் ‘ நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, பேனா வலிமையால் சுதந்திரத் தீயை வளர்ததார். 20.10.1920ல்  ’நவசக்தி’  என்னும் வார இதழை ஆரம்பித்தார். ஆங்கில அரசு, இவரது எழுத்துக்களால் அதிர்ந்து போனது. இவரை அழைத்து எச்சரிக்கை செய்தது. 
             அன்னி பெசண்ட் அம்மையார்  கைது செய்யப்பட்டதற்கு எதிரான, பொதுக்கூட்டத்தில் ‘திராவிடரும் காங்கிரசும்’ என்னும் தலைப்பில் பேசியதுதான் இவரது கன்னிப் பேச்சு. அதன் பிறகு,  இலக்கியம், அரசியல், தொழிலாளர்கள் மாநாடு, பெண்ணுரிமை மாநாடு என எல்லா மேடைகளிலும் இவரது குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
         காந்தியடிகள் முதன்முறையாகத்  தமிழகம் வந்த போது, அவரது பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்தவர் திரு.வி.க.தான். 1919 ஆம் ஆண்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான கூட்டத்தில், தனது அரசியல் குரு  திலகரோடு, அதே  மேடையில் இவரும்  வீர உரை நிகழ்த்தினார்.  திலகரின் மறைவுக்குப் பிறகு, 1926 ஆம் ஆண்டு அரசியலை முழுவதுமாகத் துறந்துவிட்டார்.
             வாடியா, சிங்கார வேலர், சக்கரைச்செட்டியார் முதலிய தலைவர்களோடு இணைந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக , சென்னையில் தொழிற்சங்கம் ஒன்று  உருவாகக் காரணமாக இருந்தார். தீவிர அரசியலில் இருந்து விலகிய பிறகும் கூட, தொழிற்சங்க மேடைகளில் மட்டும் இவரைக் காண முடிந்தது. தொழிற்சங்க வாதிகள் மத்தியில், ‘தொழிலாளர்களின் தாய்’ என  அன்போடு அழைக்கப்பட்டர். 
              குரல்வளமும், இசைஞானமும் கொண்ட கமலாம்பிகை, 13.09.1912ஆம் நாளன்று திரு.வி.க.வின் கரம் பிடித்தார். ’கண்கவர் புடவைகளும் , கழுத்து நிறைக்கும் நகைகளும் எனக்கு வேண்டாம், எனக்கு நீங்களே கல்வி கற்றுக் கொடுங்கள்’ என கமலாம்பிகை கோரிக்கை வைக்க, உற்சாகமானார் திரு.வி.க. தினமும் மாலை வேளைகளில் , கடற்கரை ஓரங்களில் மனைவிக்குத் தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்  கொடுக்க ஆரம்பித்தார். அலைகடலும் இந்தத் தம்பதியரைப் பார்த்து, ஆனந்த நடனம் ஆடியது. இவர்கள் அன்பின் வெளிப்பாடாய் இரு பிள்ளைகள் பிறந்தன. 
             வலது காலில் ஆறு விரல் கொண்டிருப்பதால் ’அதிஷ்டசாலி’ என அழைக்கப்பட்ட திரு.வி.க.வின் வாழ்விலும் வேதனை மேகங்கள் சூழ்ந்தன. காச நோயால் அவதிப்பட்ட கமலாம்பிகை 1918ஆம் ஆண்டு இறந்து போனார். அதற்கு முன்பே, இரு பிள்ளைகளும் இறந்து போயின. சரியாக ஆறு ஆண்டுகள் மட்டுமே, இவர்களது இல்லற வாழ்வு நீடித்தது. மறுமணம் செய்து கொள்ள மறுத்தார் 35 வயது திரு.வி.க..
      இறுதிவரை, வாடகை வீடொன்றில் தனிமரமாய் வாழ்ந்து முடித்த திரு.வி.க.விற்கு,  தமிழ்தான் சொத்து; தொழிலாளர்களே சொந்தங்கள்.
                1949 ஆம் ஆண்டு, சர்க்கரை நோய் காரணமாக, கண் பார்வை இழந்தபோதும், நண்பர் நாராயண சாமி உதவியோடு தொடர்ந்து  செய்யுள்கள் எழுதினார். தான் இறந்தவுடன் தனது பூத உடல், சூளைமேடு தொழிலாளர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்ன திரு.வி.க. ,     1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று இறந்தபோனார்.  அவரது  விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
   தொழிலாளர் சொந்தங்கள் கண்ணீரோடு சூழ்ந்து வர, சூளைமேட்டிலிருந்து மயிலாப்பூர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை , இடைவெளி இன்றி  தமிழால் நிரப்பப்பட்டிருந்த அந்தப்  பரு உடல் , அங்கேதான் எரியூட்டப்பட்டது. திரு.வி.க. என்னும் மூன்றெழுத்து மட்டும்,  தமிழில்  நிலைநாட்டப்பட்டது.

     ஏனெனில்,  அமுதத் தமிழில் -  இறவா நூல்கள் - எழுதிய மானுடர் -  சாவதே இல்லை!
        
             
                  

               

Saturday, August 25, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 25

நாடக வேந்தர் - எஸ்.ஜி.கிட்டப்பா

ஆகஸ்ட் 25....இன்று!


          “ இசை உலகில் கிட்டப்பா செய்த புரட்சி- தமிழ் மொழியைக் காப்பாற்ற பாரதி செய்த புரட்சிக்கு ஒப்பானது” - வ.ரா.
               சபாக்களில் மட்டுமே காண முடிகிற   கர்நாடக சங்கீதக் கலைஞர்களைக் கூட,  தனது பாட்டின் வலிமையால் நாடக அரங்கின் முதல் வரிசையில் வந்து அமரச் செய்த ‘நாடக உலகச் சக்கரவர்த்தி’ எஸ்.ஜி.கிட்டப்பா (1906-1933) பிறந்த நாள் இன்று.     
                      கிருபானந்த வாரியாரும் , கிட்டப்பாவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஆனால், கிட்டப்பாவின் மரணக் கோடு வெகு கிட்டத்தில் இருந்ததை, அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ஆயினும், வாழ்வின் தடத்தை, தனது ஞானத்தால் -  அழுத்தமாகப் பதித்து,  இருபத்தெட்டு வயதிற்குள்ளாகவே இறந்து போன ஒர் அற்புதக் கலைஞன் கிட்டப்பா.       
          அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த செங்கோட்டை நகரில் 1906ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, கங்காதரன் - மீனாட்சி அம்மாளுக்கு மகனாக எஸ்.ஜி.கிட்டப்பா பிறந்தார். இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன். குடும்பத்தில் இவரது செல்லப் பெயரான கிட்டன் என்பதே பின்னாளில் கிட்டப்பா என்றானது.    இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவே இல்லை. அதனால், மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்த தனது அண்ணனோடு சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 

          1911 ஆம் ஆண்டு, மதுரை- கொட்டாம்பட்டியில் நடந்த ’நல்லதங்காள் கதை’ நாடகத்தில் , நல்லதங்காளின் பிள்ளைகளில் ஒருவராக முதல் முறையாக மேடையேறிய போது, இவருக்கு வயது 5. 1912ஆம் ஆண்டு மதுரை டவுன் ஹாலில் இவரது குரல் வளத்தைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள் தனது நாடகக் குழுவில் இணைத்துக் கொண்டார். நாடகக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட கிட்டப்பா, ரசிகர்களின் மகத்தான ஆதரவைப் பெற்றார்.

                  தசாவதாரம் நாடகத்தில் மோகினி வேடமும், ராமாவதாரம் நாடகத்தில் பரதன் வேடமும் இவருக்கு பெரிய வெற்றியைத் தந்தாலும் ‘ஸ்ரீ வள்ளி திருமணம்” நாடகத்தில் முருகனாக நடித்ததுதான் இவருக்கு வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது. ஆம், இலங்கையில் நாடகம் போடச் சென்றிருந்த கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளைச் சந்தித்தார். கருத்த உருவமும், காந்தக் குரலும் கொண்டிருந்த சுந்தராம்பாள் , இவருக்கு இணையாக வள்ளி வேடத்தில்  நடித்தார்.  இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. கிட்டப்பா ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற விபரம் சுந்தராம்பாளுக்குத் தெரியும்.  திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கிட்டம்மாளுக்கும் இவருக்கும் 1924ஆம் ஆண்டு  திருமணம் நடந்திருந்தது. 

