Friday, July 27, 2018

நாளும் அறிவோம்- ஜுலை 27

 உலகக் குடிமகன் - காரி டேவிஸ்!

ஜூலை 27.... இன்று!

          அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, 'உலகக் குடிமகன்' என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013) பிறந்த நாள் இன்று.
                  அடக்கு முறை, சிறைவாசம்,  ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத மனதுடன் , 1953 செப்டம்பர் மாதம் 'உலக அரசாங்கத்தை' ஏற்படுத்தினார் காரி டேவிஸ்.   இன்றும்     அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ‘ உலக பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை (நிபந்தனைக்குட்பட்டு) அங்கீகரித்துள்ளன. நியூயார்க் நகரில் செயல்படும் இந்த அமைப்பின்  "World Service Authority" பிரிவில், இதுவரை 25,00,000 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கென்று தனி சட்டங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன.
                  அமெரிக்காவில்,1921- ஜூலை 27ல்,  யூத தந்தைக்கும், அயர்லாந்து நாட்டு அன்னைக்கும் மகனாகப் பிறந்த காரி டேவிஸ், பட்டப்படிப்பும், தொழில்நுட்பக் கல்வியும் பெற்றவர். சில காலம் , பிராட்வே நாடகக் குழுவில், நடிகராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது,பி-17 குண்டு வீசும் விமானத்தில் பயணித்து, ஜெர்மனி நாட்டின் நகரங்களில் குண்டு வீசினார்.  இருப்பிடம் திரும்பிய பின்பு, அழிவுகளின் புகைப்படங்களைப் பார்த்தார். மனம் வருந்தினார். எல்லைகள் பிரித்ததும், நாடுகள் பெயரிட்டதும் மனிதனை மனிதன் கொன்று அழிக்கத்தானா என தனக்குள் கேள்வி எழுப்பினார். மறுமுறை விமானத்தில் சென்று,  குண்டுகள் வீசாமல் திரும்பி வந்ததால், தண்டனைக்கு உள்ளானார்.
            பாரீஸில் சார்போன் பல்கலைக்கழகத்தில்  நடராஜ குருவின்(நாராயண குரு குலம்)  நட்பைப் பெற்றார். இருவரும் இணைந்து ஒரே உலகை உருவாக்கும் திட்டங்கள் தீட்டினர். ரிக் வேத வாக்கியமான "வசு தைவ குடுமபகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற சொல்லாட்சி தன்னை பெரிய அளவில் சிந்திக்க வைத்ததாக காரி டேவிஸ் எப்போதும் சொல்லுவார்.
             1948ஆம் ஆண்டு முதல் உலகக் குடிமகனாக தன்னை அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ், 1954ல் இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார். பிறகு, நடராஜ குரு, ஆர்.கே.லெட்சுமணன்   போன்ற ஆளுமைகளின் முயற்சியாலும், ஜவகர்லால் நேருவின் நேரடி தலையீட்டினாலும், அவரது உலக பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு,  எட்டு மாத காலம், ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருக்கும் நாராயண குரு குலத்தில் தங்கினார். வாழ்வின் இறுதி வரை , குறிப்பிட்ட கால  இடைவெளியில் இந்தியா வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
          ஒருமுறை காரி டேவிஸ், தென் ஆப்ரிக்கா நாட்டில் நான்கரை ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள்ளேயே தனது உலகத்தை உருவாக்கிக் கொண்டு, மன உறுதியோடு நிமிர்வ்து நின்றார் கார் டேவிஸ்.  1986ல் நடைபெற்ற அமெரிக்க மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு, வெறும் 585 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.    காந்தியவாதியாகவே  இருக்க விரும்பிய காரி டேவிஸ், அமைதி வழியிலேயே, 150 நாடுகள் இவரது உலக பாஸ்போர்ட்டை ஏற்கும் படி செய்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
                 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையே உயிரெனக் கொண்டார்.      ஆகாயத்தின் கீழ் யாவரும் ஒரே குடும்பம் என்ற இலட்சியத்தை நடைமுறைப்படுத்த,  இறுதிவரை (2013) போராடினார்  காரி டேவிஸ்.   ஆம்,  தேசத்தின் எல்லைகள்-
மானுட சிந்தனையைச் சுருக்கும் கயிறுகளோ என்னவோ! 
            இலட்சியங்களின் வெற்றி தோல்விகளை வரலாறு பார்த்துக்கொள்ளும்.ஆனால்  இலட்சியங்கள் சமூகத்தை  ஒன்றுபடுத்துவதாக,  மேன்மை செய்வதாக   இருக்க வேண்டும்.             

No comments:

Post a Comment