Thursday, August 6, 2020

சமாதானக் கொக்குகளும் ஹிபாகுஷாக்களும்.!


ஹிரோஷிமா நினைவு தினம்.! 1945- ஆகஸ்ட் 6- காலை 8.15 மணி, ஜப்பான்- ஹிரோஷிமா நகரத்தின் உச்சியில் பறந்துகொண்டிருந்த விமானம் 'எனோலா கே', அமெரிக்காவிலிருந்து 2740 கி.மீ. பயணம் செய்திருந்தது. பி-29 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின் விமானி பால்.டிப்பெட் , தனக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் படி, 'ஷிமா என்ற மருத்துவமனையைக்' குறிவைத்து, ’லிட்டில் பாய்‘ (Little Boy) எனப்பெயர் கொண்ட, யுரேனியம்-235 அணுகுண்டை வீசினார். நாற்பத்து மூன்றே விநாடிகளில் நவீன அறிவியலின் கோர முகம், ஹிரோஷிமா நகரில் பற்றி எரிந்த தீயில் தெளிவாகத் தெரிந்தது. 1.3 கி.மீ தூரத்திற்கு, தீயின் நாவுகள் கோர நடனம் ஆடின். அதில், சுமார் 90,000 பேர் சிக்கி, வாதையுற்று கருகிப் போயினர். அமெரிக்காவின் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மறைவுக்குப் பின், துணை அதிபர் ட்ரூமன், அப்போது அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, போரில் ஜெர்மனி சரண் அடைந்திருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும் நேரம் அது. ஆனாலும், அமெரிக்காவின் எண்ணத்தில் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். 'பியர்ல் ஹார்பர்' (Pearl Harbour) துறைமுகத் தாக்குதலுக்கு (1941ல் நடந்தது), 'பதிலடி' என்ற பெயரில், தனது யுரேனியம் அணுகுண்டை ஹிரோஷிமாவில் சோதித்துப் பார்த்துவிட்டது அமெரிக்கா. ஜப்பானையும் பழிதீர்த்துக் கொண்டது. ஒரே நேரத்தில் அணுகுண்டு சோதனையையும், பழிதீர்க்கும் படலத்தையும் - Little Boy சரியாகவே செய்து முடித்திருந்தான். மீண்டும், ஆகஸ்ட் 9 அன்று, 'நாகசாகி' நகரத்தில், புளுட்டோனியம் ரக (இது ‘Fat man’) அணுகுண்டை வீசிய அமெரிக்கா, தனது சக்தியை எதிரணி நாடுகளுக்குப் புரிய வைத்துவிட்டது. நாகசாகியில் மட்டும் 40,000 பேர் அன்றே இறந்து போயினர். ஜப்பான் மன்னர், தனது நாட்டு மக்களிடம் கண்ணீர் நிறைந்த விழிகளுடன் மன்னிப்புக் கோரிய பின்னர், போரில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார். நேரடியான இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிவுக்கு வந்தது. ஆனால், போரின் பாதிப்பிலிருந்து, அந்த இரு நகர மக்களும் இன்று வரை முழுமையாக மீண்டு வரவில்லை. வேதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆம், அணுக்கரு பிளவு முறையில் உருவாக்கப்பட்ட இந்த இரு அணுகுண்டுகளின் கதிர்வீச்சு, இன்றும் தொடர்கிறது. அதன் பாதிப்புகளும் தொடர்கின்றன. யுரேனியம் 235 அணுவின் அரை ஆயுள் காலம், 70 கோடி ஆண்டுகள் என்பதை ஜப்பானியர்களும், உலக மக்களும் அப்போது அறிந்திருக்கவில்லை. தற்போது, யுரேனியம் குண்டுகளை விட, 6000 மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டுகள் சில நாடுகளிடம் இருக்கின்றன. ஆனால், அணு ஆயுதத்தைத் தாங்கும் சக்திதான் , இந்த பூமிப்பந்துக்கு இல்லை! ஹிரோஷிமா -நாகசாகி அணுகுண்டு வெடிப்பில், கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்கள் ’ஹிபாகுஷா’ என்று அழைக்கப்படுகின்றனர். கதிவீச்சின் காரணமாக , உடல் குறைபாடுகள், மூளை வளர்ச்சியின்மை, புற்று நோய் என பலவகையான பாதிப்புகள் இவர்களைத் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, இவர்களுடன் ஏனைய மக்கள் திருமண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. ஹிபாகுஷாக்கள் ஒருவகையில் இன்று வரை ’ஒதுக்கப்பட்ட’ மக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஹிரோஷிமா குண்டுவீச்சில் தப்பிய சிறுமி சதாகோ சசாகிக்கு, 12வது வயதில், லுக்கோமியா எனப்படும் புற்று நோய் வருகிறது. அணுகுண்டு கதிர்வீச்சே இதற்குக் காரணம் என்று அறிந்தாலும், காப்பாற்ற வழியில்லை அல்லவா?. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் சசாகி. மரண பயம் அவளை உண்ணவோ, உறங்கவோ அனுமதிக்கவில்லை. நிம்மதி இழந்து - வாடத் தொடங்கும் மலர் போல, கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தாள். அப்போது, அவளைச் சந்திக்க வந்த தோழி சிசுகோ, ”காகிதத்தில் 1000 கொக்குகள் (ஓரிகாமி கலை) செய்து விட்டால் , நோய் தீர்ந்து, நீ பிழைத்துவிடுவாய், பயப்படாதே..!” என ஆறுதல் சொல்கிறாள். இந்தச் சொற்களில் நம்பிக்கை கொண்ட சசாகியின் விரல்கள், கொக்குகள் செய்யத் தொடங்குகின்றன. கொக்குகள் செய்து , அதன் வழியே உயிர் பிழைத்துவிடலாம் என்று உறுதியாக நம்பிய சசாகி, காகிதங்கள், மருத்துவச் சீட்டுகள் என எது கிடைத்தாலும் கொக்குகளாகவே செய்து கொண்டிருந்தாள். எல்லா நேரங்களிலும் நம்பிக்கை நிஜமாகி விடுவதில்லை அல்லவா? ஒருநாள் 644 கொக்குகள் செய்து முடித்த நிலையில், இறந்து போகிறாள் சசாகி. அப்போது, உடன் படித்த பள்ளித் தோழிகள், மீதம் செய்யவேண்டிய 356 காகிதக் கொக்குகளைச் செய்து, அவற்றைக் கைகளில் ஏந்தியபடியே, சசாகியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார்கள். ஓர் அழகு தேவதை, அதிகாரத்தின் பசிக்கு இரையான துயரம், இந்த பூமியில் இனி யாருக்கும் வரவே கூடாது என்று சொல்லித்தான், காகிதக் கொக்குகள் வானில் பறந்தன. சசாகி போன்ற குழந்தைகளின் மௌன அழுகையின் முன் , அமெரிக்காவும், உலகமும் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றன. ஹிரோஷிமாவில் உள்ள நினைவகம் முன்பும், சசாகியின் சிலை முன்பும் ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. சமாதான உறுதிமொழியை அந்த நகர மேயர் வாசிப்பார். ஹிபாகுஷாக்கள் தங்களது உறவுகளை நினைவு கொள்வர். அப்போது 1000 காகிதக் கொக்குகள் புடை சூழ , சசாகி என்னும் தேவதையும், வானிலிருந்தபடியே பூமியின் அமைதிக்காக வேண்டிக் கொண்டிருப்பாள். அதிகார வேட்கையை மனித மனதிலிருந்து, எப்படிப் பிரிப்பது? சக மனிதனை நேசிக்காத விஞ்ஞானம் தவறென்று யார் சொல்வது? ஏனைய விலங்குகள் இவ்வளவு மோசமாய் இருப்பதில்லை. மனிதன் மட்டும் தான் இப்படி இருக்கிறான். தேசத்தின் எல்லைகள் வெறும் கற்பனைக் கோடுகள்தான். அவை வரைபடத்தில் மட்டும் இருக்கட்டும். மனதிற்குள் எல்லைகள் எந்த வடிவத்திலும் வர வேண்டாம். பூமிப்பந்து அன்பிலே நிறையட்டும் !

1 comment:

  1. உண்மை
    பூமிப் பந்து அன்பினால் நிறையட்டும் ஐயா

    ReplyDelete