Monday, April 8, 2019

நூல் அறிமுகம் - நடுகல்

'நடுகல்' - தீபச்செல்வன்.

தீர்வினைப் பேசும் நாவல்.



என்னைமுன் நில்லன்மின்  தெவ்வீர் பலரென்னை
    முன்நின்று கல்நின் றவர்.  - குறள் 771.
                                
                   2004ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.  டிசம்பர் மாதத்தின் பின்னிரவு அது.  நான் ஏற்காட்டில் உள்ள சூசைகிரி பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வெள்ளை நிறத்தாலான பனிப்போர்வைக்குள் முடங்கி, ஏற்காடு  மலை நகரமே உறங்கிக் கொண்டிருந்தது.                 தரைத்தளத்தின் கீழாகத்தான் நான் தங்கியிருந்த அறை இருந்தது. அதில் இருந்த இரண்டு கண்ணாடி சன்னல்களும் மூடப்பட்டு, திரையால்   மறைக்கப்பட்டிருந்தன. அறையின் கதவையும் தாழ் போட்டிருந்தேன்.  முகம் தவிர்த்து, உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் மூடியபடி, வசதியாக கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டேன்.
                      ஜெயமோகன் எழுதிய ‘சங்கச் சித்திரங்கள்’ என்னும் புதிய நூலை அன்றுதான் வாங்கியிருந்தேன்.  கெட்டி அட்டையுடன், கவிதா பதிப்பகத்தால் வெயிடப்பட்ட நூல் அது.  விகடனில் தொடராக வந்த போதே, அக்கட்டுரைகளில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். என்றாலும், நூல் வடிவில் எல்லாக் கட்டுரைகளையும்,  மொத்தமாகப் படிப்பது,  எப்போதுமே பேரானந்தம் தரக் கூடியது.    புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.
                      சங்கக் கவிதையும், நவீன வடிவில் அதற்கு எழுதப்பட்ட புதுக்கவிதையும், கவிதையின் பொருளை வாழ்வியலோடு இணைத்துச் சொன்ன விதமும்  மனதினை ஏதேதோ செய்து கொண்டிருந்தது. 
      அதிலிருந்த,  ‘கல் நின்றவர்’ என்ற கட்டுரையைப் படித்து போது, மேற்கொண்டு படிக்க -  மனம் மறுத்து விட்டது.  அதிலிருந்த சில வரிகள், மூளைக்குள் சென்று  என்னை அரற்றத் தொடங்கின. ’நடுகல்’ என்ற சொல்லை, முதல் முறையாக,  அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.    
           ’களத்தில் முன் நின்று,  இன்று கல்லாய் எழுந்து நிற்பவர்களால் தான், சரித்திரம் நிரம்பியிருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் வரலாறே இருந்திருக்காது. ஆனால்,  இறந்தவர்கள் முற்றிலும் இறந்தாக வேண்டும். அவர்கள் நினைவுகளும் மட்கி மண்ணாக வேண்டும், இல்லாவிட்டால், இருப்பவர்கள் உயிர் வாழ்வது சிரமம்’ என்ற வரிகள் மனதை நடுங்கச் செய்தன. நடுகல்லாய்ப் போனவர்களை விட, மிஞ்சி இருப்பவர்கள்  நாளும் சந்திக்கும் வலியை உணர முடிந்தது.  
                       திடீரென்று, குளிர் பனி அறைக்குள் நுழைந்து கொண்டது. ’வெளியே வா’ என ,என்னை அழைப்பது மாதிரி, கம்பளி தாண்டி உள்ளே வந்து நின்றது.  மூளையின் அத்தனை இடுக்குகளிலும் நுழைந்து கொண்ட, ‘நடுகல்’ என்ற சொல்லைப் போலவே,   உடலின் ஆயிரமாயிரம் தோல் துவாரங்களின் வழியாகவும்  வெண்பனி புகுந்து கொண்டது.    
                     நிறைய காற்றும், ஆசுவாசமும் அப்போது தேவையாய் இருந்தது. அறையிலிருந்து வெளியேறி மேல் தளம் வந்தேன். பனிக் காற்றைத் தவிர அருகில் யாரும் இல்லை. நகர்ப் பகுதியை நோக்கி, பார்வையைத் திருப்பினேன்.   பீர்பால் கதையில் வருவது போல, தூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகள் ஏதொவொரு வகையில், உடலுக்கு இதமான சூட்டை வழங்கியபடி இருந்தன. ஒளியால் நிரம்பி வழியும் விளக்குகள், என்  மனதுக்கு நம்பிக்கையைத் தந்தன. சற்றே நிம்மதி அடைந்தேன்.
                        ******************************

"அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து

இனி நட்டனரே கல்லும்..." - புறம் 264.
     
                2019 – புதிய ஆண்டை ஒரு நூல் அறிமுகத்துடன்,  தொடங்க வேண்டும், அந்த கூட்டத்தை தனது அறையிலேயே வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னார் வழக்குரைஞர் தமிழ்மணி. ஓரிரு நாள் முன்னதாக, கவிஞர் தீபச்செல்வன் எழுதிய, ’நடுகல்’ என்ற  புதிய புத்தகத்தையும் கையில் கொடுத்தார். நடுகல் - வினைத்தொகையாய் பதிந்து விட்ட அந்தச் சொல், ஆற்று மணல் இழுத்துச் செல்வதைப் போல, என்னை உள்ளே இழுத்துச் சென்றது. 200 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து விடத் தூண்டும் வகையில் தான், புத்தகம் எழுதப்பட்டிருந்தது. 
                        
             இலங்கையில், கிளிநொச்சி அருகில் இருக்கும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனின் நினைவுக் குறிப்புகள் இவை என்று சொல்லலாம். போராட்டத்தில் தனது அண்ணனை இழந்து, தாயையும் தங்கையையும் பிரிந்து அலைந்த  ஒரு தம்பியின் துயரக் கதை என்றும் சொல்லலாம். குறிப்பாக இதனை ,  ஈழப்படுகொலை காலத்திற்கு முன்னும் பின்னுமான 25 ஆண்டு கால இலங்கைத் தமிழர்களின்  வரலாற்றை சில கதை மாந்தர்களின் வழியே சொன்ன, முக்கியப் படைப்பு என்றும்  சொல்லலாம்.        
                       பிரசன்னா, வினோதன் இருவரும்  இரத்தினபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள். இவர்களுக்கு ஒரு தங்கையும் உண்டு. இவர்களது இளம் வயதிலேயே, தந்தை நடராசன் இறந்து விட, தாயின் அரவணைப்பில் வளர்கிறார்கள். தமிழீழத் தாயகத்தை அடைந்து விடும் இலட்சிய வேட்கையோடு இருந்த பிரசன்னா, புலிகள் இயக்கத்தில் சேர்கிறான். இயக்கத்தில் சேர்பவர்களுக்கு புதிய பெயர் ஒன்று வைக்கப்படும். அதன்படி, பிரசன்னாவிற்கு வெள்ளையன் என்ற பெயர் சூட்டப்படுகிறது.
                   விடுமுறை கிடைக்கும் நாள்களில், தாய், தம்பி மற்றும் தங்கையைப் பார்க்க வீடு வருவான். வெள்ளையன் இயக்கத்தில் சேர்ந்தது ஒரு நேரம் பெருமையாகவும், மற்றொரு நேரம் பதட்டத்தையும் குடும்பத்தாருக்குத் தந்தது. ஒரு சோகமான நாளில்,  முகமாலைப் பகுதியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில், மரணத்தைச் சந்திக்கிறான் வீர வெள்ளையன். போரின் பிற்பகுதியில், இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த எல்லா பகுதிகளையும் கைப்பற்றுகிறது. அது எவ்வாறு வெற்றி பெற்றது என்பது, நாம் எல்லாரும் அறிந்ததே.
                  போருக்குப் பிந்தைய காலத்தில், வினோதனின் தாயும் தங்கையும் முள் வேலி முகாமில் அடைக்கப்படுகிறார்கள்.  யாழ் நகரில் கல்லூரிப் படிப்பை முடித்த வினோதன், தனது தாயைத் தேடி,முகாமிற்குள் அலைகிறான். இறுதியில் தேடிக் கண்டடைகிறான்.
                  'மாவீரர்களின் துயில் இல்லம்' பெரும்பகுதி அழிக்கப்படுகிறது. ஒரு பகுதி, இராணுவத்தினரின் விளையாட்டு மைதானமாகிறது. மீதி இடத்தில் எருக்களை மண்டிக் கிடக்கிறது. மாவீரர்களின் நினைவைப் போற்றி நிற்கும் நடுகற்களை அழித்து விட்டதாய் கொக்கரிக்கிறது சிங்கள இராணுவம். 
                   வினோதனின் தாயோ, தனது மகன் வெள்ளையன் நினைவாக, ஒரு கல்லை கையிலேயே வைத்திருக்கிறாள். அதனைக் குளிப்பாட்டி, துடைத்து விடுகிறாள். பூக்கள் வைத்து  விளக்கேற்றுகிறாள். ’பயங்கரவாதியைக் கொண்டாட இங்கே இடமில்லை’ என்று சொல்லி, நினைவுக் கல்லை உடைக்கப் பார்க்கிறான் சிங்க பண்டார.  முக்காலமும் இருக்கும் ’நடுகல்லை’, இல்லாமல் செய்ய முடியாது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
                                                ************************
        “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
         இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா
         குழியினுள் வாழ்பவரே - அன்று
         செங்களம் மீதிலே உங்களோடோடிய தோழர்கள் வந்துள்ளோம்
         ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!”
                          - மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் ஒலிக்கும் பாடல். (நடுகல் - பக்கம் 188)
         
