Sunday, August 2, 2020

நடை என்னும் தியானம்

   
     
கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி!”   

                    மனச்சோர்வும், எதிர்பாராமைகளும் நம்மைச் சூழும் நேரத்தில் எல்லாம்,   விரும்பிய புத்தகங்களும், நீண்ட தூரம் செல்லும் தனித்த நடையும் தான் உண்மையான ஆறுதல் தரும் மாமருந்து என்பதே எனது அனுபவம். 

    நமது கவலைகள், எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு செய்தியாகவே இருக்கின்றன. அது அவர்கள் வழியாக, எல்லாரிடத்தும் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தனது தேவைக்காகவும், சுய ஆறுதலுக்காகவும் அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். நமது உள மீட்சி என்பது, ஒரு மில்லி மீட்டர் அளவுகூட மற்றவர்களால் நிகழாது என்பது தான் உண்மை. ஆனால், மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் நமது மனதை மயிலிறகு கொண்டு வருடுகின்றன. தனித்துச் செல்லும் நீண்ட நடை, மனதையும் உடலையும் இலகுவாக்குகின்றது. பல்வேறு உலகியல்  நெருக்கடிகளை மறப்பதற்கும், அவற்றைக் கடப்பதற்கும் இதைவிட சிறந்த உபாயம் ஏதும் இல்லை என்றே கருதுகிறேன். அப்படித்தான் நான் கடந்தும் வந்திருக்கிறேன்.

         இந்த முற்றடைப்புக் காலம் எப்போதையும் விட அதிகமான நெருக்கடிகளையே தந்திருக்கிறது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகள், உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்கள் என யாவும் ஒரு சேரச் சேர்ந்து, பல விதங்களில் சிக்கல்களை உருவாக்கின. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மனம் நிலையிழந்து தவித்துக் கொண்டிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில் இருந்த ஒரு வாசகம், என் நினைவுக்கு வந்தது. ’கால்களால் சிந்திக்கிறேன்’ என்ற அந்தக் கட்டுரையில் வரும்,  ’கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல் படி’ என்ற வாசகத்தை, நான் எப்படி மறக்க முடியும்?

          மே மாதம் ஒன்றாம் தேதி முதல் அதிகாலையில் தனித்த நடை செல்வதென்று முடிவு செய்தேன். அதன்படி,  தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, ஐந்து மணி வரை மனதுக்குப் பிடித்தமான சில புத்தகங்களை வாசித்தேன். பெரும்பாலும் ஏற்கெனவே வாசித்த புத்தகங்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாரதியார் கவிதைகள்,  ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’, ‘புறப்பாடு’, ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’,  எஸ்.ரா எழுதிய ’தேசாந்திரி’, சுந்தர ராமசாமியின் ‘மனக்குகை ஓவியங்கள்’ கட்டுரைத் தொகுப்பு.

          தினமும் சரியாக ஐந்து மணிக்கு நடக்கத் தொடங்குவேன். பாரதியாரின் 50 பாடல்கள் கொண்ட இசைத் தொகுப்பினை மெலிதான சத்தத்தில் ஒலிக்க விடுவேன். அதுதான் எனது வழித்துணை.  அந்த நேரத்தில், தெருக்கள் பேரமைதியில்  உறங்கிக் கொண்டிருக்கும். பால்காரரின் மணிச் சத்தம் கேட்டு, ஒவ்வொருவர் வீட்டிலும்  முதலில் மின் விளக்குகள் கண் விழிப்பதைக் காணலாம். பிறகு அடுத்த அரை மணி நேரத்திற்குள்  வீட்டுப் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட, தெருக்களில் மெல்லிய பரபரப்பு பளிச்செனத் தெரியும். அதற்குள் நான் வீடுகளைக் கடந்து, ஏதோ ஒரு  தார்ச்சலையில்  தனித்துச் சென்று கொண்டிருப்பேன். கூட்டிலிருந்து கண் விழித்த பறவைகள் , அதிகாலை வானத்தில் சோம்பல் முறித்து, பறந்து கொண்டிருப்பதை அப்போது பார்க்கலாம். ஏதோ ஓர் ஒழுங்குடன், கூட்டம் கூட்டமாக அவை பறப்பதைப் பார்க்கும் போது, சொர்க்கம் எது என்பது நமக்குத் தெரிய வரும்.

