Monday, July 29, 2019

பி.சா.சு.


தமிழின் முதல் முனைவர் - பி.சா.சு.!

                  தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும்,  பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில்  முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று. 
     
         கணிதத்தில் பட்டம் முடித்து, இனிக்கும் தமிழுக்கு அரும்பணி செய்த அறிஞர்களின் பட்டியல்  எடுக்க வேண்டும். அது, நிச்சயம் சுவையான பட்டியலாக  இருக்கக்கூடும்.  அப்படி ஒரு பட்டியல் எடுத்தால், அதிலும் பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பெயர் முக்கிய இடம் பிடிக்கும். !
                   
           திருச்சி மாவட்டம் கொல்லிமலைப் பகுதி, பாலகிருஷ்ணன்பட்டியில் 1890-ஜூலை 29 ஆம் தேதி,  ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பின்னங்குடி சா.சுப்ரமணிய சாஸ்திரி.(P.S.Subramaniya Sasthiri,1890-1978). திருச்சி நேஷ்னல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு எஸ்.பி.ஜி (தற்போதைய பிஷப் ஹீபர் கல்லூரி) கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.

               பிறகு,   மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் ,  சமஸ்கிருதத்தில் முகலைப் பட்டம் பெற்றார். அங்கே இவருக்கு ஆசிரியராக இருந்தவர் திரு.நீலகண்ட சாஸ்திரி அவர்கள். பேராசிரியர்  எஸ்.குப்புசாமி அவர்களிடம் இருந்து நியாய சாஸ்திரம் (Logic), அலங்கார சாஸ்திரம் (Comparative literature and literary criticism) போன்ற பாடங்களில் நுட்பம் உணர்ந்தார். ஓர் ஆர்வம் மிக்க  மாணவராக இருந்து,  தமிழ், சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றார்.
 
           ”தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப்” பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தார்.  இதன் அடிப்படையில் சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.  தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமை இவருக்குக்  கிட்டியது.
         
            திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் ஒரு  கணிதப் பட்டதாரி ஆசிரியராகவே தனது பணியைத் தொடங்கினார் பி.சா.சு.   பிறகு,  தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ,  திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்த பி.சா.சு அவர்கள், இறுதியில் திருவையாறு  கல்லூரியில் பணி ஓய்வு பெற்றார்.
               
           இவர்தான் தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரைகள் எழுதியும்  வெளியிட்டார். சென்னையில் உள்ள  பேரா.குப்புசாமி ஆய்வு நிறுவனமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்துள்ளன.

        காஞ்சி சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்று,  பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத்  தமிழில் மொழிபெயர்த்தார். 14 தொகுதிகளாக உருவான இந்நூலின் கடைசி 8 பாகங்கள், இவரது மறைவுக்குப் பிறகே அச்சானது. தற்போது, 14 தொகுதிகளையும் குப்புசாமி ஆய்வு நிறுவனம் மறுபதிப்பாக வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும் பாணினியின் நூல்கலையும்  இவரே தமிழுக்குக்  கொண்டுவந்தார்.   
     
           அதே காலகட்டத்தில் புறநானூறு பாடல்களையும் ஆய்வு செய்து,  முதன்முதலில் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து வெளியிட்டார்.  விளக்கமுறை  இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கண நூல்களையும்  எழுதியுள்ளார்.    தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 
         
            40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும், வேறுபாடுகள் இல்லாமல்  எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார். ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை,திருவையாறில் ,  தொடர்ந்து  திருக்குறள் வகுப்பு நடத்தினார். துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு இவர் நடத்திய திருக்குறள் வகுப்பு, இவரது தமிழ்ப் பற்றுக்கும், எளிமைக்கும் ஓர் உதாரணம்.   

        எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாள்களைக்  கடத்தினார். மொழிகளின் காதலனாய், நூல்கள் வாசிப்பதில் பிசாசு போல இயங்கிய பி.சா.சு.,   திருவையாறு நகரில், 1978ஆம் ஆண்டு, மே மாதம் 20 ஆம் தேதி மறைந்தார். தமிழ் மனம் , தமிழ் மண்ணோடு இணைந்தது.
                           
                இன்றைய சூழலில் , பல இடங்களில் -   'முனைவர் பட்டம்'  என்பது விலைகொடுத்து  வாங்கும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. முன்னோர் நூல்களையெல்லாம்  முறையாகப் பயின்று, முழுதாக முனைந்து,  முனைவர் பட்டம் பெற்ற - முதல் அறிஞர் பி.சா.சு என அன்போடு அழைக்கப்படும் சுப்ரமணிய சாஸ்திரியை நினைவு கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே ஆகும்.
             
          ஆம்,   தமிழில்  ஆய்வுகள் இன்னும் விரைவாய் முன் நகர வேண்டும்.     இந்நாளில்,    பிற மொழியின் நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திடவும், நாம் வளர்த்த கலைச் செல்வங்களை    உலக மொழிகளுக்கு வழங்கிடவும் பன்மொழிப் புலமை பெற்ற அறிஞர்களின் தேவையை உணர்ந்திட வேண்டும்.
               
             மொழியின் தேக்கம் என்பது அந்த இனத்தின் வளர்ச்சியையும் தேங்கச் செய்துவிடும்.  எனவே,    மொழி- ஒருபோதும்  தேங்கி விடக்கூடாது. வற்றாத நதி போல- பருவத்தில் - முற்றாத இளங்கொடி போல- தழைத்தோடிக்கொண்டே இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment