Monday, July 23, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 23

ஆசாத் என்னும் அதிசயம்!


ஜூலை 23.... இன்று!

     1925, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, லக்னோ அருகில் உள்ள ககோரி என்னுமிடத்தில், இந்திய சுதந்திர இயக்கத்தால் (நிறுவனர்: கவிஞர் ராம் பிரசாத் பிஸ்மில்) , வெள்ளையர்கள் வசூலித்த வரிப்பணத்தைக் கைப்பற்ற  நடத்தப்பட்ட ரயில் கொள்ளைச் சம்பவம் இந்திய விடுதலை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் மூளையாகச் செயல்பட்டு, கடைசிவரை பிடிபடாமல் சாதனை படைத்த சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினம் இன்று.
                    மத்திய பிரதேச மாநிலம்      பாவ்ரா என்னும் கிராமத்தில், சீதாராம் திவாரி-ஜக்ராணி தேவிக்கு ,  1906 ஆம் ஆண்டு, ஜுலை 23 ஆம்  நாள் சந்திரசேகர் பிறந்தார்.குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதும், தாயின் விருப்பத்திற்கு ஏற்ப, காசி சென்று சமஸ்கிருதம் படித்தார். தனது கிராமத்து பழங்குடி மக்களிடம்   பாரம்பரியக்    கலையான வில்வித்தையிலும் நிபுணத்துவம் பெற்றார். பின்னாட்களில், துப்பாக்கி சுடுவதற்கு இக்கலை உதவியதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். 1921ல், பதினைந்து வயது சிறுவனாக இருந்த சந்திரசேகர், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு , நீதி விசாரணையின் போது, அவர் அளித்த பதில்கள் நீதிபதியை எரிச்சலூட்டின.
”உனது பெயர் என்ன?” - “ ஆசாத் (சுதந்திரம்)”
“உனது தந்தை பெயர்?” - “ சுதீன் (சுதந்திரம்)”
”உனது இருப்பிடம் ? “ - “ சிறைச்சாலை “
இவ்வாறு பதிலளித்ததற்காக 15 கசையடிகள் பரிசாகப் பெற்றாலும் , அந்நாள் முதல் , அவர் பெயர் சந்திரசேகர் ஆசாத் என்றானது.
                 காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக்கொண்ட போது, இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1925 ககோரி ரயில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார். அதில் 43 பேர் கைது செய்யப்பட்டு, தலைவர் பிஸ்மில் உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையும்  ஏனையோருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.ஆனால் கடைசி வரை ஆங்கிலேயர்களால் ஆசாத்தை கைது செய்ய முடியவில்லை. மாறுவேடங்கள் புரிவதில் வல்லவரான ஆசாத், Hindustan socialist Republic Association என்னும் அமைப்பை நிறுவினார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத் சிங் மற்றும்  ராஜ குருவை போலீஸின் பிடியில் இருந்து தப்பவைக்க , சனன்சிங் என்பவரை வெகு தூரத்திலிருந்து சுட்டுக் கொன்றார். தனி மனித கொலைகளை விரும்பாத ஆசாத், சனன்சிங்கின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வெகு நாட்கள் மனம் வருந்தினார். ஓர் நாள் இரவில்,  தனக்கு அடைக்கலம் கொடுத்த முகம் அறியாத  விதவைத் தாயின் மகளை , தனது சகோதரியாக எண்ணினார்.        தான்  படுத்துறங்கிய இடத்தில் , அவளின்  திருமணச் செலவுக்கு தன்னிடமிருந்த பணத்தை சத்தமின்றி வைத்துச் சென்றார். நெஞ்சுரம் மிக்க ஆசாத் இளகிய மனமும் கொண்டிருந்தார்.
               1931- பிப்ரவரி 27 ஆம் நாள், நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அலகாபாத் ஆல்ஃபிரட் பூங்காவிற்கு வந்திருந்தார். எதிர்பாராத விதமாக, உள்ளூர் உளவாளி காட்டிக் கொடுக்க, ஆங்கிலேய வீரர்கள் சுற்றி வளைத்தனர். வீரத்துடன் சண்டையிட்டார். 63 குண்டுகள் அவர் மீது சுடப்பட்டன. ஆங்கிலேயர்களிடம் பிடிபடக் கூடாது என ஏற்கெனவே எடுத்திருந்த உறுதிமொழியின்படி, தனது கோல்ட் துப்பாக்கியின் கடைசி குண்டின் மூலம் தனது தலையைச்  சிதைத்து இறந்து போனார்.  அன்றே மக்கள் மனங்களில், ஆல்ஃபிரட்  பூங்கா, ஆசாத்  பூங்காவாக  மாறியது. பின்பு அதுவே சட்டமானது. 
               மாறுவேடங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்ததால், தன் பிரியத்திற்குரிய தாயைக் காணமுடியாது ஏங்கினார். தாய்நாட்டிற்காக இத்துன்பத்தைத் தாங்கினார். கால் நூற்றாண்டு மட்டுமே வாழ்ந்தாலும்,  வாழ்ந்த முறையால், ஆசாத் பெயர் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்.

 வாழும் முறைமை அறிவோம்.
      

No comments:

Post a Comment