Tuesday, October 25, 2022

நூல் அறிமுகம் - ’ஆலகாலம்’



ஆலகாலம் – கலைச்செல்வி.

                                                            (1)

”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

 பெருமை உடைத்தது இவ்வுலகு.”   

            3 இலட்சம் ஆண்டுகளாய், மனிதனின் பார்வையில் மாறாதிருப்பது நிலையாமை மட்டுமே. வாழ்ந்து முடித்த அத்தனை கோடி மனிதர்களின் கண்களையும் ஒன்றாக இணைத்து, கூட்டுக் கண்களாக்கி, முழுமைக் காலத்தையும் ஒற்றைப் பார்வையில் பார்க்க முடிந்தால், இரண்டு உண்மைகளை நம்மால் உணர முடியும். ஒன்று, மரணம் ஏற்படுத்தும் நிலையாமை. இரண்டு, அதனில் இருந்து மீண்டெழ - இலட்சிய மனங்கள் கைக்கொண்ட வழிகள்.

              ஆறுகளும், கடல்களும் மலைகளும் அழிந்து அழிந்து, புதிது புதிதாய் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதைப் போலவே, மனிதர்களும் விலங்குகளும் காலச் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.  இங்கே சாஸ்வதமானது என்ற ஒன்று இல்லவே இல்லை.

சிந்திக்கும் பழக்கத்தின் ஆரம்ப காலத்தில் மனிதனின் கவலை என்பது அன்றாடங்களாகத்தான் இருந்திருக்கும். நாகரீகம் தனது முடிவற்ற நீண்ட பயணத்தைத் தொடங்கியபோதுதான், நிலையாமையின் துயரப் பிடி, மானுட மனத்தினை இறுக்கத் தொடங்கியிருக்கும் . இனி எந்தச் சூழ்நிலையிலும் மாண்டவர் மீளப் போவதில்லை என்னும்  ரணம், எத்தகைய மனிதனையும் கலைத்துப் போட்டு விடுகிறது .

 மனைவி இறந்ததால் தன்னை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள், உளமார உடன்கட்டை ஏறும் மனைவிகள்,  பெற்ற பிள்ளைகளின் இழப்பினைத் தாங்கிக் கொள்ள இயலாமல் மூச்சை நிறுத்திக் கொள்ளும் பெற்றோர்கள், உற்ற நண்பனின் உயிரோடு, தனது உயிரையும் சேர்த்துப் பிரியும் நண்பர்கள் என பிரிவினைத் தாங்கிக் கொள்ள இயலாமல்  தன்னையே காலத்தில் கரைத்துக் கொள்ளும் மனிதர்கள் நிலையாமை அலைகளுக்குள் மூழ்கிப் போனவர்கள். வரலாற்றில் அவர்கள் ஒருபிரிவினர்; பெருந் திரளானவர்கள்.   

இரண்டாவது வகை, பிரிவின் துயர விசையை, வாகாக மடை மாற்றி- பெருஞ்செயல்களுக்குள் அதனைச்  செலுத்தி நிலைத்திருப்பதே நிலையாமையை எதிர்கொள்ளும் மிகச் சிறந்த வழி என்பதைக் கண்டுணர்ந்த மானுடர்கள். இவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்கள். இதற்கான சன்றுகளை மானுட வரலாறு முழுமைக்கும் காண முடியும்.  

  மரணம் போலக் கற்றுத்தரும் மிகச் சிறந்த ஆசான் இங்கே யாருமில்லை. நெருங்கிய உறவுகளின் துயரம், மரணம் - மனிதனது சிந்தனைகளின் புதிய சாளரத்தினைத் திறந்து விடுகிறது.   ’நிரந்தரமின்மைதான் இந்த உலகில் நிரந்தரமான ஒன்று’ என்பதை உணர்ந்து விட்டால் வாழ்வின் பூரணத்துவம் பிடிபட்டு விடுகிறது.

  நம் மண்ணில்- பல்வேறு காலக்கட்டங்களில்   பிரிவின் வாதையில் இருந்து விடுபட்டு, தன் மனத்தினை நிறைவின் பொருட்டு ஒப்புக் கொடுத்து – அதன் வழி, மீட்சி அடைந்த ஐந்து மனிதர்களின் வாழ்வினையும் இணைத்து ’வாழ்வதன் பேருண்மை’ பற்றி விவாதம் செய்கிறது  கலைச்செல்வியின் ’ஆலகாலம்’ என்ற இந்த நாவல்.

 

                                                (2)

”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

 பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு

 சூரையன் காட்டிடைபோய்ச் சுட்டிட்டு

 நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே!”

-பட்டினத்தார்.

        சேந்தமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலையும் பாணர் கூட்டத்தின் வாழ்வினப் பேசுகிறது நாவலின் முதல் பகுதி.  தன் மீது, அளவற்ற நேசம் கொண்டிருந்த சகோதரி  குழலியின் கரங்களுக்குள் தான்-  அறிவுடை நம்பி என்ற பாணனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருநதது. சேந்தமலையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சேந்தமனைக் காதலிக்கும் குழலி, துள்ளிக் குதிக்கும் இளமானைப் போல, மகிழ்ந்து திரிகிறாள். அவளது காதலனைக் கண்டு, இருவரையும் இணைத்து வைக்கும் பயணத்தில் இருக்கும் போதுதான், சங்ககாலப் புலவன் மாங்குடி மருதனாரைச் சந்திக்கிறான் நம்பி. சேந்தமலையும், அதன் தலைவன் சேந்தமனும் இந்நேரம் சிதறிப் போயிருப்பார்கள் என்ற செய்தியைப் பகிர்கிறார் மருதனார்.  இனி எந்நாளும் நிறைவேறவே இயலாத குழலியின் காதல் வாழ்வு, அத்தனை சீக்கிரத்தில் சுருங்கிப் போனதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.  தனது தமக்கையின் வாழ்வு, மீட்டப்படாத யாழினைப் போல, பயன் அற்றுப் போய்விட்டதை எண்ணிக் கலங்குகிறான் பாணன்.  தன்னிடம் இருந்த யாழில் இசை மீட்டத் தொடங்குகிறான். அந்தக் கானகம் இசையால் நிரம்பத் தொடங்குகிறது. நிறைவு தரும் இசையின் கரங்களுக்குள் குழலியும் அவனும் நுழைகிறார்கள். மனம் ததும்பி, நிறைவில் நிறைந்து வழிவதாக முதல் காலக்கட்டம் முடிகிறது.  

ததும்பி வழிந்த மனத்தினை, கண்கள் மூடி அடக்கிக் கொண்ட மணிமங்கலத்துச் சிற்பி  விக்கிரமனின் வழியாக இரண்டாம் காலக்கட்டம் துவங்குகிறது.  எதிர்பாராத துயரங்களால், மனம் துவண்டு, வட தேசம் வரை அலைந்து திரிந்த விக்கிரமன், மீண்டும் பல்லவ தேசம் வருகிறான். கடற்கரையில் நிலைத்து நிற்கும் பாறைகள் வழியே, காலத்தைக் கடந்து நிற்கும் மாபெரும் ஓரு சிற்பத்தொகுதியை உருவாக்குகிறான்.  அவனது வாழ்வில் உண்டான இழப்பின் வலியை, விசையென மாற்றி – காலம் கரைத்துவிட முடியாத மாமல்லபுரச் சிற்பங்களை உருவாக்குகிறான். நிலையின்மையே நிஜம் என்பதை உணர்ந்த விக்கிரமன், மீண்டும் வட திசை நோக்கி நடக்க, அவன் வடித்த சிற்பங்கள் அவனையே நோக்கி நிற்பதாக, இரண்டாம் காலக்கட்டம் முடிகிறது.  

மகாமண்டபத்தில் இருந்த இராசாதித்தனின் சிற்பம், முதலாம் பராந்தகச் சோழனையே பார்த்துக் கொண்டிருப்பதாகத் தொடங்குகிறது மூன்றாம் பகுதி. தக்கோலப் போரில் தனது ஆசை மகன் இராசாதித்தனை இழந்த பராந்ததகன், தனது வெறுமையில் இருந்து மீள முயற்சி செய்கிறான். மறைந்து போன தனது தந்தையிடம்  மரணம் குறித்து விசாரணை மேற்கொள்கிறான். அந்தப்புரத்தில் இராசாதித்தனின் தாயிடம் விடை தேடுகிறான். உலகில் மிகக் கொடுமையான புத்திர சோகத்தில் இருக்கும், பராந்தகனின் மனம் சுமக்க முடியாத பாரமாக இருக்கிறது. இறுதியாக, பொன்னி நதியின் வடகரையில் வீற்றிருக்கும் சாட்சி நாதேஸ்வரரின் ஆலயக் கருவறையில் ஈசனின் புன்னகையில் மனம் கரைந்து நிற்கிறார் பராந்தகன். லிங்கத் திருமேனியில் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கு போது, ஈசனும் பராந்தகனும் மானசீகமாக  உரையாடிக் கொள்கிறார்கள். நிலையாமை குறித்தும், மரணம் குறித்தும் விசாரணை தீவிரம் கொள்கிறது. தில்லை வாழ் நடராசனுக்கும், அம்மைக்கும் பொன்னால் கூரை வேய்ந்து, அதன் நிழலிலேயே இளப்பாறுகிறான் பராந்தகன். ஈசன் வீற்றிருக்கும் கனக சபையில் ஏனைய நாட்களைக் கழிக்கிறார். காலத்தாலும் தொடவியலாத அசைவின்மை எது என பராந்தகச் சோழன் உணர்ந்து கொள்கிறார்.

கால்கள் நகர்ந்தும் அசைவின்மையை உணரும் முத்துலெட்சுமி, தனது மகன் சுப்பையாவை நாடகக் கம்பெனியில் விட்டுச் செல்லும் காட்சியில் தொடங்குகிறது நான்காம் காலக்கட்டம். சுப்பையாவின் மனம் வழியாக இந்தப் பகுதி நகர்கிறது. விடுதலைப் போராட்ட வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்ட சுப்பையா, வங்காளப் பகுதிக்குச் செல்கிறார். காந்தியின் மீதான அபிமானம் மேலெழும்பி வர,  வார்தா ஆசிரமம் சென்று தங்குகிறார். அங்கே, மகாத்மா காந்தி, மகாதேவ் தேசாய் என பெரும் மனிதர்களோடு உரையாடுகிறார். வங்காளப் பெண் கோத்ரி உடனான  காதலும் கடந்து போகிறது. கஸ்தூரி பாவின் மரணத்தினை மகாத்மா எப்படிக் கடந்து போகிறார் என்பதை சுப்பையா உடனிருந்தே பார்க்கிறான். பற்றற்ற வாழ்வும், ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கர்ம யோகமும் தான், வாழ்வின் துயரங்களைக் கடந்து செல்லும் மீட்சிக்கான வழி என்பதை காந்தியோடு உரையாடுவதன் வழியே சுப்பையா உணர்ந்து கொள்கிறான். பிரார்த்தனைக் கூடத்தில் ஒளிரும் சிறு ஒளியில், அவன் மனம் நிறைவு கொள்கிறது.