                கடைசிவரை தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்ற பின்பு தான், கிட்டப்பாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார் கே.பி.சுந்தராம்பாள். கிட்டப்பாவின் மீது, மாசிலாக் காதல் கொண்டிருந்த சுந்தராம்பாள், கணவனே கடவுள் என்று  வாழ்ந்தார். இந்த இணை, நிஜ வாழ்விலும், நாடக வாழ்விலும் வெற்றி வானின் உச்சத்தில் பறந்தது.
      இருவரும் இணைந்து, ‘ஸ்ரீ கான சபா” என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர். சிம்மக் குரலும், காந்தக் குரலும் இணைந்து, நாடக மேடைகளை இசையால் நிறைத்தன.  இவர்கள் இணைந்து நடித்த,  நந்தனார், கோவலன், வள்ளி திருமணம், ஞான சவுந்தரி  போன்ற நாடகங்கள் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளித்தன.

              ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்குமான விரிசல் தொடங்கியது. கிட்டப்பா, சுந்தராம்பாளை விட்டு விலகத் தொடங்கினார்.  சென்னையில் இருந்தபோது, கணவரின் சொல்லை மீறி, ‘கிருஷ்ண லீலா’ என்ற நாடகம் பார்க்கச் சென்றதுதான் கசப்பின் தொடக்கம் என்று சொல்லப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்தக் காதல், சீக்கிரத்தில் மறைந்து போனது. அவர்கள் அன்பின் அடையாளமாகப் பிறந்த ஆண் குழந்தையும்,  ஒரு மாதத்திலேயே இறந்து போனது. குழந்தை இறந்தபோது கூட, கிட்டப்பா கரூரில் தங்கியிருந்த  மனைவியைச் சந்திக்க வரவில்லை.
          தனது  செங்கோட்டை மண்ணில் , கண்கள் சிவக்கச் சிவக்க குடித்துக் கொண்டிருந்தார். கல்லீரல் பாதிப்பும், குடல் அழுகல் பிரச்சனையும் வந்து சேர்ந்தது. உடல் நலமும் விரைவிலேயே கெட்டுப் போனது. அந்த நேரத்தில் தொடர்ந்து நடந்த,  தாய்(1926), தமையன்(1927), மைந்தன்(1928) என மூவரின் மரணமும் இவருக்கு மீளாத் துயரை ஏற்படுத்தின.  

       உடல் நலம் கெட்டுப் போன செய்தி அறிந்த சுந்தராம்பாள், கணவர் கிட்டப்பாவை அழைத்து வந்து, சென்னையில் டாக்டர் ராமராவ் மருத்துவமனையில் சேர்த்தார். மனமார பணிவிடைகளும், செலவும் செய்தார். ஆனால், சற்று உடல்நலம் தேறியவுடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டை திரும்பினார் கிட்டப்பா.  அவர் மீண்டும் வரவே இல்லை.

             ’ பட முடியாதினி துயரம், பட்டதெல்லாம் போதும்’ என்று மேடைகளில் பாடிய கிட்டப்பா, 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, மதிய வேளையில் இறந்து போனார். செய்தி அறிந்து பதறிய சுந்தராம்பாள், செங்கோட்டை வந்தார். கணவரின் கடன்களை அடைத்தார். அஸ்தியை எடுத்துச் சென்று காசியில் கரைத்தார். அன்று முதல் நகைகள் தவிர்த்தார். வெள்ளாடை உடுத்தியே வெளியில் வந்தார். 25 வயதில் கணவனை இழந்த இவர், இறுதிவரை கணவரின் நினைவுகளிலேயே வாழ்ந்து மறைந்தார்.   

            தேச பக்தரான கிட்டப்பா, கதர் நிதி திரட்டவும்(1923), உப்பு சத்தியாகிரகத்திற்குப் (1930) பணம் சேர்க்கவும் இலவசமாக நாடகங்கள் நடத்திக் கொடுத்தார். மதுரையில், தனது பேனா ஒன்றினை, ஏலத்தில் விட்டு (ரூ.50!), அந்த பணத்தையும் விடுதலைப் போராட்ட நிதிக்கு அளித்தார்.  கோவில்கள், தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்காகவும்  நாடகங்கள் நடித்துக் கொடுத்தார். செங்கோட்டையில் அவரது இடத்தில், தற்போது ‘ஸ்ரீ மூலம் திருநாள் வாசக சாலை’ இயங்கி வருகிறது. அவரது பாடல்கள் தவிர, அவர் நினைவாக வேறொன்றும் இங்கில்லை.

          ஒவ்வொரு நாடகத்தின் நிறைவிலும் அவர் பாடும், ‘ரகுபதி ராகவ ராஜாராம்...’ என்ற காந்திக்குப் பிடித்தமான அந்தப் பாடலைக் கேட்பதற்காக, தேச பக்தர்கள் காத்துக் கிடந்தார்கள்.

           பயின்றால் வராத சங்கீதம் கூட, இவரது பாட்டைக் கேட்டால் பக்கத்தில் வந்து நின்றது. தமிழ் மொழிப் பாடல்களை, கர்நாடக இசையில் பாடி, பாமரர்களுக்கு மகிழ்ச்சியையும் , பண்டிதர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தார் கிட்டப்பா.

    வள்ளலார் பாடல்கள், எரவானி கீர்த்தனைகள் என பல பாடல்கள் பாடியிருந்தாலும், அவர் பாடிய -  காயாத கானகத்தில் எனும் தேயாத கானம் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.   
ஆம்,
      ”காயாத கானகத்தே...
       நின்றுலாவும் நற் காரிகையே..
       மேயாத மான் - புள்ளி மேவாத மான்!"            
                   - என்ற பாடல் வரிகள் எங்கே ஒலித்தாலும், சற்று நேரம் நின்று கிட்டப்பாவை நினைவு கூறுங்கள். அவரது துயர வாழ்வு தரும்  படிப்பினை என்ன என்பதைச் சிந்தியுங்கள்!

           கலைஞன் தன்னை மறந்த நிலையிலேயே உலா வருகிறான்.  தனதுடல், தன்னுயிர் பற்றி,  அவன் கவலை கொள்வதே இல்லை. அவனுக்குக் கலைதான் உயிரும், உடலும்!

     

Friday, August 24, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 24

இடியாப்பச் சிக்கலில் ஜெருசலேம் - யாசர் அராஃபத்.

ஆகஸ்ட் 24.....இன்று!

                      சிக்கல் நிறைந்த நீண்ட வரலாற்றினைக் கொண்டது  பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்சனை. அதற்குத் தீர்வு காணும் விதத்தில் செயல்பட்டு,   சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றவரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக இருந்து, அம்மக்களின் நில உரிமைக்காகப் போராடியவருமான யாசர் அராஃபத்  (1929-2004) பிறந்த நாள் இன்று. 
             
                     ”கடவுள் ஆபிரகாமிற்குக் காட்டிய இடம் கானான் தேசம். அங்கே பிலிஸ்தீனியர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அபிரகாமின் சந்ததியில் வந்த ஜேக்கப், இஸ்ரவேல் என அழைக்கப்பட்டார். அதனால், அவரது சந்ததியினர் இஸ்ரேலியர் எனப் பெயர் பெற்றனர். கடவுளால் எங்களுக்கு வழங்கப்பட்ட  கானான் தேசமே, இஸ்ரேல் எனும் நாடானது.” - ஹென்ரி ஹெர்ஸல் என்பவரால் உருவாக்கப்பட்ட   யூத தாயக விடுதலை அமைப்பு.(Zionist).
                         
             ” பைபிளின் படியே, கானான் தேசத்தில் இருந்த பழங்குடியினர் பிலிஸ்தீனியர்கள் தான். அந்த வம்சத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்களே இந்த மண்ணுக்கு உரியவர்கள். ஜெருசலேம் அரபு நாடுகளோடு இணந்ததே”   - பாலஸ்தீன விடுதலை அமைப்பு.( P.L.O).                   இவைதான் இரண்டு தரப்பினர்  முன் வைக்கும் வாதத்தின் சுருக்கம்.

