Friday, July 20, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 20

நிலவிலும் நடக்கலாம்..!


     மானுட இனத்தின் மாபெரும் அறிவியல் பாய்ச்சல்  நிகழ்ந்த தினம் இன்று.  முதல் முறையாக நிலவின் மீது காலடி வைத்து,  “இது ஒரு மனிதனைப்  பொறுத்த வரை , சிறிய காலடிதான். ஆனால், மானுட சமூகத்தின் மிகப்பெரிய பாய்ச்சல் !” என்ற பிரகடனத்தை நீல் ஆம்ஸ்ட்ராங், 1969 ஆம் ஆண்டு இதே நாளில் தான் உரக்கச் சொன்னார்.  அமெரிக்க மக்களின் பிரியத்திற்குரிய அதிபர் ஜான் எஃப் கென்னடியால் தொடங்கப்பட்ட அப்பல்லோ 11 திட்டம் வெற்றியடைந்தது.
            விண்வெளிப் பயணத்தில் , நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டிபோட்டுக்கொண்டு திட்டங்களை வகுத்தன. அப்பல்லோ 11 என்ற விண்கலத்தை 1969, ஜுலை 16 அன்று நாசா ஆய்வு மையம், Cape Kennedy ஏவு தளத்திலிருந்து, நிலவுக்கு அனுப்பியது. ஜுலை 20 ஆம் தேதி , 20:17 மணிக்கு ஈகிள் எனப் பெயரிடப்பட்ட  சந்திரப் பகுதி நிலவில் இறங்கியது. அதில் இருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் பதித்தார். தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவில் நடந்தார். அவர்கள் இறங்கிய நிலவின் பகுதிக்கு “அமைதிக் கடல்” என பெயரிடப்பட்டது.
             அப்பல்லோ 11 விண்கலம் மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது. Command Module , Service Module மற்றும் Lunar Module  என்ற மூன்று பகுதிகளும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டன. இதில் சந்திரக் கூறு மட்டும் நிலவில் இறங்க , ஏனைய இரு பகுதிகளும் நிலவின் வட்டப்பாதையை சுற்றிக்கொண்டிருந்தன. இரு வீரர்களும் நிலவில் இறங்கிய போது, மைக்கெல் காலின்ஸ் என்ற மூன்றாவது விண்வெளி வீரர் விண்கலத்தின் கொலம்பியா என்ற பெயர் கொண்ட  கட்டளைப்பகுதியை இயக்கிக் கொண்டு, நிலவின் வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தார். 
                 கட்டளைப் பகுதியோடு இணைக்கப்பட்டிருந்த சேவைப்பகுதியில் தான் , வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், நீர், வாகனத்தின் எரிபொருள் போன்றவை இருந்தன.  அப்பல்லோ 11  வெற்றிகரமாக , ஜுலை 24ல் பூமிக்குத் திரும்பும் போது, கொலம்பியா (Command module) பகுதி மட்டும் திரும்பியது. மீதி இரு பகுதிகளும் கழற்றி விடப்பட்டன. வீரர்கள் இறங்கி நடந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. 
                  ஆனாலும், ஆரம்பத்தில் ரஷ்யா இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. Moon Conspiracy Theory என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, நாசா அமைப்பை எரிச்சலூட்டியது. ஆனால், நிலவின் முதுகில் மனிதர்கள் நடந்ததை ,
தொலைக்காட்சியில் கண்டுகளித்த  700 
மில்லியன் மக்களால் இந்நிகழ்வு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அன்று முதல் விண்ணை அடக்கியாளும் மனிதனின் வேட்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
                      

No comments:

Post a Comment