Tuesday, October 25, 2022

நூல் அறிமுகம் - ’ஆலகாலம்’



ஆலகாலம் – கலைச்செல்வி.

                                                            (1)

”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

 பெருமை உடைத்தது இவ்வுலகு.”   

            3 இலட்சம் ஆண்டுகளாய், மனிதனின் பார்வையில் மாறாதிருப்பது நிலையாமை மட்டுமே. வாழ்ந்து முடித்த அத்தனை கோடி மனிதர்களின் கண்களையும் ஒன்றாக இணைத்து, கூட்டுக் கண்களாக்கி, முழுமைக் காலத்தையும் ஒற்றைப் பார்வையில் பார்க்க முடிந்தால், இரண்டு உண்மைகளை நம்மால் உணர முடியும். ஒன்று, மரணம் ஏற்படுத்தும் நிலையாமை. இரண்டு, அதனில் இருந்து மீண்டெழ - இலட்சிய மனங்கள் கைக்கொண்ட வழிகள்.

              ஆறுகளும், கடல்களும் மலைகளும் அழிந்து அழிந்து, புதிது புதிதாய் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதைப் போலவே, மனிதர்களும் விலங்குகளும் காலச் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.  இங்கே சாஸ்வதமானது என்ற ஒன்று இல்லவே இல்லை.

சிந்திக்கும் பழக்கத்தின் ஆரம்ப காலத்தில் மனிதனின் கவலை என்பது அன்றாடங்களாகத்தான் இருந்திருக்கும். நாகரீகம் தனது முடிவற்ற நீண்ட பயணத்தைத் தொடங்கியபோதுதான், நிலையாமையின் துயரப் பிடி, மானுட மனத்தினை இறுக்கத் தொடங்கியிருக்கும் . இனி எந்தச் சூழ்நிலையிலும் மாண்டவர் மீளப் போவதில்லை என்னும்  ரணம், எத்தகைய மனிதனையும் கலைத்துப் போட்டு விடுகிறது .

 மனைவி இறந்ததால் தன்னை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள், உளமார உடன்கட்டை ஏறும் மனைவிகள்,  பெற்ற பிள்ளைகளின் இழப்பினைத் தாங்கிக் கொள்ள இயலாமல் மூச்சை நிறுத்திக் கொள்ளும் பெற்றோர்கள், உற்ற நண்பனின் உயிரோடு, தனது உயிரையும் சேர்த்துப் பிரியும் நண்பர்கள் என பிரிவினைத் தாங்கிக் கொள்ள இயலாமல்  தன்னையே காலத்தில் கரைத்துக் கொள்ளும் மனிதர்கள் நிலையாமை அலைகளுக்குள் மூழ்கிப் போனவர்கள். வரலாற்றில் அவர்கள் ஒருபிரிவினர்; பெருந் திரளானவர்கள்.   

இரண்டாவது வகை, பிரிவின் துயர விசையை, வாகாக மடை மாற்றி- பெருஞ்செயல்களுக்குள் அதனைச்  செலுத்தி நிலைத்திருப்பதே நிலையாமையை எதிர்கொள்ளும் மிகச் சிறந்த வழி என்பதைக் கண்டுணர்ந்த மானுடர்கள். இவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்கள். இதற்கான சன்றுகளை மானுட வரலாறு முழுமைக்கும் காண முடியும்.  

  மரணம் போலக் கற்றுத்தரும் மிகச் சிறந்த ஆசான் இங்கே யாருமில்லை. நெருங்கிய உறவுகளின் துயரம், மரணம் - மனிதனது சிந்தனைகளின் புதிய சாளரத்தினைத் திறந்து விடுகிறது.   ’நிரந்தரமின்மைதான் இந்த உலகில் நிரந்தரமான ஒன்று’ என்பதை உணர்ந்து விட்டால் வாழ்வின் பூரணத்துவம் பிடிபட்டு விடுகிறது.