                             வெள்ளையன்  வீர மரணமடைந்த பத்தாவது ஆண்டில் கதை துவங்குகிறது. வினோதனின் நினைவுகளில் , கால் நூற்றாண்டுக் கதை முன்னும் பின்னுமாகச்  சொல்லப்படுகிறது.  சிறுவனாக இருக்கும்போதே, சிங்கள விமானத்தின் மீது கல்லெறிந்து துரத்தும் பிரசன்னா, இயக்கத்தில் இணையும் காட்சிகள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. நாம் சிறுபிராயத்தில் விளையாடிய திருடன் – போலிஸ் விளையாட்டு போல, அங்கே இருந்த ஆமி – இயக்கம் விளையாட்டு, வாசிக்கையில் ரசிக்க வைக்கிறது. 
                      வெள்ளையனாக மாறிய தனது மகனை, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல புலிகள் இயக்க முகாமிற்குச் செல்லும் ஒரு தாயின் வேதனை, புரியும்படி எழுதப்பட்டுள்ளது. அது போலவே, இயக்கம் , வெள்ளையனைத்  திருப்பி அனுப்பிய போதும்,  தமிழீழத் தாயகம் அடைய வேண்டும் என்ற உணர்வுடன் அவன் மீண்டும் இயக்கம் நோக்கிச் செல்வதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இது வெள்ளையனுக்கும் அவனது தாய்க்குமான மனப் போராட்டம் மட்டுமல்ல.  ஈழப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு போராளியின் கதையும்  இப்படித்தான் இருந்தது  என்பதை, கிளைக்கதைகளின் மூலம்  உணர வைக்கிறார் தீபச்செல்வன்.
                            விடுமுறைக்கு வரும் வெள்ளையன் மீது, தாய் காட்டும் அதீத பாசம் நமக்குப் புரிகிறது. தலைக்கு நல்லெண்ணை தேய்த்து விடுவதும், தோசை சுட்டுத் தருவதுமான காட்சிகள் நெழ்ச்சியானவை. நடக்கும் நிகழ்வுகளை  அறிந்தும், அறியாமலும் இருக்கின்ற தம்பி, தங்கையோடு வெள்ளையன் பேசிச் செல்லும் பத்திகளும் கனமானவை. 

