Wednesday, April 1, 2020

மானுடம் வெல்லும் 3


கறுப்பின் நடனம்  (2)


கடிவாளத்திற்குள் பிளேக்- அலெக்ஸாண்டர்  யெர்சின்.

           
                             'சகல கிரகங்களும் உச்சத்தில் இருந்து, ஐரோப்பா கண்டத்தையே செழிப்பில் வைத்திருந்த போது, அதன்  கிரகாதிபலனில் ஒரு கேடு நடந்தது.  1345ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் தேதி, கும்ப லக்னத்தில், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்து நின்றன. அதன் கொடூர விளைவுதான் - கொள்ளை நோயும், இப்போது நாம் சந்தித்திருக்கும் பேரழிவும்' - என அரையணா அறிஞர்கள் கூவத் தொடங்கினார்கள்.                               
              '1348ஆம் ஆண்டு துவக்கத்தில், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நில நடுக்கம்  வந்திருந்தது. அதன்  விளைவாக,  நச்சு வாயுக்கள் காற்றில் கலந்தன. அதுதான் சாதாரண  காய்ச்சலை தொற்று நோயாக மாற்றிவிட்டது. வேறு ஒரு காரணமும் கிடையாது' - என சில்லறை சிந்தனையாளர்கள் தனது முடிச்சு மூட்டைகளை அவிழ்த்து விட்டனர்.
          ’உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வர வேண்டுமானால் நன்றாக ஆடிப் பாடி மகிழ்வுடன் இருக்க வேண்டும்; அப்போதுதான் நோய் நம்மை அணுகாது’ என்று எண்ணிய சிலர், மேள தாளங்களோடு ஆடிக் கொண்டே இருந்தனர். தனது  குடும்ப உறுப்பினர்கள் மறைந்த நாளில் கூட , அவர்களது ஆட்டமும் பாட்டும் நிற்கவில்லை. இப்படியாக ஆட்டத்தின் வழியாக, பயத்தை மறைத்துக் கொண்டு திரிந்தது ஒரு கூட்டம்.    
         மக்களுக்கு ஆறுதல் தரும் மற்றொரு கூட்டம் திடீரெனத் தோன்றியது.   ’கொடி இயக்கம்’ (Flagellant Movement) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு, அப்போது மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் இருவர் இருவராக வரிசையில் வருவார்கள். கண்கள் தவிர தலை மற்றும் உடலை துணியால் மூடியிருப்பார்கள். ஒவ்வொரு ஊராகச் சென்று, இடுப்பில் வைத்திருக்கும் சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொள்வார்கள். பாவம் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மக்களுக்கும் சில நேரங்களில் அடி கிடைக்கும். இந்த இயக்கத்திற்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஏதேனும் ஒரு வகையில் ஆறுதல் கிடைக்காதா என எண்ணிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, எல்லா நம்பிக்கைகளுமே  பலன் தரும் மருந்துகள் தானே!. 
                  ஆனால், காலப்போக்கில் கொடி இயக்கம்  பாதை மாறத் தொடங்கியது. மக்களுக்கான அதிகார மையமாக தன்னை அது மாற்றிக் கொண்டது. எனவே, ஆரம்பத்தில்  திருச்சபையின் ஒப்புதலோடு நடைபெற்ற இந்தப் ‘புனிதப் பயணம்’, பிற்பாடு போப் ஆண்டவரால் தடை செய்யப்பட்டது. சில மாதங்களிலேயே, அந்த இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் உயிரோடு கொளுத்தப்பட்ட வரலாறு தனிக்கதை. வேகமாய் வளர்ந்தது போலவே,  1451க்குள் அந்த இயக்கம் மிக வேகமாய்க்  காலியானது.              
                     இவற்றுக்கு இடையில் தான், 1348ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், போப் ஆண்டவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், ’மனிதர்களின் பாவங்களுக்கு எதிரான கடவுளின் கோபமே இந்த கொள்ளை நோய்; அதிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி, கருணைமிகு மேரியின் பாதங்களில் பணிந்து மன்றாடுவதுதான்’ என சொல்லப்பட்டிருந்தது.
                  நோயில் இருந்து தப்பிய மக்கள் இறைவனிடம் கண்ணீர் விட்டு மன்றாடினர். பற்களை நெரித்துக் கொண்டு, தலை மயிரை பிய்த்து மண்டியிட்டு அழுதனர். அப்போதும் கொள்ளை நோயின் தீவிரம் குறையவில்லை. எனவே, யாரைப் பலிகடா ஆக்கலாம் என ’மேல் சபை’ மூளையைக் கசக்கி விஷ மருந்தொன்றைக் கண்டுபிடித்தது. எப்போதும் போல, யூதர்களையே (Jews) பலிகடா ஆக்கிவிடலாம் என ஒரு மனதாக முடிவும் செய்தது.
             ’கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தையே அழித்து விடும் நோக்கில், யூதர்களால் பரப்பப்பட்டததுதான் இந்த நோய்’ என்ற செய்தியை, மேலிடம் இலேசாகக் கசிய விட்டது. வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், தொலைக்காட்சி உள்ளிட்ட  ஊடகங்கள் எதுவும்  அப்போது இல்லாவிட்டாலும் -எப்போதும் போல, ’வதந்தி’ காட்டுத் தீயாகப் பரவியது.    மத உணர்வுகளின் தீப்பொறியில் சிக்கி நிதானம் இழக்கும் உணர்வாளர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள் இல்லையா? சாமானிய மக்கள்   அனைவரும் யூதர்களுக்கெதிராக கிளர்ந்து எழுந்தனர்.
                  நார்போன் மற்றும் கார்கேசோன் (ஃபிரான்ஸ்) நகரங்களில் இருந்த யூதர்கள் அனைவரும் தெருவுக்கு இழுத்து வரப்பட்டு, எரியும் நெருப்பில் உயிரோடு கொளுத்தப்பட்டனர். 1349ல் சுவிஸ் நாட்டில், நூற்றுக்கணக்கான யூதர்கள் ஒரே வீட்டில் வைத்து எரிக்கப்பட்டனர். இதற்காகவே, அத்தகைய வீடுகள் பிரத்யோகமாக  உருவாக்கப்பட்டன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்ட்ராஸ்பர்க்’ நகரத்து யூதர்கள்,  1349ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டு மொத்தமாக உயிரோடு புதைக்கப்பட்டனர். 
               அதே ஆண்டின் பிற்பகுதியில்  ஜெர்மானிய யூதர்கள் , கிறிஸ்தவர்களைக் கொல்ல, வன்முறை பெரிதானது. ’இயேசு நாதரை மீட்பராக ஏற்றுக்கொள்ள மறுத்த யூதர்கள் மீதான வன்முறை சரியே’ என மேல் சபையால் அறிவிக்கப்பட்டது. நோயின் கொடூரத்தை மறைக்கவும், துயரங்களை மறக்கவும் வன்முறை அவர்களுக்கு தற்காலிக மருந்தானது.
                 350க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களில், 150க்கும் மேற்பட்ட யூதக் குழுக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. மக்களின் ஆவேச வெறி தணியத் தொடங்கியது. படிப்படியாக கறுப்பு மரணத்தின் ஆட்டமும்  அப்போது குறையத் தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நோயின் தீவிரம் உலகெங்கும் பதுங்கியே கிடந்தது.  மீண்டும் மனிதனைத் தாக்கி அழிப்பதற்கான நல்ல பருவத்தை எதிர்பார்த்து அவை காத்துக் கிடந்தன.
                                                            
