Tuesday, July 31, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 31

மகாமதி சதாவதானி - செய்துக் தம்பி பாவலர்.

ஜூலை 31... இன்று!
 
          ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நூறு நிகழ்வுகளைக் கவனித்து, அவை தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கும் அவதானக்கலை  நாயகன் சதாவதானி செய்குத்தம்பி  பாவலர் பிறந்த நாள்(1874-1950) இன்று.
                        நாஞ்சில் நாடு, இடலாக்குடியில் (நாகர்கோயில்- கன்னியாகுமரி மாவட்டம்)  தமிழ்ப் பெருங்கடல் செய்குத்தம்பி பாவலர் 1874, ஜூலை 31 ஆம் நாள் பிறந்தார். பக்கீர் மீரான் சாகிபிற்கும், அமீனா அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகவும், முத்தமிழ்த் தாயின் முக்கிய மகனாகவும் பிறந்த செய்குத்தம்பி,  .  இயல்பிலேயே கூர்ந்த மதியும், ஆர்வமும் உடையவராக இருந்தார். கோட்டாறு சங்கர நாராயண அண்ணாவியாரிடம் தமிழின் இலக்கண. இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக, கம்ப ராமாயணத்தில் பெரும் புலமை பெற்றிருந்தார். ’மெய்ஞானியார் பாடல் திரட்டு’ என்னும் நூலைப் பதிப்பிப்பதில் , பார்த்தசாரதி நாயுடுவுக்குத் தேவைப்பட்ட  தமிழறிந்த இஸ்லாமியராக செய்குத்தம்பி பாவலர் வந்து சேர்ந்தார். பின்பு, சென்னையிலேயே மாதம் ரூ.60 சம்பளத்தில், ஸ்ரீ பத்மவிலாச பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21.
                               அவதானக் கலை என்பது மாயாஜாலம் போன்ற மோசடி என்னும் எண்ணம் கொண்டிருந்த செய்குத்தம்பி பாவலர், ஓர் நாள் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்டப்பத்திரிக்கை என்னும் அவதானத்தை செய்து  காட்டினார் கல்யாண சுந்தரம். எண் பிறழச் சொல்லப்படும் செய்யுள் எழுத்துக்களின் எண்ணையும், எழுத்தையும் நினைவில் நிறுத்தி, முடிவில் முழுச் செய்யுளையும் நேர்படச் சொல்வதுதான் கண்டப்பத்திரிக்கை. இதனை கண்டவுடன் செய்குத்தம்பி பாவலருக்கும் அவதானக்கலையில் ஆர்வம் பிறந்தது. அஷ்டாவதானமும் சோடச அவதானமும்  செய்து பழகி, தான் பிறந்த இடலாக்குடி மண்ணில் சாதித்தும் காட்டினார்.
                                            மகாவித்துவான் ராமசாமி நாயுடுவின் ஆலோசனையின் பேரில், நூறு செயல்களை அவதானிக்கும் சதாவதானம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. ஒரு பொருள் குறித்த உரை, கண்டப்பத்திரிக்கை, கண்டத்தொகை, இலக்கண வினா, இலக்கிய வினா, நீர்ச் சுவை கூறுதல், கிழமை கூறுதல், ஓசை எண்ணுதல், முதுகில் விழும் நெல்மணி, பூக்கள் எண்ணுதல் , இறைநாமம் உச்சரித்தல், கைவேலை, சதுரங்கம், பாவகை கூறுதல் , ராகம் கூறுதல், வெண்பா புனைதல்...என நூறு வகையான செயல்களை ஒரே நேரத்தில் கவனிக்கும் கவனகக்கலையில் தேர்ச்சி கண்டார். தனது 33 ஆம் வயதில்,  10.03.1907, சென்னை விக்டோரியா அரங்கத்தில், தஞ்சாவூர் சதாவதானி சுப்ரமணிய  ஐயர் தலைமையில்,   கா.நமச்சிவாய முதலியார், டி.கே.சிதம்பர முதலியார், திரு.வி.க, இந்து ஆசிரியர் ஜி.சுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்வினை வெற்றிகரமாக செய்து காட்டினார்.  அந்த மேடையில் தான், “மகாமதி சதாவதானி” என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
                                         சதாவதானியாக மட்டும் அவர் பணி நின்று விடவில்லை. யதார்த்தவாதி, இஸ்லாமியமித்திரன் போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, வெண்பாக்கள் மாலை என எண்ணற்ற தமிழ் நூல்களைப் படைத்தார். சீறாப்புராணத்திற்கு சீரிய உரை எழுதி, அழியாச் சிறப்பு பெற்றார். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த பாவலர், எல்லாத் தலைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். விடுதலைப் போராட்டத்திலும்  ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.                   ‘கைத்தறி அணிந்தால் மணமகன்;
   மில் துணி அணிந்தால் பிணமகன்;
     நீ மணமகனா- பிணமகனா?”                 
         என திருமண மேடைகளிலும் அந்நிய நாட்டுத் துணிகளுக்கெதிராக துணிந்து பேசினார். 1950ல் இறைவனடி இணையும் வரையில் தமிழ்ப்பணி ஆற்றினார்.
                         ’சிரமாறுடையான்..’ என்று ஐம்பொருள் சிலேடையில் கடவுள் வாழ்த்து பாடிய செய்குத்தம்பி பாவலர்  வாழ்ந்த தெரு- பாவலர் தெரு. பள்ளி- செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி. இடலாக்குடியில் இவரது பெயரில் எம்.ஜி.ஆர். அவர்களால் மணிமண்டபம் கட்டப்பட்டது.  கலைஞர்  அவர்களால் இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவைதான் கலைக்கு நாம்   கொடுக்கும்  முக்கியத்துவம் என்றால் நாம் தேங்கி விட்டோம் என்றே பொருள்படும்.
          ஐந்திரம் அறிந்த தொல்காப்பியர் அவதானக் கலையில் சிறந்து விளங்கினார் என்னும் குறிப்பு உள்ளது. தொடர்ந்து, காளமேகப் புலவர், ஆறுமுகம் பிள்ளை, இலக்கிய வீதி திருக்குறள் ராமையா, அவரது மகன் கனக சுப்புரத்தினம் என இக்கலையின் நீட்சி சுருங்கிக் கொண்டே வருகிறது. தற்போது திருமூலநாதன், பிரதீபா, திலீபன், முனைவர் செழியன் போன்ற சிலரே இதனை நிகழ்த்தி வருகின்றனர். இந்தக்  கலையின் வரலாறும், கவனகர்களின் வாழ்க்கையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
               கவனகரின் பிறந்த நாளில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. பாரம்பரியக்  கலைகளை  மறப்பது,  இழப்பது;   இனம், மொழி இரண்டினையும் துறப்பது, அழிப்பது - இரண்டுக்கும் வேறுபாடு இல்லை, ஒன்றுதான்.

கலைகள் காப்போம்!!
                
             
                           
                                             

No comments:

Post a Comment