Sunday, July 15, 2018

நாளும் அறிவோம் - ஜூலை 15

            ஜூலை 15 -மறைமலை அடிகள் பிறந்த நாள்!

             
                  ஜூலை 15, 1876ஆம் ஆண்டு, சொக்கநாதப் பிள்ளை- சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்த சாமி வேதாச்சலம், தனது  பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்ட நிகழ்வு தான் (1916) தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றுக்கண். 

         'பெற்ற தாய் தனை மக மறந்தாலும்.....' என்ற பாடலை மகள் நீலாம்பிகை பாடும்போது, அதில் வரும் தேகம் எனும் வடமொழிச் சொல் ரசனையைத் தடுப்பதாக எண்ணினார். 'தேகம் என்பதற்குப் பதிலாக யாக்கை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் அல்லவா?' என மகளிடம் வினவினார். 'அப்படியென்றால் பிறமொழிக் கலப்பில்லாமல் தனித்தமிழிலேயே நாம் பேசுவோமா?' என்று 13 வயது மகள் நீலாம்பிகை பதில் வினா தொடுத்தபோதுதான் தனித்தமிழ் இயக்கம் உரு கொண்டது எனலாம். தன் பெயரை மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளின் பெயரையும் தூய தமிழுக்கு மாற்றினார்.
அறிவுத்தொடர்பு(ஞானசம்பந்தன்), மணிமொழி(மாணிக்கவாசகம்), அழகுரு(சுந்தரமூர்த்தி), முந்நகரழகி(திரிபுர சுந்தரி) என அவர் தொடங்கிய மாற்றங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக அமைந்தன.

     1912ல் பல்லாவரத்தில் அவர் தொடங்கிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை "பொதுநிலைக் கழகம்" என்று பெயர் மாற்றினார்.
வெறும் பெயர் மாற்றத்தினால் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு மிக்க நூல்களை தனித்தமிழில் எழுதி, தமிழன்னைக்கு மேலும் அழகூட்டினார்.

        சைவ சித்தாந்தக் கருத்துக்களை மேற்குலக நாடுகளும் அறியச் செய்ய ஆங்கில இதழ்களை நடத்தினார். பதிப்பகமும் இவர் முயற்சியால் தான் தொடங்கப்பட்டது.

          சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வில் இவருக்கு கேட்கப்பட்ட வினா, "குற்றியலுகரத்திற்கு மூன்று உதாரணம் சொல்லுங்கள்".
அளிக்கப்பட்ட பதில், "அஃது எனக்குத் தெரியாது". கேள்விக்கணை தொடுத்த பரிதிமாற் கலைஞர், பொருத்தமான பதிலைக் கொடுத்த மறைமலையடிகளுக்கு உடனே பணிநியமன உத்தரவு வழங்கினார்.
இரு தமிழறிஞர்களும் தமிழால் இணைந்தனர்; தமிழுக்காகவே இயங்கினர்.

       திருவொற்றியூர் முருகன் மீது மும்மணிக்கோவை இயற்றிய மறைமலையடிகளின் இரு கண்கள் தமிழும், சைவமும். காளிதாசனின் சாகுந்தலத்தை தமிழில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து,   சங்கராச்சாரியாரின் பாராட்டு பெற்றார்.

      முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலான பல நூல்களுக்கு எளிய முறையில் தமிழ் உரை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பின்னாளில், "மறைமலையடிகளும், கா.சு.பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்’’ என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டார்.

       சாதி மறுப்பு, ஆலய நுழைவுப் போராட்டங்களில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். முருகவேள் என்னும் புனைப்பெயரில் தான் தொடர்ந்து  கட்டுரைகள் எழுதி வந்தார்.

        வடமொழி மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பான புலமை கொண்டிருந்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை  மறைமலையடிகள் 1950ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ஆம் நாள் மண்ணுலகில் இருந்து நீங்கினார்.

தனித்தமிழ் வளர்ப்போம்!!

No comments:

Post a Comment