Monday, March 30, 2020

மானுடம் வெல்லும் 2

மானுடம் வெல்லும் 2

Plague of Black Death.

          
கறுப்பின் நடனம்   (1)
               
             1347ஆம் ஆண்டு, மே மாதம்,  கருங்கடல் பகுதியில் இருந்த முக்கிய  வர்த்தக நகரமான காஃபாவிலிருந்து, கான்ஸ்டாண்டிநோபிள் துறைமுகத்திற்கு சில இத்தாலியக் கப்பல்கள் வந்து நின்றன. அவை அத்துறைமுகத்திலேயே ஓரிரு வாரங்கள் தங்கின.  பயணக் களைப்பில் இருந்த    சில மாலுமிகள் கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்திலேயே தங்கிக் கொள்ள, அவர்களுக்குப் பதிலாக புதிய மாலுமிகள் சிலர் கப்பலில்  வந்து  இணைந்து கொண்டனர். கப்பல்களில்  இருந்த சரக்குகள்  அங்கு காத்திருந்த பல்வேறு கப்பல்களில் ஏற்றப்பட்டன. சரக்குகள்  ஏற்றப்பட்ட கப்பல்கள்  ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டன. இத்தாலியக் கப்பல்கள் சிசிலியன் துறைமுகத்தை நோக்கி, தனது பயணத்தைத் தொடர்ந்தன.

                      மங்கோலியா, சீனா போன்ற கிழக்கு நாடுகளிலிருந்து, பட்டுப் பாதை (Silk Road) வழியாக - நீண்ட தூரம் பயணித்து வந்த நுண்ணுயிரிகள், மாலுமிகள் வழியாக   கான்ஸ்டாண்டிநோபிள் துறைமுகத்தில் இறங்கியதையும், அவற்றுள் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பியதையும் யாரும் அறிந்திருக்கவில்லை.  பிறகு சாவகாசமாக இத்தாலியக் கப்பல்களோடு தனது பயணத்தைத்  தொடர்ந்தன நுண்ணுயிரிகள். அந்த நுண்னுயிரிகள் யாவும் கப்பல் பயணிகள் அல்ல;  மாறாக,கப்பலில் பயணித்து வந்த எலிகளின் மேல், அவை  பயணித்து வந்தன என்பதை வெகு தாமதமாகவே விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.

                       1937ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சிசிலியில் உள்ள மெஸ்ஸினா துறைமுகத்திற்கு, 12 இத்தாலியக் கப்பல்களும் வந்து சேர்ந்தன. துறைமுக அதிகாரிகள் முன்னிலையில், கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக சரக்குகள் வைப்பு அறையத் திறந்து காட்டினர். அவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறைக்குள்ளிருந்து அழுகிய நாற்றம் வெள்ளம் போல் வெளிவந்தது. அங்கே, இறந்து போன மாலுமிகளின் உடல்கள் சில; கொஞ்சம் கொஞ்சமாக  இறந்து கொண்டிருக்கும் மாலுமிகள் சிலர். துறைமுக அதிகாரிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் அனைவரும் கப்பலை விட்டு இறங்குவதற்கு, முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

                       பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பதை நாமே புரிந்து கொள்ளலாம் அல்லவா? பரிசுப் பொருள்களும், பெரும் பணமும் எப்போதுமே சட்டங்களை வளைக்கும் வல்லமை பெற்றதல்லவா? அங்கும் அதேதான் நடந்தது. திடீரென, நல்ல நிலையில் இருப்பதாகக் கருதப்பட்ட கப்பல் ஊழியர்கள் மற்றும் மாலுமிகள் அனைவரும் கரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது கிடைத்த அனுமதி என்பது, ஐரோப்பா முழுவதையும் மரண வீதியாக மாற்றப்போகும் கொள்ளை நோய்க்கான வாசற்கதவு என்பதை, துறைமுக அதிகாரிகள்  நிச்சயம் அறிந்திருக்கவில்லை.

   கப்பலில் வந்தவர்கள், துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்களோடு கை குலுக்கிக் கொண்டு, நகருக்குள் நுழைந்தனர். கூடவே, நோய்த்தொற்றும் நகருக்குள் புகுந்தது. தனது கொடூர  வேட்டையை ஆரம்பித்தது. ஏனெனில், துறைமுக அனுமதிக்காக பெரும் பணமும், பொருள்களும்  கை குலுக்கிக் கொண்ட போது,  நோய்த்தொற்றும் எளிமையாய் நுழைந்திருந்தது.