பிரார்த்தனைக் கூடத்தில் ஒளிரும் சிறு ஒளியைப் பார்த்துக் கொண்டே அந்த இரவினைக் கடத்திக் கொண்டிருந்த அமுதனின் வாழ்வினைக் குறித்த கதைதான் நாவலின் ஐந்தாம் பகுதி. எதிர்பாராமல் தனது தாயை இழந்துவிட்ட அமுதனின் உள்ள அலைகழிப்புகளைச் சுற்றி நகர்கிறது இப்பகுதி. தாயின் பொருட்டு, துறவு நிலை என்பதையும்   மீறி, இறுதிக் காரியங்கள்  செய்த பட்டினத்தார், ஆதி சங்கரர்  போல் அல்லாது, தாயின் நினைவுகளில் கங்கைக் கரையில்  துறவு கொள்கிறான் அமுதன். பருப்பொருளாகவும், மனத்தின் இருப்பாகவும் இங்கே இருப்பவை யாவும் சுமையென அமுதன் அறிகிறான்.  யதியின் கவிதைகளும், மணிக்கர்ணிகா  ஆற்றுத் துறையும் அவனுள் ஏதேதோ சிந்தனைகளை உருவாக்குகின்றன.   நானும் உனக்குச் சுமையா எனக் கேட்டபடியே அமுதனின் மனத்தோடு உரையாடுகிறாள் தேவி. கம்பிக் கதவுகளில் இருந்து வெளியே வந்த தேவி, இயற்கையால் நிறைவு கொள்வதே வாழ்வு எனக் கூறுகிறாள். அமுதன், வெகுதூரம் நகர்ந்து சென்ற பிறகு, படித்துறையில் ஒரு சிதை எறிந்து கொண்டிருந்தது. அது, தேவியின் மூக்குத்தியென ஒளி கொண்டிருந்ததைப் பார்க்கிறான். ஆக, ஒளி என்பது ஒன்றுதான் எனப் புரிந்து கொள்கிறான் அமுதன்.

 

                                          (3)

” நிலம் தானே உடலைத் தாங்குகிறது?

 உடல் அத்தனை பாரமா?

 மனத்தின் பாரம் உடலில் அல்லவா இறங்குகிறது!”

- நாவலில் இருந்து…

       சங்க காலம், பல்லவர்களின் காலம், பிற்காலச் சோழர்களின் காலம், இந்திய விடுதலைப் போராட்டக் களத்தின் உச்சக் கட்டக் காலம், தற்போதைய காலக்கட்டம் என்ற ஐந்து காலக்கட்டங்களையும் அதனதன் வடிவங்களில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர். மொழிநடை, வர்ணனை, கதை மாந்தர்களின் உளவியல் சார்ந்த பகுதிகள் ஆகியன மிகச் சிறப்பாக வந்துள்ளன.  

அந்தாதி போல, பொருள் பொதிந்த தனது அழகிய சொற்களால் ஐந்து காலக்கட்டங்கலையும் முடிச்சிட்டு – ஒரு சரடென மாற்றியிருக்கிறார்.  தான் உருவாக்கிய பாத்திரங்களை வரலாற்று மனிதர்களோடு விவாதம் செய்ய வைத்திருக்கும் பகுதிகள் அபாரம்.  பகத்சிங்கைக் காப்பாற்றும் விஷயம், தாழ்த்தப்பட்டோருக்கான தனிதொகுதி விவகாரம் போன்றவற்றில் காந்தி அடிகளின் தரப்பும், அவரது எதிர் தரப்பின் வாத பிரதிவாதங்களும் சரிசமமாக வந்து போகின்றன.

மகாபலிபுரச் சிற்பங்களை, கலையில் தோய்ந்த ஒரு மனிதனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் இரண்டாம் பகுதி நன்றாக வந்திருக்கிறது. அவனது பயணத்தில் அவன் கண்ட காட்சிகள் பாறையினுள் புகுந்து சிற்பமென வளரும் பகுதிகள் அபாரம்.

சாட்சிநாதேஸ்வரரின் அபிஷேக ஆராதனையின் போது, ஈசனுக்கும் பராந்தகச் சோழனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் பகுதிகள் அழகியல் உச்சங்களில் ஒன்றெனக் கொள்ளலாம். அபிஷேகம் தொடங்கி  சட்ட நாதர் அணி கொள்ளும் வரை, வர்ணனையும் உரையாடலும்  பேரழகு. தொடர்ந்து வரும் பகுதியான, தில்லையில் பொற்கூரை உருவாகும் விவரணைப் பக்கங்கள் - வாசிப்பவனின் முன்னே, பராந்தகச் சோழனின் உள்ளத்தை நிரப்பி விடுகின்றன. நின்று நிதானித்தே கடக்க முடிகிறது.

கங்கைக் கரையில் வீற்றிருக்கும் தேவியிடம் அமுதன் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் அடர்த்தி மிகுந்தவை.  தேவியின் மூக்குத்தி ஒளி – மணிக்கர்ணிகா படித்துறையில் எரியும் சிதையின் ஒளி – வாழ்வின் மீதான  குரு யதியின் கவிதைகள் என நாவலின் இறுதிப் பகுதி , மனத்தின் ஆழத்தைத் தொட்டு எழுப்புகின்றன.  

            மெய்யியல் உண்மைகளைத் தேடி அலையும் முதன்மைப் பாத்திரங்களின் விவாதப் பகுதிகள், மனதினால் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டியவை.

                                   

(4)

”விடாய் கொள்வதும்

விடாய் தீர்ப்பதுமன்றி

வாழ்க்கை என்பது

வேறொன்றுமில்லை.”

-         நாவலில் இருந்து…

     இந்த உலகில் ஈடு செய்ய இயலாத துயரம் என்பது பிரிவுத் துயர் தான். துயர நேரத்தில் மட்டும் வார்த்தைகள் பொருள் இழந்து, மதிப்பு இழந்து போகின்றன. காலம் உறைந்து போய்விட்டதாக, மனம் பிரம்மை கொள்கிறது. ஆனால், காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

மானுட வாழ்வு, காரியங்களையே எதிர்நோக்கி நிற்கிறது. காரியங்களுக்கான காரணங்கள் அறிய முடியாமற் போனாலும், இங்கே காரியம் ஆற்றுவதே முதன்மையானது. அதுவே பூரணத்துவ வாழ்வு என்பதை ’ஆலகாலம்’ நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. இந்த நாவல் பேசுவது, இழப்பினால் வரும் நம்பிக்கையின்மையை அல்ல; மாறாக, ஏதோ ஒரு வகையில், வாழ்வினைப் பற்றிக் கொண்டு, பூரணம் அடைவதைப் பற்றியே விசாரணை மேற்கொள்கிறது.

செயலின்மையை உருவாக்கும் எந்தத் தடையையும் மீறிட  எத்தனிக்கும் மானுட மனத்தின் இடைவிடாத தேடலே வாழ்வின் சாரம். அது சார்ந்த மெய்ஞ்ஞானத் தேடலை - இந்த நாவல், வாசிப்போர் உள்ளங்களில் நிச்சயம் ஏற்படுத்தும். 

நூல்: ஆலகாலம்

ஆசிரியர்: கலைச்செல்வி

பதிப்பகம்: யாவரும் பதிப்பகம்,  சென்னை-42.  9841643380.

தளம்: www.be4books.com




 

 

Sunday, May 1, 2022

மெர்க்குரி மரணங்கள்

மினமாட்டா தொற்றுநோய்!



மினமாட்டா என்பது ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு கடற்கரை நகரம். 1955-களின் மத்தியில், அந்நகரில் இருந்த பூனைகளிடம் விநோதமான செயல்பாடுகள் தெரிய ஆரம்பித்தன. அதீத சத்தம் எழுப்பிக் கொண்டு அலைந்து திரிந்த அப்பூனைகள் திடீர் திடீரென்று கடலுக்குள் குதித்து இறந்து போயின.  பூனைகள் ஏன் இப்படி தற்கொலை செய்து கொள்கின்றன என்பதை அறியாது மக்களும் அரசும் குழம்பிக் கிடந்தனர்.

சில மாதங்களில் மினமாட்டா நகர மக்களிடமும்  புதுமையான நோய்க் குறிகள் தெரிய ஆரம்பித்தன. சிலருக்கு கை, கால்கள் மற்றும் உதடுகள் மரத்துப் போயின. சிலருக்கு பார்வைக் குறைபாடும், செவித் திறன் இழப்பும் ஏற்பட்டன. வேறு சிலருக்கு கை, கால்களில் கட்டிகள் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப் பட்டனர். உடல் தசைகள் சுருங்குவதிலும் விரிவதிலும் சிக்கல்கள் ஏற்பட, பக்கவாதம் போல, கை, கால்கள் இழுத்துக் கொண்டன.  பூனைகளைப் போலவே, சில மனிதர்கள் நாள் முழுக்க சத்தம் எழுப்பிக் கொண்டே அலைந்து திரிந்தனர்.

1956ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, மினமாட்டா நகர மருத்துவமனையின் இயக்குநர் நோய்க்கான காரணத்தை உலகுக்கு முறையாக அறிவித்தார். உடலில் ஏற்பட்ட பாதரச நச்சின் காரணமாக மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மேற்கண்ட பிரச்சனைகள் ஏற்படுவதை உறுதி செய்தார். இது ‘மினமாட்டா நரம்பியல் கொள்ளை நோய்’ (Minamatta Epidemic Disease) எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நோய் தோன்றிய கதையும், அதன் வரலாறும் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தன; பாடமும் கற்றுத் தந்தன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஜப்பானில் இருந்த மிகப் பிரபலமான வேதித் தொழிற்சாலை நிறுவனம் Chisso Corporation. 1908ஆம் ஆண்டு, மினமாட்டா நகரில் இதன் கிளை நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அசிட்டிலீன், அசிட்டால்டிஹைட், வினைல் குளோரைட், அசிட்டிக் ஆசிட் போன்ற வேதிப் பொருள்களின்  தயாரிப்பு மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுக் கழிவுகள் யாவும், மினமாட்டா நதியில் கரைத்து விடப்பட்டன. மினமாட்டா நதியின் வழியாக கடலில் சேர்ந்த கழிவுகள், ஆரம்பத்தில் மீன் பிடித் தொழிலை கடுமையாக பாதித்தது.

நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் வலுவான பொருளாதார மையமாக இருந்த, இத்தொழிற்சாலையை கண்டிக்கவும், தண்டிக்கவும் அப்போது யாரும் இல்லை. ஆண்டுக்கு 200 டன் அசிட்டால்டிஹைட் உற்பத்தி என்ற நிலையில் இருந்து, 6000 டன் என்ற அளவிற்கு தேவை அதிகரித்தது. அதனைச் சமாளிக்க, தொழிற்சாலையில் புதிய புதிய வினையூக்கிகளை பயன்படுத்திப் பார்த்தனர். 1951ஆம் ஆண்டு, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,  மெர்க்குரி சல்ஃபேட்டுடன்  ஃபெர்ரிக் சல்ஃபைடையும்  இணைத்து வினையூக்கியாகப் பயன்படுத்தினர். அசிட்டால்டிஹைட் தயாரிப்பின் போது, அவர்களே எதிர்பாராத வண்ணம், மீதைல் மெர்க்குரி என்ற அதி தீவிர நச்சுச் சேர்மம் 5% அளவில் வெளிவந்தது. அவர்களும் எப்போதும்போல, அதனை மினமாட்டா வளைகுடாவில் கலந்து விட்டனர்.

  அதன் காரணமாக உருவான விளைவுகள்,அங்கிருந்த மக்களை மெல்ல மெல்ல, கொல்ல ஆரம்பித்ததை யாரும் அப்போது உணர்ந்திருக்கவில்லை. 1956, ஏப்ரல் 21ஆம் தேதி, ஐந்து வயது குழந்தை ஒன்று விநோதமான அறிகுறிகளுடன் மருத்துவமனை வந்து சேர்ந்தது. இரண்டு நாள்கள் கழித்து, அதன் தங்கையும் அதே அறிகுறிகளுடன் மருத்துவமனை வந்தது. பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கும் இதே பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதை மினமாட்டா நகர மருத்துவமனை  கண்டுபிடித்தது. புதிரான ஒரு தொற்றுநோய் இங்குள்ள மக்களை பாதித்துள்ளது என்பதை நிர்வாகம் முறையாக  அறிவித்தது.

கடலில் மீன்கள் எல்லாம் செத்து மிதந்ததும், கடற்கரையோரம் காக்கைகள் தானாகச் செத்து விழுந்ததும், பூனைகளின் புதிரான தற்கொலையும் மருத்துவ உலகினை விழிப்படைய வைத்தன.  குமாமோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 4 ஆம் தேதி, ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மீன்கள் மற்றும் கடல் உணவுகளின் வழியாக, மனிதனுக்குள் சென்ற கன உலோகங்கள், நரம்பு மண்டலத்தை பாதித்ததால் தான் மினமாட்டா நோய் தோன்றியிருந்தது. தொழிற்சாலைக் கழிவு நீரோடு வெளியிடப்பட்ட மீதல் மெர்க்குரி என்ற சேர்மமே இந்த நோய்க்குக் காரணம் என்பதும் உறுதிபடுத்தப்பட்டது. தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. பாதரச நச்சால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. நிவாரண உதவியைப் பெறவேண்டி, மக்களும் உடன்படிக்கையில் அப்போது கையெழுத்திட்டனர்.  

சக உறவுகளால், பயந்து- வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்த நோயாளிகளுக்காக 86 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகை, Chisso நிறுவனத்தால் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால், தொழிற்சாலை தொடர்ந்து நடந்தது; மீதைல் மெர்க்குரி மினமாட்டா வளகுடாவில் நாளும் கலந்து கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராடினர். இறுதியாக, 1968 ஆம் ஆண்டு, மினமாட்டா நீரில் நச்சுக் கழிவுகளை வெளியிடமாட்டோம் என தொழிற்சாலை நிர்வாகம் நீதிமன்றத்திடம் உறுதி அளித்தது.

மினமாட்டா கொள்ளை நோய் காரணமாக, 1784 பேர் இறந்து போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதன்  பாதிப்புகள் இன்றைய தலைமுறை வரை தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வரலாற்றுச் சோகம். பாதிப்படைந்தவர்கள் இன்னும் நீதி மன்றத்தின் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு, நீதி மன்றத் தீர்ப்பின் படி, ஆண்டுக்கு 2.1 மில்லியன் யென் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவுகளை Chisso நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் கூட, 50000 க்கும்  மேற்பட்ட மக்களிடம் பாதரச நச்சின் தாக்கம் காணப்படுகிறது.

மனிதனின் விஞ்ஞானம் என்பது இருபுறமும் கூர் கொண்ட கத்திதான். நாம் தான் அதனை நல்வழிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் சரிதான். இயற்கையை வதைத்தும், அழித்தும் தான் வளர்ச்சி என்பது சாத்தியமாகுமா? இங்கே கூட, பவானி ஆற்றிலும், காவிரி ஆற்றிலும் கழிவுகள் கலப்பதை நாம் முழுமையாக நிறுத்தி விட்டோமா? மினமாட்டா நகரில் வசித்தது தான் அந்த மக்கள் செய்த குற்றம் என்றால் யாரை என்ன சொல்வது?

 இயற்கையின் மரணம் என்பது - மானுட இனத்தின் மரணம் என்பதை மட்டும் நாம்  எப்போதும் மறந்துவிடக்கூடாது.

 

 

Friday, April 15, 2022

நதியின் தடம் 1

1.நம்பியே நடக்கிறேன்….





வழியெங்கும் நஞ்சாழி – எங்கோ தெரிகிறது அமுத ஊற்று.

நீந்திக் கொண்டே இருக்கிறேன்.


பொழிகிறது அமில மழை – என்றாவது வரும் வான் தேன் நீர்.

காத்துக் கொண்டே கிடக்கிறேன்.


அழிவின் விளிம்பில் பயிர்த்தாள்கள் – தூரத் தெரியும் கருமேகம்.

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.


முன்னே நட்பாய்ப் பொய்க் கரங்கள் – முதுகைத் துளைக்கும் மெய்வாள்கள்.

ஆற்றிக் கொண்டே நடக்கிறேன்.


வண்ணம் மாற்றும் பச்சோந்தி – அன்ன, நீளும் சொந்தங்கள்.

தேற்றிக் கொண்டே கடக்கிறேன்.


துடுப்பும் கரமும் இழந்தாலும் - அலைகள் கரைகள் அறியுமே.

அலையின் முதுகில் என் வாழ்வு.!


பாறை நம்பும் தேரைக்கு  - கருணைக் கரங்கள் விரியுதே.

இயற்கையின் விரல்களில் என் காலம்!.


தேய்ந்த உடலின் மீதியை – நிலவும் நம்பித் தேடுதே.

நம்பி நகர்வதே  என் பயணம்.!

Sunday, February 7, 2021

எந்நாளும் ‘நினைக்கப்படும்’ - எழுத்தாளர் ஜெயந்தன்

 

எந்நாளும் ’நினைக்கப்படும்’ – ஜெயந்தன்

  ஜெயந்தன் நினைவு நாள் - பிப்ரவரி 7.      

          இந்த உலகில், சமரசங்கள் அற்ற நேர்மை என்பதே ஒரு மனிதனின் பலமும் பலவீனமுமாக மாறிவிடுகிறது. தேவைக்காக வளைந்து கொடுக்காமல், தனது கொள்கைகளோடு நிமிர்ந்தே நிற்பவர்கள் - வாழும் காலத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களது செயல்களை, யாரும் அவ்வளவு எளிதில்  ஒதுக்கி விட முடியாது. தார்மீகமான கோபத்துடன் சமூகச் சிக்கல்களைப் பேசிய, அத்தகைய ஆளுமைகளுள் ஒருவர் தான் எழுத்தாளர் ஜெயந்தன்.  சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் , கட்டுரைகள் என இலக்கியப் பரப்பின் எல்லாத்  தளங்களிலும் ஈடுபாட்டோடு இயங்கிய ஜெயந்தனின் படைப்புகள் , தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன.

        திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில்,  பெருமாள் – ராஜம்மாள் தம்பதியினரின் மூன்றாவது மகனாக, 1937ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15ஆம் தேதி,  ஜெயந்தன் பிறந்தார்.  இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணன். தனது மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்தார். தந்தையில்லாத குடும்பம், பொருளாதார ரீதியில் தடுமாறத் தொடங்கியது. குடும்பத்தின் முழுச் சுமையையும் தனது தோள்களில் ஏற்றுக் கொண்டார் தாய் ராஜம்மாள்.  இட்டலிக் கடை நடத்தி, அதில் வரும் வருமானத்தில் பிள்ளைகளை வளர்த்தெடுத்தாள்.

               தந்தையின் விரல் பிடித்து, இந்த உலகினைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஜெயந்தனுக்கு வாய்க்கவில்லை. ஆனால், மூத்த அண்ணன் திரு.ரங்கராஜன், இவருக்குத் தந்தையென மாறினார். வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நேர்மை, எளிமை, சமூக அக்கறை போன்ற பண்புகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார். அந்நாளைய அரசியல், நாத்திகம் மற்றும் பத்திரிக்கைகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் அண்ணன் வழியாகவே, ஜெயந்தன் கற்றுக் கொண்டார்.  மணப்பாறையில் இருந்த அரசுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்த ஜெயந்தன், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். காமராஜர் காலத்தில், கிராமங்கள் எங்கும் உருவாக்கப்பட்ட ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போதே, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பயனாக,  தமிழ்நாடு வேளாண் துறையில் இளநிலை  உதவியாளராக நியமனமும் பெற்றார். அந்த வேலையிலும் அவருக்கு மனநிறைவு வரவில்லை. பெரும்பாலும் இலக்கிய மனம், வேறெதிலும் நிறைவு கொள்வதில்லை அல்லவா?