     கிறிஸ்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் மூவருக்கும் புனிதமான இடம் ஜெருசலேம். அந்த மையப் புள்ளியைச் சுற்றித்தான் இத்தனை சண்டைகளும், சச்சரவுகளும். இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், 1948 ஆம் ஆண்டு, இஸ்ரேல் எனும் தனி நாடு அங்கீகரிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த, பாலஸ்தீன பூர்வகுடி மக்களின் போராட்டம் வலுப்பெற்றது. அந்த நேரத்தில் உருவானதுதான் ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’. சொந்த தேசத்தை சுய நிர்ணயம் செய்து கொள்ளும் போராட்டம் எனச் சொல்லும் அந்த இயக்கம் 1964 ஆம் ஆண்டு, உருவாக்கப்பட்டது. 

                1969 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு தனது மரணம் வரைக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தவர் தான் யாசர் அராஃபத்.  எகிப்தில் கெய்ரோ நகரத்தில், 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி,  7 குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த யாசர் அராஃபத் , தனது நான்காம் வயதில் தாயை இழந்தார். சிரமம் காரணமாக,  காஸா பகுதியில் வசித்து வந்த, தாய் மாமாவின் வீட்டிற்கு யாசரையும், அவரது ஒரு தங்கையையும் அனுப்பி வைத்தார் அராஃபத்தின் தந்தை. தனது பிள்ளைகள் இரண்டையும் சிலகாலம் கழித்து, மீண்டும் கெய்ரோவிற்கே அழைத்துக் கொண்ட போதும், தந்தையின் மீதான ஒருவகை வெறுப்பு யாசர் அராஃபத்துக்கு தொடர்ந்து இருந்தது. 1952ல்  தந்தை இறந்த போது, அவரின் இறுதிச் சடங்கில் கூட, அராஃபத் கலந்து கொள்ளவில்லை. 
               
                      சிவில் பொறியாளராகப் பட்டம் படித்த யாசர் அராஃபத் , கல்லூரிக் காலத்திலேயே பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக  ஆயுதங்கள் கடத்தினார்.  இவற்றைத் திறம்படச் செய்ய 1958ல் அல்-ஃபத்தா என்ற அமைப்பைத் தொடங்கினார். காசா பகுதியின் பொருட்டு, யூதர்களுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் யூதர்கள் வெற்றி பெற்று தனி நாடு பெற்றனர். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தது. இந்தச் சூழலில் தான், பி.எல்.ஓ அமைப்பின் தலைவராக 1969 ஆம் ஆண்டு, யாசர் அராஃபத் பொறுப்பேற்றுக் கொண்டார். 
           
              1974 ஆம் ஆண்டு, நவம்பர் 13 அன்று, நியூயார்க் ஐ.நா. பொது சபையில் அவர் ஆற்றிய உரை பிரசித்தி பெற்றது.  “ஒரு கையில் சமாதானத்திற்காக ஆலிவ் மரக் கிளைகளையும், மற்றொரு கையில் விடுதலைக்காக துப்பாக்கியையும் வைத்திருக்கிறேன். ஆலிவ் இலைகளைத் தூக்கி எறியும் படி  செய்து விடாதீர்கள். போர் சூழ்ந்திருக்கும்  பாலஸ்தீனத்தில் அமைதி ஒரு நாள் மலரும்”  என்று   பேசினார்.
  
            ஆயதங்களின் வழியே தம் மக்களுக்கான தேசத்தைப் பெற எண்ணிய யாசர் அராஃபத், பின்னாளில்  பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எண்ணினார். 1994 ஆம் ஆண்டு நடந்த பேச்சு வார்த்தையின் படி,  ஜோர்தான் நதிக்கரைக்கும், மத்திய தரை கடல் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்றும், ஜெருசலேம் பகுதி மட்டும் ஐ.நா.சபையின் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் என்றும் முடிவானது. "இரு நாடுகளின் தீர்வு" என்றழைக்கப்பட்ட இந்த முடிவிற்கு ஒத்துழைப்பு நல்கிய இஸ்ரேல் பிரதம அமைச்சர்கள் மற்றும்  யாசர் அராஃபத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு (1994) கூட்டாக வழங்கப்பட்டது. ஆனால், தீர்வினை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக , பிரச்சனை மட்டும்  இன்னும் நீடிக்கிறது.

                  2004 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் தேதி , உடல் நலக் குறைவு காரணமாக ஃபிரான்ஸ் மருத்துவமனை  ஒன்றில்  யாசர் அராஃபத் இறந்து போனார். உடல் பரிசோதனை முதலில் செய்யப்படவில்லை. பின்னாளில் அவரது உடல்  மற்றும் உடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, பொலோனியம் கதிவீச்சின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது மரணம் தற்செயலானது அல்ல, கொலை தான்,   என அவரது மனைவி பேட்டியளித்தார். பாலஸ்தீனிய  கிறிஸ்தவப் பெண்ணான சுஹா டவிலை, 1990ஆம் ஆண்டு தனது 61 வது வயதில், அராஃபத்  திருமணம் செய்து கொண்டார். அப்போது சுஹாவின் வயது 27. இவர்களுக்கு ஸஹ்வா என்ற ஒரே ஒரு மகள் உண்டு.
               
                   ஹமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி, பி.எல்.ஓ வின் செல்வாக்கினைக் குறைத்தது. தற்போது அங்கே, பல்வேறு குழுக்களால் ஆயுதப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.   மேலும், யாசர் அராஃபத், இஸ்ரேல் நாட்டிடம் பணம் பெற்றுக் கொண்டு, சமாதானம் என்ற பெயரில் பாலஸ்தீனத்திற்கு எதிரான செயல்களைச் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது.  ஜோர்தான் நதி ரத்த வெள்ளத்தில் தான் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

           பலமுறை கொலை முயற்சிகளுக்கு உள்ளான யாசர் அராஃபத்,   தங்கிய ஒரிடத்தில் மீண்டும் தங்க முடியாத படிக்கு, வாழ்நாள் முழுவதும் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். பாலஸ்தீன விடுதலைக்காக நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன் என்று சொன்ன அராஃபத், கடைசி சில வருடங்கள் மட்டும் இஸ்ரேல் ராணுவ  கட்டுப்பாட்டின் காரணமாக, நகர முடியாமல் போனது வேதனையானது.  ஜெருசலேமில்தான் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையும் நிறைவேறவில்லை. ஆம்,  விரும்பிய படியே மரணமும், கல்லறை இடமும் எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன?

           வாழும்போதே வெற்றியைக்  காணாவிட்டாலும், வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர்களின் கனவு - நியாயமாக இருப்பின் -  நிச்சயம் நிறைவேறும்.



Thursday, August 23, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 23


தம்பட்டம் அடிக்காத தமிழன் - ம.ரா.ஜம்புநாதன். 

ஆகஸ்ட் 23....இன்று!

             “ ஹரிஜனங்களே, இந்த வேதப் புத்தகங்களை  உங்கள் பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்.  நீங்களும் இவற்றைப் படித்து, பாரத நாடு மட்டுமல்ல, பூலோகம் முழுமைக்கும் பிரச்சாரம் செய்யலாம். இவற்றை நான் உங்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்” -  ’சதபதப் பிராமணம்’ எனப்படும் வேதங்களின் தமிழ்ப் பதிப்பு முன்னுரையில் இவ்வாறு எழுதினார் ம.ரா.ஜம்புநாதன்.  தனது புரட்சி சிந்தனையை , செயல் வடிவத்தில் காட்டிய அசல் மனிதன் அவர்.      
     வேதங்கள் பாரதத்தின் பொதுச் சொத்து, அவை எல்லா மொழிகளிலும் இருக்க வேண்டும் என்று சொல்லி, நால்வகை வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்து, அவற்றை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே சமர்ப்பணம் செய்த மறுமலர்ச்சி நாயகன் ம.ரா.ஜம்புநாதன் (1896-1974, M.R.Jambunathan)  பிறந்த நாள் இன்று.
                   திருச்சியை அடுத்த மணக்கால் என்னும் சிற்றூரில்,  1896ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி, ராமசாமி-லெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஜம்புநாதன்.  அவதானக் கலையில் சிறந்து விளங்கிய தந்தையைப் போலவே, ஒரு முறை  எதைக் கேட்டாலும், அவற்றை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் ஜம்புநாதனுக்கு இருந்தது. தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்த இவர், பொறியியலில் பட்டம் பெற்றார். இளம்வயதிலேயே, இவருக்கு  ஆரிய சமாஜத்தில் ஆர்வமும், பிடிப்பும் ஏற்பட்டது. 
                   சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்று விரும்பினார்.  அதற்காக, சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பை நிறுவி, அதன் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள்(1918-1920) இருந்துள்ளார். பலவகையான தலைப்புகளில் எண்ணற்ற  நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, ’புஸ்தக சாலை’ என்னும் அமைப்பை நிறுவினார். அதில், “தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறு” (1918)  என்னும் புத்தகத்தை முதன்முதலில் வெளியிட்டார். 
                         எல்லா மக்களும் வேதங்களைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் ஏற்றத்தாழ்வுகள் குறையும் என்று எண்ணினார். அதற்காக, நான்கு வேதங்களையும் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். 1935,1938 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில்  முறையே  யஜூர், சாமம் மற்றும் அதர்வண வேதங்களை தமிழில் வெளியிட்டார். அவர் சார்ந்த சமூகத்தில் எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, தனி ஒரு மனிதனாக இதனைச் சாதித்தார். இந்த நிகழ்வில்,   தருமபுரி, திருப்பனந்தாள், காசி மடங்கள் அவருக்கு ஆதரவாக இருந்ததையும்  நாம் இங்கே  குறிப்பிட வேண்டும். 
              