               
                   எல்லா நிகழ்வுகளுக்கும் மூலாதாரமாய் இருந்த எலிகள்,    கப்பலின் கீழ்தளத்தில் வெகுநாள்களாய்க் காத்துக் கிடந்தன. நங்கூரமிட்டு கப்பல்கள் நின்றவுடன், எலிகள் பெருமூச்சு விட்டன. பிறகு,  கரையைக் கண்ட உற்சாகத்தில், துள்ளிக் குதித்து நாட்டுக்குள் நுழைந்தன. தான் சுமந்து வந்த  நுண்ணுயிரிகளை, ஐரோப்பா எங்கும் விதையெனைப் பாவின.
   
                      விளைச்சலுக்காக நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் எழவில்லை. ஒரே வாரத்தில் எல்லாம் மாறிப் போயின. நோய்த்தொற்று கண்டவர்களுக்கெல்லாம் முதலில் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் இருந்தாலும் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது.  பிறகு, அவர்களது இடுப்பு, அக்குள் அல்லது கழுத்துப் பகுதிகளில் கட்டிகள் உண்டாயின. கறுப்பு நிறத்தில் இருந்த அவை, சில நேரங்களில் கோழி முட்டை அளவை விட பெரியதாக இருந்தன. அக்கட்டிகளில் இருந்து, இரத்தமும் சீழும் வழியத் தொடங்கியது. கூடவே, கடுமையான இருமல் அவர்களை பாடாய்ப் படுத்தியது. அவர்களது வியர்வை, கட்டிகளில் இருந்து வந்த இரத்தம், சிறுநீர், மலம், மூச்சுக் காற்று  என எல்லாமே தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றத்தைக் கொண்டிருந்தன.

                   எல்லா அவஸ்தைகளும் பத்து நாள்கள் கூட நீடிக்கவில்லை. தாளாத வலியோடு இருந்த அவர்களை,  மரணம் கட்டி அணைத்துக் கொண்டது. ஆனால், அந்த பத்து நாள்களுக்குள் அவர்களோடு  தொட்டுப் பேசியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அத்தனை பேருக்கும் இந்நோய் பரவியது. அவர்கள் உடல்வழி வெளிப்பட்ட  இருமல் மற்றும் கெட்ட நீரின் திவலைகள் வழியாக அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொண்டது. சமூகத்தொற்றாக மாறியதால், மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியத் தொடங்கின.


         நோயாளிகளைக் காப்பாற்ற மருத்துவர்கள் என்னென்னவோ வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தார்கள். நோயாளிகளின் உடலை வினிகரில் கழுவி சுத்தம் செய்து, மருந்து தடவினார்கள்.  மலர்களின் சாறு எடுத்து, அதில் நோயாளிகளைக் குளிப்பாட்டினார்கள். இடுப்பிலும் கழுத்திலும் வந்த கட்டிகளைக் குணப்படுத்த முயன்றார்களே ஒழிய, அது வந்ததற்கான காரணத்தை அவர்களால் அறிய முடியவில்லை.

                  எப்படியோ உயிர்  பிழைத்த மக்கள்,  நோயிலிருந்து விடுபட, விலகி ஓடுவதுதான் சரியான முடிவு என்பதை மட்டும் உணர்ந்து கொண்டார்கள்.  கடற்கரை நகரங்களில் இருந்தவர்கள் எல்லாம் , கிராமங்களை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். விலங்குகள் மற்றும் சமூகப் பரவல் காரணமாக, கிராமங்கள் ஏற்கெனவே  தொற்று நோயின் பாதிப்பில் இருந்தன. விளைந்த பயிர்களை அறுவடை செய்யக் கூட யாரும் வரவில்லை. விளைச்சலை விற்பனை செய்யவும் முடியவில்லை.
                         
                          மக்கள் அதிகமாக சேர்ந்து வசிக்கும் மடங்கள், துறவியர் விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருந்தவர்களை - தொற்று நோய் வளைத்துச் சுருட்டி மொத்தமாகக் காலி செய்தது. உதாரணமாக, மாண்ட்பெல்லியர் நகரில் இருந்த, 141 டோமினிகன் சபை சகோதரர்களில்  ஒருவர் மட்டுமே எஞ்சினார்.                         

                எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நோய் தாக்கிய , ஓரிரு நாளிலேயே   இறந்து போனார்கள். ஏனையவர்களுக்கு காலக்கெடு  அதிக பட்சம் பத்து நாள்களே என்ற அளவில் தான் நோயின் தீவிரம் இருந்தது. நோயாளிக்கு சிகிழ்ச்சை அளிக்கும் மருத்துவர், நோயாளிக்கு முன்னதாகவே இறந்து போன கதையும் நடந்தது. ஆனால், நோயாளிகளை எப்படியும் குணமாக்கி விடவேண்டும் என்ற அர்ப்பணிப்பு மட்டும், மருத்துவர்களை விட்டு விலகவே இல்லை. ஆம்,  மருத்துவர்களின் சேவை என்பது மெழுகென தன்னை உருக்கி, உயிர் வெளிச்சம் கொடுக்கும் மகத்தான அறப்பணி ஆகும்.  அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவது என்பது, மானுட சமூகத்தின் வாழ்நாள் கடமை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

         என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் அனைவரும் தவித்துக் கிடந்த போது, .  இவ்வளவு காரியங்களையும் நடத்திக் கொண்டே, தனது நீண்ட பயணத்தை இடைவிடாமல் தொடர்ந்தன நோய்க்கிருமிகள்.  இத்தாலி வழியாக, மேற்கே நகர்ந்து, ஐரோப்பாவின் எல்லா நாடுகளுக்கும் ஒரு ‘விசிட்’ அடித்தன.  ஆறே ஆண்டுகளுக்குள்,  மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பியர்களின் கதையை முடித்து, பரலோகம் அனுப்பி வைத்தன. எண்ணிக்கையில் சொல்வதென்றால், சுமார் ‘25 மில்லியன் மக்கள்’.

               அங்கே, வாழ்வு தரும் மருத்துவமனைகளில் இடமில்லை; நம்பிக்கை தரும் தேவாலயங்களின் கதவுகள் திறக்கவில்லை; தப்பிப் பிழைத்தவன் ஆதரவு ஏதுமின்றி தனியனாய் அலைந்தான்.  ஐரோப்பா எங்கும் ’பய உணர்வு’ காற்றைப் போல படர்ந்து திரிந்தது. மன்னிப்பை எதிர்நோக்கும் சாமானியன் முதல் வழிகாட்டும் குருமார்கள் வரை சகலரையும் பயம் தொற்றிக் கொண்டது. தொற்று நோயைக் காட்டிலும், பற்றிப் படரும் பய உணர்வு மிகவும் ஆபத்தானதல்லவா?.

    மருத்துவ அறிவியல் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க, கள நிலவரம் கை மீறிப் போய்விட்டதை ஆளும் வர்க்கம் அறிந்து கொண்டது.  இந்த கடினமான சூழலுக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும், கடிவாளம் போடுவது எப்படி என்பதற்கு அதிகார சபை ஒரு பட்டியலே  தயாரித்தது.  மனித குல வரலாற்றில் - அதிகார சபை என்பதும், மத சபை என்பதும் பெரும்பாலான காலங்களில் இரயில் தண்டவாளங்கள் போலவே பயணம் செய்தன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், அந்தப் பட்டியல் எப்படி இருந்திருக்கும் என்பதை நாமே எளிதில் யூகம் செய்யலாம்.

          விநோதமும், கொடூரமும் நிறைந்த அந்த காரணப் பட்டியலில் -  எலிகளின் மேல் ஏறி, கப்பலின் வழியே பயணம் செய்து - ஐரோப்பாவையே சுற்றி வந்த  ’நுண்ணுயிரிகள்’ இடம் பெறவில்லை என்பது தான் சுவாரசியம்!

                    
(தொடரும்...)


                  

2 comments:

  1. மனித குல வரலாற்றில் - அதிகார சபை என்பதும், மத சபை இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்பதுதான் வேதனை
    தங்களின் அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
    தொடருங்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. தனிநபர் இலாப நோக்கிலேயே அவை இணைகின்றன. அறிவின் பரிணாமத்தில் சிக்கல்கள் தீரும் என்று நம்புவோம்.
    தங்களின் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete