Friday, July 26, 2019

பெர்னாட் ஷா

சிந்தனை அறிஞர் - பெர்னாட்ஷா.   

   " A Life spent making mistakes is not only honourable but more useful than a life spent doing Nothing".         - Bernard Shaw.               
             மதுவையும், புகையையும் தொடாத சிந்தனைவாதி;  இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் (1925), திரைத்துறையில் ஆஸ்கார் விருதையும்(1938) பெற்ற ஒரே எழுத்தாளர் - நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா ( 1856-1950) பிறந்த நாள் இன்று!.
           
             ஆங்கில நாடக உலகில் ஷேக்ஸ்பியருக்கு இணையாகக் கருதப்படும் பெர்னாட் ஷா, 6 நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, விமர்சனக் கட்டுரைகள், எண்ணற்ற நாடகங்கள் என இறக்கும் வரையில் சுறுசுறுப்பாக இயங்கியவர்.

            1856 ஆம் ஆண்டு, ஜூலை 26 ஆம் தேதி,  அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகருக்கு அருகில் உள்ள  கடற்கரை   கிராமத்தில் பிறந்த இவர், வறுமையிலேயே வளர்ந்தார். இரண்டு மூத்த சகோதரிகளுடன் வளர்ந்த பெர்னாட் ஷா, ஜார்ஜ் கார் ஷா- லூசிண்டா எலிசபெத்தின் ஒரே ஆண் மகனாவார். நான்கு ஆண்டுகள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றார். வாழ்நாள் முழுவதும் பள்ளிகளைப் பற்றிய வெறுப்பான எண்ணமே அவருக்கு இருந்தது. இதற்கிடையில் பெர்னாட் ஷாவின் அம்மா , தனது மகள்களுடன்     கணவனைப் பிரிந்து சென்று விட, இவர் மட்டும்  தந்தையோடு தங்கிவிட்டார்.   பிரிட்டிஷ் மியூசியம் உள்ளிட்ட எல்லா  நூலகங்களிலும் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார். ஒவ்வொரு மாதமும்   தாயிடமிருந்து வரும் ஒரு பவுண்டு பணத்தில் புத்தகங்களே வாங்கினார்.

            'சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற நிலை வரவேண்டும். ஏழை - பாட்டாளிகளின் உழைப்பை யாரும் சுரண்டக் கூடாது.'- என்ற சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு, பல்வேறு சித்தாந்த அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டார். கம்யூனிசத்தில் இணைந்தார்; பின்  ஃபேபியன் சொசைட்டியில் பெரும்பங்காற்றினார்; ஹிட்லரும், முசோலினியும், ஸ்டாலினும் சமூகத்தை சீர்திருத்த வந்த தலைவர்கள் என்றார்; பின்பு எதிர் நிலையும் எடுத்தார்.    இவரது கொள்கைகள் முரண் போல் தோன்றலாம். ஆராய்ந்து பார்த்தால், சமூக மேன்மையையே அவர் விரும்பியது புரியும்.

                  இசை விமர்சனம் உட்பட ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். கடிதம் எழுதுவதில் சளைக்காது இருந்தார். ஏறக்குறைய 2,50,000  கடிதங்கள் எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் மற்றும் நாவல்களில் வரும் மேற்கோள்கள், இன்றளவும் புதுமையும் புத்துணர்வும் கொண்டவை.
கிரிக்கெட் பார்வையாளர்களைப் பற்றிய இவரது கருத்தும் புகழ்பெற்றது.

               'பிக்மாலியன்' என்ற இவரது  நாடகம், திரைப்படமானபோது, அதன் திரைக்கதை எழுத்துக்காக ஆஸ்கர் அகாடமி விருது பெற்றார். திரைத்துறை, நாடகம், இலக்கியம் என அலைந்த  பெர்னாட் ஷா, தன் வாழ்நாளில் ஒரு முறை கூட, மதுவையும் புகையையும் தொட்டதே இல்லை. மேலும், பதின்பருவ நாள்களில் இருந்து, சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தார். 