                                                                   
                *********
          
                             அதே நோய்த் தொற்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் புறப்பட்டது. இந்த முறை அது பயணம் செய்ய விரும்பிய இடம் இந்தியா. கி.பி.1855 ல் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இருந்துதான் அது புறப்பட்டது.   முதலில் மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நோய்க்கிருமிகள், பிறகு புனே, கொல்கத்தா , கராச்சி என புகுந்து விளையாடியது. பிறகு மெல்ல மெல்ல உலகின் ஆறு கண்டங்களுக்கும் பரவியது. உலகம் முழுக்க, அது ஏற்படுத்திய  மொத்த உயிரிழப்பு என்று பார்த்தால் அது சுமார் 15 மில்லியன் இருக்கும்.        
      ஆறு ஆண்டுகளில், ஐரோப்பாவைப் புரட்டிப் போட்டது போல, அவற்றால் மீண்டும் ஒருமுறை பெரிய ஆட்டம் போட  முடியவில்லை.  சுமார் 2500 ஆண்டுகள், கண்ணாமூச்சி காட்டிய அவை, மூன்றாவது கொள்ளை நோயாக உருவெடுத்த போது  நசுக்கப்பட்டன.            
      தமிழ்த்திரைப்படங்களில் மூன்று முறை அடி வாங்கிய கதாநாயகன், பிறகு வில்லனை விரட்டி விரட்டி அடிப்பது போலவே இங்கும் நடந்தது. காரணம் என்ன தெரியுமா? யார் என்றே அறியாத வண்ணம் சுற்றித் திரிந்த, ‘அந்த’ நோய்க் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது தான்.
         கண்ணுக்குத் தெரியாமல் சேட்டை பண்ணிக் கொண்டிருந்த களவாணியைக் கண்டுபிடித்து –உலகையே நிம்மதி அடையச் செய்த அந்த ’ ஹீரோவின்’ பெயர் – டாக்டர் அலெக்ஸாண்டர் யெர்சின் (Dr. Alexandre Yersin). களவாணியின் பெயர் – யெர்சீனியா பெஸ்டிஸ் (Yersinia Pestis)  என்ற பாக்டீரியா.
          1894ஆம் ஆண்டு, ஹாங்காங்கில் உள்ள ஆய்வுக் கூடத்தில், சராசரியாக   0.6*1.5 மைக்ரோ மீட்டர்  நீள அகலம் கொண்ட அந்த  பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.
    அலெக்ஸாண்டர் யெர்சினும் அவரது மருத்துவ நண்பரும்  இணைந்து இந்த பாக்டீரியாவைக்  கண்டுபிடித்தனர். இறுதியில், யெர்சினின் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால், அவரது பெயரே அந்த பாக்டீரியாவுக்கு வைக்கப்பட்டது.
              தொடர்ச்சியாக,  அது எவ்வாறு மனிதனுக்குள் நுழைகிறது என்பதையும் மனிதன் விரைவிலேயே கண்டறிந்தான். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பால் லூயி சைமண்ட் (Dr.Paul Louis Simond) என்ற ஆராய்ச்சியாளர் 1898 ஆம் ஆண்டு, யெர்சீனியா பெஸ்டிஸை மனிதனுக்குக் கடத்துவது ’தெள்ளுப்பூச்சிகள்’ (Rat Flea - Xenopsylla Cheopis) தான் என்பதை உறுதி செய்தார். இந்த பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் எலிகளைக் கடித்த பூச்சிகள், மனிதனைக் கடிக்கின்றன. அதன் வழியாகவே  பிளேக் நோய் மனித இனத்துக்குள் நுழைந்தது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
              இவ்வகை பாக்டீரியாக்கள் மூன்று வகைகளில் மனிதனைத் தாக்குகின்றன. அவை:
  1. Pneumonic Plague - நுரையீரல் தொற்றின் வழியாகப் பரவும் பிளேக், 
 2. Septicemic Plague - இரத்த ஓட்ட மண்டலத்தில் உண்டாகும்
   தொற்றின்வழியே  வரும் பிளேக்.
 3. Bubonic Plague - நிண நீர் முடிச்சுகள் மற்றும் கோழைப் படலத்தின்  
    தொற்றால்  உருவாகும் பிளேக்.
                           
           ’பிளேக்’ நோய்க்கான பாக்டீரியாக்களின் பூர்விகத்தைக் கண்டறிந்த மனிதன்,  அதனைச் சும்மா விடுவானா? அதற்குரிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் (Antibiotics) உடனே கண்டறிந்தான். கூடவே, வரும்முன் தடுக்கக் கூடிய தடுப்பூசிகளையும் (Vaccine) கண்டறிந்து வெளியிட்டான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகையே ஆட்டி வைத்த  யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற நுண்ணுயிரி,  தற்போது வலுவிழந்து விட்டது.  கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 200 பேர் மட்டுமே இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக 'உலக சுகாதார அமைப்பு' (WHO)அறிவித்துள்ளது. தற்போதுள்ள கொடூர நோய்களின் பட்டியலில் இருந்து பிளேக்  நீக்கப்பட்டிருக்கிறது.
                    பிளேக் நோய்க்கெதிரான முதல் தடுப்பூசி தயாரான இடம் நமது இந்தியா தான்.  இந்தியாவில் தங்கி,  அதனைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா? 
               பிளேக்  நோய்க்குக் காரணமானவர்கள்  என குற்றம் சாட்டப்பட்டு, எந்த யூத இனம் மில்லியன் கணக்கில் கொன்று அழிக்கப்பட்டதோ, அதே யூத  இனத்தில் பிறந்து வந்த வால்டெமர் ஹாஃப்கைன் தான் (Dr.Waldemar Haffkine) - யெர்சீனியா பெஸ்டிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியைக்(1897-98) கண்டறிந்தார்.  இந்தியாவில் கட்டற்றுப் பரவிய காலரா நோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடித்தது அவர் தான் என்பது கூடுதல் சிறப்பு .
                  ஐரோப்பாவின் தலைமை பீடமான இங்கிலாந்தில் பிறந்த -  நவீன அறுவை சிகிழ்ச்சையின் முன்னோடி மருத்துவர் - டாக்டர். ஜோசப் லிஸ்டரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 
”மனித குலத்தையே காப்பாற்ற வந்த மீட்பர் - வால்டமெர் ஹாஃப்கைன் ”.
                
(தொடரும்...)       



2 comments:

  1. கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தையே அழித்து விடும் நோக்கில், யூதர்களால் பரப்பப்பட்டததுதான் இந்த நோய்’ என்ற செய்தியை, மேலிடம் இலேசாகக் கசிய விட்டது.

    கொள்ளை நோயைக்கூட மதத்தின் அரசியலுக்காகப் பயன்படுத்துவது தொடர்கதையாகவே நடந்து வந்துள்ளது வேதனை அளிக்கிறது ஐயா
    மக்களுக்காக மதமா
    மதத்திற்காக மக்களா

    ReplyDelete
    Replies
    1. மதம் என்பது வழிமுறையாக இல்லாமல், ’மதம்’ பிடித்துத் திரிகிறது. காலம் மாற வேண்டும்..

      தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete