Friday, April 15, 2022

நதியின் தடம் 1

1.நம்பியே நடக்கிறேன்….





வழியெங்கும் நஞ்சாழி – எங்கோ தெரிகிறது அமுத ஊற்று.

நீந்திக் கொண்டே இருக்கிறேன்.


பொழிகிறது அமில மழை – என்றாவது வரும் வான் தேன் நீர்.

காத்துக் கொண்டே கிடக்கிறேன்.


அழிவின் விளிம்பில் பயிர்த்தாள்கள் – தூரத் தெரியும் கருமேகம்.

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.


முன்னே நட்பாய்ப் பொய்க் கரங்கள் – முதுகைத் துளைக்கும் மெய்வாள்கள்.

ஆற்றிக் கொண்டே நடக்கிறேன்.


வண்ணம் மாற்றும் பச்சோந்தி – அன்ன, நீளும் சொந்தங்கள்.

தேற்றிக் கொண்டே கடக்கிறேன்.


துடுப்பும் கரமும் இழந்தாலும் - அலைகள் கரைகள் அறியுமே.

அலையின் முதுகில் என் வாழ்வு.!


பாறை நம்பும் தேரைக்கு  - கருணைக் கரங்கள் விரியுதே.

இயற்கையின் விரல்களில் என் காலம்!.


தேய்ந்த உடலின் மீதியை – நிலவும் நம்பித் தேடுதே.

நம்பி நகர்வதே  என் பயணம்.!