               அதன் பிறகுதான், கால்நடைத் துறையில் கிராம கால்நடை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கான உரிய பயிற்சியை சென்னையில் முடித்திருந்தார்.  இளநிலை உதவியாளராக அலுவலகக்  கோப்புகளோடு உரையாடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தினம் தினம் கிராமங்களுக்குச் சென்று மனிதர்களோடு பழகுவது - இவருக்கு ஆனந்தத்தைத் தந்திருக்கக் கூடும். பலதரப்பட்ட மனிதர்களையும், அவர்களது வாழ்வினையும் கூர்ந்து கவனித்த ஜெயந்தன், அவற்றைக் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

                 தான் எழுதிய கதைகளை ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பெரிய வாசகப் பரப்பைக் கொண்ட பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, இவர் எழுதி அனுப்பிய நிறைய கதைகள் பிரசுரம் ஆகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், பத்திரிக்கைகள் இவரது கதைகளைக் கேட்டு வாங்கி பிரசுரிக்க ஆரம்பித்தன. அடித்தட்டு மக்களைப் பற்றியும், அவர்களது வாழ்வின் நீள அகலங்களைப் பற்றியும் இவர் எழுதிய கதைகள் வாசக உலகில் இவருக்கென தனித்த இடத்தை உருவாக்கித் தந்தன.

ரத்தமும் சதையுமாக எதார்த்த பாணியில் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், மனித மனத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சமரசம் ஏதுமின்றி வெளிச்சமிட்டுக் காட்டின. இக்கதைகளை எல்லாம், தீவிர இலக்கிய இதழ்களில் எழுதாமல், வெகுஜன இதழ்களிலேயே தொடர்ந்து எழுதினார். அவ்வாறு எழுதி வெற்றி பெற்றவர்களுள் ஜெயந்தன் முக்கியமானவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெகுஜன இதழ்கள் என்பதற்காக தனது எழுத்தில் எந்த சமரசத்தையும் அவர் செய்து கொண்டதே இல்லை.   

          ‘துப்பாக்கி நாயக்கர்’, ‘பாஷை’ ,  ‘வாழ்க்கை ஓடும்’ , ’சம்மதங்கள்’, ‘பாவப்பட்ட ஜீவன்கள்’ போன்ற இவரது கதைகள் தனித்துவமானவை. இவர் தாமரை இதழில் எழுதிய ‘ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது’ சிறுகதைக்கு,  கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா. அவர்கள் எழுதிய விமர்சனம் குறிப்பிடத்தக்கது. கதையை படித்ததும் நிலை கொள்ளாத அனுபவம் கி.ரா.வுக்கு ஏற்படுகிறது. இந்தக் கதையைப் பற்றி, யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, தனது நண்பன் ஒருவனுக்கு கடிதம் எழுதிகிரார். அதில், இந்தக் கதையை மிகவும் சிலாகித்து எழுதிகிறார். ஜெயந்தன் என்ற பெயரில் அடுத்த கதை எப்போது வரும் எனக் காத்திருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார் கி.ரா.

               ஜெயந்தன் எழுதிய கதைகளில் சில உரிய அனுமதியோடு, படமாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பாலுமகேந்திராவால் படமாக்கப்பட்ட ‘பாஷை’ சிறுகதையைச் சொல்லலாம். அதேநேரம், முறையான அனுமதி பெறாமல் இவரது கதைகளில் பல, திரை வடிவம் பெற்றுள்ளன. சிறுகதைகளைப் போலவே, நாட்டுப்புறக் கலைச்சொற்களைக் கொண்டு, இவர் எழுதிய கவிதைத் தொகுப்பு மிகவும் பிரபலமான ஒன்றாகும். புதிய வடிவத்தில், மொழியின் பாய்ச்சலோடு இருந்த இந்தக் கவிதைகள், ‘காட்டுப்பூக்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்தது.

                    தனது வாழ்வின் பிற்பகுதியில், எதார்த்த பாணியிலான கதைகளைத் தவித்து விட்டு, தத்துவார்த்த பின்புலத்தில், வாழ்வினை ஆராயும் அழுத்தம் மிகுந்த கதைகளை எழுதத் தொடங்கினார் ஜெயந்தன். ‘ஞானக் கிறுக்கன் கதைகள்’ என்ற பெயரில் அவை யாவும் தனியே  தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில்,  வெகுஜன இதழ்களில் இவரது கதைகளின் வருகை குறையத் தொடங்கி, பின் முற்றாக நின்று போயின. ஜெயந்தனும் தீவிர இலக்கிய வடிவத்திலான கதைகளையே விரும்பி எழுதினார்.

            கணையாழி இதழில் இவர் எழுதிய நாடகங்கள் மிகவும் முக்கியமானவை. ‘நினைக்கப்படும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய நாடக வரிசை, இலக்கியச் சிந்தனை பரிசினை வென்றது. அதே போல, ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் நாடகம், அகில இந்திய வானொலியின் பரிசினைப் பெற்ற படைப்பாகும். பிற்பாடு, இவரது நாடகங்கள் யாவும் தொகுக்கப்பட்டு, ‘ஜெயந்தன் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வந்துள்ளது.

           சில காலம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் மீண்டும் அதிலிருந்து விலகினார். அரசுப் பணியில் இருந்த காலத்தில், ஊழியர்களுக்கான சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாகவே இருந்தார். அதன் பொருட்டு வரும் சங்கடங்களையும், துயரங்களையும் கடந்த படியே, இதயத்திற்கு இணக்கமான இலக்கியப் பணியிலும் ஈடுபட்டார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ‘கம்ப்யூட்டர் பார்க்’ என்னும் கணினிப் பயிற்சி மையத்தைத் தொடங்கி, சில காலம் நடத்தினார்.

             இலக்கிய உலகம் என்பது எப்போதுமே சச்சரவுகள், காழ்ப்புணர்வுகள் நிறைந்த  ஓரு மாய உலகமாகவே இவருக்குத் தோன்றியது. இலக்கிய உலகில் சில  நண்பர்கள் மூலமாக, அவருக்கு உண்டான காயங்கள், மனதினை சோர்வடையச் செய்திருக்கக் கூடும். பணிக்காலத்திலும், ஓய்வுக் காலத்திலும் மதுரை, சென்னை என பல இடங்களில் உலாவிய ஜெயந்தனின் மனமும் உடலும், ஒரு கட்டத்தில் தனது சொந்த மண்ணான மணப்பாறையைத் தேடத் தொடங்கின.      

அப்போதுதான், தனது சொந்த மண்ணில் தான் ஆற்ற வேண்டிய  பணிகள் குறித்த எண்ணங்கள் அவருக்கு மேலோங்கத் தொடங்கின. 1956ஆம் ஆண்டு, தனது இளமைப் பருவத்தில், நண்பர்கள் மணவை முஸ்தபா, புலவர் காசிநாதன் போன்றோரோடு இணைந்து உருவாக்கிய , ’மணவைத் தமிழ் மன்றத்தை’  மீண்டும் விரிவான செயல்பாட்டுக்குக் கொண்டுவர விரும்பினார். நாடகங்கள்  எழுதி, அவற்றில் தானே நடித்த இளமை நாள்களின் நினைவுகள் அவருக்கு உற்சாகமூட்டின.

            தனது வாழ்வின் இறுதிக் காலத்தை மீண்டும் மணப்பாறையில் - தான் விரும்பியவாறே அமைத்துக் கொள்ளும் பொருட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பினார் ஜெயந்தன். இலக்கியம் சார்ந்து செய்ய வேண்டிய புதிய புதிய திட்டங்கள் நிறைய அவரிடமிருந்தன. ’நித்யா’என்னும் பெயரில் பிரம்மாண்டமான அறிவியல் புனை கதை எழுதும் திட்டமும் அவருக்கு இருந்தது. தயார் செய்து வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் கதையை எழுதத் தொடங்கினார். இந்தப் படைப்பு, காலம் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்பினார். ஆனால், காலம் அதனை அனுமதிக்கவில்லை.  2010ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி , எழுதி முடிக்கப்படாத தனது நாவல் வரிகளோடு, காலத்தில் கரைந்து போனார் ஜெயந்தன்.

 

        ’கோடு’ என்னும் பெயரில் சிற்றிதழ் தொடங்கி, 11 இதழ்கள் வரை வெளியிட்டது; ’மணவைத் தமிழ் மன்றம்’ என்னும் அமைப்பை மணப்பாறையில் உருவாக்கியது; தனது இறுதிக் காலத்தில் ‘சிந்தனைக் கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது – இப்படி இவர் தனது வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டே இருந்தார். அதைவிட முக்கியமானது எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையே சுவாசமாகக் கொண்டிருந்தது தான்.

             தனது படைப்பு ஒன்றின் செழுமைக்காக, சட்டம் பற்றிய தகவல்கள் அவருக்குத் தேவைப்பட்டன. அதற்காக, மணப்பாறையில் இருந்த இளம் வழக்குரைஞர் தமிழ்மணி அவர்களிடம் பல தகவல்களைக் கேட்டுப் பெறுகிறார். அதனோடு தொடர்புடைய  பல நூல்களையும் அவரிடம் கேட்டு வாங்கிப் படித்திருக்கிறார். வாசித்து முடித்த நூல்களை, முறையாக மீண்டும் திரும்ப ஒப்படைத்திருக்கிறார். எல்லாவற்றிலும் அவர் சரிகளை அல்ல, துல்லியத்தையே நாடினார்.

            இலக்கியக் கூட்டங்களுக்குச் செய்யும் செலவுகளை ஆடம்பரம் என்றே அவர் கருதினார். எளிமையான முறையில், அதிகபட்சம் ஒரு தேநீரோடு கூட்டம் நடந்தால் போதும் என்றே விரும்பினார். இலக்கியப் பேச்சே அதில் பிரதானமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும்  வலியுறுத்தினார். அவர் உருவாக்கிய ’சிந்தனைக் கூடல்’ என்னும் இலக்கிய அமைப்பு, இப்படியான  பல பயன் மிகு விதிகளைக் கொண்டிருந்தது. கூட்டங்களும் அப்படித்தான் நடத்தப்பட்டன.

            ஜெயந்தனின் படைப்புகள் இன்று மீண்டும் வாசிப்பு வளையத்தில், கவனம் பெறத் தொடங்கியுள்ளன. அவை, இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கு  புதிய வெளிச்சம் காட்டுகின்றன. அவரது மகனும், எழுத்தாளருமான சீராளன் அவர்கள், ஜெயந்தனின்  சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள், நாடகங்கள் யாவற்றையும் தனித்தனி தொகுப்பு நூல்களாகக் கொண்டு வந்துள்ளார். ’கோடு’ என்ற பெயரில் ஓவியப் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சீராளன் அவர்கள், அதில் ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கூட்டங்களை நடத்தி , தந்தையின் கனவினை முன்னெடுத்துச் செல்கிறார்.

            இலக்கியம் தான் ஜெயந்தனின் வாழ்க்கைப் பாதை. அதில் அவர் அடைந்த அக ஆனந்தத்தை, அருகில் உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியாததில் வியப்பு ஒன்றுமில்லை. சக எழுத்தாளர்கள், உறவுகள், நண்பர்கள் வழியே அவ்வப்போது எழும்  தடைகளை  எல்லாம், ’புகையென’ ஊதித்தள்ளி, இலக்கியத் தடத்தில் பயணித்துக் கொண்டே இருந்தார். ஏனெனில், இலக்கிய மனம், ’இலக்கியம்’ என்ற ஒன்றில் மட்டும் தானே ஆறுதலும் நிறைவும் பெறும்!

            ஜெயந்தன் - வாழ்வின் சரி-தவறுகளின் இரு முனைகளையும் கண்டுணர்ந்தவர்; இங்கே, தார்மீகக் கோபமும் அறச்சீற்றமும் மிக்க ஓர் எழுத்தாளனாக வாழ்வதில் உள்ள குடும்பச் சிக்கல்களையும், சமூகத் தடைகளையும் துணிந்து எதிர்கொண்டவர்; இப்படி, வாழ்நாள் முழுவதும் தான் விரும்பிய வாழ்க்கையையே தனது வாழ்க்கைப் பயணமாகக் கொண்டிருந்த ஜெயந்தனிடம், அவரது விருப்பத்தைக் கேட்ட பிறகே, மரணமும் தழுவியிருக்கக் கூடும்

            உண்மையில், எழுத்தாளனுக்கு மரணம் என்பது இல்லை. ஏனெனில், எழுத்தாளனின் உயிர் என்பது அவன் எழுத்துக்களில் அல்லவா உள்ளது. ஆதலால், காலம் உள்ளவரை அவன் குரலும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். ஆம், தமிழ் இலக்கிய வானில், ஜெயந்தனின் குரலும் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

     

 

 

Saturday, January 2, 2021

ஜனவரி 2 - ஐசக் அசிமோவ்



அறிவியல் புனைகதைகளின் அரசன் - ஐசக் அசிமோவ்.

ஜனவரி 2... 

              எழுத்துச் சூரன்; அறிவியல் புனை கதைகளின் முன்னோடி; கல்லூரிப் பேராசிரியர்; மேடைப் பேச்சாளர்; திரைக்கதை ஆசிரியர்; நாடக எழுத்தாளர்; அபுனைவு எழுத்திலும் மன்னன் – அவர் தான்,   டாக்டர்.ஐசக் அசிமோவ். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய மனிதர்களுள் ஒருவர்.

             அவர் எழுதிக் குவித்த புனைகதைகளைப் போலவே அவரது பிறப்பு மரணம் பற்றிய இரண்டு நிகழ்வுகளுமே மிகவும் சுவாரசியமானவை. கதைகளின் போக்கினைத் தான் விரும்பியபடியே அமைத்துக் கொண்ட அசிமோவ், தனது பிறந்த தேதியினையும் தானே தீர்மானித்துக் கொண்டார். 1919 அக்டோபர் 4 முதல் 1920 ஜனவரி 2 க்குள் ஏதோவொரு நாளில் பிறந்தவர் தான் ஐசக் அசிமோவ். ஆனால், எந்தத் தேதியில் பிறந்தார் என்பது பெற்றோருக்கும் தெரியாத சூழலில், தனது பிறந்த நாளை ஜனவரி 2 என கொண்டாடத் தொடங்கினார்.

             ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவில், பெட்ரோவிச்சி நகரத்தில் ஒரு யூதக் குடும்பத்தில்  ஐசக் அசிமோவ் பிறந்தார். ஜூடா அசிமோவ் - அன்னா ரச்சேல் பெர்மன் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அப்போது, ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் போதாதென்று,  double pneumonia என்னும் கொள்ளை நோய் பெட்ரோவிச்சி நகர மக்களை வதைக்கத் தொடங்கியது. அந்நகரில் மட்டும் 17 குழந்தைகளை அந்த நோய் தாக்கியது. அதில் 16 குழந்தைகள் இறந்துவிட, ஐசக் அசிமோவ் மட்டும் தப்பிப் பிழைத்தார். இவ்வாறாக பல சிக்கல்களின் காரணமாக, இவரது குடும்பம் மொத்தமும் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தது.

              மூன்று வயதில் அமெரிக்காவுக்குச் சென்று விட்ட ஐசக் அசிமோவிற்கு யிட்டிஷ் மொழியும், ஆங்கிலமும் நன்கு தெரியும்.  ரஷ்ய மொழி இவருக்குத் தெரியாது. ஆனால், இவரது பெயர் ரஷ்ய மொழியின் உச்சரிப்பினை அடிப்படையாகக் கொண்டது. தனது பெயருக்கான காரணத்தை,  பின்னாட்களில் வேடிக்கையாக விளக்கினார் அசிமோவ்.  ஐந்து வயதிலேயே நன்றாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பம், அமெரிக்காவில் சாக்லெட்டுகள் மற்றும் செய்தித் தாள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தனர். அசிமோவிற்கு இது மிகவும் வசதியாக இருந்தது.  கண்ணில் படும் நாளிதழ்கள், வார,மாத  இதழ்கள், புத்தகங்கள் என கண்ணில் பட்ட யாவற்றையும் வாசிக்கத் தொடங்கினார். பதினோராம் வயதிலேயே சொந்தமாக கதைகளை எழுதவும் தொடங்கினார்.

                      ஆரம்பத்தில் அவரது தந்தைக்கு சற்றுத் தயக்கம் இருந்தது. பாடப்புத்தகங்களைப் படிக்காமல் இப்படி கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறானே என வருந்தினார். ஆனால், அசிமோவ் படிக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் அறிவியல் சார்ந்த கதைகள் என்பதால் அவருக்குள் ஒரு வகை திருப்தி ஏற்பட்டது. பத்தொன்பதாவது வயதிலேயே, இவரது அறிவியல் புனைகதைகள், தேர்ந்த மூத்த எழுத்தாளரின் எழுத்துக்களை விஞ்சத் தொடங்கின. அறிவியல் சார்ந்த இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. தான் வசித்து வந்த ப்ரூக்ளின் நகரில், இதே போன்று ஆர்வம் கொண்ட நண்பர் குழுவினையும் கண்டு கொண்டார். இங்கே தான் ஏ.எஸ்.எஃப். பத்திரிக்கையின் ஆசிரியர் கேம்பலை நண்பராகப் பெற்றார். இவர்கள் நட்பு வெகுகாலம் நீடித்தது. கேம்பல் இவருக்கு பதிப்புத் துறையில் வழிகாட்டியாகவும் இருந்தார்.

       ப்ரூக்ளின் நகரில் ஆரம்பப்படிப்பை முடித்த அசிமோவ், மேற்படிப்புகளை சேத் லோ ஜூனியர் கல்லூரி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். உயிரியல் பாடத்தில் பட்டம் பெறவே முதலில் விரும்பினார். முதல் பருவத்தில், ஒரு பூனையின் உடலைத் துண்டாக்கி உடற்கூறியல் ஆய்வு செய்ய வேண்டிய சூழல் வந்தது. அதனைச் செய்ய விரும்பாததால், முதல் பருவத்தின் முடிவில், வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். 1938ஆம் ஆண்டு, எதிர்பாராத சூழலில் ஜூனியர் கல்லூரி மூடப்பட்டதால், பட்டப் படிப்பினை கொலம்பிய பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். வேதியியலில் 1939ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும், 1941ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

         இரண்டாம் உலகப் போரில், வேதியியலாளர் என்ற அடிப்படையில் இவருக்கும் பணி ஒதுக்கப்பட்டது. பிலடெல்பியா நகரில் சில காலம் பணியாற்றினார். போர் முடிவுற்ற பிறகு, 1945ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவத்திற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டார். இராணுவத்தில் இவரது தட்டச்சுப்பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. துல்லியமும் வேகமும் நிறைந்த தட்டச்சுத் திறன், அசிமோவுக்கு கூடுதல் பதவி உயர்வினைப் பெற்றுத்தந்தது. ஆயினும், சில காரணங்களால்,1946ஆம் ஆண்டு இராணுவத்தைவிட்டு வெளியேற வேண்டி இருந்தது. பிறகு, பாதியில் நின்று போயிருந்த முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார். 1949ஆம் ஆண்டு, உயிர்-வேதியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை சிறப்பாக முடித்தார்.

                போஸ்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், உயிர்-வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1958 வரை கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த அசிமோவ், அதன் பிறகு கெளரவப் பேராசிரியராகப் பணியில் தொடர்ந்தார். அப்போது, அறிவியல் சார்பான கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதுவதே இவரது தலையாய பணியாக இருந்தது. Marooned off Vesta என்ற கதை, 1939ல் முதன் முதலாக  ’Amazing Stories’ இதழில் பிரசுரமானது. தொடர்ந்து அறிவியல் சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதிக் கொண்டிருந்த அசிமோவ், 1957ல் The naked Sun என்ற அபுனைவு நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டார். அதன் பிறகான காலகட்டத்தில், நாவல்களை விடவும் அபுனைவு நூல்களையே நிறைய எழுதினார்.

              1941ல் அசிமோவ் வெளியிட்ட ‘Nightfall’ என்ற அறிவியல் புனைகதை, இலக்கிய உலகிலும், அறிவியல் பரப்பிலும் இவருக்கு நல்ல அறிமுகத்தைத் தந்தது. அதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான், வானில் நட்சத்திரங்கள் வரும் என்றால், அதனை மனிதன் எப்படியெல்லாம் எதிர்கொள்வான், என்னென்ன நடக்கும் என தன் அதீதக் கற்பனையை அழகாக எழுதியிருப்பார்.  பிறகு,  1950களில் வெளிவந்த ‘I, Robot’ வரிசைக் கதைகள் இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.  இயந்திர மனிதனை உருவாக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளை அக்கதைகளில் இவர் விவரித்திருந்தார். அறிவியலாளர்களையும் அது சிந்திக்கத் தூண்டியது.  அந்த மூன்று விதிகளையே, இன்றைய அறிவியல் உலகமும் இயந்திர மனிதன் உருவாக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது அசிமோவின் திறமைக்குச் சான்றாகும். இவரது Foundation Series கதைகள் தனித்துவம் பெற்றவையாகும்.

             நியாண்டர்தால் காலத்துக் குழந்தை ஒன்று, வழிதவறி எதிர்காலத்திற்குள் நுழைந்து விடுகிறது. அக்குழந்தையுடன் செவிலியர் ஒருவருக்கு உண்டாகும் அன்பையும், நட்பையும் பேசும் The Ugly Little Boy (1958) என்ற கதை, இன்றளவும் வாசிப்பில் இன்பம் தரும் அற்புதக் கதையாகும். அதன் பிறகான காலத்தில், அசிமோவ் அபுனைவு எழுத்துக்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.

            A Great Adventure, The Egyptians, The Roman Empire, The Near East- 10000 Years Of History என வரலாறு தொடர்பாக இவர் எழுதிய 14 நூல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அதே போல, பைபிளின் வாசிப்புக்காக இவர்  இரண்டு பெரும் தொகுதிகளை எழுதினார். பழைய எற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டையும் தனது  பார்வையுடன் இணைத்து விரிவாக எழுதப்பட்ட இந்த இரண்டு நூல்களும் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் புத்தகங்களுக்கும் நீண்ட விளக்கவுரை எழுதியிருக்கிறார்.

           தனது 15ஆவது வயதில், வீட்டில் இருந்த  பழைய தட்டச்சு இயந்திரத்தில் கதைகளை அடிக்கத் தொடங்கிய அசிமோவ், இறுதி வரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தார். 500க்கும் மேற்பட்ட நூல்கள், தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் என இவரது விரல்கள் இயங்கிக் கொண்டே இருந்தன. தனது மூளையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, தன்னால் மட்டுமே விரைவாக இயங்க முடியும் என்பதால், உதவியாளர் என யாரையும் இவர் வைத்துக் கொள்ளவில்லை. இவரது புத்தகங்களுக்கு இவரே பிழைதிருத்தமும், வடிவமைப்பும் செய்வார். அறையின் கதவுகளை முழுவதுமாக மூடிக் கொண்டு, இடைவிடாது எழுதுவார். காலையில் இருந்து, இரவு படுக்கப் போகும் வரை எழுதிக் கொண்டே இருப்பார். இவர் எழுதாத நேரங்களில் மட்டுமே, அறையின் சன்னல் கதவுகள் திறக்கப்படும். இவருக்கு வெய்யில் ஒவ்வாமை இருந்ததாகவும் சொல்வார்கள்.

          எழுதுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தினார். ஆய்வரங்குகள், கருத்தரங்கங்கள், பொது மேடைகள் என எல்லா இடங்களிலும் இவரது உரைக்காக, எண்ணற்ற செவிகள் காத்துக் கிடந்தன. தத்துவவியல் தவிர ஏனைய எல்லா துறைகளிலும் இவர் பேசவும் எழுதவும் செய்தார். அறிவியல் புனைகதைகளை எழுதும் போது, அதில் வரும் நுண்ணிய தகவல்கள் கூட, சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதற்கான தகவல்களை தேடித் தேடி சேகரிப்பார். அப்போதுதான், புனைகதைகளை வாசிக்கும் வாசகனின் உள்ளத்தை வெல்ல முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பது பற்றிய அசிமோவின் கற்பனை பெரும்பாலும் துல்லியமாக இருந்தது. அதே நேரம் சுவையாகவும் இருந்தது.

         ஆகாய நட்சத்திரங்களையும், அண்ட வெளிகளையும் தனது கதைகலில் விவரித்த அசிமோவிற்கு விமானப் பயணம் என்பது சுத்தமாகப் பிடிக்காது. மொத்தமே இரண்டு முறைகள் மட்டுமே விமானத்தில் ஏறியிருக்கிறார். அதுவும் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் மட்டும். மாறாக, கப்பலில் இருந்து கொண்டு எழுதுவதும், வானம் பார்ப்பதும் இவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. தரைவழி வாகனங்கள் ஓட்டுவதிலும் இவருக்கு அதிக விருப்பம் இருந்ததில்லை. எழுத்தையே தியானமாகக் கொண்ட அசிமோவ் உண்மையில்  ஒரு வித்தியாசமான மனிதர் தான்.

          ஒருமுறை, 1984ஆம் ஆண்டு, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வி, அசிமோவிடம்  கேட்கப்பட்டது. இன்றிலிருந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2019ல், மனித இனம் கணிப்பொறிகளையும், நகரும் பேசிகளையுமே முழுவதுமாக நம்பியிருக்கும். நவீன அறிவியல் நமது வீட்டில் எல்லா அறைகளையும் ஆக்கிரமித்திருக்கும். விண்வெளியையும் தொழிற்சாலைக் கழிவுகள் நிரப்பத் தொடங்கியிருக்கும் என அநாயசமாகப் பதில் அளித்தார் ஐசக் அசிமோவ். அதுதானே இன்றைய நிதர்சனம்.!

              முக்கியமாக, 1958ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு பிரபலமான இதழ் ஒன்றில் கதைகள் அல்லாத கட்டுரைத் தொடர் ஒன்றை எழுத ஆரம்பித்தார். ஏறக்குறைய அவர் மரணிக்கும் வரை , பல்வேறு இதழ்களில் அந்தக் கட்டுரைத் தொடரை எழுதி வந்தார் அசிமோவ். அறிவியல் புனைகதைகளுக்காக வழங்கப்படும் Hugo விருது, நெபுலா விருது என இவர் பெற்ற விருதுகள் ஏராளம். உலகெங்கும் உள்ள பல்கலைகழகங்கள் இவருக்கு 14 முறை மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கி மகிழ்ந்தன. இவரது நிறைய கதைகள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன.

        1992 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி –பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்த விரல்கள் அசைவை நிறுத்திக் கொண்டன.  நுண்ணறிவு மிக்க மூளை தனது சிந்தனைப் பயணத்தை முடித்துக் கொண்டது.  பிறந்த தேதியை ஜனவரி 2 என, தானே முடிவு செய்த அசிமோவிற்கு மரணம் நெருங்குவதும் தெரிந்திருந்தது. ஆனால், அதனை வெளி உலகம் அறிந்திருக்கவில்லை. அவரது சுயசரிதையின் மூன்றாம் பாகம் வெளிவந்த போதுதான், மரணத்திற்கான காரணத்தை அவரது மனைவி வெளியிட்டார்.

         1983 ஆம் ஆண்டு, இதயத்தின் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட  அடைப்பினைச் சரிசெய்ய அசிமோவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அசிமோவிற்கு வழங்கப்பட்ட இரத்தத்தில் ஹெச்.ஐ.வி. வைரஸ் இருந்தது சற்று பிந்தியே தெரிய வந்தது.  இத்தகவல் வெளியில் தெரிய வந்தால், ஏனைய பிற நோயாளிகளையும் , குடும்பத்தாரையும் பாதிக்கும் என்பதால் இச்செய்தியை வெளியிட நாங்கள் விரும்பவில்லை என அசிமோவின் இரண்டாம் மனைவி ஜென்னெட் ஜெப்சன் தனது நினைவுக் குறிப்புகளில் தெரிவித்தார். வைரஸ் தொற்றின் காரணமாகவே சிறுநீரகமும், இதயமும் பாதிக்கப்பட்டு, 1992ல் அசிமோவ் இறந்து போனார்.

        ஹெச்.ஐ.வி.  வைரஸால் பாதிக்கப்பட்டதை அறிந்த பிறகும் அவரால் கட்டுரைகள் எழுதப்பட்டன. விருதுக்குரிய நூல்கள் வெளிவந்தன. கூட்டங்களிலும் கலந்து கொண்டார். எழுத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மனிதனால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும். ஆம், எந்தச்  சூழ்நிலையிலும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தில்,  தன்னையே  கரைத்துக் கொண்ட மனிதர்களால் மட்டுமே சரித்திரம் படைக்க முடியும்.! 

ஆம், ஐசக் அசிமோவ் - ஒரு சரித்திரம்.

               

       

      

 


Friday, January 1, 2021

ஜனவரி 1 - மகாதேவ் தேசாய்




 

தலைவனின் தலைவன் -மகாதேவ் தேசாய்

              “Mahadev Desai has not seen day or night after he joined the Ashram. Consistent work was the only ‘Mantra’ of his life, and the work that Mahadev did was service, in terms of the Bhagvad Gita ‘Yagna’, a mission.”

-       Mahatma Gandhiji.                             

                      1942 ஆம் ஆண்டு, ஆகஸ்டு -15,  அதிகாலை நேரம். ‘மகாதேவ்! மகாதேவ்!’ என தனது உதவியாளரின் பெயரினை மகாத்மா காந்தியின் உதடுகள் சத்தமாக உச்சரித்தன. அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. தனது வாழ்நாளில் முதல் முறையாக, காந்தியடிகளின் குரலுக்குப் பதில் தராமல் மெளனமாய்க்  கிடந்தார் மகாதேவ்.  தனது மடி மீது அவரை வைத்துக் கொண்டு, சற்றே நிதானம் இழந்தவராய் காணப்பட்டார் காந்தியடிகள். அங்கே, அருகிலிருந்த டாக்டர் சுசீலா நாயர், நாடித்துடிப்பைப் பார்க்கிறார். உயிர் பிரிந்து விட்டது என்பதை அறிவிக்கிறார். தனது குருவான மகாத்மாவின் மடியிலேயே  மரணிக்கும் பாக்கியம், மகாதேவ் தேசாய்க்கு வாய்க்கிறது. காந்தியடிகளின் உள்ளம் பெருந்துயரில் மூழ்குகிறது.  ஆம், காந்தியடிகளுக்காகவே, அவரின் பரு உடலுக்கு வெளியே துடித்துக் கொண்டிருந்த மற்றொரு இதயம் தான்  மகாதேவ் தேசாய் - காந்தியடிகளின் தனிச்செயலாளர்.

                       1917ஆம் ஆண்டு முதல் 1942, தனது மரண காலம் வரை, சரியாக ஒரு கால் நூற்றாண்டு காலம், மகாத்மாவின் செயலாளராக இருந்தவர்தான் மகாதேவ் தேசாய். ஒவ்வொரு நாளும் அதிகாலைப் பொழுதுக்கும் முன்னரே எழுந்து, காந்தியடிகளின் அன்றாடப் பணிகளைத் திட்டமிடுதல், பிறகு நாள் முழுவதும்   அவருடனேயே இருந்து பணியாற்றுதல், இரவு காந்தியடிகள் உறங்கச் சென்ற பிறகு அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் எழுதி வைத்தல் என இடைவிடாத இருபத்தைந்து ஆண்டுகாலப் பணி அவருடையது. அவரது எழுத்துக்களை, இந்திய வரலாற்றின் ’முறையான கால் நூற்றாண்டு வரலாறு’ எனத் தயக்கமின்றிச்  சொல்லலாம்.