                           போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஒரு பகுதியிலிருந்து , மற்றொரு பகுதிக்கு மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். வீதியே இடம் பெயரும் மக்களால் நிரம்பியிருந்தது. 
  “திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில் சிலர், வீட்டுக்குள் பொருள்களை வைத்துப் பூட்டிவிட்டு வர, வேறு சிலரோ திரும்ப முடியாமலும் ஆகலாம் என்றெண்ணி, வளவு மண்ணைத் தவிர மற்றெல்லாவற்றையும் அள்ளி ஏற்றினர்”, என்ற வரிகள் மனதை பாரமாக்கியது.  
                 அயல் தேசத்திற்கு அகதிகளாகச் செல்லாமல், என்றாவது ஒருநாள், தாய் மண்ணில் நிரந்தரமாகக் குடியேறுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த  மக்கள், அங்கே எதிர் கொண்ட துயரம் சொல்லில்  அடங்காதது. சொந்த நாட்டில் அகதிகளுக்கு உரிய மரியாதை கூட இன்றி, முள் வேலி முகாமிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
              “சனங்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் முள்வேலி முகாமுக்கு, நலன் புரி நிலையம் என்று பெயர். சொற்களிலேயே வாதை அடர்ந்திருந்தது. மனிதாபிமானப் போர் என்ற பெயரில் இன அழிப்புப் போர். வதை முகாம்களில் இனம் அழிப்பதற்கு புனர் வாழ்வு என்று பெயர்.  இப்படியாகத்தான் விடுதலைக்காகப் போராடிய இனம் அழிந்து கரைகிறது.” – இந்த பத்தியைப் படித்த போது, அரசியல் நிகழ்வுகள் மனதிற்குள் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.
            உலகின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முகாமினைப் பார்வையிட வந்ததும், புனர் வாழ்வு மையங்கள் நன்றாகச் செயல்படுகின்றன என சான்றிதழ் வழங்கியதும் நினைவுக்கு வந்தன. கூடவே, இலங்கை அரசால் அவர்களுக்கு  வழங்கப்பட்ட அன்பளிப்புகளும் மனதில் தோன்றி மறைந்தன. அப்போது,  மிருகக்காட்சிசாலை ஒன்றை, பார்வையிடுவதைப் போல, நம்மை பார்த்துச் செல்கிறார்களே என்று  முகாம் மக்கள்,  எண்ணி வருந்தியிருக்கக் கூடும். 
                    ’6 கி.மீ நீளத்தில் உருவாக்கப்பட்டிருந்த உலகின் மிக நீண்ட சிறைச்சாலை அது’ - என  தீபச்செல்வன் ஒரு வரியில் சொல்வது, ஓராயிரம் கேள்விக் கணைகளை நிகழ்காலத்தின் மீது வீசிச் செல்கிறது.  நேரில் பார்த்து வந்த அரசியல் பார்வையாளர்களும், மெளன சாட்சியாய் இருந்த நிகழ்கால சமூகமும்,  இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.
                    ”இந்தச் சண்டை எல்லாம் எப்ப முடியும். நாங்க எல்லாம் எங்கடை வீடுகளில் ஒன்றாய் வாழுகிற காலம் எப்ப வரும்?” – ஒரு தாயின் வலி மிகுந்த குரல் இது.  போரின் போது, கள்ள அமைதி காத்த உலகம், அவர்கள் யாவரும் ஒன்றாய் வாழுகிற செயலை நியாயமான வழியில் முன்னெடுக்கக் கூடாதா? தரையில் விழுந்த மழை நீர் போல, உடைந்துருகிக் கிடக்கும் அவர்களுக்கு முழு விடியல் எப்போது? தீபச்செல்வனின் நடுகல் கேட்டுக் கொண்டே செல்கிறது.
                   துணைக்தையாக வரும் அன்ரனி கதாபாத்திரம் மறக்க முடியாதபடி இருந்தது. போரின் போது, இரத்தினாபுரத்திலிருந்து அக்கராயன் பகுதிக்கு இடம் பெயர்ந்திருந்தது அன்ரனியின் குடும்பம். பிரியதர்சன், இசைப்பிரியன், ஈழப்பிரியன், பிரதாபன் என நான்கு பிள்ளைகளும் வயிறார சாப்பிட முடியாத நிலையைக் கண்டு வருந்துகிறான் அன்ரனி. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட தனது காட்டில், விளைந்து கிடப்பவை கண்ணுக்குள் வந்து போகிறது.  மனைவி ருக்மணியிடம் சொல்லிவிட்டு, இரவோடு இரவாக இரத்தினாபுரம் சென்று, முடிந்த மட்டும் உணவுப் பொருள்களை எடுத்து வருகிறான். இராணுவத்தின் கண்ணில் படாமல் பொருள்களை எடுத்து வரும் சாகசம் அடிக்கடி நடக்கிறது.
                   ஒருநாள் பிரியதர்சனும் உடன் வர, தென்னை மரங்களின் மீதேறி காய்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, சிங்கள ராணுவம் இருவரையும் பிடித்து விடுகிறது. எங்களை வேவு பார்க்க வந்தவர்கள் தானே எனக் கேட்டு துன்புறுத்துகிறது. 'எண்ட பிள்ளைகளின் பசியாற்றவே நான் வந்தேன்' என்ற பதில் அவர்களின் காதில் விழவே இல்லை. இருவரையும் கட்டி வைத்து, அடிக்கிறார்கள். சிகரெட் நெருப்பால் உடலெங்கும் உண்டான காயங்கள், தூண்டில் மீன்கள் போல இருந்தன. ’என்ட  மகனை ஒன்னும் செய்யாதீங்க’  என கதறி அழுகிறான் அன்ரனி.
               ஏதோ யோசனை செய்தவர்கள், பிரியதர்சனின் மார்பில், நெருப்பால் எல்.டி.டி.ஈ என எழுதுகிறார்கள். அவன் கையில் ஒரு பை  மூட்டையைக் கொடுத்து, ’பிரபாகரனிடம் போய் இதைக் கொடு’ என அவனை விரட்டுகிறார்கள்.  ’எண்ட அப்பாவை விட்டு விடுங்க ’ என அவன் அழும் போதெல்லாம், அவனது கன்னத்தில் துப்பாக்கியால் குத்தினார்கள். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்கராயன்  பகுதிக்குள், மூடிக்கட்டிய பொதியுடன்  நுழைகிறான் பிரியதர்சன்.
                     போராளிகள் பையை அவிழ்த்துப் பார்த்தனர். அதில், வெட்டப்பட்ட அன்ரனியின் தலை. ஆம், காதலும் சோகமும் நிரம்பி, பிதுங்கிக் கிடந்த விழிகளுடன்  அன்ரனியின் தலை. தனது நெஞ்சில் நெருப்பால் எழுதிய இராணுவத்திற்கு எதிராய் பிரியதர்சன் இயக்கத்தில் சேர்ந்தான் . விரைவில் மூன்று தம்பிகளும் இயக்கத்தில் இணைந்தனர். ஆனால், சில ஆண்டுகளில் நான்கு பிள்ளைகளையும் போரில் பறிகொடுத்து விட்டு, ருக்மணி புலம்பிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகளின் நடுகல்லும், புகைப்படங்களுமே அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல்.
                        வெள்ளையன் மரணம் ஏற்படுத்திய  அதே அளவு துயரத்தை, அன்ரனியின் மரணமும் உண்டாக்கியது.  தன் பிள்ளைகளின் பசியைப் போக்கச் சென்று, மாட்டிக் கொண்ட அன்ரனியின் மரணம் மையக்கதாபாத்திரத்தை விட அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அன்ரனியின் தியாகமும் எல்லா வகையிலும் உயர்ந்ததே.
                       நாகேஸ்வரியக்கா, பொன்னையாப்பு, ஆனந்தி, அழகுராணி, நாடக நடிகர் மணியண்ணன், அன்பழகன் , பூரணி டீச்சர், பிரா என கதாபாத்திரங்கள் எல்லாம் வினோதனின் நினைவுகள் வழியாக வந்து போகிறார்கள். கவிஞர்  தீபச்செல்வன் தான் வினோதன். கவிதை மனத்தில் காட்சிகள் எல்லாம்  அழகாய் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு பாத்திரமும் இருக்கிறது. துரோகச் செயல் செய்து, இராணுவத்துடன் ஒத்து வாழும் கதாபாத்திரம் பற்றி விரிவாகப் பேச என்ன இருக்கிறது? ஒதுக்கித் தள்ளுவோம்.
                           நாவல் வெறுமனே, நடந்த நிகழ்வுகளை மட்டும் சொல்லிச் செல்லவில்லை. கூர்ந்து நோக்கினால், தீர்வு ஒன்று நாவல் முழுக்கப் பேசப்படுவதை அறியலாம்.
                   மாவீரர் கல்லறையை பார்க்கச் செல்லும் இரு சிறுவர்களிடமும் அங்கிருந்த போராளி, ‘நீங்கள் எல்லாம் நன்கு படிக்க வேணும் என்பதுதான் அவையிண்ட கனவு. உங்களுக்காகவே போராடி, அவை வீரச் சாவடைஞ்சார்கள்.  இடம் பெயர இடம் பெயர நீங்கள் படிக்க வேணும்’, என்கிறார்.
                     படிக்கும் வயதில் இயக்கத்தில் சேரக் கூடாது. பாடசாலைக்குப் போய் நன்கு படியுங்கள் என்று இயக்கத்தார் சொல்வதும், நல்லா படிச்சாத்தான் எல்லாம் நல்லதா மாறும் என தாய் சொல்வதும் மிக முக்கியமான காட்சிகள். யாழ் நகரில், டீச்சராக வரும் பூரணி, “சவால்களைக் கடந்து, முன்னேறுற வாழ்க்கையிலதான் அர்த்தம் இருக்கு”, என வினோதனிடம் சொல்லும் வார்த்தைகள் தான் , அவன் சந்தித்த துயர்களுக்கான ஒரே பதில். ஆம், கல்வியின் மூலம்தான், எந்தஒரு சமூகமும் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
                            சொந்த நாடின்றி அலைந்து கொண்டிருந்த யூதர்கள், தனது அறிவின் மூலம் தான் உலகை நிரப்பினார்கள். தவிர்க்க முடியாத அளவுக்குச் சாதனைகள் செய்தார்கள். அவர்கள் சந்திக்காத கோரங்கள் இல்லை. ஆனால், அறிவின் துணை கொண்டு நிமிர்ந்தார்கள் . ‘நடுகல்’ நாவலும் படிப்பின் அவசியத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.
                                   எந்தவொரு படைப்பிலும்  புனைவிற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. இந்தக் கதையிலும், காட்சிகளைத் தீவிரப்படுத்த, நிறைய கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி, இரண்டு தரப்பையும் பேச வைத்திருக்கலாம். தீர்வை வாசகனின் பார்வைக்கு விட்டிருக்கலாம். ஆனால், தீபச்செல்வன்  தான் கண்டவற்றை மட்டுமே பதிவு  செய்து, ஏனையவற்றை வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். இயக்கத்தின் நிகழ்வுகள் கூட நாவலில் வரவில்லை. வருபவை எல்லாமே, வினோதனின் காட்சிகள் மட்டுமே. (அன்ரனியின் விரிவு பகுதிகள் தவிர.). 
                    யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட சில  விமர்சகர்கள் சொல்வது போல,  நாவலுக்கான கட்டுக்குள் இது வரவில்லையென்றால், போகட்டும், நினைவுக் குறிப்புகள் என்றே இது இருக்கட்டும்!. எவ்வாறாயினும் இலக்கிய  உலகில், இது ஒரு முக்கிய இடத்தைப் பெறுமென்றே தோன்றுகிறது. 
                 மிகச் சிறந்த செவ்வியல்  ஆக்கங்களுள் ஒன்றாக, மாறியிருக்க வேண்டிய நூல் இது. விரிவு கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை, எதிர்காலத்தில் இன்னும்  விரிவாக இந்நூல் எழுதப்படலாம்.  
                        நாவல் முழுக்க, தனது  அண்ணனின் புகைப்படத்தைத்  தேடி அலையும் தம்பியின் வேதனையை உணர முடிகிறது. அண்ணனின் நினைவுகளில் வாழும் தம்பிக்கு, அந்தப் புகைப்படம்  கிடைக்கட்டும். ஆனால், ‘நடுகல்’ என்ற நாவலின் வழியே , வெள்ளையன் நிரந்தர உருவம் பெற்றிருக்கிறான். தம்பி உருவாக்கியிருக்கும் இப்புத்தகம் , சிங்க பண்டார போன்ற மனிதர்களால் அழிக்க முடியாத ஒரு நினைவுக் கல். இந்த நடுகல்லின் மீது, எருக்களை மண்டுவதில்லை, மாறாக, நினைவுகள் வழியே, காற்றுக்கு நூர்ந்து போகாத  விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அந்தச் சுடரில்  அண்ணனின் சிரித்த முகம் ஒளி வீசிக் கொண்டே இருக்கிறது.
                               