  நம் மண்ணில்- பல்வேறு காலக்கட்டங்களில்   பிரிவின் வாதையில் இருந்து விடுபட்டு, தன் மனத்தினை நிறைவின் பொருட்டு ஒப்புக் கொடுத்து – அதன் வழி, மீட்சி அடைந்த ஐந்து மனிதர்களின் வாழ்வினையும் இணைத்து ’வாழ்வதன் பேருண்மை’ பற்றி விவாதம் செய்கிறது  கலைச்செல்வியின் ’ஆலகாலம்’ என்ற இந்த நாவல்.

 

                                                (2)

”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

 பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு

 சூரையன் காட்டிடைபோய்ச் சுட்டிட்டு

 நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே!”

-பட்டினத்தார்.

        சேந்தமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலையும் பாணர் கூட்டத்தின் வாழ்வினப் பேசுகிறது நாவலின் முதல் பகுதி.  தன் மீது, அளவற்ற நேசம் கொண்டிருந்த சகோதரி  குழலியின் கரங்களுக்குள் தான்-  அறிவுடை நம்பி என்ற பாணனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருநதது. சேந்தமலையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சேந்தமனைக் காதலிக்கும் குழலி, துள்ளிக் குதிக்கும் இளமானைப் போல, மகிழ்ந்து திரிகிறாள். அவளது காதலனைக் கண்டு, இருவரையும் இணைத்து வைக்கும் பயணத்தில் இருக்கும் போதுதான், சங்ககாலப் புலவன் மாங்குடி மருதனாரைச் சந்திக்கிறான் நம்பி. சேந்தமலையும், அதன் தலைவன் சேந்தமனும் இந்நேரம் சிதறிப் போயிருப்பார்கள் என்ற செய்தியைப் பகிர்கிறார் மருதனார்.  இனி எந்நாளும் நிறைவேறவே இயலாத குழலியின் காதல் வாழ்வு, அத்தனை சீக்கிரத்தில் சுருங்கிப் போனதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.  தனது தமக்கையின் வாழ்வு, மீட்டப்படாத யாழினைப் போல, பயன் அற்றுப் போய்விட்டதை எண்ணிக் கலங்குகிறான் பாணன்.  தன்னிடம் இருந்த யாழில் இசை மீட்டத் தொடங்குகிறான். அந்தக் கானகம் இசையால் நிரம்பத் தொடங்குகிறது. நிறைவு தரும் இசையின் கரங்களுக்குள் குழலியும் அவனும் நுழைகிறார்கள். மனம் ததும்பி, நிறைவில் நிறைந்து வழிவதாக முதல் காலக்கட்டம் முடிகிறது.  

ததும்பி வழிந்த மனத்தினை, கண்கள் மூடி அடக்கிக் கொண்ட மணிமங்கலத்துச் சிற்பி  விக்கிரமனின் வழியாக இரண்டாம் காலக்கட்டம் துவங்குகிறது.  எதிர்பாராத துயரங்களால், மனம் துவண்டு, வட தேசம் வரை அலைந்து திரிந்த விக்கிரமன், மீண்டும் பல்லவ தேசம் வருகிறான். கடற்கரையில் நிலைத்து நிற்கும் பாறைகள் வழியே, காலத்தைக் கடந்து நிற்கும் மாபெரும் ஓரு சிற்பத்தொகுதியை உருவாக்குகிறான்.  அவனது வாழ்வில் உண்டான இழப்பின் வலியை, விசையென மாற்றி – காலம் கரைத்துவிட முடியாத மாமல்லபுரச் சிற்பங்களை உருவாக்குகிறான். நிலையின்மையே நிஜம் என்பதை உணர்ந்த விக்கிரமன், மீண்டும் வட திசை நோக்கி நடக்க, அவன் வடித்த சிற்பங்கள் அவனையே நோக்கி நிற்பதாக, இரண்டாம் காலக்கட்டம் முடிகிறது.  

