Sunday, July 15, 2018

சூரியனும் சந்திரனும் - 1

            ஆங்கில அகராதியை ஒரு நாவல் படிப்பது போல,  ஒரு கட்டுரை நுலைப் படிப்பது போல ரசித்து  படிக்க வேண்டும் என எனது ஆசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஒரு மொழியின் வார்த்தையும், சூழ்நிலைக்கு ஏற்ப அதன் பயன்பாடும் எண்ணற்ற சாத்தியங்களையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கும். நாம் தான், அதனை ரசனைக்குரியதாக மாற்றி படிக்கப் பழக வேண்டும். அப்படிப் பழகி விட்டால், ஒரு நெல்லிக்காய் சுவைப்பது போல, அதன் இனிமை நம்மை குதூகலப் படுத்தும். உதாரணமாக, SET என்ற ஆங்கில வார்த்தையை பலமுறை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். மிக எளிய வார்த்தை, சிறிய வார்த்தை. ஆனால் அதன் தனித்துவத்தை நாம் கவனிப்பது இல்லை. எந்த ஒரு தரமான அங்கில அகராதியை எடுத்துப் பார்த்தாலும், SET என்ற வார்த்தைக்கான பொருள் நிச்சயம் இரண்டு பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும். ஏனெனில், SET என்ற வார்த்தை  126 விதங்களில் வினைச்சொல்லாகவும்(VERB) , 56  வகைகளில் பெயர்ச்சொல்லாகவும்(NOUN) பயன்படுகிறது. ஆங்கில மொழியில் மிக அதிகமான பொருளைத் தரக் கூடிய ஒரு வார்த்தை இதுதான். அடுத்த முறை அகராதியைப் புரட்டும் பொது, SET என்ற வார்த்தையை கொஞ்சம் புரட்டி பாருங்கள்.

                ந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டித ஜவகர்லால் நேருவை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவோ, ஒரு அரசியல் தலைவராகவோ மட்டும் பார்க்க வேண்டியது இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது நுல்கள் யாவும் அறிவுப் புதையல்கள். தேச விடுதலைக்காக அவர் சிறைப்பட்டுக் கிடந்தபோது, தனது செல்ல மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றுள் வழக்கமான விசாரிப்புகளும்,சொந்தக் கதைகளும் இல்லை. மாறாக, இந்திய வரலாறும், உலக வரலாற்றுப் பார்வையும் எழுதப்பட்டிருக்கிறது. The Discovery of India, Glimpses of World History   என்ற பெயரில் வெளிவந்துள்ள அந்தப் புத்தகங்கள் தமிழாக்கமும் செய்யப்பட்டிருக்கின்றன.
                இந்த உலகில் நாம் செய்யும் செயல்களில் எது சரி,எது தவறு என பல நேரங்களில் குழம்பி விடுகிறோம்.மகள் இந்திராவுக்கு நேரு சொல்லும் அறிவுரையை கவனியுங்கள்.


               " It is no easy  matter to decide what is right and what is not. One little test I shall ask you  to apply whenever  you are in doubt. It may help you. Never do anything in secret or anything that you would wish to hide.”  இது இந்திராவுக்கு மட்டும் சொன்னதல்ல. நம் எல்லோருக்கும் தான்.

No comments:

Post a Comment