       ” இல்லா  கியரோ  காலை மாலை
          அல்லா கியர்யான் வாழும் நாளே
          நடுகல் பீலி சூட்டி நாரரி 
          சிறுகலத்து  உகுப்பவுங் கொள்வன் கொல்லோ..” - புறம் 232.
                        இலக்கியம் என்னும் பெரும் கலத்தில் இட்டு நிரப்பப்பட்டுள்ளது இந்த‘நடுகல்’. தம்பி உருவாக்கியிருக்கும் இப்படையலை, அண்ணன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான். 
                   **************************
                      
                    டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் துவங்கிய ’நடுகல்’ நாவல் பற்றிய உரையாடல், 2019, ஜனவரி  அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து நடந்தது. அறையில்,நண்பர்கள் கூடியிருந்த போதும், உள்ளத்தில்  வெறுமையே மிஞ்சியிருந்தது. ஆசுவாசமும், வெளிக்காற்றும் மீண்டும் தேவைப்பட்டது.   வெளியே வந்தோம். புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வாண வெடிகள் மின்னிக் கொண்டிருந்தன. புதிய வெளிச்சம் வந்திருந்தது.  விடியல் நெருங்கி விட்டதையும் உணர்ந்தேன். சூடான ஒரு கோப்பைத் தேநீருக்குப் பின்,  நான் வீட்டிற்குப் புறப்பட்டேன். என் மனதில், ’நடுகல்’ ஒன்று முளைத்திருந்தது.
                  
                          






    
                
                            
                               
                    
                   






                    
                                
                    
                  

Friday, April 5, 2019

ஏப்ரல் 5

கணித மகன் - எஸ்.எஸ்.பிள்ளை.

ஏப்ரல் 5....இன்று!