மகாமண்டபத்தில் இருந்த இராசாதித்தனின் சிற்பம், முதலாம் பராந்தகச் சோழனையே பார்த்துக் கொண்டிருப்பதாகத் தொடங்குகிறது மூன்றாம் பகுதி. தக்கோலப் போரில் தனது ஆசை மகன் இராசாதித்தனை இழந்த பராந்ததகன், தனது வெறுமையில் இருந்து மீள முயற்சி செய்கிறான். மறைந்து போன தனது தந்தையிடம்  மரணம் குறித்து விசாரணை மேற்கொள்கிறான். அந்தப்புரத்தில் இராசாதித்தனின் தாயிடம் விடை தேடுகிறான். உலகில் மிகக் கொடுமையான புத்திர சோகத்தில் இருக்கும், பராந்தகனின் மனம் சுமக்க முடியாத பாரமாக இருக்கிறது. இறுதியாக, பொன்னி நதியின் வடகரையில் வீற்றிருக்கும் சாட்சி நாதேஸ்வரரின் ஆலயக் கருவறையில் ஈசனின் புன்னகையில் மனம் கரைந்து நிற்கிறார் பராந்தகன். லிங்கத் திருமேனியில் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கு போது, ஈசனும் பராந்தகனும் மானசீகமாக  உரையாடிக் கொள்கிறார்கள். நிலையாமை குறித்தும், மரணம் குறித்தும் விசாரணை தீவிரம் கொள்கிறது. தில்லை வாழ் நடராசனுக்கும், அம்மைக்கும் பொன்னால் கூரை வேய்ந்து, அதன் நிழலிலேயே இளப்பாறுகிறான் பராந்தகன். ஈசன் வீற்றிருக்கும் கனக சபையில் ஏனைய நாட்களைக் கழிக்கிறார். காலத்தாலும் தொடவியலாத அசைவின்மை எது என பராந்தகச் சோழன் உணர்ந்து கொள்கிறார்.

கால்கள் நகர்ந்தும் அசைவின்மையை உணரும் முத்துலெட்சுமி, தனது மகன் சுப்பையாவை நாடகக் கம்பெனியில் விட்டுச் செல்லும் காட்சியில் தொடங்குகிறது நான்காம் காலக்கட்டம். சுப்பையாவின் மனம் வழியாக இந்தப் பகுதி நகர்கிறது. விடுதலைப் போராட்ட வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்ட சுப்பையா, வங்காளப் பகுதிக்குச் செல்கிறார். காந்தியின் மீதான அபிமானம் மேலெழும்பி வர,  வார்தா ஆசிரமம் சென்று தங்குகிறார். அங்கே, மகாத்மா காந்தி, மகாதேவ் தேசாய் என பெரும் மனிதர்களோடு உரையாடுகிறார். வங்காளப் பெண் கோத்ரி உடனான  காதலும் கடந்து போகிறது. கஸ்தூரி பாவின் மரணத்தினை மகாத்மா எப்படிக் கடந்து போகிறார் என்பதை சுப்பையா உடனிருந்தே பார்க்கிறான். பற்றற்ற வாழ்வும், ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கர்ம யோகமும் தான், வாழ்வின் துயரங்களைக் கடந்து செல்லும் மீட்சிக்கான வழி என்பதை காந்தியோடு உரையாடுவதன் வழியே சுப்பையா உணர்ந்து கொள்கிறான். பிரார்த்தனைக் கூடத்தில் ஒளிரும் சிறு ஒளியில், அவன் மனம் நிறைவு கொள்கிறது.

