Monday, August 6, 2018

சமாதானக் கொக்குகள்


ஹிரோஷிமா நினைவு தினம்.

ஆகஸ்ட் 6....இன்று!
 
              1945- ஆகஸ்ட் 6-  காலை 8.15 மணி, ஜப்பான்- ஹிரோஷிமா நகரத்தின் உச்சியில் பறந்துகொண்டிருந்த விமானம் எனோலா கே, அமெரிக்காவிலிருந்து 2740 கி.மீ. பயணம் செய்திருந்தது.  பி-29 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின்  விமானி பால்.டிப்பெட் ,  தனக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் படி,  ஷிமா மருத்துவமனையைக்  குறிவைத்து,  ’லிட்டில் பாய் ‘ எனப்பெயர் கொண்ட யுரேனியம்235  அணுகுண்டை வீசினார்.  43 விநாடிகளில் நவீன அறிவியலின் கோர முகம், ஹிரோஷிமா நகரில் பற்றி எரிந்த தீயில் தெளிவாகத் தெரிந்தது.  1.3 கி.மீ தூரத்திற்கு தீ ; 90,000பேர் உயிர் இழந்தனர். 
              அப்போது,   அதிபர் ரூஸ்வெல்ட் மறைவுக்குப் பின், துணை அதிபர்  ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார்.   ஜெர்மனி சரண் அடைந்திருந்தது.  இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும் நேரம் அது. ஆனாலும், அமெரிக்காவின் எண்ணத்தில் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும், பியர்ல் ஹார்பர் துறைமுகத் தாக்குதலுக்கு (1941ல் நடந்தது) பதிலடி என்ற பெயரில், தனது  யுரேனியம் அணுகுண்டை ஹிரோஷிமாவில் சோதித்துப் பார்த்துவிட்டது அமெரிக்கா. 
        ஆகஸ்ட் 9 அன்று, நாகசாகி நகரத்தில்,  புளுட்டோனியம் ரக அணுகுண்டையும் வீசி, அமெரிக்கா, தனது சக்தியை எதிர் நாடுகளுக்குப் புரிய வைத்துவிட்டது. நாகசாகியில் 40,000பேர் அன்றே இறந்தனர். ஜப்பான் மன்னர் மக்களிடம் மன்னிப்புக் கோரிய பின்னர், நாடு சரணடைவதாக அறிவித்தார். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், போரின் பாதிப்பிலிருந்து, அந்நகர மக்கள் இன்று வரை முழுமையாக மீளவில்லை. 
       அணுக்கரு பிளவு முறையில் உருவாக்கப்பட்ட இந்த அணுகுண்டுகளின் கதிர்வீச்சு இன்னும் தொடர்கிறது. அதன் பாதிப்புகளும் தொடர்கின்றன. யுரேனியம் 235 அணுவின் அரை ஆயுள் காலம் 70 கோடி ஆண்டுகள்  என்பதை ஜப்பானியர்களும், உலக மக்களும் அப்போது அறிந்திருக்கவில்லை. தற்போது, யுரேனியம் குண்டுகளை விட, 6000 மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டுகள் சில நாடுகளிடம் இருக்கிறது. ஆனால், அணு ஆயுதத்தைத் தாங்கும் சக்தி , பூமிக்கு இல்லை! 
          ஹிரோஷிமா -நாகசாகி அணுகுண்டு வெடிப்பில், கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்கள் ’ஹிபாகுஷா’ என்று அழைக்கப்படுகின்றனர்.  கதிவீச்சின் காரணமாக , உடல் குறைபாடுகள், மூளை வளர்ச்சியின்மை, புற்று நோய் என பலவகையான பாதிப்புகள் இவர்களைத் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இவர்களுடன் ஏனைய மக்கள்  திருமண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. ஹிபாகுஷாக்கள் ஒருவகையில் இன்றும் ஒதுக்கப்பட்டே வாழ்கிறார்கள். 
              ஹிரோஷிமா குண்டுவீச்சில் தப்பிய சிறுமி சதாகோ சசாகிக்கு, 12வது வயதில், லுக்கோமியா எனப்படும் புற்று நோய் வருகிறது. அணுகுண்டு கதிர்வீச்சே இதற்குக் காரணம் என்று அறிந்தாலும், காப்பாற்ற வழியில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் சசாகி. மரண பயம் அவளை வாட்டுகிறது. அப்போது, அவளைச் சந்திக்க வந்த தோழி சிசுகோ, ” காகிதத்தில் 1000 கொக்குகள் (ஓரிகாமி கலை) செய்து விட்டால் , நோய் தீர்ந்து, நீ பிழைத்துவிடுவாய், பயப்படாதே..!” என ஆறுதல் சொல்கிறாள்.  சசாகியும் கொக்குகள் செய்யத் தொடங்குகிறாள். 
       காகிதங்கள், மருத்துவச் சீட்டுகள் என எது கிடைத்தாலும் கொக்குகள் செய்து , உயிர் பிழைத்துவிடலாம் என்று நம்பிக்கை கொள்கிறாள். ஆனால்,  644 கொக்குகள் செய்து முடித்த நிலையில், இறந்து போகிறாள் சசாகி. அவளது இறுதிச் சடங்கில், உடன் படித்த  பள்ளித் தோழிகள்,  மீதம் செய்யவேண்டிய 356 காகிதக்  கொக்குகளுடன் கலந்துகொள்கிறார்கள். ஓர் அழகு தேவதை , அதிகாரத்தின் பசிக்கு இரையான துயரம் இனி வரவே கூடாது என்று சொல்லி, காகிதக் கொக்குகள் வானில் பறந்தன. குழந்தைகளின் மௌன அழுகையின் முன் , அமெரிக்காவும், உலகமும் பதில் சொல்ல முடியாமல் நின்றன. 
             ஹிரோஷிமாவில் உள்ள  நினைவகம் முன்பும், சசாகியின் சிலை முன்பும் ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் அஞ்சலிக்  கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. சமாதான உறுதிமொழியை அந்த நகர மேயர் வாசிப்பார். ஹிபாகுஷாக்கள் தங்களது உறவுகளை நினைவு கொள்வர்.    அப்போது  1000  காகிதக் கொக்குகள் புடை சூழ , சசாகி என்னும் தேவதையும், வானிலிருந்தபடியே பூமியின் அமைதிக்காக வேண்டிக்  கொண்டிருப்பாள்.
               அதிகார வேட்கையை மனித மனதிலிருந்து, எப்படிப் பிரிப்பது?   சக மனிதனை நேசிக்காத விஞ்ஞானம் தவறென்று யார் சொல்வது?  ஏனைய விலங்குகள் இவ்வளவு மோசமாய் இருப்பதில்லை.  மனிதன் மட்டும் தான் இப்படி இருக்கிறான். ஆறாம் அறிவை ஆக்கத்திற்கே பயன்படுத்துவோம்.
            தேசத்தின் எல்லைகள் வெறும் கற்பனைக் கோடுகள்தான். அவை வரைபடத்தில் மட்டும் இருக்கட்டும். மனதிற்குள் எல்லைகள் எந்த வடிவத்திலும் வர வேண்டாம்.  பூமிப்பந்து அன்பிலே நிறையட்டும் .!

No comments:

Post a Comment