                                1770ஆம் ஆண்டு, எட்வர்ட் வாரிங் என்ற கணித அறிஞர்,  ஒரு புதிர்த் தேற்றத்தை உருவாக்கினார். அது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித  மேதை டையோஃபாண்டஸின் எண் தொடர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வாரிங் புதிருக்கு, பொதுவான ஒரு விடை காண, ஒட்டு மொத்த கணித உலகமும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததுகூட்டாக அவர்கள் முயன்று, முடிவினைத் தேடிக் கொண்டிருக்கையில், தனியொரு ஆளாக, வாரிங் புதிருக்கு பொதுத் தீர்வினைச் சொல்லி, அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஓர் இளைஞர்இந்தியாவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு அப்போது 29 வயது. ஐந்து ஆண்டுகள் உழைப்பிற்குப் பிறகு,  10.02.1930 அன்று, வாரிங் புதிருக்கான  தீர்வினை, உலகுக்கு அறிவித்த போது, கணித மேதைகளின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டார் அந்த இளைஞர்.     அவர் தான் எஸ். சிவசங்கர நாராயணப் பிள்ளை (1901-1950).  கணித உலகில் எஸ்.எஸ்.பிள்ளை என்றே இவர் அறியப்படுகிறார்.
                     தென்காசிக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரில், 1901 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, சிவசங்கர நாராயணன் பிறந்தார்.  ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே,  தனது தாய் கோமதி அம்மாளைப் பறிகொடுத்தார். இலந்தூர் என்னும் கிராமத்தில், உறவினர் வீட்டில்,  ஆரம்பக் கல்வியைப் பயின்ற எஸ்.எஸ்.பிள்ளை, செங்கோட்டை நகரில் இருந்த SMSS அரசு உயர்நிலைப் பள்ளியில்,    தனது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது , தந்தை சுப்பையாப் பிள்ளையும் இறந்துவிட, படிப்பு தடைபட்டது. நிலை தடுமாறி நின்றார் எஸ்.எஸ்.பிள்ளை.
                       ஒரு மாணவனின் படிப்பு தடைபடுவதை எந்த ஆசிரியரும் விரும்புவதில்லை. எஸ்.எஸ்.பிள்ளையின் ஆசிரியராய் இருந்த சாஸ்திரியார் என்பவர் , கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டார். தனக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தில் , கணிசமான தொகையை எஸ்.எஸ்.பிள்ளையின் கல்விக்காக ஒதுக்கிய சாஸ்திரியாரை, இவரும் கடைசிவரை மறக்கவில்லை. இண்டர்மீடியட் படிப்புக்காக, நாகர்கோயிலில் இருந்த ‘ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில்’ சேர்ந்த எஸ்.எஸ்.பிள்ளைக்கு, கல்வி உதவித் தொகை கிடைத்தது.
                          பெற்றோரை இழந்த பின்னும், தனது நிலையை உணர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்திய எஸ்.எஸ்.பிள்ளை , திருவிதாங்கூர் மகாராஜா கல்லூரியில் B.A.(Honours) பட்டத்தை நிறைவு செய்தார். எந்த நேரமும் கையில் நோட்டும், புத்தகமுமாக அலைந்த இவர், இரண்டாம் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், கணிதத்தில் மட்டும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்திருந்தது.
                     சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர வேண்டுமானால், பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிள்ளை அவர்கள் பெற்றதோ இரண்டாம் வகுப்பு. ஆகவே, இவருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. பள்ளிப் படிப்புக்கு உதவி செய்த சாஸ்திரியாரைப் போலவே, இங்கும் இவருக்கு உதவி செய்ய ஒரு மனிதர் காத்திருந்தார். அவர் தான் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்த சின்னத்தம்பி.
                  கடந்த காலத்தில், கணித மேதை இராமானுஜத்திற்கு மட்டும் ஒரு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக் கட்டிய, அந்நாளைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி, எஸ்.எஸ்.பிள்ளை அவர்களின் கணித ஆய்வுக்குத் தடை போட்டால், அது நமக்குத்தான் இழப்பு என்று பேசினார். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், விதியைத் தளர்த்தி இவரைச் சேர்த்துக் கொள்ள வெண்டும் என்று பேசிய சின்னத்தம்பியின் வாதத்திற்குப் பலன் கிடைத்தது. 1927 ஆம் ஆண்டு,   சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார் எஸ்.எஸ்.பிள்ளை.
                 ஆனந்தராவ் மற்றும் வைத்திய நாத சாமி ஆகிய இரண்டு பேராசிரியர்களின் வழிகட்டுதலில் ஆய்வினைச் சிறப்பாக நிறைவு செய்த எஸ்.எஸ்.பிள்ளை, தனது கணித அறிவின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இவருக்கு, D.Sc.(மதிப்புறு அறிவியல் முனைவர்) என்னும் பட்டம் வழங்கப்பட்டது.  இந்திய பல்கலைக்கழக வரலாற்றில், கணிதம் படித்த ஒருவர், இப்பட்டத்தைப் பெறுவதென்பது, அதுவே முதல் முறையாக இருந்தது.
               1929 ஆம் ஆண்டு,  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கணிதப்  பேராசிரியராக பணியில் சேர்ந்த எஸ்.எஸ்.பிள்ளை, அங்கே மனநிறைவுடன், 12 ஆண்டுகள் பணியாற்றினார். தனது முக்கியமான, பெருமைக்குரிய அத்தனை ஆய்வுகளையும் அண்ணாமலை நகரில்தான்  செய்தார். இவர் எழுதி வெளியிட்ட, 76 ஆய்வுக் கட்டுரைகளும் கணித உலகிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் என அறிஞர்கள் இன்று வரை சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
                   தனியான குன்றின் மீது ஒரு வீடு, மன்னரின் விழாக்களில் கட்டாயமாக கலந்து கொள்வதிலிருந்து விலக்கு, கணித காங்கிரஸ் சபைக்கு பிரதிநிதியாக தன்னையே அனுப்ப வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை விதித்து, அவற்றை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டவுடன், திருவிதாங்கூர் கல்லூரியில் 1942 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஓராண்டிலேயே மனக் கசப்பு ஏற்பட்டு,பதவி விலகினார். பிறகு, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார்.
                  வெளிநாடுகளில் இருந்து இவருக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஐன்ஸ்டீன், ஓபென்ஹெய்மர் போன்ற விஞ்ஞானிகள் இவருடன் இணைந்து பணியாற்ற  விருப்பத்துடன் அழைத்தனர். ஆனால், இந்தியாவில் இருந்து ஆய்வு செய்வதே, தனக்கு  மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது என்று சொல்லி, தனக்கு வந்த  வாய்ப்புகளை எல்லாம் மறுத்து விட்டார்.
                      1950ஆம் ஆண்டு,    அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் , ’சர்வதேச கணிதக் கருத்தரங்கு’ ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் முக்கிய விருந்தினராக எஸ்.எஸ்.பிள்ளை அழைக்கப்பட்டார். கருத்தரங்கு முடிந்த பின்பு, ஓராண்டு காலம் அங்கேயே தங்கி, சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றவும் முடிவு செய்திருந்தார். ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றவும்  சம்மதம் தெரிவித்திருந்தார்.   ஆனால், கணக்கிடப்பட்ட  வாழ்வின் விதி வேறு மாதிரியாக இருந்தது.                          
                 அமெரிக்கா கிளம்பத் தயாரானார் எஸ்.எஸ்.பிள்ளை. மும்பையில் சில கருத்தரங்க வேலைகளால், முதல் பயணத் திட்டம் ரத்தானது. இரண்டாவது முறை, விமான நிறுவனம் பயணத்தை ரத்து செய்திருந்தது. மூன்றாவது திட்டமிடலில் தான், இவர் மும்பையில்  விமானமேறினார். அந்த விமானம் எகிப்து மார்க்கமாக  செல்லக் கூடியது.
                       1950, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து, TWA 903 வகையைச் சேர்ந்த Star Of Mary Land  என்ற அந்த விமானம், இரவு 11.35க்குக் கிளம்பியது. மும்பையிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில், 7 பணியாளர்களும் 48 பயணிகளுமாக மொத்தம் 55 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட போது, கால நிலை நன்றாகத்தான் இருந்தது. பயணித்தவர்களின் நேரம் தான் சரியில்லாமல் இருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, எஞ்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக , விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் பயணித்த 55 பேரும் தீக்கிரையாகினர். இறந்த உடல்களை அடையாளம் கூடக் காண முடியவில்லை. செங்கோட்டையில் பிறந்து, கணித உலகினையே திரும்பிப் பார்க்க வைத்த, எஸ் எஸ் பிள்ளையும்  கரிக்கட்டையாகிப்  போனார்அவரின் முகத்தைக் கூட, மீண்டும் பார்க்க முடியாதபடி செய்தது கருணையற்ற காலம்!.
                          தமிழ்நாட்டில் பிறந்த எஸ்.எஸ்.பிள்ளை அவர்களின் கணித மூளை, கருகிச் சாம்பலாகி, எகிப்துக்  காற்றில் கலந்தது.  ’நியூயார்க் சென்று ,கணித மாநாட்டில் இக்குறிப்புகளை வெளியிடுவேன், இதன் மூலம் கணித உலகில் இந்திய தேசம் அழியாத புகழைப் பெறும்’, என்று சொல்லி, மகிழ்வோடு உயர்த்திக் காண்பித்த அந்த நோட்டுப் புத்தகத்தையும் எரிதழல் விழுங்கி விட்டது. இவரது மறைவின் தாக்கம், கணித ஆராய்ச்சிகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை, சர்வதேச கணித மன்றம் நன்றாகவே உணர்ந்திருந்தது.  
                                 ஈடி பெல் என்ற கணித அறிஞர்,  ‘Men Of  Mathematics’ என்ற பெயரில் , தலைசிறந்த கணித அறிஞர்களைத் தொகுத்திருந்தார். அதில் இந்தியாவில் இருந்து இருவர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அந்த இருவருமே தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு.  ஆம்,   ஒருவர்  ராமானுஜம். மற்றொருவர் எஸ்.எஸ்.பிள்ளை.
                  எஸ்.எஸ்.பிள்ளை எழுதிய கட்டுரைகள், அவரது கண்டுபிடிப்புகள் ,எழுதிய கடிதங்கள் என யாவும் தொகுக்கப்பட்டு, ‘Collected Works of  S.S.Pillai’ என்ற பெயரில், 2009 ஆம் ஆண்டு, தொகுப்பு  நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
                                                               வாரிங் புதிருக்கான பொதுத்  தீர்வு கண்டதும், ஃபோரியர் தொடருக்கு விடை கண்டுபிடித்ததும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. பகா எண்களை அடிப்படையாகக் கொண்டு, 1,4,27,1354….என்ற எண் தொடரை உருவாக்கிக் காட்டினார். அத்தொடருக்கு ”எஸ்.எஸ்.பிள்ளை தொடர் ” என பெயரிடப்பட்டது.  ஃபிபனாசி தொடர், லூக்காஸ் தொடர், ஃபோரியர் தொடர் என பல கணித மேதைகளை அறிந்த அளவுக்கு, எஸ்.எஸ்.பிள்ளையின் தொடரையும், அவரது வாழ்வையும் – தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யாதது, ஏனோ தெரியவில்லை. 
             காலம் மறந்து கொண்டிருக்கும் - கணித மகனாக மாறிக் கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.பிள்ளை. ஆனால், நாம் நினைவில் நிறுத்த வேண்டிய  முக்கிய மனிதர்களுள் இவரும் ஒருவர். கணிதத் துறையில்,  தமிழகம் கொண்டாட வேண்டிய  அறிவு ஜீவிகளில் இவர் முக்கியமானவர்.                      
                              மறக்கப்பட்ட,  மறைக்கப்பட்ட  மாமனிதர்களை – வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி , வழிகாட்டும் பணியை, ஆளும் அரசு பாரபட்சமின்றி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அதனை ஆன்றோர்களும், ஆசிரியர்களும் முன்னெடுப்பது தானே  நியாயம்!      
                                      

Thursday, April 4, 2019

ஏப்ரல் 4

மகத்தான தமிழ்மணி- பெ.சுந்தரம் பிள்ளை.

