Tuesday, July 30, 2019

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

புரட்சிப் பெண் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி! 

டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி (1886-1968)!

                         பிறக்கும்போதே உடலில் வலு இல்லை; தாய்ப்பாலும்  கிடைக்கவில்லை; பிள்ளைப்பருவத்தில் மார்புச் சளி; பள்ளிப் பருவத்தில் கிட்டப்பார்வை; கல்லூரி செல்லும்போதோ,  ரத்தசோகையும், ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பும் சேர்ந்துகொண்டது. -இவை யாவும் இவள் உடல் கண்ட சோதனைகள்.                  
                    தாய் இசைவேளாளர் சமூகம் -தந்தை பிராமண சமூகம் - இவர்கள் திருமணத்தை உறவுகள் எதிர்த்தன; பருவம் வந்த பின்னும் பள்ளி செல்ல எண்ணிய இவரின் ஆர்வத்தை உடனிருந்த மீதி  உறவும், சமூகமும் மறுத்தன; ஒரு தங்கையின் அம்மை நோய் பாதிப்பும், மறு தங்கையின் புற்று நோய் பாதிப்பும் இவர் மன வலிமையை முறித்தன. இப்பெண்ணை படிக்கச் சேர்த்தால் , தங்கள் மகன்களை அனுப்ப மாட்டோம் என்று சாதியும், சமூகமும்  முரண்டு பிடித்தன. -  இவை யாவும் இவள் மனம் கொண்ட வேதனைகள்.
                              உடலும், மனமும் கண்ட  வாதைகளையும், சமூகத்தின் பேதைமைகளையும்   தனது சாதனைகளால் விரட்டி அடித்த சமூகப் போராளி - கருணையும் வீரமும் சரிவரக் கலந்திருந்த சாதனைப் பெண்மணி டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி 1886, ஜூலை 30 ஆம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தார். தந்தை நாராயணசாமி வழக்கறிஞ்ர்; தாய் சந்திரம்மாள் ஓர் இசைப்பாடகி.                  
    புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் சிறப்பு ஆணையோடு, ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாய்ச்  சேர்ந்து படித்தார் முத்துலெட்சுமி ரெட்டி. சென்னை மாகாண மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த  'முதல் இந்தியப் பெண்' எனும் பெயரும் பெற்றார். பெண்களை வகுப்பறையில் அமர வைக்கவே மறுத்த பேராசிரியர் ஜிப்போர்ட், முத்துலெட்சுமி பெற்ற மதிப்பெண்களால் மனம் மாறினார். 1912ல் முத்துலெட்சுமி மருத்துவர் பட்டம் பெற்ற நாளில், பேராசிரியர் சொன்னார், “சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்!”.     
    சென்னை எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். அந்நாளைய சுகாதாரத்துறை அமைச்சர் பனகல் ராஜா(நீதிக்கட்சி), உதவியோடு இங்கிலாந்து சென்று, மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தார். லண்டனில் ராயல் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இவர் கற்ற கல்வி, செனனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க உதவியது.
                             முத்துலெட்சுமி ரெட்டியை நிறுவனராகக் கொண்டு, 1954ல் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, அடையாறு புற்று நோய் மையம், இன்று இந்தியாவின் மிக முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாகும். ’எஸ்.கே.புண்ணியகோடி’ என்ற புண்ணிய மனிதன் தான், மருத்துவமனைக்கான இடத்தை இலவசமாக வழங்கினார். தற்போது, இந்த மையத்தில்,  நாடெங்கிலும் இருந்து ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் தரமான சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல, 1930 ஆம் ஆண்டு, இவரால்  தொடங்கப்பட்ட ’அவ்வை இல்லம்’ ஆதரவற்ற பெண்களின் கலங்கரை விளக்கமாக இன்றும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
                       இந்தியாவிலேயே முதன் முறையாக, பெண்களின் நலனுக்காக மாதர் சங்கத்தைத் தொடங்கினார். ‘ஸ்திரி தர்மம்’ என்னும் மாத இதழையும் நடத்தினார். மாகாண சட்ட மன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம்,  சட்டமன்றத்தில் முதல் பெண் குரல் ஒலித்தது.  தேவதாசி  முறை ஒழிப்பு , இளம் வயது திருமணத்திற்குத் தடை, இருதார மணத்திற்கு தடைச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு முன்வடிவு கொடுத்தார். இது நாட்டில் பெரும்  விவாத அலையை உண்டாக்கியது. இறுதில் இவை யாவும் சட்டங்களாயின. மாதர் குலமே இவரால்  மகிழ்ந்தது.
               தான் எழுதிய, “My Experiment as a legislator" என்ற சுயசரிதைப்  புத்தகத்தில்,    அன்னி பெசண்ட் அம்மையாரும், மஹாத்மா காந்தியடிகளும் தனது  இரு முன்மாதிரிகள் என பெருமையோடு குறிப்பிடுகிறார் முத்துலெட்சுமி ரெட்டி. தியாசபிகல் சொசைட்டியில்,  சாதி மத சடங்குகளைப் புறக்கணித்து  , தனது மன எண்ணங்களைப் புரிந்து கொண்ட டாக்டர்.சுந்தரரெட்டி என்பவரைக் கண்டறிந்து மணவாழ்க்கையைத் தொடங்கினார். இந்த தம்பதியினர்  மனமொத்து, இணைந்து - பல சீர்திருத்தங்களைச் செய்தனர்.  இவர்கள் இருவரும் சமூக மாற்றங்களைச்  சத்தமின்றி எழுப்பிய, இரு கைகள் போலவே வாழ்ந்தனர். தடுத்த சமூகத்திற்கு, சாதனைகளையே பரிசாகக் கொடுத்தனர்.
                      தமிழிசைக்காகவும், தமிழுக்காகவும், தமிழாசிரியர்கள் நலனுக்காகவும் இவர் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதுபோல பல்வேறு பிரச்சனைகளில், முத்துலெட்சுமி ரெட்டியும், அவரது கணவரும் எப்போதுமே சமூக முன்னேற்றத்துக்கான முன் ஏர் போலவே செயலாற்றி வந்துள்ளனர். பொருத்தமான இந்த தம்பதியினருக்கு, இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம் மோகன், திட்டக்குழு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளைய மகன் கிருஷ்ண மூர்த்தி, ஒரு புற்றுநோய் மருத்துவ நிபுணர்.
              சமூகப் பணிகளில் சற்றும் தளர்வடையாத இவரது மன உறுதி, எதிர்காலத் தலைமுறையினருக்கு ஓரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.  தடையின்றித் தொடரும்  தன்னலமற்ற இவரது சேவையைப் பாராட்டும் விதமாக, இந்திய அரசு இவருக்கு ’பத்ம பூஷண் விருது’(1956) வழங்கிச்  சிறப்பித்தது.  1968 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22ஆம் தேதி, இவர் மறைந்தார். இவரால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்கள் இன்று வரை சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது, இவரது உயர் வாழ்வுக்குக் கிடைத்த முழு வெற்றியாகும்.
                 முத்துலெட்சுமி ரெட்டி, தனது  வாழ்நாள் முழுவது சமரசமற்ற ஓர் சமூகப் போராளியாக வாழ்ந்து காட்டினார். முடை நாற்றமெடுக்குத்த சமூக அழுக்குகளை, தன் கைகளாலேயே களைந்து சுத்தம் செய்தார்.  இடர்கள், தடைகள் என எதுவும் அவரது இலட்சியங்களைத் தடுக்க முடியவில்லை. எதிர்கொண்ட சங்கடங்கள் அனைத்தையும், தனக்குச் சாதகமாக்கி,  சாதனையாகவும் மாற்றிக் கொண்டார்.
                ஆம், இடர் தரும்  தடைக்கற்களை    படிக்கற்களாக  மாற்றுவதும், தடுத்த கைகளைக் கொண்டே -  வெற்றி மாலை சூட்டச்செய்வதும்தானே, ஒரு  போராளிக்கு இருக்க வேண்டிய அவசிய குணங்கள்.! 
                   
               

No comments:

Post a Comment