Saturday, August 3, 2019

Dr.ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்

மனதைத் தோண்டும் மருந்து- ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்.


            பிரசவ காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், தனது உள்ளத்தின் அடியில் மறைந்து கிடக்கும் ரகசியங்களைப் பற்றி, தாராளமாகப் பேசுகிறார்கள். அந்த நேரத்தில், அவர்கள் மறைக்கக் கூடியதான விஷயம், அப்போது ஏதும் இருப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை ஒரு மருத்துவர் ஆய்வு செய்யத் தொடங்கினார். வலி நிவாரணிகளாகக் கொடுக்கப்படும் மருந்துகள் தான், அவர்களது சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தி, உண்மையை மட்டுமே பேச வைக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

                  இதே மருந்துகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகளின் உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டறிய, பல்வேறு சோதனைகள் செய்தார். இறுதியில், குற்றவியல் வழக்குகளில், உண்மை கண்டறியும் மருந்துகளின் மூலம் , குற்றவாளிகளின் உள்ளத்தை அறிவதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். இதன் மூலம், குற்றவியல் புலன் விசாரணையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார் அந்த மருத்துவர். அவர் தான், Truth Serum என்று அழைக்கப்படும் உண்மை கண்டறியும் மருந்துகளின் தந்தை டாக்டர்.ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ் (1875-1930).

              "ஸ்கோபோலமின் ஹைட்ரோ ப்ரோமைட்" (Scopolamine hydrobromide) என்னும் மருந்தினை உட்செலுத்தி, மனம் மறைக்க நினைக்கும் செய்திகளை, வெளியே கொண்டு வர முடியும். மருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களால் பொய் சொல்ல முடியாது என்பதை உறுதி செய்தார் ராபர்ட் ஹவுஸ். தனது ஆய்வின் முடிவுகளை, 1922 ஆம் ஆண்டு கட்டுரையாக எழுதி வெளியிட்டார். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, டெக்ஸாஸ் மாகாணச் சிறையில் , போலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் முன்னிலையில் இரண்டு கைதிகளிடம் இதனைப் பயன்படுத்தியும் காட்டினார். அந்த இரண்டு விசாரணைக் கைதிகளும், குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். அவரது இத்தகைய செயல்பாடு, பலவிதமான சட்டவிவாதங்களையும் , மனித உரிமை சார்ந்த பேச்சுக்களையும் உருவாக்கியது. ஆதரவும், எதிர்ப்பும் சம பலத்தில் தோன்றி மறைந்தன.

                         1875ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜான் ஃபோர்ட்-மேரி ஹவுஸ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ். 1899ஆம் ஆண்டு, (மகப்பேறு) மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார். டெக்ஸாஸ் மாகாணத்திலேயே, மகப்பேறு மருத்துவராகப் பணி செய்யத் தொடங்கினார் ராபர்ட் ஹவுஸ். அப்போது, தொழில் மீதான அர்ப்பணிப்பு காரணமாக, மருத்துவ ஆய்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தார்.

              பிரசவ காலத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வலி மறக்கச் செய்யும் மருந்துகள் பற்றிய ஆய்வில் அவரது கவனம் திரும்பியது. வழக்கமாக பெண்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட, பிரசவ காலத்தில் , அவர்களாகவே சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதற்குக் காரணம், அப்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்துகள் தான் என்பதையும் விரைவிலேயே கண்டறிந்தார்.

                அதனையே மனிதனின் மனதில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிய பயன்படுத்த முடியுமா என்பதில், கவனம் செலுத்தத் தொடங்கினார். அதனையே ஆய்வுகளாகச் செய்து நிரூபித்தும் காட்டினார். 1920களில் மட்டும் இந்தத் தலைப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகளிடம் Scopolamine Hydrobrimide மருந்தினை உட்செலுத்தி, உண்மை கண்டறிய முயற்சி செய்தார். இதில், தனக்கு 100 சதவீதம் வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிவித்தார் ராபர்ட் ஹவுஸ்.

                         ஆனால், ஏனைய மருத்துவர்கள் இது 50 சதம் மட்டுமே நம்பக்கூடியதாக உள்ளது. ராபர்ட் ஹவுஸ் தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி, இதனை உண்மையாக்க முயற்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். இம்மருந்தினைச் செலுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றிய விவாதமும் தீவிரமாகப் பேசப்பட்டது. ஆனால், ராபர்ட் ஹவுஸ் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது ஆய்வுகளைச் செய்து கொண்டே வந்தார். அவருக்கு, பல நீதிமன்றங்களின் ஆதரவும் கிடைத்தது. இவரது ஆய்வினைக் கொண்டே, பல வழக்குகளில் தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.

                     ஆய்வுகளுக்காகவே தனது வாழ்நாள்களைச் செலவிட்டவர்களுள் இவரும் ஒருவர். உணவு மறந்து, தூக்கம் தொலைத்து ஆய்வுப் பணிகளிலேயே மூழ்கிக் கிடந்த ராபர்ட் ஹவுஸின் உடல் நிலை , வெகு சீக்கிரத்திலேயே கெட்டுப் போனது. 1929ஆம் ஆண்டு, பக்க வாத நோய் இவரைத் தாக்கியது. முடங்கிப் போனார். தனது 55வது வயதில், 1930 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 15ஆம் தேதி ராபர்ட ஹவுஸ் மறைந்தார்.

                    இன்று, உலகெங்கும் பல்வேறு நாடுகளில், Truth Serum என்ற பெயரில் வெவ்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. Pentothal, Sodium Thiopental என பல வகையான வேதிப்பொருட்கள் , சட்டத்திற்கு உட்பட்டும், சட்டம் அறியாத வகையிலும் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், Scopolamine Hydrobromide என்னும் வேதிப் பொருளைப் பயன்படுத்தி, குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர் என்ற வகையில், டாக்டர். எர்னெஸ்ட் ஹவுஸ், ”உண்மை கண்டறியும் மருந்துகளின் தந்தை” என அழைக்கப்படுகிறார். அதன் காரணமாகவே, அறிவியல் உலகில், அவர் என்றென்றும் நினைவில் இருப்பார்.

                  அமெரிக்க நீதிமன்றங்களில் இந்த மருந்தினைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்குகள், இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த வழிமுறை சரியா - தவறா, இதன் வெற்றி சதவீதம் என்ன என்பதெல்லாம் முடிவுக்கு வரமுடியாத கேள்விகளாகவே எஞ்சி நிற்கின்றன. தற்போது, வேறு பல நோய்களுக்கு மருந்தாக, Scopolamine Hydrobromide மூலக்கூறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                        பொதுவாக, மனித குலத்துக்கு நன்மை தரும் எதனையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்; அது, சமூக முன்னேற்றத்தில் அக்கறை உள்ள, ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தைக்கூட பாதிக்காதவரை.! 
             மேலும், குற்றவாளிகளிடம் மட்டுமல்ல, எல்லா மனித மனங்களிலும் உண்மை புதைந்தே கிடக்கிறது. ஆனால், அதை வெளிக்கொண்டு வருவதுதான் , நமக்கு எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறது.

                     உண்மையில் சக மனிதன் ஒருவனின், மனதின் குரலை அறிந்து கொள்ள - ஏதேனும் வழி இருக்கிறதா? ஆம் எனில், அந்த வழி, என்னவாக இருக்கக் கூடும்?

              

No comments:

Post a Comment