Friday, July 3, 2020

விளக்குகள் பல தந்த ஒளி - நூல் அறிமுகம்


விளக்குகள் பல தந்த ஒளி – லில்லியன் எயிஷ்லர் வாட்சன்

நூல் அறிமுகம்


        ”எனது வாழ்க்கையில் என் இதயத்தோடு நெருக்கமாக இருக்கும் புத்தகங்கள் நான்கு. அவற்றை வாசிப்பதில் எனக்கு கொள்ளை இன்பம். லில்லியன் எ.வாட்சன் எழுதிய ‘விளக்குகள் பல தந்த ஒளி’ புத்தகம் , நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் - ஒளி தீபமாகச் சுடர் விடுகிறது.  40 வருட காலமாகவே, என்னை வழிநடத்திச் செல்லும் ஓர் அரிய பொக்கிஷமாகவே, அது என்னுடன் இருந்து வருகிறது.”   –  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

                    2000 ஆவது ஆண்டில், கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் , டெல்லியில் உள்ள 'விஞ்ஞான் பவனில்' அப்துல் கலாமைச் சந்திக்கச் செல்கிறார். அப்துல் கலாம் அப்போது, இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக இருந்தார். அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடலின் போது, தனது வாழ்க்கையையே மாற்றி அமைத்த சில புத்தகங்களைப் பற்றி, கலாம் அவர்கள் ஆர்வம் பொங்கப் பேசுகிறார். அவற்றில் ஒன்று தான், ‘Light From Many Lamps’.  
              லில்லியன் எயிஷ்லர் வாட்சன் எழுதிய இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்றும், அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகவும் பயன்படும் என்றும் சொல்லியிருக்கிறார் அப்துல் கலாம். அந்தச் சொற்களே, இந்நூல் தமிழ் வடிவம் பெறுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.  முறையான அனுமதிக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு ’விளக்குகள் பல தந்த ஒளி’ என்னும் தலைப்பில் இந்த நூலை, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. 
             நூலின் இறுதியில், தொகுப்பாசிரியர் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பு, போதாமையின் உச்சம் என்று சொல்லலாம்.  பொத்தாம் பொதுவாக சில வார்த்தைகள். எந்த நூலாசிரியருக்கும் அதனைப் போட்டுக் கொள்ளலாம்.  இந்த நூலில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்களில், ஆசிரியரின் குறிப்பு  முறையாக இடம் பெறுவதில்லை. மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரமும் சரியாகத் தருவதில்லை. இந்த நூலினை தமிழில் மொழிபெயர்த்த பி.உதயக்குமார் பற்றிய எந்தக் குறிப்பும் இந்த நூலில் இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது.  மேலும், இந்த நூலின் முன் அட்டையிலும்,  பின் அட்டையிலும் நூலாசிரியரின் பெயரும் இல்லை; மொழிபெயர்ப்பாளரின் பெயரும் இல்லை. பதிப்பகத்தின் பெயர் மட்டுமே உள்ளது (இரண்டாம் பதிப்பு - ஏப்ரல் 2005) என்பது இன்னும் வருத்தத்தை அதிகமாக்கியது.
                அற்புதமான இந்த நூலினைத் தொகுத்த லில்லியன் எயிஷ்லர்(1902), ஹங்கேரியைப் பூர்வீகமாகக் கொண்ட யூதப் பெண்மணி ஆவார். அமெரிக்காவைச் சேர்ந்த,  இவரது கணவர் பெயர் வாட்சன்.  ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த பதிப்புத் துறையில் நுழைந்த இவர், தனது பத்தொன்பதாம் வயதிலேயே சாதனைகள் நிகழ்த்தத் தொடங்கினார்.  வாசிப்பதையும் எழுதுவதையுமே தனது வாழ்நாள் பணியாகச் செய்தார். அதன் விளைவாக, அமெரிக்காவையும் தாண்டி, உலகம் முழுக்க அவரது பெயர் பேசப்பட்டது. அவருடைய மாபெரும் கனவுதான், Light From Many Lamps’ எனும்  இந்தப் புத்தகம்.            
              கடந்த கால வரலாறு என்பது நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற ’ஞானக்களஞ்சியம்’. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் முடிவில்லாதவையாக இருக்கின்றன. மாபெரும் ஞானத்தின் தொகுப்பிலிருந்து, நமக்கு எது வேண்டும் என்பதைத் தேடுவதில் மாபெரும் சவால் இருக்கிறது. கருவூலப் பொக்கிஷங்கள், தலைப்பு வாரியாக முறையாக அடுக்கப்பட்டு, எளிதில் பயன்படுத்தும் வண்ணம் இருந்தால், சுலபமாக இருக்கும் இல்லையா?  அப்படி ஒரு செயலைச் செய்திருக்கிறது இந்தப் புத்தகம். 
                பல இடங்களிலிருந்து, பல  துறைகளைப் பற்றிய சிந்தனைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வெறும் சிந்தனைகள் மட்டும் இந்நூலில் கொடுக்கப்படவில்லை. மாறாக, அது உருவான வரலாற்றுப் பின்புலத்தோடு சிந்தனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. 
               உதாரணமாக, ’எதிர்காலத்திற்கான நம்பிக்கை’ என்ற தலைப்பில், ஒரு வரலாறு குறிப்பிடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ஆம் தேதி, அமெரிக்காவின் அதிபராக ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட் பதவி ஏற்கிறார். இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை நோக்கி, அவர் உரையாற்றுகிறார். எப்போதும் அவர் மனதில் மந்திரம் போல் இருக்கும் சொற்கள், அப்போதும் நினைவுக்கு வருகின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்னர், தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் அவை. மனித குலத்தின் முன்னேற்றத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை அவை. 
    ’வாழ்வில் எல்லாமே சுமூகமாக இருந்து விடாது. சில சமயம் உயர்வும், சில சமயம் தாழ்வும் இருக்கும். இதில் நினைவு கொள்ள வேண்டிய பெரிய உண்மை என்னவென்றால், நாகரீகத்தின் இயல்பே, எப்போதும் மேல் நோக்கியே  இருப்பதுதான்’    
        கிராடன் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த எண்டிகாட் பீபாடி, தேவாலயத்தின் வழிபாட்டுக் கூட்டத்தில் வாராவாரம் மாணவர்களோடு பேசுவார். அதனை மனத்திற்குள் கல்வெட்டு போல எழுதி வைத்துக் கொண்ட மாணவன் ரூஸ்வெல்ட், மேற்கண்ட சொற்களை மறக்கவே இல்லை. தாழ்வு வரும் வேளையில் எல்லாம், ’மேல் நோக்கிய சிந்தனை தான், நாகரீகத்தின் இயல்பு’ என்பதை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். அதிபரான பிறகு, இந்தச் சொற்கள் தான், தனது வாழ்வில் உயர்வை  உண்டாக்கின என தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறார். இந்த வரலாற்றுப் பின்புலம் தெரிந்த பிறகு, பொன்மொழிகள் சுடரெனெ இதயத்தில் ஒளிரத் தொடங்குகின்றன.  இதுபோல, அறுபதுக்கும் மேற்பட்ட சுவையான நிகழ்வுகள், அதன் வழியே பெறும் சிந்தனைகள், நூற்றுக்கணக்கில் மேற்கோள்கள் என சிந்தனை முத்துக்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

*  “வெற்றி பெறவே மனிதர்கள் பிறக்கிறார்கள், தோற்பதற்கு அல்ல.”  - தோரோ.

* “நேரத்தை வீணாக்குவதை மட்டும் நியாயப்படுத்தவே முடியாது. ஏனெனில், இது மீண்டும் வரவே வராது” - உமர் கய்யாம்.

* ”முடிவுகளைப் பற்றி நான் அஞ்சவில்லை; நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்”  -ஃபால்கன் ஸ்காட்.


* “நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால், அதனை வெளியே தேடுவதில் பயனே இல்லை.”  -  எஃப் டி ஃபோகோல்ட்.
         
   சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், சிசிரோ, பிளாட்டோ, இங்கர்சால், ஜேம்ஸ் ஆலன், மார்க் அரேலியஸ், தாமஸ் மன், கவிஞர் லாங்ஃபெல்லோ, ஷேக்ஸ்பியர், எமர்சன், வாட்சன்,  ஹென்றி தோரோ , மார்டின் லூதர் கிங், ஆர்.எல்.ஸ்டீவன்சன், எமிலி டிக்கின்ஸ், அபிரகாம் லிங்கன், பெஞ்மின் ஃப்ராங்க்ளின், மெல்வில்  என பல நூறு அறிஞர்களின் கருத்துக்கள், இந்தக் கருவூலத்தில் நிரம்பியிருக்கின்றன. 
              உபநிஷத்துக்கள் மற்றும் இந்தியத் தத்துவங்களின் செய்திகளோடு, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் கவிதை வரிகளும் இடம் பெற்றுள்ளன.  மகாவீரர், புத்தர், முகம்மது நபி போன்றோர் வழங்கிய செய்திகளும் இங்கே உண்டு. மேலும், நூலின் பல்வேறு இடங்களில், பைபிள் சொல்லும் ஞானக் கருத்துக்கள் பொருத்தமான இடங்களில் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றின் பயனாக, ஒவ்வொரு பொன்மொழியும், நம்மை நிறைய சிந்திக்க வைக்கின்றது. துயரத்தின் ஆழத்திலிருந்து நம்மை மீட்டு எடுக்கின்றன. 
             ’வாழ்வின் சந்தோஷம்’ முதல் ’எதிர்காலம்’  வரையிலான பத்து பெரும் தலைப்புகளில் இந்த நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில், வரலாற்றின் தலை சிறந்த தத்துவ ஞானிகள், அறிஞர்கள், ஆளுமைகள் என எண்ணற்ற நட்சத்திர மனிதர்களின் குறிப்புகள் நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றன. 
         இருபதாம் நூற்றாண்டு வரையிலான, உலகின் ஞானக் களஞ்சியத்தைச் சுருக்கி, எளிய மனிதர்களுக்கு பயன் தரும் வகையில், கையடக்கமாக ஒரு 400 பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார் தொகுப்பாசிரியர். இறுதியில் அவரே மார்டின் லூதரின் வார்த்தைகளில் சொல்லி முடிக்கிறார்,
       “ஞானத்தின் முதல் கனியின் ஒரு துண்டையும், உண்மையின் எல்லையற்ற ஆழத்தின்  துண்டிலிருந்து ஒரு சிறு பகுதியையும் தான் என்னால் மீட்க முடிந்தது.”
           இந்த நூலை, வெறும் தன்னம்பிக்கை சார்ந்த நூல் என்றும் சொல்லி விட முடியாது;வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு என்றும் சொல்லி விட முடியாது. நமது தனிமை, சிக்கல், ஆபத்து, தோல்வி, வெற்றி,குழப்பம்  என வாழ்வின் எல்லாக் கட்டத்திலும்  நமக்கு உதவும் ஒரு கையேடு அல்லது அகராதி என இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடலாம். இந்த நூல் நமது கையில் இருக்கும் போது, ஆயிரக்கணக்கான ஞானிகளின் சொற்களைச் சுமந்து செல்கிறோம் என்று நம்பலாம். பயன்படுத்திக் கொள்வது நமது செயலில் தான் உள்ளது.               
             வாழ்வின் இருள் நம்மைச் சூழும் போதெல்லாம் - ஒளி கொடுத்து மீட்பதற்காக, விளக்குகளோடு - கடந்த காலம் காத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில்,  நாம் தான் விழிகளைத் திறந்து வைத்திருப்பதில்லை. 



நூலின் பெயர்:     விளக்குகள் பல தந்த ஒளி
ஆசிரியர் பெயர்: லில்லியன் எயிஷ்லர் வாட்சன்
வெளியீடு    :         கண்ணதாசன் பதிப்பகம் 

       
            
       
         
                 
                    

1 comment: