Tuesday, July 24, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 24.

மலையில் சொர்க்கம் - மச்சு பிச்சு!
    

         1911, இதே ஜூலை 24, கடும் மழை நாளொன்றில்தான், 8000 அடி உயரத்தில் இருந்த,  இன்கா இன  மக்களின் மச்சு பிச்சு நகரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. தென் அமெரிக்கா, பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரின் கிழக்குப் புறத்தில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட , அழகிய நகரம், யேல் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் பிங்ஹாம் என்பவரால் நவீன உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.  The Lost City of the Incas என்ற புத்தகத்தில், பிங்ஹாம் தனது பயண அனுபவங்களை விவரித்துள்ளார்.
         ஸ்பானியப் படையெடுப்பில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இன்கா இனம், கொலம்பஸின் வருகைக்கு முன்பு , மாபெரும் பேரரசாக அமெரிக்கக் கண்டத்தில் நிறைந்திருந்தது. இன்கா இன அரசர்கள், 'சூரியனின் மகன்" என அழைக்கப்பட்டனர்.  'குவெச்சுவா ' என்றழைக்கப்படும்   பேச்சு மொழியை மட்டுமே பயன்படுத்தினர். ஆதலால்,  அவர்களைப் பற்றிய எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. இயற்கையின் மீதும், உண்மையின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இன்கா இன பழங்குடி  மக்களை, படையெடுப்பு ,காலணி ஆதிக்கம் என்ற பெயரில் மேற்குலக நவீனர்கள் செய்த துரோகத்தின் வரலாறு ஒரு கண்ணீர் சரித்திரம்.
           1450ஆம் ஆண்டு வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு மலைநகரம், மன்னருக்கென உருவாக்கப்பட்டதாகும். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டனர். எல்லா துறை சார்ந்தவர்களும் சேர்ந்து, மன்னருக்கு பணிவிடை செய்து வந்தனர். நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. அகழ்ந்தெடுக்கப்பட்ட      மனித எலும்புகள் , அவர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் வளைந்து இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
               அழகான முறையில் உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு நகரத்தின் மையத்தில் உள்ள, 'இண்டிகுவாட்னா' (சூரியக் கோயில்) வானியல் மணிக்கூடாகும். இயற்கையில் அமைந்த பாறைகளைக் கொண்டு, சாய்தளங்கள், சுற்றுச்சுவர், மேற்கூரை என கலைவண்ணத்தில் உயர்ந்த வேலைப்பாடுகளை இங்கு காணலாம்.
        இன்கா இன மக்களும், வாழிடங்களும் அழிக்கப்பட்ட போதும், ஸ்பெயின் உள்ளிட்ட எந்த மேற்குலக நாடுகளும் இந்நகரை அறிந்திருக்கவில்லை. ஆதலால், மனிதனின் குரூர வேட்டையிலிருந்து மச்சு பிச்சு தப்பியது.  வரலாற்றின் புராதன நகரங்களுள் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் (2017) மட்டும் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள மச்சு பிச்சு நகரம், மலையின் மடியிலே - மாபெரும் சொர்க்கமாகும்.
               எழுத்து வடிவம் இல்லாததால், சொந்த      மொழியில் ஆவணங்கள் இல்லை. இன்கா இன மக்களின் வரலாறு,  இன்று கல்லில் மட்டுமே எஞ்சியுள்ளது.   இதிலிருந்து   நாம் அறிந்து கொள்ள செய்தி எதுவாக இருக்கக்கூடும்?

மொழியையும் கலையையும்  நமது இரு கண்களாய்ச் சுமப்போம்.!

No comments:

Post a Comment