              பெரும்பாலும் வயதின் அடிப்படையில் குழுவாகச் சேர்ந்து,  நடைப் பயிற்சி செல்லும் மனிதர்களை வழியெங்கும் காண முடிந்தது.  அறிமுகம் இல்லாத அந்த மனிதர்களைப் பார்த்து, முதல் நாள், நானே வணக்கம் சொன்னேன். நண்பர்கள் ஆனார்கள்.  மறுநாள் முதல் அந்த நண்பர்களுக்கு வணக்கம் சொல்வது எனது வழக்கமானது. ஆனால், ஒருபோதும் அவர்களுடன்  பேசுவதில்லை. மெல்லிய புன்னகையோடு கடந்து விடுவேன்.  

           அரிசி நிரம்பிய மஞ்சள் பைகளை, கைகளில் பிடித்துக் கொண்டு வரும் சிலர், அவற்றை மயில்களுக்கு உணவாகப் போடுவார்கள். முந்நூறுக்கும் குறைவில்லாத மயில்கள் ஆறு மணிக்கே காலை உணவு எடுத்துக் கொள்வதை, அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இது பேரானந்தத்தின் ஒரு துளி அல்லவா? 

     ஒவ்வொரு நாளும் ஒரு பாதையைத் தேர்வு செய்து நடந்தேன்.  எந்தத் திசையில் ஒற்றையடிப் பாதை பிரிந்தாலும் அதனைப் பின் தொடர்ந்தேன். Robert Frost  ன்  ‘The Road not Taken’ கவிதை வரிகள் எனக்கு தினமும் நினைவுக்கு வந்தன. ஆனால், தேர்வு செய்யாத பாதை குறித்த கவலை எனக்கு வருவதில்லை. ஏனெனில், அடுத்த நாள் அதிலும் நடப்பேன். இப்படித்தான் மே மாதம் முழுவதும் நடந்தேன்.    

          மே மாதம் 31 ஆம் தேதி இரவு, முகநூலில் கவிஞர் மகுடேசுவரன் ’நான்கு இலட்சம் காலடிகள்’ என்று  ஒரு பதிவு எழுதியிருந்தார். எழுத்தாளர்  ஜெயமோகனின் ’பத்து இலட்சம் காலடிகள்’ என்ற சிறுகதை குறித்து தீவிரமான விவாதம் முகநூலில் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஒளசேப்பச்சன் என்ற புலனாய்வு அதிகாரியின் வழியே, கேரளத்தின் ‘மாப்பிள்ளை முஸ்லீம்களின்’ கப்பல் கட்டுமானம் பற்றியும், அவர்களின் பண்பாட்டு வரலாறு பற்றியும் சுவையாக எழுதப்பட்ட சிறுகதை அது. அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.  ஆனால், கவிஞர் மகுடேசுவரன் எழுதியது நடைப் பயிற்சியைப் பற்றிய கட்டுரை.

              ஒரு நாளைக்கு சராசரியாக 9.6 கி.மீ. வீதம் (மே மாதம் முழுதும் மொத்தமாக 297 கி.மீ) தினமும் நடந்திருக்கிறார். அதாவது, 402122 காலடிகள். கணக்கிடுவதற்கு அலைபேசியில் உள்ள செயலி ஒன்றினைப் பயன்படுத்தி இருந்தார். அந்தக் கட்டுரை மிகுந்த உற்சாகத்தை எனக்குள் ஏற்படுத்தியது. உடல் எடையைக் குறைப்பதல்ல நோக்கம். மாறாக, சுறுசுறுப்பையும், நோய் எதிர்ப்பாற்றலையும் பெறுவதே நடைப்பயிற்சியின் நோக்கம் என்பதை  அனுபவத்தோடு விளக்கியிருந்தார்.

            நானும் அதே 4 இலட்சம் காலடிகள் என்ற இலக்கை வைத்தேன். ஒரு நாளில் சராசரியாக இரண்டு மணி நேரம் நடந்தால், இந்த இலக்கை எட்ட முடியும் என்பதால் அதன்படி நடக்க ஆரம்பித்தேன். ஜூன்  1 முதல் 30 வரை ஒருநாள் கூட, விட்டு விடாமல் தினமும் நடந்தேன். எனது பிரச்சனைகளோடு, கொரோனா தொற்றின் வேகமும் சேர்ந்து உண்டாக்கிய பதற்றங்கள் யாவும், எனது நடையில் மறைந்து போயின.  இலக்கு இருந்ததால், பயணம் திட்டமிட்டபடி தொடர்ந்தது.  ஜூன் மாதம் இறுதி நாளன்று, இலக்கினை     எளிதாகக் கடந்திருந்தேன். Magudeswaran Govindarajan  கவிஞர் மகுடேசுவரனுக்கு ’நன்றி’  என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்., இப்போது சத்தமாக!

