Wednesday, July 18, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 18

நல்லிணக்கப் பறவை- நெல்சன் மண்டேலா

ஜூலை 18... இன்று!

          1994 ல், தென் ஆப்ரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர்; ஆயுதப் போராட்டத்தில் களம் கண்டு, பின்பு அஹிம்சை வழிக்கு மாறியவர்; உலகத் தலைவர்களில், மிக நீண்ட காலம் சிறையில் வாடிய சிறைப்பறவை; சிறப்பான கால்பந்தாட்ட வீரர்;  நோபல் பரிசு உட்பட 250க்கும் மேற்பட்ட சர்வதேச பரிசுகள் இவரை அலங்கரித்து, தான்  பெருமை கொண்டன. உலக வரலாற்றின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலாவின் (1918-2013) பிறந்த தினம் இன்று.!

            1918- ஜூலை 18 ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவில் வெஸோ(Mvezo) என்னும் குக்கிராமத்தில் காட்லா என்பவரின் மகனாகப் பிறந்தார். கோசா பழங்குடி மரபைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ரோலிலாலா(Rolihlahla). தாத்தாவின் பெயரான மண்டேலா பின்னொட்டுப் பெயராகி, ரோலிலாலா மண்டேலா என அழைக்கப்பட்டார்.
              
 கோசா பழங்குடி மரபில், முதல் முறையாக பள்ளி சென்ற இவருக்கு , பிரிட்டிஷ் ஆசிரியை ம்டிங்கானே வைத்த பெயர்தான் நெல்சன். அதுவே நிலைத்துவிட , அவர் நெல்சன் மண்டேலா என்றே அழைக்கப்படுகிறார். படிப்பின் மீதும், வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த இவர், பட்டப்படிப்பையும், சட்டக் கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். கல்லூரி நாட்களில் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதியில் உணவின் தரம் குறையக் கூடாது என்பதற்காக போராட்டங்களையும் முன்னெடுத்தார். 
                   
     கறுப்பின, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்கும் பொருட்டு, ஏகாதிபத்திய சக்திக்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்கினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆயுதப் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பேற்றார். பலமுறை சிறை சென்ற இவருக்கு, 1964ல் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.  விசாரணையின் போது, வழக்கறிஞர் என்னும் அடிப்படையில், I am prepared to die என மூன்று மணிநேரம் அவர் செய்த வாதம், உலக அளவில் தலைவர்களையும், புரட்சியாளர்களையும் சிந்திக்க வைத்தது.
 
     ராபன் தீவில், 8*7அடி கொண்ட தனியறையில் 27 ஆண்டுகள் கூட்டுப் புழுவாய் தவமிருந்தார். விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் (1994) வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றார். இவருக்கு மூன்று மனைவியர். ஐந்து குழந்தைகள். தனது, 95வது வயதில்,  2013, டிசம்பர் 5ஆம் தேதி, மறைந்தாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

           1993ல் உலக  சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற்ற, இந்தியர் அல்லாதவர் இவர் மட்டுமே!.

         வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்த நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளை, சர்வதேச நல்லிணக்க நாளாகக் கொண்டாட,  ஐ.நா.சபை அறிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment