Saturday, September 28, 2019

காந்தியடிகளின் 12 அப்போஸ்தலர்கள்


காந்தியடிகளின் 12 அப்போஸ்தலர்கள்

               சில நாள்களுக்கு முன்பாக, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதன்  தலைப்பே வசீகரம் செய்வதாக இருந்தது. தலைப்பு, ‘காந்தியடிகளின் 12 அப்போஸ்தலர்கள்’ (The twelve Apostles of Gandhi).
            ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, மானுட தீமைகளுக்கும், வெறுப்புக்கும் எதிராக , கருணையையும் மன்னிப்பையும் தனது இரு கரங்களில் ஏந்தி,  கல்வாரி மலை மீது, குருதி சிந்திய தேவ மகன் இயேசு கிறிஸ்துவைப் போலவே, காந்தியடிகளுக்கும் 12 அப்போஸ்தலர்கள் என பட்டியல் தந்திருந்ததால் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. சுதந்திரப் போராட்டம், பொருளாதாரம், கல்வி முறை, மருத்துவம்  என பல்வேறு தளங்களில் காந்தியடிகளை குருவாகக் கொண்டு, அவரைப் பின்பற்றியவர்கள் பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களுள் ராமச்சந்திர குஹாவின் பட்டியலில் உள்ள அந்த 12 முதன்மைச் சீடர்கள் யார் யார் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் ஆர்வம் மேலிட்டது,
            குஹாவின் பட்டியலில் உள்ள அந்த 12 அப்போஸ்தலர்கள்:
1.ஜவஹர்லால் நேரு
2.வல்லபாய் படேல்
3.இராஜாஜி
4.ராஜேந்திர பிரசாத்
5.அபுல் கலாம் ஆசாத்
6.ஜேபி கிருபாளினி
7.கமலாதேவி சட்டோபாத்யாய்
8.மிருதுளா சாராபாய்
9.ஜெயபிரகாஷ் நாராயணன்
10.ஜே சி குமரப்பா
11.மீரா பென்
12. கான் அப்துல் கஃபார் கான் 
     எப்பேர்ப்பட்ட மனிதர்கள் இவர்கள்! கொள்கையின் பொருட்டு, தனது வாழ்க்கையினை நடத்தியவர்கள்.  சமூக முன்னேற்றத்திற்காக, நாளும் பொழுதும் தனது வாழ்வினை மெழுகென கரைத்துக் கொண்டவர்கள்.          
               கட்டுரையை படித்து முடித்தவுடன், அதில் வினோபாஜியின் பெயர் விடுபட்டிருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டியல் எனும் போது, சில விடுபடல்கள் இருக்கத்தான் செய்யும். மேலும், ராமச்சந்திர குஹாவால் பட்டியலிடப்பட்ட  12 ஆளுமைகளும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களது வாழ்வு, நம்மை எல்லாவகையிலும் மேம்படுத்தும் ஓர் அபூர்வ சாதனம். 
             ஆயினும்,  காந்தியடிகளுக்குப் பிறகு, காந்தியத்தை முன்னெடுத்து, தேசத்தைக் கட்டமைக்கப் பாடுபட்ட இந்த 12 முதன்மைச் சீடர்களின் பட்டியல், ஒவ்வொருவருடைய பார்வையிலும் மாற்றத்திற்கு உரியதுதான். இன்னும் ஒரு ஆறு பேரை இணைத்துக் கொள்ளச் சொன்னால், நான் பின்வரும் ஆளுமைகளை சேர்த்துக் கொள்வேன்.
13.வினோபா பாவே
14.மகாதேவ தேசாய்
15.நரஹரி பரிக்
 16.கிஷோர்லால் கனஷ்யாம் மஸ்ருவாலா
17.ரவிசங்கர் மகராஜ்
18.ஜுகத்ராம் தவே
              இவர்களோடு சேர்த்து, எனது பட்டியல் படி, காந்தியடிகளுக்கு 18 அப்போஸ்தலர்கள்! ’காந்தியம்’ என்னும் சாம்ராஜ்ஜியத்தின் சீடர்கள் பட்டியல், கிளை பரப்பிக் கொண்டே  முடிவற்றுச் செல்லும் அதிசய மரம். ஏனெனில் காந்தியம் என்னும் வேர் உறுதியானது, ஆழமானது.

              உள்ளத்தில்  ஓர் எளிய ஆசை உண்டு.    தமிழகத்தில்,  காந்தியத்தை தனது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து நிறைந்த, 12 அப்போஸ்தலர்கள் பெயர்களைப் பட்டியலிட வேண்டும். அவர்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். தலைப்பு, ’காந்தியின் தமிழக அப்போஸ்தலர்கள்…’

                     
                    





No comments:

Post a Comment