               சர்வதேச PEN (Poet, Essayist and Novelist) கூட்டமைப்பில் இந்தியாவின் கெளரவத் தலைவராக இருந்தபோது, 1954 ஆம் ஆண்டு, சிதம்பரம் அண்ணாமலை நகரில் மாநாடு ஒன்று நடத்தினார். அதில், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
                பழங்கால நாணயங்கள் தொடங்கி, சுல்தான்கள், மொகலாயர்கள் , விஜயநகரப் பேரரசு , ஆங்கிலேயர் காலம் என எல்லா வகையான நாணயங்களையும் சேகரித்து வைத்திருந்தார் ஜம்புநாதன். தற்போது இவை அனைத்தும்,  மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
             1924 ஆம் ஆண்டு,  தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியில் முதன் முதலில்,  ஒரு தமிழ்ப் பள்ளியைத் தொடங்கிய பெருமை இவரையே சாரும். சொந்த செலவில் தொடங்கிய அப்பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். இன்று அங்கிருக்கும் 50 க்கும் மேற்பட்ட தமிழ்ப்  பள்ளிகளுக்கு மூல விதை விதைத்தவர் ம.ரா.ஜம்புநாதன் என்பதை எப்போதும் அம்மக்கள் நினைவில் கொள்வர்.
                 இவரது மனைவி சாந்தி ஜம்புநாதன். தனது  கணவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் எப்போதும் ஆதரவாகவே இருந்து, தோள் கொடுத்தார். இவர்களுக்கு, சவிதா, இந்திரா என  இரண்டு பெண் பிள்ளைகள்.  18.12.1974ல் ஜம்புநாதன் மறைந்த போது, அவரது கனவில் ஒரு பகுதி நிறைவேறாமலே  இருந்தது. ஆம் , அவர் உயிருடன் இருந்தபோது,  ரிக் வேதம் மட்டும் தமிழில் வெளிவராமல் இருந்தது. ஆனால், அதனை கைப்பிரதியாக எழுதி முடித்திருந்தார் ஜம்புநாதன். 
                  ரிக் வேதத்தின் முதல் தொகுதி, 1978 ஆம் ஆண்டு, அணு விஞ்ஞானி ராஜம் ராமண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது. இரண்டாம் தொகுதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் ஜி.படேல், 1980ஆம் ஆண்டு  வெளியிட்டார். அப்புத்தகங்களுக்கு  மொரார்ஜி தெசாய், சி.பி.ராமசாமி ஐயர் போன்றோர் அணிந்துரை வழங்கினர். 
                    வேதங்கள் அனைவருக்கும் பொதுவானதாக மாறும் போது, சமூகத்தில் பேதங்கள் நீங்கும் என்று நம்பியவர்;  எதிர் வந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்க நாளும் உழைத்த ஞானச்சுடர்;  ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய வேலையை , தனி மனிதனாக இருந்து செய்து காட்டியவர்; எதற்கும் ’வெறும் பேச்சு’ உதவாது, செயலே தேவை என தெளிவாக வாழ்ந்து காட்டியவர்; ஆம், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்களுல்  இவருக்குச்  சிறப்பிடம் உண்டு. ஆதலால், ம.ரா.ஜம்புநாதனை அறிந்து  கொள்வது நமது கடமையாகிறது. 

         வீண் தம்பட்டம், வெட்டி விளம்பரம் இல்லாமல் , தனது செயல்களைப் பேச வைத்த  தலைவர்கள் -  தேசத்திற்குக் கிடைத்த  அரிய பொக்கிஷம்!. 
               


Wednesday, August 22, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 22

எழுத்தே சுவாசம் - ரே பிராட்பரி

ஆகஸ்ட் 22 ....இன்று!

          எதிர்காலத்தில் அமெரிக்காவில் நடப்பதாக ஒரு கற்பனைக் கதை. அங்கே புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. புத்தகம் படிப்பது தேச துரோகமாக அறிவிக்கப்படுகிறது.  புத்தகம் படிப்பவர்கள் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். புத்தகங்களை  எரிப்பதற்கென்றே தனியாக, ’தீ எரிப்புத் துறை’  ஒன்று உருவக்கப்படுகிறது. தீ எரிப்புத் துறையில் பணியாற்றும் மாண்டெக் என்பவர், தற்செயலாக ஒரு புத்தகத்தின்  வரியைப் படிக்கிறார். ஆர்வம் அதிகமாகி விட , முழுவதையும் படிக்க ஆசைப்பட்டு, அந்த ஒரு  புத்தகத்தை மட்டும் எரிக்காமல் மறைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். யாரும் அறியாமல் ரகசியமாகப் படிக்க ஆரம்பிக்கிறார் மாண்டெக்.
           புத்தகங்களின் ருசி அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அரசுக்குத் தெரியாமல் புத்தகங்களை சேகரிக்கத் தொடங்குகிறார்.ஒரு கட்டத்தில் , இவர் புத்தகம் படிக்கும் குற்றவாளி, என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அரசிடமிருந்து தப்பிச் செல்கிறார். புத்தகங்களை மனப்பாடம் செய்து , பின்  ‘நடமாடும் புத்தக மனிதர்களாக’ மாறிப் போன குழு ஒன்றுடன் தன்னையும் இணைந்து கொள்கிறார் மாண்டெக். பைபிளை  முழுதும் மனப்பாடம் செய்து, நடமாடும் புத்தகமாக இவரும் மாறுகிறார். அரசின் அடக்கு முறையில் இருந்து , இந்தக் குழு தப்பித்து, புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே நாவலின் இறுதிப் பகுதி. 
             இதுதான்    ” ஃபாரன்ஹீட் 451 ” என்ற நாவலின் சுருக்கம்.  இந்நாவல் உலகெங்கும் பல்வேறு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலும் இந்நாவல் பெரிய வெற்றி பெற்றது. ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது,     ”ஃபாரன்ஹீட் 451” (1953)  நாவலை எழுதிய ஆசிரியர்            ரே பிராட்பரி (1920-2012)  பிறந்தநாள் இன்று.
              நவீன அறிவியல் கதைகளை , தீவிர இலக்கிய வாசிப்புக்குள் கொண்டுவந்த ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அமெரிக்காவில், இல்லினாய்ஸ் மாகாணத்தில்  பிறந்தார்.   அத்தை சொல்லும் கதைகளைக் கேட்டே இவரது இளமைக் காலங்கள் கழிந்தன. கதைகளைக் கேட்டுப் பழகிய ரே பிராட்பரி, சொந்தமாக  எழுதத் தொடங்கினார். 1938 ஆம் ஆண்டு,  இவரது 18 ஆவது வயதில்,  முதல் கதை வெளியானது. அது முதல், மரணிக்கும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். 
                  இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு Dark Carnival மிகப் பெரும் வெற்றி பெற்றது. Martian Chronicles என்ற தலைப்பில் வெளியான ஃபேண்டசி (Fantasy) கதைகளும் இவரது பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்தின. சிறுவயதில்,  ரேடியோவில் பகலில் கேட்ட  கதைகளை, இரவு நேரங்களில் நாடகமாக எழுதிக் கொள்ளும்  பழக்கம் கொண்ட ரே பிராட்பரி,  பின்னாட்களில்   மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் ஆனார்.  பெரும்பாலான இவரது கதைகளும், நாவல்களும் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, இவரது பெயரில், சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
              ’வறுமையின் காரணமாக, கல்லூரியில் படித்து முடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. நூலகங்களும், அதிலுள்ள புத்தகங்களும்தான் என்னை ஆளாக்கின’, என்று எப்போதும் குறிப்பிடுவார் பிராட்பரி. கார்னெகி  நூலகத்தில், வாரத்தில் மூன்று நாள்கள் முழு நேரமும் படிக்கும் பழக்கத்தை,  தொடர்ந்து பத்து ஆண்டுகள் கடைபிடித்தார். எச்.ஜி.வெல்ஸ், எட்கர் ஆலன் போ போன்ற இலக்கிய பிதாமகன்களின் நட்பை புத்தகங்களின் வழியே அடைந்தார். அறிவியல் கதைகள், அதிபுனைவுகள், திகில் கதைகள்  என பல்வேறு வடிவங்களில் சிறப்பாக எழுதுவதற்கு , நூலக வாசிப்பு இவருக்கு பெரிதும் உதவியது. இவரது கதைகள் பெரும்பாலானவை ஈ.சி.காமிக்ஸ் நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன. 
                 சிறப்பு புலிட்சர் பரிசு,எம்மி விருது  உட்பட ஏராளமான பரிசுகள் பெற்றுள்ள ரே பிராட்பரி , ஓட்டுநர் உரிமம் கூட எடுக்கவில்லை. பொதுப்போக்குவரத்தையும், மிதிவண்டியையும் மட்டுமே தன் இறுதிக் காலம் வரை பயன்படுத்தினார்.
          1947ல் மார்க்கியூரைட் என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள். ’மாகி’ என இவர் செல்லமாக அழைக்கும் தனது மனைவியைத் தவிர,  வேறு எந்தப் பெண்ணுடனும் அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை.    2003 ஆம் ஆண்டு மாகி இறக்கும் வரை , கருத்து வேறுபாடுகள் வரவே இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இலட்சிய  தம்பதியராகவே  வாழ்ந்தனர்.
        1999 ல் பக்கவாதம் ஏற்பட்டு, நாற்காலியில் முடங்கிய போதும், எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. 2012, ஜுன் 5ஆம் தேதி அவர் இறந்த போது, 27 நாவல்கள், 600 சிறுகதைகள் எழுதி முடித்திருந்தார். 8 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ள இவரது நூல்கள், உலகில் 36 மொழிகளில் பரவலாகக் கிடைக்கின்றன.
     