பிரார்த்தனைக் கூடத்தில் ஒளிரும் சிறு ஒளியைப் பார்த்துக் கொண்டே அந்த இரவினைக் கடத்திக் கொண்டிருந்த அமுதனின் வாழ்வினைக் குறித்த கதைதான் நாவலின் ஐந்தாம் பகுதி. எதிர்பாராமல் தனது தாயை இழந்துவிட்ட அமுதனின் உள்ள அலைகழிப்புகளைச் சுற்றி நகர்கிறது இப்பகுதி. தாயின் பொருட்டு, துறவு நிலை என்பதையும்   மீறி, இறுதிக் காரியங்கள்  செய்த பட்டினத்தார், ஆதி சங்கரர்  போல் அல்லாது, தாயின் நினைவுகளில் கங்கைக் கரையில்  துறவு கொள்கிறான் அமுதன். பருப்பொருளாகவும், மனத்தின் இருப்பாகவும் இங்கே இருப்பவை யாவும் சுமையென அமுதன் அறிகிறான்.  யதியின் கவிதைகளும், மணிக்கர்ணிகா  ஆற்றுத் துறையும் அவனுள் ஏதேதோ சிந்தனைகளை உருவாக்குகின்றன.   நானும் உனக்குச் சுமையா எனக் கேட்டபடியே அமுதனின் மனத்தோடு உரையாடுகிறாள் தேவி. கம்பிக் கதவுகளில் இருந்து வெளியே வந்த தேவி, இயற்கையால் நிறைவு கொள்வதே வாழ்வு எனக் கூறுகிறாள். அமுதன், வெகுதூரம் நகர்ந்து சென்ற பிறகு, படித்துறையில் ஒரு சிதை எறிந்து கொண்டிருந்தது. அது, தேவியின் மூக்குத்தியென ஒளி கொண்டிருந்ததைப் பார்க்கிறான். ஆக, ஒளி என்பது ஒன்றுதான் எனப் புரிந்து கொள்கிறான் அமுதன்.

 

                                          (3)

” நிலம் தானே உடலைத் தாங்குகிறது?

 உடல் அத்தனை பாரமா?

 மனத்தின் பாரம் உடலில் அல்லவா இறங்குகிறது!”

- நாவலில் இருந்து…

       சங்க காலம், பல்லவர்களின் காலம், பிற்காலச் சோழர்களின் காலம், இந்திய விடுதலைப் போராட்டக் களத்தின் உச்சக் கட்டக் காலம், தற்போதைய காலக்கட்டம் என்ற ஐந்து காலக்கட்டங்களையும் அதனதன் வடிவங்களில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர். மொழிநடை, வர்ணனை, கதை மாந்தர்களின் உளவியல் சார்ந்த பகுதிகள் ஆகியன மிகச் சிறப்பாக வந்துள்ளன.  

அந்தாதி போல, பொருள் பொதிந்த தனது அழகிய சொற்களால் ஐந்து காலக்கட்டங்கலையும் முடிச்சிட்டு – ஒரு சரடென மாற்றியிருக்கிறார்.  தான் உருவாக்கிய பாத்திரங்களை வரலாற்று மனிதர்களோடு விவாதம் செய்ய வைத்திருக்கும் பகுதிகள் அபாரம்.  பகத்சிங்கைக் காப்பாற்றும் விஷயம், தாழ்த்தப்பட்டோருக்கான தனிதொகுதி விவகாரம் போன்றவற்றில் காந்தி அடிகளின் தரப்பும், அவரது எதிர் தரப்பின் வாத பிரதிவாதங்களும் சரிசமமாக வந்து போகின்றன.

மகாபலிபுரச் சிற்பங்களை, கலையில் தோய்ந்த ஒரு மனிதனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் இரண்டாம் பகுதி நன்றாக வந்திருக்கிறது. அவனது பயணத்தில் அவன் கண்ட காட்சிகள் பாறையினுள் புகுந்து சிற்பமென வளரும் பகுதிகள் அபாரம்.

சாட்சிநாதேஸ்வரரின் அபிஷேக ஆராதனையின் போது, ஈசனுக்கும் பராந்தகச் சோழனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் பகுதிகள் அழகியல் உச்சங்களில் ஒன்றெனக் கொள்ளலாம். அபிஷேகம் தொடங்கி  சட்ட நாதர் அணி கொள்ளும் வரை, வர்ணனையும் உரையாடலும்  பேரழகு. தொடர்ந்து வரும் பகுதியான, தில்லையில் பொற்கூரை உருவாகும் விவரணைப் பக்கங்கள் - வாசிப்பவனின் முன்னே, பராந்தகச் சோழனின் உள்ளத்தை நிரப்பி விடுகின்றன. நின்று நிதானித்தே கடக்க முடிகிறது.

கங்கைக் கரையில் வீற்றிருக்கும் தேவியிடம் அமுதன் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் அடர்த்தி மிகுந்தவை.  தேவியின் மூக்குத்தி ஒளி – மணிக்கர்ணிகா படித்துறையில் எரியும் சிதையின் ஒளி – வாழ்வின் மீதான  குரு யதியின் கவிதைகள் என நாவலின் இறுதிப் பகுதி , மனத்தின் ஆழத்தைத் தொட்டு எழுப்புகின்றன.  