                           1942ஆம் ஆண்டு, ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்ட காந்தியடிகள், கஸ்தூரிபாய் காந்தி,  சுசீலா நாயர் போன்றோரோடு மகாதேவ் தேசாயும் கைது செய்யப்படுகிறார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி, புனே நகரில் இருக்கும் ஆகாகான் அரண்மனையில் இவர்கள் அனைவரும் அடைக்கப்படுகிறார்கள். ஆகாகான் அரண்மனை என்பது,                           பத்தொன்பதாம் நூற்றாண்டில், கடும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, டெல்லி சுல்தானால் கட்டப்பட்டதாகும். அங்கே இருந்த நாள்களில், காந்தியடிகள், மகாதேவ் தேசாய் இருவரும்  சிறைச்சாலையையே தங்களது அலுவலகமாக மாற்றிக் கொண்டனர் விடுதலைப் போராட்டத்திற்கான பணிகள் அனைத்தும், எழுத்து வடிவில் நிகழ்ந்து கொண்டே இருந்தன. 

            அன்று அதிகாலையும் அப்படித்தான். மகாதேவ் தேசாய்,  ஆகஸ்ட் 15, 1942 அன்று அதிகாலையில் எழுந்தார். அன்றைய நாளுக்கான பணிகளைத் திட்டமிட்டார்.   அப்போது பிரார்த்தனை முடிந்திருந்தது. முகச்சவரம் செய்து, குளித்துவிட்டு வந்த மகாதேவ் தேசாய், அங்கிருந்தவர்களுக்குத் தேநீரும், காந்தியடிகளுக்குப் பழச்சாறும் தயார் செய்து கொடுத்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக  சுருண்டு விழுந்து, மரணம் வழியே தனது செயல்களுக்கு ஓய்வு கொடுத்தார் மகாதேவ் தேசாய்.

                ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று, அரண்மனை வளாகத்திலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையென தன்னை முன்னிறுத்திய  மகாத்மா, மகனாக மாறி,  மகாதேவின் உடலைத் தானே நீரால் கழுவி, இறுதிச் சடங்குகளை உரிமையோடு மேற்கொண்டார். சிதைக்கும் தீ மூட்டினார். அதன் பிறகு, மனம் அமைதி தேடும் நேரங்களில் எல்லாம், மகாதேவ் தேசாயின் சமாதி அருகில் அமர்ந்து, பகவத் கீதை வாசிப்பதையே தனது வழக்கமாக்கிக் கொண்டார் மகாத்மா காந்தி அடிகள்.

                       குஜராத் மாநிலத்தில் சூரத் நகருக்கு அருகில் இருந்த சரஸ் என்னும் கிராமத்தில், 1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று  மகாதேவ் தேசாய் பிறந்தார். இவருடைய தந்தை ஹரிபாய் தேசாய், அதே கிராமத்தில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தேசாய் என்பது திஹன் என்ற ஊரைச் சேர்ந்தவர்களின் குல மரபுப் பெயராகும். மஹாதேவ் தேசாயின் தாய் பெயர் ஜமுனா பென். அறிவும், அன்பும் நிரம்பி வழிந்த ஜமுனா பென்னிடம், அந்த ஊர்வாசிகள் அனைவரும் பெரு மதிப்பு வைத்திருந்தனர். ஆனால், தாயின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் மகாதேவ் தேசாய்க்கு நீண்ட நாள்கள் கிடைக்கவில்லை. 1899ஆம் ஆண்டு, தனது ஏழாவது வயதில் அன்னையை இழந்தார் மகாதேவ்.

              நேர்மைமிகு மனிதரான தந்தையின் வளர்ப்பில் மகாதேவின் இளமைப் பருவம் மெல்ல நகர்ந்தது. காலையில் எழுந்தவுடன் பஜனைப் பாடல்கள் பாடுவது, பின்பு குஜராத்தி இலக்கியங்கள் வாசிப்பது என அறிவுத் துறையில் தீவிரமாக இருந்தார் மகாதேவ். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, வேதங்கள் மற்றும் உபநிடதங்களை விளக்க நூல்களின் துணையுடன் கற்றுத் தேர்ந்தார். அவரிடத்தில் எதையும் அலசி ஆராயும் நுட்பமான அறிவு இருந்தது. கூடவே, நினைவாற்றலும் நிரம்பப் பெற்றிருந்தார். 

           சூரத் நகரில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1905ஆம் ஆண்டு, தனது 13வது வயதில்  துர்கா பென் என்ற 12 வயது சிறுமியுடன் இவருக்குத்  திருமணம் செய்து வைக்கப்பட்டது. பிறகு, 1906ஆம் ஆண்டு,  தான் எழுதிய மெட்ரிகுலேசன் தேர்விலும் உயர் வகுப்பில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1907ஆம் ஆண்டு, குஜராத் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் சேர அனுமதி பெற்றார். ஆனால், தந்தையின் மிகக் குறைந்த வருமானம் கல்விச்செலவுக்குப் போதாது என்பதை உணர்ந்து கொண்டார். எனவே, ’கோகுல்தாஸ் தேஜ்பால்’ தங்கும் விடுதியில் இலவசமாகத் தங்கிப் படிக்க அனுமதி பெற்றார். எதிர்பாராத விதமாக, இவருக்கு கல்வி உதவித் தொகையும் கிடைத்தது. அதற்குக் காரணம் அவரது நண்பர் வைகுந்த.  கல்லூரியில் தனக்குக் கிடைத்த கல்வி உதவித் தொகையை வேண்டாம் என்று சொல்லியதன் மூலம், தனக்கு அடுத்த இடத்தில் காத்திருந்த மகாதேவ் தேசாய்க்கு அந்தப் பணத்தைக் கிடைக்கச் செய்த உயிர் நண்பன் வைகுந்த் லல்லுபாய் மேத்தாவை இவரும் என்றுமே மறந்ததில்லை. இப்படியாக, தந்தைக்கு அதிக செலவு வைக்காமல், உயர்கல்வியை சிறப்பாக நிறைவு செய்தார் மகாதேவ் தேசாய். 1910ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தை முடித்த மகாதேவ், 1913ஆம் ஆண்டு எல்.எல்.பி எனப்படும் சட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

            சட்டம் படிக்கும் காலத்தில், சின்னச் சின்ன வேலைகள் செய்து தனக்கான செலவுகளைத் தானே பார்த்துக் கொண்டார் மகாதேவ். உயர்கல்வியின் பொருட்டு, தந்தைக்கு எந்தவித பொருளாதார நெருக்கடிகளையும் இவர் ஏற்படுத்தித் தரவில்லை. அப்போது, மோர்லி பிரபு என்பவர் எழுதிய, ‘சமரசம் செய்வது பற்றி’ என்ற நூலை குராத்தி மொழிக்கு மொழிபெயர்த்துத் தரும் சவாலான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மகாதேவ் கலந்து கொண்டு, முதல் பரிசும் பெற்றார்.  முதல் பரிசு பெற்ற மகாதேவுக்கு, ’குஜராத் பார்பஸ் சங்கம்’, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.    இந்தப் பணம், இவரது கல்விச் செலவுகளுக்குப்  பேருதவியாக இருந்தது.

    சட்டம் படித்து முடித்தவுடன் அகமதாபாத் நகரில் தந்தையுடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போதும் நணபர் வைகுந்த மேத்தா உதவிக் கரம் நீட்டினார். அவரது வழிகாட்டுதலில், பம்பாயில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளர் பணி மகாதேவுக்குக் கிடைத்தது. ஆனால், அந்தப் பணியில் அவரால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. ஆம், அவரது வாழ்வு, மகாத்மாவின் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தது அப்போதுதான்.

        மகாத்மா காந்தி அடிகள், 1915ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்தார். அதே ஆண்டு, மே மாதம், அகமதாபாத்தில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். ஆசிரமத்தின் நோக்கங்கள், நடைமுறைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்கி நீண்ட கட்டுரை ஒன்றை எழுதி, பொதுவெளியில் வெளியிட்டார். அதன் மீதான விமர்சனத்தையும் எதிர்நோக்கியிருந்தார் மகாத்மா காந்தி அடிகள். அக்கட்டுரைக்கு எதிர்வினையாக, இரண்டு இளைஞர்களின் கையெழுத்துடன் ஒரு கடிதம் காந்திக்கு வந்து சேர்ந்திருந்தது. அவரும் அதனை ஆழமாகப் படித்திருந்தார். அந்த இரண்டு இளைஞர்களுள் ஒருவர் தான் மகாதேவ் தேசாய். மற்றவர் நரஹரி பரிக். 

             அகமதாபாத், பிரேமபாய் கூடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி அடிகளை இளைஞர்கள் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். காந்தி அடிகளும் தனது ஆசிரமத்தின் நோக்கங்களையும் திட்டங்களையும்   விரிவாக எடுத்துக் கூறுகிறார். சுமார் இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, இருவரும் வெளியே வருகின்றனர். அப்போது, ‘இந்த மனிதரின் பாதங்களின் கீழ் அமர்ந்து, வாழ்வைக் கடத்த வேண்டும் என்று எனது மனம் விரும்புகிறது’ என மகாதேவ் தேசாய் தனது நண்பர் நரஹரி பரிக்கிடம் உளம் திறந்து பேசுகிறார். காந்தி அடிகளின் மேல் ஈர்ப்பு ஏற்பட்ட முதல் தருணம் அது.

         காந்தி அடிகளுடன் மகாதேவுக்கு கடிதப் போக்குவரத்தும் நேர்ச்சந்திப்பும் தொடர்ந்து நடக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் வசீகரிக்கத் தொடங்குகிறார்கள். தினமும் மகாதேவைப் பார்க்க வேண்டும் என்ற காந்தி அடிகளின் ஆவல் விரைவில் ஈடேறுகிறது. மறுக்கவே முடியாதபடி இருந்த - காந்தி அடிகளின் அழைப்பினை ஏற்று, 1917ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 3ஆம் தேதி தனது மனைவி துர்கா பென்னுடன் சேர்ந்து கோத்ராவில் காந்தி அடிகளைச் சந்திக்கிறார். சம்பரான் பயணத்தில் இருந்த   காந்தி அடிகள், அவர்கள் இருவரையும் உடன் அழைத்துச் செல்கிறார்.