    புத்தகங்கள் எரிவதற்கான வெப்பநிலை 451' ஃபாரன்ஹீட்  என்று அவரது கற்பனை  நாவல் சொல்கிறது. ஆனால், புத்தகங்கள் அழிக்கவே முடியாதவை. ஆம், எழுத்தையே மூச்செனக் கொண்டிருந்த பிராட்பரியின்    எழுத்துக்களும் அழிக்கப்பட முடியாதவை  தான்..   

        நடமாடும் புத்தகங்களாய் நாமும் மாறுவோமா?

     

 

     

Tuesday, August 21, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 21

மானுடக் காதலன் - ப. ஜீவானந்தம்.

ஆகஸ்ட் 21....இன்று!

           காலுக்குச் செருப்புமில்லை,
           கால்வயிற்றுக்குக் கூழுமில்லை,
           பாழுக்கு உழைத்தோமடா-
           என் தோழனே..
           பசையற்றுப் போனோமடா!

    தாய்க்குத் தலை மகன் இவர்.  தாயின் சிதைக்குத் தீ மூட்டும் வேளையில், மல் துணியை அணிய மறுத்து, கைத்தறி துணிதான் வேண்டும் என்று உறுதியுடன் நின்றவரும் இவர். தேசத்தின் மீதும் , மானுடத்தின் மீதும்  அழியாத காதலைக் கொண்டிருந்த பாரதத் தாயின் தவப்புதல்வனும் இவரே.  தோழர் ப.ஜீவானந்தம் ( 1907-1963) பிறந்த நாள் இன்று.
        நாகர்கோவில் அருகிலுள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில், 1907  ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிறந்த ஜீவானந்தத்தின் இயற்பெயர் சொரிமுத்து என்ற மூக்காண்டி என்பதாகும். பட்டன்பிள்ளைக்கும் உமையம்மைக்கும் மகனாகப் பிறந்த இவர் ,இளம் வயதிலிருந்தே  காந்தியின் கருத்துக்களாலும், பாரதியின் கவிதைகளாலும் கவரப்பட்டார். சுதந்திரப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
           இவர்  நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்லும் நேர்மையாளர். காந்தியோடு தனக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைக் கடிதமாக வடித்து, காந்திக்கே  அனுப்பி வைத்தார். ஒருமுறை,  காரைக்குடியில்  மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்கியிருந்த காந்தியடிகள், தான் வைத்திருந்த கடிதத்தைக் காட்டி, இவரைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னார். சிவகங்கை அருகில் உள்ள சிராவயல் என்னும் ஊரில், 25 வயதுகூட நிரம்பாத  ஜீவாவால் நடத்தப்படும் ‘ காந்தி ஆசிரமத்திற்கு’ , மகாத்மாவே நேரில் வந்தார். ஜீவாவிற்கும், காந்தியடிகளுக்கும் இடையே வர்ணாசிரமம் பற்றி, ஆரோக்கியமான விவாதம் எழுந்தது. கிளம்பும்போது,  ’ஜீவானந்தம் இந்த தேசத்தின் சொத்து’ என மகாத்மாவின் குரல் உரக்கச் சொன்னது.
                         1935ல் திருத்துறைப்பூண்டி கூட்டத்தில் பெரியாரோடு கருத்து மாறுபாடு கொண்டு, அவ்வியக்கத்திலிருந்தும் வெளியேறினார். ஆனால், வ.உ.சி., ராஜாஜி, பெரியார், அண்ணாத்துரை, சத்தியமூர்த்தி, காமராஜர் என  கட்சி வேறுபாடின்றி எல்லாத் தலைவர்களோடும் நட்பு பாராட்டினார். மதுரை ஆலய தொழிலாளர் நலச் சங்கத்தில் தலைவராக இருந்த முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்ட போது, அவர் விடுதலைக்காகத் தானே முன்னின்று போராடியவர் ஜீவானந்தம். 
            காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, பெரியாரின்  சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதற்கும், பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைக் கரைத்துக் கொண்டதற்கும் காரணம்  அவரது சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு. ஏழை-பணக்காரன், முதலாளி- தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.
            லாலா லஜபதி ராயின் மரணமும், மீரட் சதி வழக்கின் தீர்ப்பும் இவருக்குள் கனன்று கொண்டிருந்த சோஷலிச நெருப்புனை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. சுதந்திரப் போராட்ட மேடைகளில் எரிமலையெனப் பொங்கினார்.  மேடைகளில் பேசுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டது.   பகத் சிங் எழுதிய  ”நான் ஏன் நாத்திகனானேன்?”  புத்தகத்தை தமிழாக்கம் செய்து வெளியிட்டார். கோட்டையூரில் தடையை மீறிப் பேசினார். விளைவு - கட்டி இழுத்துச் சென்று, இவரை  திருச்சி சிறையில்  அடைத்தது ஆங்கிலேய அரசு.
          தனது வாழ்நாளில் சுமார் பத்து ஆண்டுகள் சிறைகளில் கழித்த ஜீவானந்தம், எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டார். 1938ல் அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஏனைய தலைவர்களை விட  அதிக வாக்குகள் பெற்றது  பலரின் புருவங்களையும் உயர்த்தியது.  1946 ல் கம்யூனிஸ்ட் கட்சி  இரண்டாம் முறையாகத் தடை செய்யப்பட்ட போது, சில காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். விடுதலைக்குப்பின் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கினார் ஜீவா.
            1952ஆம் ஆண்டு, வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் (1957&1962), மக்கள் அவருக்குத்  தோல்வியைத் தந்தாலும்  மக்கள் நலனை மட்டுமே அவரது மனம் எண்ணிக் கொண்டிருந்தது.  ’எல்லா மக்களுக்கும் கிடைப்பதுதானே சமதர்மம், எனக்கு மட்டும் தர வேண்டாம் ‘ , என தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை மறுத்து விட்டு, சேரியிலேயே கடைசி வரை வாழ்ந்தவர்தான் ஜீவா.
            அரசியல் மேடைகளில் மட்டும் அல்ல, இலக்கிய மேடைகளிலும் இவரது சிம்மக்குரல் பலமாக ஒலித்தது. சமதர்ம அரசியலும், இலக்கியமுமே அவரது இரு கண்கள். புகழ்பெற்ற காரைக்குடி கம்பன் கழகத்தில் இவர் ஆற்றிய உரை, ஜீவாவின் இலக்கிய ஆளுமையை வெளிச்சமிட்டுக் காட்டியது. சங்க இலக்கியங்கள், நிலக் காட்சிகள்,  மதம், கம்யூனிசம், வரலாறு என பரந்துபட்ட தலைப்புகளில் மாநிலமெங்கும் உரையாற்றினார். அவரது பேச்சுக்கள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வந்துள்ளன. அதேபோல,  அவரது 122 கவிதைகளும் சேர்த்து, தனி கவிதை நூலாக வெளிவந்துள்ளது. சட்டமன்றத்தில் இவர் ஆற்றிய உரைகள்,  கவிஞர் ஜீவபாரதி அவர்களால் தொகுக்கப்பட்டு, “சட்டப்பேரவையில் ஜீவா” என்னும் தலைப்பில்  புத்தமாக வெளியிடப்பட்டுள்ளது.
              ரவீந்திரநாத் தாகூரின் ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பை , ஜீவானந்தம் தான், முதன் முதலில் தமிழாக்கம் செய்தார். ’தாமரை’ என்ற இலக்கிய இதழையும், மக்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தையும் ஆரம்பித்த இவர், ‘ஜனசக்தி’ நாளிதழ் வெளிவருவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
          என்.எஸ்.கிருஷ்ணனோடு நெருங்கிய நட்பில் இருந்த ஜீவா, நாடகங்களும் எழுதியுள்ளார்.   ’ஞானபாஸ்கரன்’  - என்ற நாடகத்தை எழுதிய ஜீவா,   முக்கிய கதாபாத்திரத்தில்  அவரே நடித்தார்.
               முதல் மனைவி   கண்ணம்மா அவர்கள் இறந்துவிட, 1948ல் பத்மாவதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டுமே கலப்புத் திருமணங்கள். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய ஜீவா, சாதி-மதமற்ற சமூகம் உருவாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். இவர்,  தனது கொள்கைகளின் படியே, தனது வாழ்வையும் அமைத்துக் கொண்டார்.
        ஜீவானந்தம் என்றும், உயிர் இன்பன் என்றும் தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட ஜீவா, 1963- ஜனவர் 18 அன்று, உயிர் பிரியும் வேளையில், ’மனைவி பத்மாவிற்கு தந்தி அடியுங்கள், காமராஜரிடம் சொல்லி விடுங்கள்’ என்ற சொற்களை கடைசியாக உதிர்த்து விட்டு மரணத்தைத் தழுவினார்.
     கட்சிப் பணத்திலிருந்து, தேநீர் செலவுக்குக் கூட பணத்தைத் தொடாத அரசியல் நேர்மையாளர்; மாற்றுத் துணி இல்லாமல் ஒற்றை வேட்டியோடு வாழ்ந்த போதும் சீர்மை குறையாதவர்; மரணிக்கும் நொடி வரை , மக்கள் நலனையே சிந்தித்த மானுடக் காதலன் - ஜீவாவிற்கு என்றும் மரணமில்லை.

 ஏனெனில்,           
        இறுதி மூச்சு உள்ளவரை, கொள்கைகளில் சமரசம் செய்யாத வீரர்களை ,  வரலாறு வாரி அணைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு கால எல்லைகள் கிடையாது!
               
         

Monday, August 20, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 20


சிறிய உருவம் செய்த ’பெரிய' காரியம் - உலகக் கொசு நாள்.

ஆகஸ்ட் 20.....இன்று!

           வேரோடு பிடுங்கி எறியும் சூரைக் காற்றைப் போல, மனித உயிர்களை  கொத்துக் கொத்தாக அள்ளி வீசியது மலேரியா காய்ச்சல். அது, விஞ்ஞானத்தின் கண்களில் விரலைப் பாய்ச்சி விளையாடிக் கொண்டிருந்தது. காரணம் என்ன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. இறுதியில்,   1897 ஆம் ஆண்டு அந்த மர்மம் விலகியது.
                            19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியா முழுவதும் பரவியிருந்த மலேரியா காய்ச்சலுக்குக்  காரணம் 'அனோபிலிஸ்' என்ற கொசு வகைதான் என்ற உண்மையை, ரொனால்ட் ராஸ் என்ற மருத்துவர், 1897 -ஆகஸ்ட் 20, இதேநாளில் தான், உலகுக்கு  அறிவித்தார். கல்கத்தா நகரத்தில் இருந்த ’பிரசிடென்சி பொது மருத்துவமனை’ வளாகத்தில் மலேரியா காய்ச்சல் பற்றி விரிவாக விவரித்தார். மலேரியாவிலிருந்து, மனித உயிர்களைக் காக்கும் பணியினைச் செய்த  இந்த ஆய்விற்காக, 1902 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் ஆங்கிலேயர் என்ற பெருமையையும் இவர்  பெற்றார்.
          1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் அல்மோரா என்ற நகரத்தில் ரொனால்ட் ராஸ் பிறந்தார். இவரது தந்தை, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் ஜெனரலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். படிப்பிற்காக லண்டன் அனுப்பி வைக்கப்பட்ட ரொனால்ட், கணிதத்தின் மீதும், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே, மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் சூழல் ரொனால்டிற்கு ஏற்பட்டது. ஆனாலும், லண்டன் மருத்துவக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
                மீண்டும் இந்தியா திரும்பிய டாக்டர் ரொனால்ட் ராஸ், இந்திய மருத்துவத் துறையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சென்னை, பெங்களூர், அந்தமான், செகந்திராபாத் நகர மருத்துவமனைகளில் வேலை பார்த்தார். 1895 ஆம் ஆண்டு, புதுவகையான ஒரு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கினார். மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைன் கான் என்பவரிடமிருந்து, 8 'அனோபிலிஸ்' வகை கொசுக்களுக்கு ரத்தம் வழங்கப்பட்டது. இதற்காக 8 அணா தொகை, ஹுசைனுக்கு வழங்கப்பட்டதாம்.
         ஆய்வின் இறுதியில்,    அனோபிலிஸ் கொசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணிதான் மலேரியா காய்ச்சலுக்குக் காரணம் என்பதை ரொனால்ட் உறுதி செய்தார். 
                      40 வகையான பேரினங்களில், 3500 வகையான கொசுக்கள் உலகெங்கும் வசிக்கின்றன. அனோபிலிஸ் இனத்தில் மட்டும் மொத்தம் 430 வகை கொசுக்கள் இருக்க, அதில் சுமார் 100 வகை  மட்டுமே மலேரிய ஒட்டுண்ணியைக் கடத்தும் பேராபத்தைச் செய்கின்றன. பிளாஸ்மோடியம் என்ற இந்த ஒட்டுண்ணி, மனித உடலில் நுழைந்தவுடன், முதலில் கல்லீரலைத் தாக்குகிறது. பிறகு, இரத்த சிவப்பணுகளை அழிக்கத் தொடங்குகிறது. இறுதியில் மனித உயிரையே கொல்லும் சக்தி பெறுகிறது.
           