            மெய்யியல் உண்மைகளைத் தேடி அலையும் முதன்மைப் பாத்திரங்களின் விவாதப் பகுதிகள், மனதினால் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டியவை.

                                   

(4)

”விடாய் கொள்வதும்

விடாய் தீர்ப்பதுமன்றி

வாழ்க்கை என்பது

வேறொன்றுமில்லை.”

-         நாவலில் இருந்து…

     இந்த உலகில் ஈடு செய்ய இயலாத துயரம் என்பது பிரிவுத் துயர் தான். துயர நேரத்தில் மட்டும் வார்த்தைகள் பொருள் இழந்து, மதிப்பு இழந்து போகின்றன. காலம் உறைந்து போய்விட்டதாக, மனம் பிரம்மை கொள்கிறது. ஆனால், காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

மானுட வாழ்வு, காரியங்களையே எதிர்நோக்கி நிற்கிறது. காரியங்களுக்கான காரணங்கள் அறிய முடியாமற் போனாலும், இங்கே காரியம் ஆற்றுவதே முதன்மையானது. அதுவே பூரணத்துவ வாழ்வு என்பதை ’ஆலகாலம்’ நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. இந்த நாவல் பேசுவது, இழப்பினால் வரும் நம்பிக்கையின்மையை அல்ல; மாறாக, ஏதோ ஒரு வகையில், வாழ்வினைப் பற்றிக் கொண்டு, பூரணம் அடைவதைப் பற்றியே விசாரணை மேற்கொள்கிறது.

செயலின்மையை உருவாக்கும் எந்தத் தடையையும் மீறிட  எத்தனிக்கும் மானுட மனத்தின் இடைவிடாத தேடலே வாழ்வின் சாரம். அது சார்ந்த மெய்ஞ்ஞானத் தேடலை - இந்த நாவல், வாசிப்போர் உள்ளங்களில் நிச்சயம் ஏற்படுத்தும். 

நூல்: ஆலகாலம்

ஆசிரியர்: கலைச்செல்வி

பதிப்பகம்: யாவரும் பதிப்பகம்,  சென்னை-42.  9841643380.

தளம்: www.be4books.com




 

 

Sunday, May 1, 2022

மெர்க்குரி மரணங்கள்

மினமாட்டா தொற்றுநோய்!



மினமாட்டா என்பது ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு கடற்கரை நகரம். 1955-களின் மத்தியில், அந்நகரில் இருந்த பூனைகளிடம் விநோதமான செயல்பாடுகள் தெரிய ஆரம்பித்தன. அதீத சத்தம் எழுப்பிக் கொண்டு அலைந்து திரிந்த அப்பூனைகள் திடீர் திடீரென்று கடலுக்குள் குதித்து இறந்து போயின.  பூனைகள் ஏன் இப்படி தற்கொலை செய்து கொள்கின்றன என்பதை அறியாது மக்களும் அரசும் குழம்பிக் கிடந்தனர்.

சில மாதங்களில் மினமாட்டா நகர மக்களிடமும்  புதுமையான நோய்க் குறிகள் தெரிய ஆரம்பித்தன. சிலருக்கு கை, கால்கள் மற்றும் உதடுகள் மரத்துப் போயின. சிலருக்கு பார்வைக் குறைபாடும், செவித் திறன் இழப்பும் ஏற்பட்டன. வேறு சிலருக்கு கை, கால்களில் கட்டிகள் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப் பட்டனர். உடல் தசைகள் சுருங்குவதிலும் விரிவதிலும் சிக்கல்கள் ஏற்பட, பக்கவாதம் போல, கை, கால்கள் இழுத்துக் கொண்டன.  பூனைகளைப் போலவே, சில மனிதர்கள் நாள் முழுக்க சத்தம் எழுப்பிக் கொண்டே அலைந்து திரிந்தனர்.