             பயணம் முடிந்து திரும்பியவுடன், மகாதேவ் தேசாய் தனது தந்தையைச் சந்தித்து, காந்தியுடன் செல்லும் தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார். தந்தையின் ஆசியைப் பெற்று, காந்தி அடிகளின் பாதங்களில் தனது வாழ்வினை ஒப்படைக்கிறார் மகாதேவ் தேசாய். சரியாக 25 ஆண்டுகள் - காந்தியுடன் காந்தியின் கரங்களாக, கால்களாக, மூளையாக, அவரின் இணை உடலாக, அவரின் மனதாக, அவரின் செல்ல மகனாக வாழ்ந்து, தனது வாழ்வை பொருளுள்ளதாக மாற்றிக் கொள்கிறார்.  1917ஆம் ஆண்டு, நவம்பர் 13 ஆம் தேதியில் இருந்து காந்தியுடனான தனது நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். 1942,ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு வரை முறையான நாட்குறிப்பை அறுபடாமல் எழுதி வந்தார். அடுத்த நாள் காலை, மகாத்மாவின் மடியிலேயே தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கிறார். மகாதேவ் இளமையில் விரும்பியது அதைத்தானே! அது அப்படியே ஆனது.

       ஏழு வயதிலேயே அன்னையை இழந்திருந்த   மகாதேவ் தேசாய், கஸ்தூரிபாவை தனது தாயாகவே எண்ணி வாழ்ந்து வந்தார். காந்தி அடிகளும்  ஒரு தந்தையாக, பானை உடைத்து நீர்க்கடன் செய்து, மகாதேவின் சிதைக்குத் தானே நெருப்பு மூட்டுகிறார். தனது வளர்ப்பு மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் கதறி அழுத கஸ்தூரிபா காந்தியையத் தேற்றிட அங்கிருந்த யாராலும் இயலவில்லை. மகாதேவின் மனைவி துர்கா பென் மற்றும் அவர்களது ஒரே மகன் நாராயண் தேசாய் இருவருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல்  கஸ்தூரிபா புலம்பிக் கொண்டே இருந்தார்.        

     1920ஆம் ஆண்டு, மோதிலால் நேருவின் வேண்டுகோளை ஏற்று, ‘இண்டிபெண்டண்ட்’ என்ற நாளிதழை நடத்துவதற்காக மாகாதேவ் தேசாயை அலகாபாத் அனுப்பி வைத்தார் காந்தி அடிகள். அந்தப் பத்திரிக்கையில் வெளிவந்த தலையங்கங்கள் ஆங்கிலேய அரசை வெகுவாகச் சீண்டின. அதன் விளைவாக, நாளிதழ் தடை செய்யப்பட்டது. மோதிலால் நேரு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகும், மனம் தளராத மகாதேவ் தேசாய், ‘I Change; But I cannot die’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, மையொற்றுப் பிரதி எடுத்து விநியோகம் செய்தார். அதனால், வெறுப்படைந்த ஆங்கிலேய அரசு, மகாதேவையும் கைது செய்து, ஆக்ரா சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தது.

      1923ல், லக்னோ சிறையில் இருந்து விடுதலை பெற்ற மகாதேவ், ‘நவஜீவன்’(1924)   இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1925ஆம் ஆண்டிலிருந்து, ‘யங் இந்தியா’ இதழில், மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற எல்லா போராட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு, சிறைவாசமும் அனுபவித்தார். 1929ஆம் ஆண்டு காந்தி அடிகளுடன் பர்மா பயணம் மேற்கொண்டார். வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார். லண்டனில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்திக்க காந்தி அடிகள் சென்ற போது, அவருடன் மகாதேவ் தேசாய் மட்டுமே உடன் இருந்தார்.

                     காந்தி அடிகள் சொல்லும் கருத்துக்களை அப்படியே செயல்படுத்தவும், மறுத்துப் பேசவும், சில நேரங்களில் தீவிரமாக விவாதித்து அவரை மாற்றிக் கொள்ளச் செய்யவும்  மகாதேவ் தேசாய் உரிமையும் திறமையும் கொண்டிருந்தார்.  காந்தி அடிகளுடனான தனது 25 ஆண்டு காலப் பணியில், ஒரே ஒரு முறை மட்டும் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுத்த நிகழ்வும் நடந்தது. 1938ஆம் ஆண்டு, கஸ்தூரிபா, துர்கா பென் உள்ளிட்ட சிலர், பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்கு சென்று வந்ததை அறிந்த காந்தி அடிகள் வருத்தப்பட்டார். அவர்களது பயணத்தை தனக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் என மகாதேவ் தேசாயிடம் கோபம் கொள்கிறார். பதிலுக்கு, மனம் வருந்திய மகாதேவ் ராஜினாமா கடிதத்தை  ஒப்படைக்கிறார். அதற்கு மகாத்மா, ‘உன் பிரிவைக் காட்டிலும் ஆயிரம் தவறுகளை நான் பொறுத்துக் கொள்வேன். பக்தன் ஒருவனின் கரங்களில் இறப்பதே எனக்கு மேலானது. எனவே, நீ வெளியேறத் தேவையில்லை.’ என மறுமொழி அளிக்கிறார். ஊடல் கரைந்து, இரு மனங்களின் கூடல் நிரந்தரமாகிறது.

           1933ஆம் ஆண்டு, பெல்காம் சிறையில் இருந்தபோது தான், Gita According to Gandhi என்ற நூலை எழுதினார். தாகூரின் கவிதைகளையும், ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையையும் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்படி ஏராளமான நூல்களை ஆங்கிலத்திற்கும், குஜராத்தி மொழிக்கும் எழுதிக் குவித்திருக்கிறார். நாளெல்லாம் பம்பரம் போல், சுழன்று கொண்டே இருந்த மகாதேவ் தேசாய்க்கு , தினந்தோறும்  வாசிக்கவும் எழுதவும் நேரம் இருந்ததை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

           மகாதேவ் எந்த விளையாட்டுக்களிலும் ஆர்வம் இல்லாதவர். ஆனால், அவரது தந்தையைப் போல, கட்டுறுதியான உடலமைப்புக் கொண்டவர். தினமும் அதிகாலையில் எழுந்து, 9 மைல் தூரம் நடந்து சென்று, பிறகு திரும்புவார். சராசரியாக ஒரு நாளைக்கு 18 மைல்கள். சில காலம், சேவா கிராமத்தில் காந்தி அடிகள் தங்கியிருந்த போது, 5.5 மைல் தொலைவில் இருந்த தனது வீட்டிலிருந்து நடந்தே ஆசிரமம் வந்து செல்வார். மதிய உணவுக்கும் வீட்டிற்கே நடந்து வருவார். ஆக, அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளில் 22 மைல்கள் நடந்தார். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார். எல்லாப் பணிகளையும் தானே விரும்பி மேற்கொள்வார். நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே இருப்பார். அவரிடத்தில் களைப்பின் நிழலைக் கூட கானமுடியாது. தேசியத்தலைவர்கள் அத்தனை பேரிடமும் நட்புடன் பழகினார். அவரைச் சந்தித்தாலே,  உற்சாக வெள்ளம் உடன் வந்து ஒட்டிக் கொள்ளும்.

         ஆகா கான் மாளிகையில் மகாதேவ் தேசாய் இறந்தவுடன், நாடெங்கும் இருந்த தலைவர்கள் பெரும் துயறுற்றனர். துயரத்தை வெளிப்படுத்தும் 300க்கும் மேற்பட்ட இரங்கல் கடிதங்கள் காந்திக்கும், துர்கா பென்னுக்கும் அப்போது வந்து சேர்ந்தன.  தமிழ்நாட்டிலிருந்தும் சில கடிதங்கள் சென்று சேர்ந்திருந்தன.  ’சீடனாக இருந்தபடியே, எனக்கு குருவாக ஆனவர்; அவரை நினைவில் வைக்கவும், அவரைப் போலவே உயரவும் நான் அவருடைய சமாதிக்கு வருகிறேன்’  எனச் சொன்ன காந்தி அடிகளின் உள்ளத்தில் மகாதேவ் தேசாய் நிரந்தரமாகத் தங்கியிருந்தார்.  இந்திய விடுதலை வரலாறு காந்தி அடிகளின் பெயரைத் தாங்கியிருப்பதைப் போல, காந்தி அடிகளின் வரலாறு என்பது   மகாதேவ் தேசாயோடு இணைந்தே இருக்கிறது. ராமனை அகத்தில் ஏந்திய அனுமாரைப் போல, காந்தி அடிகளை இதயத்தில் எற்றிக் கொண்ட மகாதேவ் தேசாயை இந்த நாடு எப்போதும் மறக்கக் கூடாது.

          ஏனெனில், காகா கலேல்கர் தந்த ஊன்றுகோலை விடவும் காந்தியடிகளுக்குத்  துணையாய் இருந்தவர்; உலகின் குரூரங்களுக்கு முன்னால், கருணை பொங்கும் தனது விழிகளின் ஊடாக, சத்திய வாழ்வினை நிகழ்த்திக் காட்டியவர்; திறமையும் அர்ப்பணிப்பும் ஒருங்கே பெற்ற நேர்மையாளர்; தனது தலைவனுக்காக, தன்னை பூஜ்ஜியமாகவே மாற்றிக் கொண்ட பெருந்தலைவர்; எளிதில் காணக் கிடைக்காத  அரிய மனிதர்; தனது செயல்களின் வழியே, தலைவனுக்கே தலைவனாக வாழ்ந்து நிறைந்தவர்- அவர் தான் மகாதேவ் தேசாய். 

                   சிறப்பான கல்விப்புலம், திடமான மனம், அப்பழுக்கற்ற நேர்மை, அயராத உழைப்பு,  கொள்கையில் உறுதி, சக மனிதர்களிடம் நேசம், இருக்கும் இடத்தையே சொர்க்கமாக்கும் ஆற்றல் - இப்படி ஒரு தலைவனுக்குரிய எல்லாத் தகுதிகளும் மகாதேவ் தேசாயிடம் இருந்தன. இருந்தும் அவர் மனம் நாடியது என்னவோ காந்தியடிகளின் நிழல். விரும்பிய வாழ்வினை, புகார்கள் ஏதுமின்றி நிறைவாக வாழ்ந்தார். காந்தியின் நிழலில் தான், அவர் இன்னமும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்.!