ஏப்ரல் 4....இன்று!

                    
                 அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
                 கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
                  ஆயினும் நீயே தாய் எனுந் தன்மையின்
                  மெய்ப்பே ராசைஎன் மீக்கொள ஓர்வழி
                  உழைத்தலே தகுதியென்று இழைத்த இந்நாடகம்
                 வெள்ளியதெனினும் விளங்கு நின் கணைக்காற்கு
                  ஒள்ளிய சிறுவிரல் அணியாக்
                  கொள்மதி அன்பே குறியெனக் குறித்தே!


                                          1891 ஆம் ஆண்டு, “மனோன்மணீயம்” என்னும் நாடகத்தை எழுதிய பெ. சுந்தரம் பிள்ளை (1855-1897),  ஆசிரியர் சுரிதகத்தில் எழுதிய பாயிரம் இது. 
              ’ நான் கடையன், அறியாத சிறுவன், மலையாள நாட்டில் பிறந்த தமிழன். ஆயினும், தமிழன்னையின் மீது கொண்ட பற்றால், எழுதிய  இந்நாடகம் - வளமற்றது எனினும்,  நினது காலின்  சிறுவிரல் மோதிரமாகவேனும் இதனை அணிந்து கொள்க’  - எனத்  தமிழன்னையிடம் வேண்டி நின்றார் பெ.சுந்தரம் பிள்ளை. தமிழ்ப்பால் அருந்திய யாவருக்கும், அவள் அன்னையல்லவா? பிள்ளையின்  மனோன்மணீயத்தை வாரி அணைத்துக் கொண்டாள். அதனைக்  கை விரல் மோதிரமெனக்  கூறி, முகம் மலர்ந்தாள்.
               தாய்மொழியாம் தமிழுக்கென, ஒரு வாழ்த்துப் பாடலைக் கொண்டு வர, கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசு முடிவு செய்தது. பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு,       மனோன்மணீயம் நாடக நூலில் இடம்பெற்றிருந்த, ”நீராருங் கடலுடுத்த..” எனற   வாழ்த்துப் பாடல்  தேர்வு செய்யப்பட்டது. தமிழின் உயர்வைச்  சொல்லும் போது, பிற மொழிகளின் மீதான விமர்சனம் தேவையில்லை என்பதால்,  பாடலில் இருந்த சில வரிகள் மட்டும் நீக்கப்பட்டன.   
                   1970 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 23 ஆம் தேதி, சுந்தரம் பிள்ளை எழுதிய, ’நீராருங் கடலுடுத்த...’   என்ற பாடல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக  முறைப்படி அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால், மோகன ராகத்தில்  இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல்,  எல்லா அரசு நிகழ்ச்சிகளில்  தமிழகம் முழுதும் இசைக்கப்பட்டு வருவது, சுந்தரம் பிள்ளைக்குக் கிடைத்த பெரும் பேறு என்றே சொல்ல வேண்டும்.
                     1855 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி,  கேரள மாநிலம் ஆலப்புழா நகரில், பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தான் சுந்தரம் பிள்ளை.    திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் பிள்ளையின் குடும்பம், தொழில் காரணமாக ஆலப்புழா பகுதிக்குச் சென்றிருந்தது.
             அந்நாளில், திருவிதாங்கூர் மன்னர்கள், தங்களது ஆளுகைக்கு உட்பட்ட எல்லா நகரங்களிலும் மலையாளம் போலவே,  தமிழ்ப் பள்ளிகளையும் நடத்தி வந்தனர். ஆலப்புழா நகரில் இருந்த தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார் சுந்தரம் பிள்ளை. பிறகு, திருவனந்தபுரத்தில் இவரது படிப்பு தொடர்ந்தது. அங்கிருந்த மகாராஜா கல்லூரிக்குச் சென்ற சுந்தரம் பிள்ளை, 1876 ஆம் ஆண்டு, தத்துவவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் வகுப்புடன் , கல்லூரியின்  முதல் மாணவராகவும் இவரே வந்தார்.
             பட்டப்படிப்பு முடித்தவுடன், திருநெல்வேலி வந்த சுந்தரம் பிள்ளை, ’இந்துக் கல்லூரி பள்ளியில்’ சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான், கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் நட்பு கொள்கிறார். பன்னிரு திருமுறைகள் உட்பட, சைவ சித்தாந்தம் தொடர்பான எல்லா பாடங்களையும் அவரிடம் கற்றுக் கொள்கிறார். பின்னாளில், 1885 ஆம் ஆண்டு, “சைவப் பிரகாச சபை” என்னும் அமைப்பைத் தோற்றுவிக்க இதுவே தூண்டுகோலாக அமைந்தது.
                        மீண்டும் திருவனந்தபுரம் வந்த சுந்தரம் பிள்ளை, 1880ஆம் ஆண்டு, தத்துவவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். தான் படித்த கல்லூரியிலேயே, ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கிறது. கல்லூரியில் தத்துவம் மற்றும் வரலாறு பாடங்களைக் கற்பிக்கிறார். அப்போது, தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆராய்ச்சி தொடர்பான நூல்களைத் தேடித் தேடி படிக்கிறார்.
             சுந்தரம் பிள்ளையின்  ஆற்றலைக் கேள்விப்பட்டு வியந்த, திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள், அரண்மனையில்  Commissioner of separate என்னும் பதவியை வழங்கினார். 1882-1885 வரை அப்பதவியில் இருந்த காலத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவை யாவும் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டது.
             1888ல் வெளிவந்த நூற்றொகை விளக்கம் (சாத்திர சங்கிரகம்) என்னும் கட்டுரை நூல், 1894 ல் வந்த Some early sovereigns of Travancore  என்னும் ஆய்வு நூல் இரண்டும் முக்கியமான நூல்கள் ஆகும். திருஞான சம்பந்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டுக்கும் பிந்தையது என்று சொன்ன கால்டுவெல்லின் கருத்தை மறுத்து, சான்றாதாரங்களுடன் 1896ல் இவர் எழுதி வெளியிட்ட , 'திருஞான சம்பந்தரின் காலம்' எனும் நூல், ஆய்வு நூல்களுக்கு ஒரு முன்மாதிரி எனலாம்.
              1890-1891 ஆம் ஆண்டு, பத்துப்பாட்டு திறனாய்வு நூல் ஒன்றை எழுதினார். திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை நூல்களை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். The Ten Tamil Idylls என்ற பெயரிலான அந்தப் புத்தகம், 1957ஆம் ஆண்டுதான் நூல் வடிவம் பெற்றது. நாராயண சாமிப் பிள்ளையிடம் கற்ற  யாப்பும், இலக்கணமும் இவர் தமிழை, செழுமை செய்திருந்தது.   இவரது எழுத்துக்கள் மின்னின.
      வாசிப்பு இன்பத்தை நோக்கமாகக் கொண்டு, சுந்தரம் பிள்ளையால் எழுதப்பட்ட நாடக நூலான  “மனோன்மணீயம்” அவரின் எல்லா ஆய்வுகளையும், படைப்புகளையும் பின்னுக்குத் தள்ளி முன் வந்து நின்றுவிட்டது. 1891ல் வெளியிடப்பட்ட இந்நாடக நூல், Edward Lytton என்பவர் எழுதிய ’ The Secret Way’ என்னும் நூலின் தழுவலாகும். மனோன்மணீயம் என்னும் சொல் , அவரது பெயருடனேயே நிலைத்து விட்டது. அவருக்கு தத்துவவியல் பேராசிரியராக இருந்த, ராபர்ட் ஹார்விக்குத் தான்  தனது நாடக நூலை காணிக்கையாக்கியிருந்தார்  சுந்தரம் பிள்ளை.
             தனது ஓய்வுக்குப் பிறகு,  மகாராஜா கல்லூரியின் பொறுப்புக்குத் தகுதியானவர் சுந்தரம் பிள்ளையே  என எழுதி வைத்துச் சென்றவர் தான் பேரா.ராபர்ட் ஹார்வி. 1892ஆம் ஆண்டு,  சுந்தரம் பிள்ளையின் பணிகளைப் பாராட்டி,  திருவிதாங்கூர் அரசர் 90 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை வழங்கினார். அதில் அழகான வீடு ஒன்றைக் கட்டிய சுந்தரம் பிள்ளை, அதற்கும்  “ஹார்வே புரம்” என்று பெயரிட்டு, தனது ஆசிரியரின் நினைவைப் பெருமைப்படுத்தினார். சுந்தரம் பிள்ளையின் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த மனைப் பரிசு, ஒரு கால் நூற்றாண்டு கூட நிலைக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, 90 ஏக்கர் நிலமும் பறிமுதல் செய்யப்பட்ட சோகக் காட்சியும்  நடந்தேறியது.
                         சுந்தரம் பிள்ளைக்கு 1877 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி பெயர் சிவகாமி அம்மாள். இவர்களது ஒரே மகன் நடராஜன். வழக்கறிஞர் பட்டம் பெற்ற நடராஜன்,  பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராகவும் சில காலம் பதவி வகித்தார்.  1916ஆம் ஆண்டு, நடராஜன், திவானுக்கு எதிராகப் போராடியதால், வழங்கப்பட்ட 90 ஏக்கர் நிலமும் மீண்டும் பறிக்கப்பட்டது. அப்போது,  நீதிமன்றத்தை நாடிய நடராஜனின் கோரிக்கைகள் எடுபடவில்லை. நடராஜனின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர், 1968 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த  ஈ.எம்.எஸ் அவர்களிடம் கோரிக்கை வைக்க, அவரும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால், 2018 ஆம் ஆண்டு  வரை, மனை   இன்னும் வந்து சேரவில்லை!.
                     ஹார்வேபுரம் மனையை திவானின் ஆட்கள் கைப்பற்றும் போது, சுந்தரம் பிள்ளைக்கு வந்த கடிதங்கள் யாவும் எடுத்துச் செல்லப்பட்டன. சுவாமி விவேகானந்தர், மறைமலை அடிகள், உ.வெ.சா போன்றவர்கள் எழுதிய விலை மதிப்பில்லாத கடிதங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை. நேரிலும், கடிதங்கள் வழியாகவும் விவேகானந்தருக்கு, சைவ சித்தாந்தத் தத்துவங்களை சுந்தரம் பிள்ளை விளக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
                 சைவம் மற்றும் திராவிடச் சிந்தனைகளை உரத்துப் பேசிய பல்துறை அறிஞர் சுந்தரம் பிள்ளை, 1897-ஏப்ரல் 26 அன்று  தனது  மூச்சினை நிறுத்திக் கொண்டார். சர்க்கரை நோய் தான், சுந்தரம் பிள்ளையின் வாழ்வினை 42 வயதாகச் சுருக்கியது என சொல்லப்படுகிறது.
                   லண்டன் வரலாற்று ஆய்வு மையம் வழங்கிய FRHS பட்டம்,     M.R.A.S. பட்டம்,  ஆங்கில அரசு வழங்கிய ’ராவ் பகதூர்’ பட்டம்,  ஜெர்மனி பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம் என இவர் பெற்ற பெருமைகள் ஏராளம்.
                 ”ஆரா அமுதம் அனைய தமிழ் வளர்த்த
                  பேராசிரியர் பெருமான்”  -  என  கவிமணி தேசிய விநாயகம் சொல்ல, எல்லா தமிழறிஞர்களும் சுந்தரம் பிள்ளையின் அறிவைக் கொண்டாடினர்.  

