Thursday, July 19, 2018

நாளும் அறிவோம்-ஜூலை 19


சாமுவேல் கோல்ட்-ரிவால்வர் நாயகன்!



        அமெரிக்காவில், 1814-இதே நாளில் தான், நவீன ரக  ரிவால்வர் துப்பாக்கியைக் கண்டுபிடித்த சாமுவேல் கோல்ட் (Samuel Colt, 1814 -1862) பிறந்தார். Colt's manufacturing company என்னும் பெயரில், இவரது நிறுவனம் பல மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி, தொழிற்புரட்சியின் பாய்ச்சலில் முக்கியப் பங்காற்றியது.

          தந்தை துணி உற்பத்தி வாணிகம் செய்து வந்தார். இளம்வயதிலேயே தாயை இழந்த கோல்ட்,  படிப்பிலும், வியாபாரத்திலும் ஆர்வமுடன் இருந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள்-மூன்று சகோதரர்கள். இதில் இரண்டு பேர் இளம் வயதிலேயே, காசநோய் தாக்கி (தாயைப் போலவே) இறந்துவிட, மேலும் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

          பள்ளி நாள்களில் இவர் படித்த , "Compendium of knowledge" என்ற அறிவியல் கலைக்களஞ்சிய நூல்தான் இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்தது. அதில் அவர் அறிந்துகொண்ட கண்டுபிடிப்பாளர்கள், முடியாத செயல் என்று கைவிட்ட ஆராய்ச்சிகளை தொடர்வதென்று முடிவு செய்தார். இரண்டு குண்டுகளுக்கு மேல் வைக்க முடியாத ரைஃபிளுக்குப் பதிலாக 5 அல்லது 6 குண்டுகளை தொடர்ந்து வெடிக்கச் செய்யும் வகையிலான ரிவால்வரின் தேவையை படையினர் வழியாக அறிந்து செயலாற்றத் தொடங்கினார்.

   கண்டுபிடிப்புகளை முன்னெடுக்க நிறைய பணம் தேவைப்பட்டது. சிரிப்பூட்டும் வாயுவைக்( நைட்ரஸ் ஆக்சைடு) கொண்டு, வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினார். கிடைத்த வருமானத்தைக் கொண்டு, 6 குண்டுகள் ஏற்கும் ரிவால்வரை உருவாக்கி, காப்புரிமையும் (patent) பெற்றார். 

              அவர் மரணமடைந்த 1862 (ஜனவரி 10) ஆம் ஆண்டுக்குள் 4,00,000 ரிவால்வர்கள் விற்று, பெரும் வருமானம் ஈட்டினார். மரணிக்கும்போது, இன்றைய மதிப்பில் 370 மில்லியன் டாலர் தொகையை தனது மனைவி மற்றும் ஒரே மகனுக்கு விட்டுச் சென்றார். 

            பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு , 2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிப்பாளர்களின் Hall of fame ல் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

          ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கி கண்டுபிடிப்பின் மூலாதாரம், இன்றைய பிறந்த நாள் நாயகன் சாமுவேல் கோல்ட் உருவாக்கிய ரிவால்வர்தான்.


   ரைஃபில் துப்பாக்கியால் தனது இராணுவப் பிரிவின் தலைவரைச் சுட்டு- இந்திய சுதந்திரப் போரின் பெருநெருப்புக்கு தன்னையே தீக்குச்சியாக்கிய மங்கள் பாண்டே பிறந்த  நாளும் (ஜூலை 19- 1827) இன்று தான்.. 1857 ல், அன்றைய படை வீரர்களிடம் ரைஃபிளுக்குப் பதிலாக ரிவால்வர் அதிக புழக்கத்தில் இருந்திருந்தால்...? மங்கள் பாண்டேவின் குறி தப்பியிருக்காது; விடுதலைப் பொறி பெரிதாகி,  விடுதலையில் தாமதம் நிகழாது  இருந்திருக்கவும் கூடும்.!!

No comments:

Post a Comment