1956ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, மினமாட்டா நகர மருத்துவமனையின் இயக்குநர் நோய்க்கான காரணத்தை உலகுக்கு முறையாக அறிவித்தார். உடலில் ஏற்பட்ட பாதரச நச்சின் காரணமாக மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மேற்கண்ட பிரச்சனைகள் ஏற்படுவதை உறுதி செய்தார். இது ‘மினமாட்டா நரம்பியல் கொள்ளை நோய்’ (Minamatta Epidemic Disease) எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நோய் தோன்றிய கதையும், அதன் வரலாறும் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தன; பாடமும் கற்றுத் தந்தன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஜப்பானில் இருந்த மிகப் பிரபலமான வேதித் தொழிற்சாலை நிறுவனம் Chisso Corporation. 1908ஆம் ஆண்டு, மினமாட்டா நகரில் இதன் கிளை நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அசிட்டிலீன், அசிட்டால்டிஹைட், வினைல் குளோரைட், அசிட்டிக் ஆசிட் போன்ற வேதிப் பொருள்களின்  தயாரிப்பு மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுக் கழிவுகள் யாவும், மினமாட்டா நதியில் கரைத்து விடப்பட்டன. மினமாட்டா நதியின் வழியாக கடலில் சேர்ந்த கழிவுகள், ஆரம்பத்தில் மீன் பிடித் தொழிலை கடுமையாக பாதித்தது.

நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் வலுவான பொருளாதார மையமாக இருந்த, இத்தொழிற்சாலையை கண்டிக்கவும், தண்டிக்கவும் அப்போது யாரும் இல்லை. ஆண்டுக்கு 200 டன் அசிட்டால்டிஹைட் உற்பத்தி என்ற நிலையில் இருந்து, 6000 டன் என்ற அளவிற்கு தேவை அதிகரித்தது. அதனைச் சமாளிக்க, தொழிற்சாலையில் புதிய புதிய வினையூக்கிகளை பயன்படுத்திப் பார்த்தனர். 1951ஆம் ஆண்டு, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,  மெர்க்குரி சல்ஃபேட்டுடன்  ஃபெர்ரிக் சல்ஃபைடையும்  இணைத்து வினையூக்கியாகப் பயன்படுத்தினர். அசிட்டால்டிஹைட் தயாரிப்பின் போது, அவர்களே எதிர்பாராத வண்ணம், மீதைல் மெர்க்குரி என்ற அதி தீவிர நச்சுச் சேர்மம் 5% அளவில் வெளிவந்தது. அவர்களும் எப்போதும்போல, அதனை மினமாட்டா வளைகுடாவில் கலந்து விட்டனர்.

  அதன் காரணமாக உருவான விளைவுகள்,அங்கிருந்த மக்களை மெல்ல மெல்ல, கொல்ல ஆரம்பித்ததை யாரும் அப்போது உணர்ந்திருக்கவில்லை. 1956, ஏப்ரல் 21ஆம் தேதி, ஐந்து வயது குழந்தை ஒன்று விநோதமான அறிகுறிகளுடன் மருத்துவமனை வந்து சேர்ந்தது. இரண்டு நாள்கள் கழித்து, அதன் தங்கையும் அதே அறிகுறிகளுடன் மருத்துவமனை வந்தது. பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கும் இதே பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதை மினமாட்டா நகர மருத்துவமனை  கண்டுபிடித்தது. புதிரான ஒரு தொற்றுநோய் இங்குள்ள மக்களை பாதித்துள்ளது என்பதை நிர்வாகம் முறையாக  அறிவித்தது.

கடலில் மீன்கள் எல்லாம் செத்து மிதந்ததும், கடற்கரையோரம் காக்கைகள் தானாகச் செத்து விழுந்ததும், பூனைகளின் புதிரான தற்கொலையும் மருத்துவ உலகினை விழிப்படைய வைத்தன.  குமாமோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 4 ஆம் தேதி, ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மீன்கள் மற்றும் கடல் உணவுகளின் வழியாக, மனிதனுக்குள் சென்ற கன உலோகங்கள், நரம்பு மண்டலத்தை பாதித்ததால் தான் மினமாட்டா நோய் தோன்றியிருந்தது. தொழிற்சாலைக் கழிவு நீரோடு வெளியிடப்பட்ட மீதல் மெர்க்குரி என்ற சேர்மமே இந்த நோய்க்குக் காரணம் என்பதும் உறுதிபடுத்தப்பட்டது. தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. பாதரச நச்சால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. நிவாரண உதவியைப் பெறவேண்டி, மக்களும் உடன்படிக்கையில் அப்போது கையெழுத்திட்டனர்.  