                       1855 முதல் 1897 வரை, அவர்  உயிர் வாழ்ந்த  42 ஆண்டுகள் மட்டுமே,  பெ.சுந்தரம் பிள்ளை இங்கிருந்தார் என்பது  நிச்சயம் சரியல்ல. ஏனெனில், பார் உள்ளளவும், அதில் ஊர் உள்ளளவும், தமிழ்த் தேரும் இங்கிருக்கும்.  நீராருங் கடலுத்திய  நிலமடந்தையாம் தமிழ்த்தாயின் எழிலைப் பாராட்டும் - வாழ்த்தும் இங்கிருக்கும். அவ்வாழ்த்தெழுதிய பெ.சுந்தரம் பிள்ளையும் இங்கிருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்தென, காற்றில் கலந்த இவரது வரிகள், காலங்கள் கடந்து ஒலித்துக் கொண்டே இருக்குமல்லவா? . 
                            ஆம்,    வாழ்ந்த காலத்தின் அளவல்ல -  வாழ்ந்த போது ஒருவன் செய்த காரியத்தின் அழகே - அவனது காலத்தைத் தீர்மானிக்கிறது. அதுவே  வரலாறாகிறது.!

                                    










             

               

Wednesday, April 3, 2019

ஏப்ரல் 3

கலாச்சார ராணி - கமலா தேவி சட்டோபாத்யாய். 

ஏப்ரல் 3.... இன்று!


                        ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1926ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கான சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்த போது, பலத்த சர்ச்சையை அது ஏற்படுத்தியது. காரணம் என்ன தெரியுமா?

                எழுதப்பட்ட இந்திய வரலாற்றில், முதன்முறையாக ஒரு பெண் தேர்தலில் போட்டியிட்டதுதான்.  பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தனது கொள்கைகளில் உறுதியாய் இருந்த அந்தப் பெண்மணி , தனது வாழ்நாள் முழுக்க, சமூகத்தில் நிலவிய தேவையற்ற கட்டுக்களை உடைக்கவும், கலை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். அவர் தான், கமலா தேவி சட்டோபாத்யாய்.(1903-1988).

                           கமலா தேவி,   அந்தத் தேர்தலில் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், தனது பயணத்திலும் பாதையிலும் உறுதியாய் இருந்தார். பாரத விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகம்  தயாரிக்கப்பட்டது. அப்பிரதியில், அதன்  ஒப்புதலுக்குக் கையெழுத்திட்ட தேசியத் தலைவர்களுள் இவரும் ஒருவர்.  அது மட்டுமல்ல, கையெழுத்திட்ட பெயர்களில் இருந்த,  ஒரே பெண் தலைவரும்  இவரே!

             இந்தியக் கைவினைக் கலை, இந்திய நாடகக் கலை, இந்தியக் கூட்டுறவு சங்க வளர்ச்சி போன்றவற்றில் அவர் ஆற்றிய பணிகள் காரணமாக, ’கைவினைக் கலைகளின் அன்னை’ என்றே அவர் அழைக்கப்படுகிறார்.  யுனெஸ்கோ அமைப்பு, கைவினைக் கலைகளுக்காக தனியொரு பிரிவைத்  தோற்றுவிக்க இவரே முக்கியக் காரணமாக இருந்தார். இவரது சேவையைப் பாராட்டி, 1977 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது.

                       1966ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருது , இந்திய அரசின்  பத்ம பூஷன் , பத்ம விபூஷன் விருதுகள், சங்கீத நாடக அகாடமியின் விருது, கலை மற்றும் கலாச்சாரத்திற்கான இந்திய தேசிய அகாடமியின் விருது என இவர் பெற்ற விருதுகளின்  பட்டியல் மிக நீளமானது.