  பொதுவாகவே கொசுக்கள் , தாவரங்களின் சாற்றினையே உண்ணும் பழக்கம் உடையவை. ஆண் கொசுக்கள் யாரையும் கடித்து ரத்தம் குடிப்பதில்லை.  தனது  இனப்பெருக்க காலத்தில், புரதத் தேவையை ஈடுசெய்ய பெண் கொசுக்கள் மட்டும்  ரத்தம் குடிக்கின்றன. பெண் கொசு, ஒரு முறை வயிற்றை நிரப்பிவிட்டால், 25 தலைமுறைக்குத் தேவையான புரதச் சத்தைப் பெற்றுவிடுமாம்.
     கடிக்கும்போது , நமக்கு வலிக்காமல் இருக்க, ஒருவித திரவத்தைச் சுரக்கும் பெண் கொசுக்கள், நம்மிடம் மாட்டாமல் இருந்தால்  40 முதல் 50 நாள்கள் வரை உயிர் வாழும். ஆண் கொசுக்களின் ஆயுள் காலம் 1 வாரம் மட்டுமே!
            50 மைல் வரை பயணித்து,  மனித உடலில் வரும் வாசனை, கர்ப்பிணிகள், ‘ஒ’ வகை ரத்தப் பிரிவினர் எனக் கண்டறிந்து கடிக்கும் கொசுக்கள் , ஏனையோரிடமிருந்தும் ரத்தம் பெறும். ஆனால், முன்னுரிமை மேற்சொன்னவர்களுக்கு மட்டும் தான்.
  ஆப்பிரிக்கக்  கொசுக்கள் கணுக்கால்களையே கடிப்பதும், டச்சு நாட்டுக் கொசுக்கள் முகத்தைக் கடிப்பதும் வியப்பையே தருகின்றன. கள்ளத்தனமாய் எட்டிப் பார்த்து, தனது காரியத்தைச் செய்யும் கொசுக்களை, அதே பொருள் கொண்ட ‘பீப்பியன்ஸ்” என்ற சொல்லால் அழைத்தார் வகைப்பாட்டியல் அறிஞர்  லின்னேயஸ்.
           W.H.O. அமைப்பின் 2017 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, மலேரியாவால் அதிகம்  பாதிக்கப்பட்ட முதல் 15 நாடுகளில் 14 ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை. 15 வது இடம் இந்தியாவுக்காம்! எச்சரிக்கை செய்துள்ளது WHO.
             அனோபிலிஸ்(மலேரியா), ஏடிஸ் (டெங்கு, சிக்குன் குனியா), க்யூலக்ஸ் (யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல்) என பலவகையான கொசுக்கள், நவீன அறிவியலுக்குச்  சவால் விடுகின்றன. தற்போது, ஜீன் மாற்றம் செய்து, மலட்டுத்தன்மை கொண்ட ஆண் கொசுக்களை உருவாக்கி , கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அசுத்தத்தைத்  தவிர்ப்பது தான் , கொசுக்களை வெல்ல சரியான  வழி!.
       
    இயற்கையில், எளிய எறும்பொன்று  பருத்த யானையின் காதில் நுழைவதும், சிறிய கொசுவொன்று, பெரிய மானுடத்திற்குச்  சவால் விடுவதும், நமக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிறது.
இயற்கையை வாசிப்போம்!.

       
       
               
             
         
             
                

Sunday, August 19, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 19

சொல் ஆயுதம் - தீரர் சத்தியமூர்த்தி.

ஆகஸ்ட் 19....இன்று!

    “இதுபோல் பல சத்தியமூர்த்திகள் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் நம்  நாட்டை விட்டு என்றோ ஓடியிருப்பார்கள்”.                                                               - மகாத்மா காந்தியடிகள்.

                 பேச்சுத் திறம், செயல் ஆர்வம், கலை உள்ளம் -  இவைதான் இவரது ஆயுதங்கள்.  அஞ்சா நெஞ்சத்துடன், அகத்தில் எழுந்த கருத்துக்களை அழகாகச் சொல்வதில் தீரர்; விடுதலைப் போராட்டத்திற்காக, தனது வாழ்வையே  அர்ப்பணித்த வீரர் - எஸ்.சத்தியமூர்த்தி (1887-1943) பிறந்த நாள் இன்று.

             புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 1887ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி, மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரிகள். இவரது பெற்றோர்- சுந்தர சாஸ்திரி-சுப்பு லெட்சுமி அம்மாள். வழக்கறிஞராகப்  பணிபுரிந்த இவரது தந்தை இறந்தவுடன், குடும்பம் முழுவதையும் தானே சுமக்கும் கடின நிலை , இளம் வயதிலேயே இவருக்கு ஏற்பட்டது. புதுகை மன்னர் கல்லூரியில் இடைநிலை வகுப்பு படித்த சத்தியமூர்த்தி, பட்டம் படிக்க சென்னை சென்றார். அங்கு, கிறித்தவக் கல்லூரியில், வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் முடித்தார்.  
           சென்னை சட்டக் கல்லூரியில்,  சட்டப்படிப்பை முடித்த பிறகு, வி.வி.சீனிவாச ஐயங்காரிடம் இளையராகச் சேர்ந்து, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்த பொழுது, முதல்வரையும், நூலகரையும் தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆம், 500-600  பக்கங்கள் கொண்ட புத்தகங்களைக் கூட, நன்றாகப் படித்து, ஓரிரு நாட்களில் திருப்பித் தருவாராம். நூலகமே கதி என்று கிடந்த சத்தியமூர்த்தி, தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பாலசுந்தரம் என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்ட சத்தியமூர்த்திக்கு லெட்சுமி ஒரே ஒரு மகள் மட்டுமே. 
            எஸ்.சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, பின்னாட்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, விடுதலைக்காகப் பாடுபட்டார். மாண்டேகு-செம்ஸ்போர்ட் அறிக்கை, ரெளலட் சட்டம் போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மூவர் குழு லண்டன் சென்றது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் இவர்களுடன் சத்தியமூர்த்தியும் அக்குழுவில் இருந்தார். தனது வாதத் திறமையால் , லண்டன் உறுப்பினர்களின் வாயை அடைத்தார். 1919 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் ,  லண்டன் சென்று,  இந்தியாவின் தரப்பை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு இவருக்கே  வழங்கப்பட்டது. காரணம், 1917 கல்கத்தா மாநாட்டில் இவர் ஆற்றிய எழுச்சி உரை, அனைத்து இந்தியத் தலைவர்களின் பார்வையையும் இவர் பக்கம் திருப்பியிருந்தது. 
           சுயராஜ்ஜியக் கட்சியிலும், பிறகு  காங்கிரஸ் கட்சியிலும் தமிழகத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.  சென்னை மாகாண சட்டசபையில் உறுப்பினராக இருந்தபோது, 01.10.1928ல், பாரதியாரின் பாடல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து சிறப்பான உரை நிகழ்த்தினார். அதேபோல, ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, 20.02.1936 ல்,டெல்லி மத்திய சபையில் 360 நிமிடங்கள் தங்கு தடையின்றிப் பேசி ஆங்கிலேயர்களை தடுமாறச் செய்திருக்கிறார். தேவதாசி முறை ஒழிப்புக்கான தீர்மானத்தில் , முத்துலெட்சுமி ரெட்டிக்கு எதிராகப் பேசியதால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.
                  1939 - நவம்பர் 6 அன்று சென்னை மேயராகப் பொறுப்பேற்றார். சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என ஆங்கிலேயர்களிடம் வாதாடி ஒப்புதல் பெற்றார். இவர் மேயராக இருக்கும் போதுதான் நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.   1944 ல் பணிநிறைவு பெற்ற போது, அதைக் காண அவர் உயிரோடு இல்லை. 
                இந்திய விடுதலைக்காக  மேடைகளிலும், சட்ட சபைகளிலும் தொடர்ந்து உரையாடிய சத்தியமூர்த்தி, சிறைகளில் வாடியே உடல் நலிவடைந்தார். இறுதி முறையாக, 1942 ஆம் ஆண்டு, நாக்பூர் அமராவதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மனித உரிமையின் மதிப்பு வெளிப்படாத அந்த நேரத்தில்,  விடுதலை வீரர்கள் , சிறைச்சாலைகளில் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். உடல் வெகுவாக மோசமடைந்ததைத் தொடர்ந்து, நாக்பூரிலிருந்து,  சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். விடுதலைக் காற்று , நுரையீரல் தீண்டும் வாய்ப்பை  அவர் பெறவில்லை.  28.03.1943 ல் இறந்து போனார்.   
              அவரது வழிகாட்டலில்  உருவான தலைவர்  காமராஜர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிட்டார். பூண்டி நீர்த்தேக்கம் , ‘சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  2002 ஆம் ஆண்டு தான்,  இந்தியப் பாராளுமன்றத்தில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது.
              போகும் இடங்களுக்கும், போராட்டக் களங்களுக்கும் தனது செல்ல மகள் லெட்சுமியை, எப்போதும் உடன் அழைத்துச் செல்லும் சத்தியமூர்த்தி, பரிசுப் பொருளாக புத்தகங்களையே வாங்கிக் கொடுப்பார். அறிவின் மீது ஆழமான காதல் அவருக்கு இருந்தது.
          புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மார்த்தாண்டத் தொண்டைமான், ஆஸ்திரேலியப் பெண்ணை மணந்து கொண்டு, பிள்ளைக்கு சொத்துரிமை வழங்குவதை கடுமையாக  எதிர்த்தார். அதன் பயனாக, புதுக்கோட்டைக்குள் நுழைய, இவருக்கு தடை விதிக்கப்பட்டது. 2ஆண்டுகளுக்குப் பிறகே தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
        வாழ்ந்த  காலத்திலும், இறந்த பிறகும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர்  தீரர் சத்தியமூர்த்தி.  “எனது புத்தியால் நான் மேலே செல்வதும், எனது ஏழ்மையால் நான் கீழிறக்கப்படுவதுமே எனது வாழ்வு” என, வ.ரா. அவர்களிடம் , ஒரே ஒரு முறை மனம் வருந்திப் பேசியிருக்கிறார். ஆனால்,  தேங்கிவிடவில்லை.

        விமர்சனம் என்ற பெயரில் விஷத்தை வீசும் வன்மம் சூழ் உலகிது  என்பது புரிகிறது. அதே வேளையில், தொட்டால் சிணுங்கும் மனதினைத் தேற்றுவது தான் கடினமாக இருக்கிறது.
ஆனால்,
மகத்தான சாதனை செய்யும் மனங்கள், மயங்குவதில்லை; காயமடைவதும் இல்லை.





            
                           

Saturday, August 18, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 18

உறுதி கொண்ட மனம் - விஜயலெட்சுமி பண்டிட்.

ஆகஸ்ட் 18...இன்று!

              “உன்னுடைய திறமை, ஆற்றல் குறித்து நான் மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நேரடியான , உறுதியான மொழியில் பேசுவது என்பது பலரிடமும் இல்லாத பண்பாகும். அது நம் இருவருக்குமே இருப்பதாகக் கருதுகிறேன்.” -ஜவஹர்லால் நேரு தனது சகோதரி விஜயலெட்சுமி பண்டிட்டுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை. 
             ஆம், தனது அண்ணன் மகள் இந்திரா காந்தி, 1975ல் அவசர நிலைப் பிரகடனம் செய்த போது, அதைத் தீவிரமாக எதிர்த்தார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் , தனது மருமகளுக்கு எதிராகப் பிரச்சாரமும் செய்தார். பொது வாழ்வில், பெண்கள் குலத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து  காட்டிய, பன்முகத் திறன் கொண்ட  விஜயலெட்சுமி பண்டிட் (1900- 1990) பிறந்த நாள் இன்று. 
                மோதிலால் நேரு- சொரூப ராணி தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக, 1900 ஆகஸ்ட் 18ல் , அலகாபாத் நகரில் விஜயலெட்சுமி பண்டிட்  பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி.  அண்ணன் ஜவஹர்லால், தங்கை கிருஷ்ணா- இவர்கள்  இருவரைப் போலவே, இவரும் நல்ல எழுத்தாற்றல் மிக்கவர். விஜயலெட்சுமி பண்டிட் எழுதிய, The Evolution Of India, The Scope of Happiness  புத்தகங்கள் இந்திய வரலாற்றின் குறிப்பிட்ட காலத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன. இவரும், நேருவும் எழுதிக் கொண்ட கடிதங்கள் , நாவல்களையும் விடவும்  சுவையானவை, கருத்தாழமும் மிக்கவை. 
                            குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில்   ஈடுபட்டிருந்த நிலையில், இவரும்  ஆர்வமுடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1921 ஆம் ஆண்டு  ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள்.  இவரது கணவர் ரஞ்சித் நல்ல கல்வியறிவும், திட மனமும் கொண்டவராக இருந்தார். கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணி என்ற நூலை, சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருக்கும் ரஞ்சித், விடுதலைப் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார். விஜயலெட்சுமியும்  சட்ட மறுப்பு இயக்கம் மற்றும்  வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டு, சிறைகளில் வாழப் பழக்கப்பட்டிருந்தார்.
              இந்திய அரசுச் சட்டம் - 1935ன் படி, உத்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பெண் அமைச்சராகப்  பொறுப்பேற்றார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான இவருக்கு  சுகாதாரத்துறை  அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
     இரண்டாம் உலகப் போரில், இந்தியத் துருப்புகளை ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது. ஆனால், அதற்கான அனுமதியை மந்திரி சபையிடம் பெறவில்லை. இதன் காரணமாக , அனைத்து அமைச்சர்களும் தத்தமது பதவியை ராஜினாமா செய்தனர். இவரும் ராஜினாமா செய்தார். 
              நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில்,    1944ல் பரேலி சிறைச்சாலையிலேயே, இவரது கணவர் ரஞ்சித் இறந்து போனார். “எந்த சூழ்நிலையிலும் கண்ணீர் விடக் கூடாது. அழுகை வரும்போது, மேலுதட்டை மடக்கி, அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நமது குடும்பத்தார் செய்வது” என்று சொன்ன நேருவால் கூட , ரஞ்சித்தின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பமே வருந்தியது. 
           மூன்று பெண் பிள்ளைகள் இருந்த போதும், ரஞ்சித்தின் சகோதரர் பிரதாப்,  குடும்பச் சொத்தில் சிறிதும் தர முடியாது என்று சொல்லிவிட்டார். காந்தியடிகளின் அறிவுரையின் பேரில், நீதிமன்ற வழக்கினை வாபஸ் பெற்றார்  விஜயலெட்சுமி பண்டிட்.  சில காலம் அரசியலை விட்டு விலகினார். அமெரிக்கா சென்றார். ஆனால், தேசம் அவரை விடுவதாக இல்லை. 
             இந்தியா விடுதலை பெற்றவுடன் , மாஸ்கோ, வாஷிங்டன், லண்டன் போன்ற இடங்களில் அயல் நாட்டுத் தூதராகப் பணியாற்றினார். அரசியல் விவகாரங்களைத் திறம்பட கையாண்டார். இவரே  இந்தியாவின் முதல் பெண் அயல் நாட்டுத் தூதர் ஆவார்.
          1953ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை  வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1962-64ல் மஹாராஷ்டிர ஆளுநராகப்  பதவியில் இருந்த விஜயலெட்சுமி பண்டிட், தனது சகோதரர் நேரு இறந்தவுடன், அதே பெஹல்பூர் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினர் ஆனார். 
               தனது பிரியத்திற்குரிய மருமகள் இந்திரா காந்தியின்  திடமான கொள்கைகளைப்  பாராட்டவும், தவறான போக்குகளைக் கண்டிக்கவும் இவர் தயங்கியதே இல்லை. ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடுகள் காரணமாக , கட்சியிலிருந்து முழுதும் ஒதுங்கினார் விஜயலெட்சுமி. 
           பனிமலை பார்வையில் பட, இளங்காற்று இதயம் தீண்ட தனது வாழ்வின் எஞ்சிய காலங்களை டேராடூனில் இருந்த தனது இல்லத்தில் கழித்தார். 1962 ல் பத்ம விபூஷன் விருது பெற்ற விஜயலெட்சுமி பண்டிட், 1990 ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி , இறந்து போனார்.
           பெண்ணுரிமை முழுதும் வசப்படாத 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் அது. பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த விஜயலெட்சுமி பண்டிட், பெண் குலத்திற்கே முன் மாதிரியாக மாறினார். ஏனெனில்,  இளம் வயது முதலே  விடுதலைப் போராட்டம், சிறைவாசம், கணவர் இறப்பு,  தூதரகப் பணி, ஐ.நா.சபை தலைவர், மக்களவை உறுப்பினர், எமெர்ஜென்சி எதிர்ப்பு போராட்டம் என எண்ணற்ற சவால்களைச் சந்தித்தபோதும் வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றிக்  கொண்டார். 
  
                    அவரைப் போலவே -  துயரங்கள் சூழும் போதெல்லாம், மேலுதட்டை மடக்கி, கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், காயங்கள் மறந்து தொடர்ந்து பயணிக்கவும்  நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். 

          ஏனெனில்,  தடைகளைத் தாண்டி வெல்வதில் தானே,  வாழ்வின் ருசி அடங்கியிருக்கிறது!.