சக உறவுகளால், பயந்து- வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்த நோயாளிகளுக்காக 86 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகை, Chisso நிறுவனத்தால் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால், தொழிற்சாலை தொடர்ந்து நடந்தது; மீதைல் மெர்க்குரி மினமாட்டா வளகுடாவில் நாளும் கலந்து கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராடினர். இறுதியாக, 1968 ஆம் ஆண்டு, மினமாட்டா நீரில் நச்சுக் கழிவுகளை வெளியிடமாட்டோம் என தொழிற்சாலை நிர்வாகம் நீதிமன்றத்திடம் உறுதி அளித்தது.

மினமாட்டா கொள்ளை நோய் காரணமாக, 1784 பேர் இறந்து போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதன்  பாதிப்புகள் இன்றைய தலைமுறை வரை தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வரலாற்றுச் சோகம். பாதிப்படைந்தவர்கள் இன்னும் நீதி மன்றத்தின் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு, நீதி மன்றத் தீர்ப்பின் படி, ஆண்டுக்கு 2.1 மில்லியன் யென் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவுகளை Chisso நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் கூட, 50000 க்கும்  மேற்பட்ட மக்களிடம் பாதரச நச்சின் தாக்கம் காணப்படுகிறது.

மனிதனின் விஞ்ஞானம் என்பது இருபுறமும் கூர் கொண்ட கத்திதான். நாம் தான் அதனை நல்வழிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் சரிதான். இயற்கையை வதைத்தும், அழித்தும் தான் வளர்ச்சி என்பது சாத்தியமாகுமா? இங்கே கூட, பவானி ஆற்றிலும், காவிரி ஆற்றிலும் கழிவுகள் கலப்பதை நாம் முழுமையாக நிறுத்தி விட்டோமா? மினமாட்டா நகரில் வசித்தது தான் அந்த மக்கள் செய்த குற்றம் என்றால் யாரை என்ன சொல்வது?

 இயற்கையின் மரணம் என்பது - மானுட இனத்தின் மரணம் என்பதை மட்டும் நாம்  எப்போதும் மறந்துவிடக்கூடாது.

 

 

Friday, April 15, 2022

நதியின் தடம் 1

1.நம்பியே நடக்கிறேன்….





வழியெங்கும் நஞ்சாழி – எங்கோ தெரிகிறது அமுத ஊற்று.

நீந்திக் கொண்டே இருக்கிறேன்.


பொழிகிறது அமில மழை – என்றாவது வரும் வான் தேன் நீர்.

காத்துக் கொண்டே கிடக்கிறேன்.


அழிவின் விளிம்பில் பயிர்த்தாள்கள் – தூரத் தெரியும் கருமேகம்.

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.


முன்னே நட்பாய்ப் பொய்க் கரங்கள் – முதுகைத் துளைக்கும் மெய்வாள்கள்.

ஆற்றிக் கொண்டே நடக்கிறேன்.


வண்ணம் மாற்றும் பச்சோந்தி – அன்ன, நீளும் சொந்தங்கள்.

தேற்றிக் கொண்டே கடக்கிறேன்.


துடுப்பும் கரமும் இழந்தாலும் - அலைகள் கரைகள் அறியுமே.

அலையின் முதுகில் என் வாழ்வு.!


பாறை நம்பும் தேரைக்கு  - கருணைக் கரங்கள் விரியுதே.

இயற்கையின் விரல்களில் என் காலம்!.


தேய்ந்த உடலின் மீதியை – நிலவும் நம்பித் தேடுதே.

நம்பி நகர்வதே  என் பயணம்.!