                நேர்ப்பேச்சிலும் எழுத்திலும் இவரிடம்     மெல்லிய  நகைச்சுவை இழையோடும். 1925ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, மனைவியின் வற்புறுத்தல் காரண்மாகவும்,    தனது தாய் நாட்டிற்குப் பெருமை என்பதற்காகவும் மட்டுமே விருதினை ஏற்றுக்கொண்டார். ஆனால், பரிசினை நேரில் பெற, நார்வே நாட்டிற்குச் செல்லவில்லை. மாறாக, பரிசுத்தொகை முழுவதையும், ஸ்வீடிஷ் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிக்கென செலவழிக்கச் சொல்லி விட்டார்.

               London school of Economics என்ற அமைப்பை நிறுவிய பெர்னாட் ஷாவின் சிந்தனைகள், இன்று   "ஷாவியன் கோட்பாடுகள்" என்று அழைக்கப்படுகின்றன. பட்டங்களையும், பரிசுகளையும் வெறுத்த பெர்னாட் ஷா, மத அடையாளத்தோடு மேடைக்கு வரும் அன்பளிப்புகளைக் கூட பெறுவதில்லை. எளிய   மக்களின் பிரதிநிதியாக இறுதி வரை எழுத்தின் வழியே போராடிய பெர்னாட் ஷாவின் பெயரை உலகம் உச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

              இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில், Common sense about the war என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில்,’நாட்டுப்பற்று’ என்ற போலித்தனத்தின் பெயரால், எண்ணற்ற இளைஞர்களின் உயிர்கள் வீணாகிப் போவதைப் பற்றி, மனம் வருந்திப் பேசினார். இக்கட்டுரை மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால், பெர்னாட்ஷாவின் நல்ல பிம்பம் , உடைந்துபோனது என்று கூட சொல்லலாம். இதற்காக தனது கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஏனெனில், போர்களை அவர் அறவே வெறுத்தார்.

                 1898 ஆம் ஆண்டு, ஃபேபியன் அமைப்பில் இருந்த, சி.பெய்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பெர்னாட்ஷா. இவர்களது வாழ்வில், இன்பம் மட்டுமே நிறைந்திருந்தது. இந்த இணைக்கு குழந்தைகள் ஏதுமில்லை. ஆனாலும், இருவருக்குமிடையில் பரஸ்பர அன்பு, நிறையவே இருந்தது. மரணிக்கும் நாள் வரை, மனமொத்தே வாழ்ந்தனர். 1950 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்  2 ஆம் தேதி பெர்னாட்ஷா இறந்து போனார். அயோட் நகரத்தில் இருந்த தனது வீட்டில், ஏணியில் ஏறி மரக் கிளைகளை வெட்டி, சீர் செய்து கொண்டிருந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். அதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இறந்தும் போனார்.

                 மக்கள் நலனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த பெர்னாட்ஷா, வாழ்நாளின் இறுதிவரை நாடகங்களை எழுதிக் கொண்டே இருந்தார்.  1950 ஆம் ஆண்டு இவர் எழுதிய, Why She Would Not என்ற நாடகமே இவரது கடைசி ஆக்கமாகும்.   மரணத்திற்குப் பின் இவரது பெயர் சொல்ல, ரத்த வாரிசுகள் ஏதும் இல்லை. ஆனாலும், அவர் காலத்திற்குப் பின்னும் அவர் இன்னும் இருக்கிறார். ஏனெனில், அவர் நவீன அறிவுலகின் தந்தையாகிப் போனார். உலகில் எங்கிருந்தாலும், அறிவு நிறைந்த மனிதர்கள், இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள். ஆம், மக்கள் நலன் விரும்பும் சிந்தனைவாதிகள்- அறிஞர்களை,  அப்பகுதியின் ’பெர்னாட் ஷா’ என்று சொல்வது, இன்று உலக வழக்கமாகி இருக்கிறது.

               வெற்று அறிவு என்பது,  வீணாக விழலுக்கு இறைக்கும் நீராகும் என்பதையும், மானுட சமூகத்தின் மேன்மைக்கான சுத்த அறிவு தான், காத்திருக்கும் பயிருக்கு உயிர் கொடுக்கும் கார் ஆகும் என்பதையும் உணர்வுக்குள்  கலந்து வைப்போம்!





         

No comments:

Post a Comment