         ஜூன் 30 அன்று முகநூலில் மீண்டும் ஒரு பதிவு.  இம்மாதம்  மொத்தமாக 5 இலட்சம் காலடிகள் நடந்ததாக, செய்தி ஒன்றினைப் போட்டிருந்தார் கவிஞர் மகுடேசுவரன். எனக்கும் ஆவல் கூடியது.  அதனையே எனது ஜூலை மாத இலக்காக, நான் முடிவு செய்து கொண்டேன்.  அதாவது தினமும் 2மணி 45 நிமிடங்களுக்குக் குறைவில்லாமல் நடக்க வேண்டும். சரி என முடிவு செய்து, காலையும் மாலையுமாக இரு வேளைகளிலும் தீவிரமாக நடக்கத் தொடங்கினேன்.

      அலைபேசியில் உள்ள செயலியை எப்போதும் அணைத்தே வைத்திருக்க வேண்டும்; நடைப்பயிற்சி செய்யும் நேரங்களில் மட்டுமே அதனை இயக்க வேண்டும்; காலடிகளைக் கணக்கிடும் உணர் (Sensitivity) பகுதியில் , High என்பதைத் தேர்வு செய்யக் கூடாது.  Low என்பதையே பயன்படுத்த வேண்டும் என நான் முடிவு செய்திருந்ததால், சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தை எனது செயலி, 750-800 மீட்டர் என்றே காட்டியது. எனவே, நடையின் தூரம் அதிகமாகுமே தவிர நிச்சயம் குறையாது என்பதை உறுதி செய்து கொண்டேன்.  

       நடக்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் பதிந்து போனது. அதிகாலை நான்கு மணிக்கு எழும் பழக்கம் உறுதியானது. பாயக் காத்திருக்கும் புலியைப் போல, அதிகாலையில் நடப்பதற்காகவே தூக்கத்திலும் காத்திருக்கத் தொடங்கினேன்.   எனது வாழ்நாளின் எந்த ஒரு தருணத்திலும், இப்படி தொடர்ச்சியாக நடைப் பயிற்சி மேற்கொண்டதே இல்லை.  (கிரிக்கெட் மற்றும் கைப்பந்து ஆட்டம் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் நான்  தீவிரமாகக் கலந்து கொண்டதும் இல்லை.!).

            நேற்று, (ஜூலை 31) காலை நடையின் போதே, 5 இலட்சம் காலடிகள் என்ற இலக்கினை எட்டினேன். (மொத்தம் 5,01,647 காலடிகள்).  அலைபேசியில் உள்ள கணக்குப்படி, ஜூலை மாதத்தில்  மட்டும் 361.17கி.மீ. தூரம் நடந்திருக்கிறேன். செயலியில் வரும் பிழையைத் தவிர்த்துப் பார்த்தால், 452 கி.மீ. தூரம் நிச்சயம் வரும். (அலைபேசியில் 800மீ என்பது உண்மையில் 1 கி.மீ!). கூடவே, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பொய்கைமலை ஏறி இறங்கினோம். சில சமயம் இடைப்பட்ட நாள்களிலும் மலை ஏறுவதுண்டு. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக மலை ஏறிய போது சற்று சிரமமாகத்தான் இருந்தது. அடுத்தடுத்த முறை மலையேறும் போது, மனமும் உடலும் நன்றாக ஒத்துழைத்தது.

                 இந்த மாதத்தில் அவ்வப்போது உடல் களைப்பு ஏற்பட்டதும். தூக்க உணர்வு அதிகமாகத் தோன்றியதும் உண்மை தான். ஆனால், நடக்க ஆரம்பிக்கும் போது, இவை யாவும் மறைந்து, கரை மீறும் உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது.  ஜூலை மாதத்து நடைப்பயிற்சியை, எனக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றியவர்கள் வழக்குரைஞர் தமிழ்மணியும், சகோதரர் மிகாவேலும் (Mihavel A Mihavel A Mihavel) . தினமும் காலை நேரத்தில் இவர்களோடு இணைந்துதான் சராசரியாக நாளொன்றுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தேன். நடக்கும் தூரம் முடியும் வரைக்கும், நாங்கள் பெரும்பாலும் பேசிக்கொள்வதில்லை. நடைதான் முதன்மையாக இருந்தது.

           இவர்களோடு இணைந்து நடந்தது, பயன் தருவதாக அமைந்தது என்று ஏன் சொன்னேன் தெரியுமா?   சாலையின் ஓரத்திலும், மலையிலும் கண்ணில் பட்ட ஒவ்வொரு செடியையும், கொடியையும், மரத்தையும், பறவையையும் ஆர்வத்தோடு சுட்டிக் காட்டினார்கள்.  அவற்றின் பயன் மதிப்பினைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். குறிப்பாக, வழக்குரைஞர் தமிழ்மணி (Tamilmani Arumugam) களத்தில் இறங்குவார். ஆம், வேலிகளில் இறங்கி, அவற்றைப் பறித்து மேலேறுவார். அதன் பயன், இலை அமைப்பு, தன்மை, பயன்படுத்தும் விதம் என தெளிவாகச் சொல்லுவார். முக்கியமாக, தெரியாததைத் தெரியாது என்றே சொல்லுவார். அலைபேசியைக் கொண்டு, அழகு அழகாக புகைப்படங்களை எடுத்து அசத்துவார்.

         பெரும்பாலான நாள்களில், நடை முடிந்து திரும்பி வரும்போது ஏதாவது ஒரு பொருள் கையில் இருக்கும். பிரண்டை, கோவைக்காய், முடக்கறுத்தான், குறிஞ்சாக் கீரை, வேலிப் பருத்தி என நாங்கள் எடுத்துச் செல்வதை பார்த்த ஏனைய நடையாளர்கள், எங்களிடம் விசாரித்துவிட்டு, அவர்களும் எடுத்துச் செல்லத் தொடங்கினர். வெளிர் ஊதா நிறப் பூக்களோடு, காய்த்துக் கிடந்த சுண்டைக்காயை பறித்து வந்த ஒரு  நாள் மிகவும் அழகானது. இப்படியாக, நாங்கள் நடக்கும் பகுதி சஞ்சீவினி மலையாகவே மாறிப் போனது.

             மாலை நடையை வழக்கம் போல, நான் தனியாகவே மேற்கொண்டேன். மாலைச் சூரியன் சட்டென மறைந்து, திடீரெனெ இருள் கவியும் போது,  அந்தி வானத்தின் அழகை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அனுபவிக்கத்தான் வேண்டும்.

          ’வால்டன்’ குளக்கரையில் தங்கி, தினமும் பத்து மைல்களுக்கு மேல் நடந்து, இயற்கையை அவதானித்த தோரூ போல இயற்கை பற்றிய முழுமையான ஞானம் கை வரப் பெறவில்லை. ஆனாலும் முடிந்த மட்டும் இயற்கையைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.  என்னைப் பொறுத்த வரை, நான் நடப்பது என்பது உடல் எடையைக் குறைப்பதற்காக அல்ல, (அதற்கு மூன்று ஆண்டுகள் ஆகலாம்!!) மாறாக மனத்திற்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காக; காணும் காட்சிகளில் இருந்து கற்றுக் கொள்வதற்காக; வானம் போல விசாலம் அடைவதற்காக.  


         பலனை எதிர்பாராமல், ஈடுபாட்டுடன் நடந்து கொண்டே இருங்கள். ஏனெனில், அதிகாலையில் நடப்பவர்கள் பேறுபெற்றவர்கள்!





9 comments:

  1. Very nice. Keep going.
    Dr P.Mariappan

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்..
      மகிழ்கிறேன்.

      நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள் சார்.

      அம்மா நலமாக இருக்கிறார்களா?

      நலமே நிறையட்டும்.

      Delete
  2. தங்களின் நடைப் பயிற்சி போற்றுதலுக்கு உரியது
    தொடருங்கள்
    ஆரோக்கியம் போற்றுவோம்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

      Delete
  3. அருமையான கட்டுரை.
    எண்ணிய முடித்தற்கு
    தின்னிய நெஞ்சம் வேண்டும்.
    அது உங்களிடம் நிறையவே உள்ளது.
    வாழ்த்துக்கள் 💐

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி..!
      வாசித்து கருத்திட்டதில் மிகவும் மகிழ்கிறேன்.

      Delete