                             இந்தியப்  பெண்களின் மனதில், தன்னம்பிக்கையையும், முற்போக்கு எண்ணத்தையும் விதைத்த கமலா தேவி  கடந்து வந்த பாதை, போராட்டமும் துயரமும் நிறைந்தது; ஆனால், உறுதியானது.

                   1903ஆம் ஆண்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி,  கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில்  கமலா தேவி பிறந்தார். இவரது தந்தை ஆனந்தையா தாரேஸ்வர், அப்போது  மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில்  இருந்தார். தாயின் பெயர் கிரிஜாபாய்.  தனது மூத்த சகோதரி சகுணா மீது,  கமலா தேவிக்கு அளவு கடந்த பிரியம் இருந்தது. இளம் வயதிலேயே சகுணாவிற்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சகுணா, கணவர் வீட்டிற்குச் சென்றார். சகோதரியின் பிரிவை கமலா தேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  சில நாள்களில், காரணம் அறியாத வகையில், சகுணா திடீரென்று இறந்தும் போனார்.  கமலா தேவி மனம் உடைந்தார். அதே காலக்கட்டத்தில், கமலாவின்  தந்தை ஆனந்தையாவும் திடீர் மரணத்தைச் சந்திக்கிறார். கமலா தேவியும், அவரது  குடும்பமும் நிலை குலைந்தது. அப்போது கமலாதேவிக்கு ஏழு வயது.!

                        உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறந்து போனதால், சொத்துக்கள் அனைத்தும் ஆனந்தையாவின் உறவினர் மகன் ஒருவருக்கே சென்றது. சட்டப்படி, மனைவிக்கு அப்போது சொத்தில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. ஆனால் கிரிஜாபாய், குடும்பத்தை நடத்த, மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க, நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. கணவரின் சொத்தில் பங்கு இல்லாத போது, தனக்கு வழங்கப்படும் இந்த ஜீவனாம்சத் தொகை தேவையில்லை எனக் கூறிவிட்டார் கிரிஜாபாய். தாயின் மன உறுதியைக் கண்டு, தனது உள்ளத்தை உறுதியாக்கிக் கொண்டிருந்தார் கமலா தேவி.

                      கமலா தேவியின் பாட்டி, தனது பேத்திக்கு இந்திய புராணக் கதைகளையும், கலாச்சார-பண்பாட்டுப் பெருமைகளையும் எப்போதும்  கதைகளாகக் கூறிக் கொண்டே இருப்பார். திடமான உள்ளத்தைப் போலவே, பரந்த அறிவும் கமலா தேவிக்கு இருந்தது.

                  பதினான்கு வயதில் கமலாதேவிக்குத் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த இரண்டாவது ஆண்டில், கணவர் கிருஷ்ணா ராவ் இறந்து போனார். சமூகவியல் பாடத்தில், பட்டப் படிப்பு படிக்க, சென்னை ராணி மேரி கல்லூரிக்குச் சென்றார் கமலா தேவி. ஒரு விதவை கல்லூரிக்குச் சென்று படிப்பதை, அந்நாளைய சமூகம் வெறித்துப் பார்த்தது.

            கல்லூரித் தோழியாக இவருக்கு அமைந்தவர் சுஹாசினி. இவரது தங்கை தான் கவிக்குயில் சரோஜினி நாயுடு. சரோஜினி நாயுடு குடும்பத்துடன் நெருங்கிய நட்பு வளரத் தொடங்கியது. சரோஜினி நாயுடுவின் சகோதரர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். அவருக்கும் , கமலா தேவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

                 விதவை மறுமணம் என்பது அசிங்கமாகப் பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில் , தனது இருபதாவது வயதில், ஹரீந்திரநாத்தை மறுமணம் செய்து கொண்டார் கமலா தேவி. சமூகம் கேலி பேசியதை இந்த இணை சட்டை செய்யவில்லை. இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. அக்குழந்தைக்கு ராமகிருஷ்ண சட்டோபாத்யாய் எனப் பெயரிட்டனர்.   பிறகு, கமலா தேவி தனது மேற்படிப்புக்காக, கணவருடன்  லண்டன் சென்றார். அங்கிருந்த போதுதான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் பற்றி அறிந்து கொண்டார். இந்திய விடுதலைப் போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும்  விரும்பினார். 

                          நாடு திரும்பிய பின்பு, யாரும் எதிர்பாராத வகையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கன்னடம் மற்றும் சில ஹிந்திப் படங்களில் நடித்தார். கணவருடன் சேர்ந்து, நிறைய மேடை நாடகங்களை அரங்கேற்றினார். பிறகு, சுதந்திரப் போராட்டத்தில் முழு ஆர்வத்தையும் காட்டினார்.

                   1930 ஆம் ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கினார். நாடெங்கும் உப்புச் சத்தியாகிரகத்தை முன்னெடுக்க, ஏழு நபர்களை காந்தியடிகள் தேர்வு செய்திருந்தார். அதில் இடம் பெற்றிருந்த ஒரே பெண்மணி  கமலா தேவி மட்டும் தான்.  மும்பைக் கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டார் கமலா தேவி.

                 இரண்டாம் உலகப் போர் சமயத்தில், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, இந்திய விடுதலைக்காக ஆதரவு திரட்டினார். 1947 ஆம் ஆண்டு, இந்திய விடுதலையின் போது, இந்து-முஸ்லீம் இடையே ஏற்பட்ட கலவரங்களால் மிகுந்த மன வேதனை அடைந்தார். பரீதாபாத் நகரில் முகாமிட்டு, ஏறக்குறைய 50000 மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார். அவர்களுக்கு உணவும், இருப்பிடமும், மருத்துவ வசதியும் தந்து உதவினார்.

            1955ஆம் ஆண்டு, பல்வேறு காரணங்களால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , விவாகரத்துக்கு முறையிட்டு, எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார். சமூகமும், உறவினர்களும் வசை பொழியத் தொடங்கினர். ஆனால் கமலா தேவிக்கு  நிறைய பணிகள் காத்துக் கிடந்தன. ஆம், சுதந்திர இந்தியாவின் கைவினை மற்றும் கலாச்சாரத் துறை,  அவருக்காகக் காத்துக் கிடந்தது.

             சுதந்திர இந்தியாவில்,  Indian School of Drama என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.    கைத்தொழில் வளர்ச்சி, பெண் முன்னேற்றம் , பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்காகப் பாடுபட்டார்.  நவீன இந்தியாவின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள், நாடகத் துறை போன்றவற்றின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் இவரே ஆதலால், இவர் “இந்தியாவின் கலாச்சார ராணி” என்று அழைக்கப்படுகிறார். 

                   இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள    கமலா தேவி, தனது வாழ்க்கைப் பயண நினைவுகளை,   Inner recesses and Outer Spaces; Memoir என்ற பெயரில் நூலாக எழுதி, 1986 ஆம் ஆண்டு வெளியிட்டார். தனது கடைசி மூச்சு வரை, இந்தியாவின் கலாச்சாரப் பாதுகாவலராக இருந்த கமலா தேவி, 1988ஆம் ஆண்டு, அக்டோபர் 29 ஆம் தேதி, மும்பை நகரில் காலமானார்.  

              கமலா தேவியின் வாழ்வினை நுட்பமாகக் கவனித்தால், ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. அது,  துன்பத்தில் துவண்டு விடாமல், வசைச் சொற்களை அசை போட்டுக் கொண்டிருக்காமல் - முன் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், வாழ்க்கைப் பயணம் இனிப்பாகத் தித்திக்கும்.

                  ஆம்,       வாதை மிகுந்த வாழ்வினில்  - பாதை சற்றும் மாறாமல் – கடமையை மட்டும் செய்து கிடப்பதே – நிரந்தர  வெற்றியின் ரகசியம்!