Wednesday, September 25, 2019

வண்ணமயமான வாழ்வு!

வண்ணமயமான வாழ்வு!


காட்சி எண்: 0
நான் நானாகத்தான் இருந்தேன்.
பிறகேதோ சிறு  பயத்தில்
ஒருநாள் ஆடாய் மாறினேன்.

காட்சி எண்: 1
ஆடு ஒன்று அருகில் வந்தது.
அமைதியாய் நின்று
புல்லும் தின்றது.
திடீரென ஒரு நாள்,
'ஊ...' என ஊளையிட்டு
உதிரம் குடிக்க நெருங்கியது.
அப்போது நான்
ஆட்டுக்குட்டியாய் இருந்தேன்.

காட்சி எண்: 2
வனத்தில் என்னோடு
இணைந்தது
புதிய மான்,
கவண் போல் பிரிந்த
கொம்புகளுடன்.
ஒன்றாகவே அலைந்தோம்
ஒன்றாகவே மேய்ந்தோம்.
திடீரென ஒரு நாள்
'உர்ர்ர்....' என உறுமியது.
உயிர் பருக நெருங்கியது.
அப்போது நான்
மான்குட்டியாய் இருந்தேன்.

காட்சி எண்: 3
காட்டில் மேய்ந்தபோது
காளை ஒன்று தேடி வந்தது.
சேர்ந்தே திரிந்தோம்.
சோர்வை மறந்தோம்.
திடீரென ஒரு நாள்
'கர்ர்ர்....' என கர்ஜித்தபடி
கழுத்தைக் கவ்வியது.
அப்போது நான்
பசுவாய் இருந்தேன்.

.......
.......
.......

காட்சி எண்: முடிவிலி...

காட்சிகள் - களங்கள்
மாறிக் கொண்டே
நகர,
முடிவிலிப்  பயணத்தில்
முடிவு மட்டும்
மாறவே இல்லை.

மாறி மாறி
எதுவாய் மாறினும் ,
எப்போதும் -
வெல்லும்
பச்சோந்தி யின் பற்களிடை -
மரண பயத்துடன்
பயிலாத
பச்சோந்தியாக  நான்!

பச்சோந்திகள் பாவிகள்
அவர்களே துரோகிகள்
என எப்படிக்
கூவி அழுவேன்?
நானே நானாக
இல்லாத போது!

தினம் ஒரு வண்ணத்தை
அணிந்து நகர்கிறது
என் மனம்
துயரங்களினூடே!

No comments:

Post a Comment